“எனக்கு புரியாத வயசுல அவங்களுக்கு கல்யாணம் நடந்திருந்தும் உங்கம்மா தாலி கட்டாம வாழறா. இப்படி ஒரு பிறப்புன்னு என்னையே கேவலமா பேசறாங்க. இதை ஏன் எங்கப்பாவை பேச முடியலை? என்னை காயப்படுத்தி சந்தோஷப்பட்டுக்க நினைச்சாங்க…”
“என்னை காயப்படுத்தனும், குறுக வைக்கனும்னு நினைச்சே சேர்த்துக்கிட்டவங்க பொண்ணுன்னு குத்தி பேசறாங்க. நான் ஏன் குறுகி நிக்கனும்? பிறக்கும் போதே இந்த உலகத்துக்கே தெரியும் நான் யார், என்னோட இன்ஷியல் என்னன்னு…”
“தப்பு பண்ணினவங்க மேல தப்பில்லை. அதை செய்யவிட்டு வேடிக்க பார்த்தவங்க மேலயும் தப்பில்லை. ஆனா எதுவுமே தெரியாம பிறந்த நான் தப்பா?…”
“அப்படி ஒரு குதர்க்க புத்தியோட பேசறவங்களுக்கு நான் தலைசாய்க்கனுமா? வாய்ப்பே இல்லை. நான் இப்படித்தான். ஏன் எனக்கு தெரியாததையா நீங்க சொல்லிட்டேங்கன்னு கேட்டு நிமிர்வா இருக்கறது திமிரா தெரிஞ்சா அது பார்க்கிறவங்கக்கிட்ட கோளாறு. அப்படித்தான் இருந்தேன்…”
“அப்பா. அவரை வச்சு தானே எங்களை விரட்டினாங்க? என் மேல என்ன தப்பு? யாருக்காகவோ நான் ஏன் இப்படி பிறந்துட்டேன்னு கண்ணீர்ல கரைஞ்சு என் நிம்மதியை குலைச்சுக்கனும்னு எதிர்பார்த்தாங்க. என்னோட சந்தோஷத்தை என்கிட்டே இருந்து பறிச்சுட்டா போதுமா?…”
அதுவரை ஆவேசமாய் பேசிக்கொண்டே இருந்தவள் அந்த இடத்தில் தளர்ந்து தரையில் அமர்ந்தாள்.
“ஆனா ஒருநாள் நிஜமாவே பறிச்சுட்டாங்க ஷேஷா. மொத்தமா பறிச்சுட்டாங்க. அனாதையா நின்னேன். உடுத்த உடையும் இல்லாம நின்னேன். நிக்க வச்சான் அந்த கிழவன். அவன் ஆசைக்கு நான் பலி ஆகனும்னு…” என்று ஷக்தி ஆத்திரத்துடன் சொல்ல ஷேஷா பட்டென்று எழுந்தமர்ந்தான்.
“உங்கம்மா உங்கப்பா கூட வாழலையா? உனக்கு புதுசான்னு கேட்டான் அவன் வயசுக்கு. அவன் முன்னாடி நான் திரும்ப நிக்கனுமா? நிக்கனுமா? நோ…நோ…நோ…” என ஆவேசத்துடன் கேட்டுக்கொண்டே முகத்தில் அறைந்து கொண்டவளை ஓடிவந்து தாங்கிக்கொண்டான்.
“ஷக்தி, ஷக்தி காம்டவுன். ஷக்தி, இங்க பாரு, என்னை பாரு…” என்றவனை வெறிகொண்ட மட்டும் பிடித்து தள்ளினாள்.
“அவன் மகனுக்கு நான் கல்யாணம் பண்ணிக்க லாயக்கு இல்லாதவ. என்னோட பேக்ரவுண்ட் அப்படின்ற வரைக்கும் தான் தோணுச்சு. ஆனா அவனோட அப்பனுக்கு…” என்று பேசியவளின் வாயை தன் கைகொண்டு அழுத்தமாய் மூடினான்.
எரிமலை என அடக்கி புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆத்திரம் வெடித்து சிதற அதை தடுக்க முயன்ற அவனின் கையை பலம் கொண்டமட்டும் அவள் கடித்துவைக்க அதன் வீரியத்தில் அவள் அனுபவித்த வலியை அவன் உணர்ந்தான்.
“விட்டுடுங்க, இங்க வேண்டாம். இவங்க யார் முகத்திலையும் முழிக்க நான் தயாரா இல்லை. பிடிக்கலை…” என கதறியவளின் கண்ணீரில் அவனும் இணைந்தே கரைந்தான் என்றே சொல்லவேண்டும்.
“அகத்தியன்…” என ஆத்திரம் மிக ஷேஷாவின் பற்களுக்குள் அகத்தியனின் பேர் கடிபட,
“நோ, அவன் பேரை கூட கேட்க நான் விரும்பலை. சொல்லாதீங்க…” என்று காதை மூடிக்கொண்டவளை தாயாய் தன் சிறகுகளால் அடைகாத்தான்.
“ஓகே, சொல்லலை. ஷக்தி…” என அவளின் தலையை வருட அவனின் சட்டையை பிடித்தபடி விழியை திறந்தவண்ணம் தான் இருந்தாள்.
பொட்டுறக்கம் கண்களை அண்டவில்லை. மீண்டும் அந்த பழையவற்றை எல்லாம் பேசி தீர்த்ததன் தாக்கமும், வேகமும் அவளை அன்றைய நாளுக்கே இழுத்து சென்றது.
“நீங்க என் அப்பா வயசு அங்கிள். என்னோட அம்மா ரொம்ப முடியாம ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. என்னை போக விடுங்க ப்ளீஸ் அங்கிள். நாங்க எங்கையாவது போய்டறோம். விட்டுடுங்க…” என கெஞ்சியவளின் கண்ணீர் குரல் அகத்தியனின் பெண்ணாசைக்கு சற்றும் இளகவில்லை.
“மாமன்கிட்ட வா குட்டி. பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிட்டா எப்படி? இனி நீ என் கூட தான் இருக்கனும்…” அந்த குரலின் உறுதியில் சிறு பெண்ணாய் வெலவெலத்து நின்றாள்.
“ஏன் உன் அம்மா வாழலை? இப்ப நீ என்னோட அதே மாதிரி வாழ போற. அதே வசதி வாய்ப்போட. உனக்கு ஒரு குறையும் வராம பார்த்துக்குவேன் மாமா. வா குட்டி…” என்று அவள் மறைந்து மறைந்து ஒளிய, தான் தேடி திரிவதற்கு அவசியமில்லாததை போல தினவெடுத்து அமர்ந்திருந்தான் அகத்தியன்.
அவனின் பேச்சில் ஒன்று அன்றைக்கு புரிந்தது ஷக்திக்கு. என்னதான் ஊர் அறிய தாங்கள் பெருமையாகவே வாழ்ந்திருந்தாலும், மற்றவர்கள் பற்றிய பேச்சிற்கு செவிமடுக்காதிருந்தாலும் முறையான திருமணத்திற்கு இருக்கும் மரியாதை என்பது வேறு என்று.
தந்தை என்ற அந்த மனிதன் மரித்த நேரம் தாயும் மரணப்படுக்கையில். இப்படி கேட்பதற்கும், காப்பதற்கும் ஆளில்லாமல் நிராதரவான தன் நிலை. ஷக்திக்கு உலகத்தின் கோர முகம் புரிந்த நாள்.
அழுவதற்கோ அரற்றுவதற்கோ அப்போது நேரமில்லையே. அங்கிருந்து தப்பிக்கவும் முடியாத நிலை. வெளியே செல்லவும் முடியாமல் மறைந்து ஒடுங்கி நின்றாள்.
“உங்கம்மா செத்து ரொம்ப நேரமாச்சு குட்டி. நீ அழுது, அடம்பிடிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்கப்பன் இருந்ததனால இத்தன நாள் நீ தப்பிச்ச. இல்லன்னா என்னைக்கோ உன்னை என்கிட்டே கொண்டு வந்திருப்பேனே?…” என்றவனின் அசிங்கமான பேச்சில் குறுகி போய் இருந்தாள் ஷக்தி.
தாய் இறந்துவிட்ட செய்தியை ஜீரணிக்கமுடியாமல் மயக்கம் வரும் போல இருக்க அழுகை வெடிக்க இருந்தது.
பலவீனமான மனதுடன் இங்கிருந்து அழுதும் தன்னுடைய பலத்தை விரையமாக்கி அகத்தியனிடம் மாட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை.
போராடவேண்டும், முடிந்தமட்டும் போராடி இதில் இருந்து வெளிவர, தன்னை காத்துக்கொள்ள தன் கண்ணீரை வலிந்து அடக்கினாள்.
அகத்தியன் சொல்லிய அப்படி ஒரு வாழ்க்கைக்குள் செல்லவே கூடாதென்று தீர்க்கமான முடிவு மட்டும் அவளை தீயாய் சுட்டுக்கொண்டு இருந்தது.
இந்த யோசனைகளில் இருந்தவளின் மனபலத்தை உடைக்கும் வண்ணம் திடீரென்று அவளின் கையை பிடித்து மறைவிலிருந்து வெளிக்கொண்டுவர அகத்தியன் முயல அடுத்த நொடி தேற்றி வைத்த தைரியமெல்லாம் வற்றிப்போய் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“விட்டுடுங்க அங்கிள், எங்கையாவது போய்டறேன். போய்டறேன். ப்ளீஸ்…” என மடங்கி அமர்ந்து கெஞ்சியவளை முழுதாய் பார்க்க முடியாமல் அகத்தியன் அவளை எழுப்ப முயன்றான்.
“வெளிச்சத்துக்கு வா குட்டி…” என்றவனை பலம் கொண்டமட்டும் தள்ளிவிட்டாள். அந்த இருள் தான் அவளுக்கு இப்போது கவசம்.
எங்கே தன்னை வெளிக்கொண்டுவந்துவிடுவானோ என நினைத்தவளின் நாணம் எல்லாம் மரணித்து, கூச்சம் பொசுங்கி, உயிர் செல்கள் எல்லாம் தீயாய் கொதித்தது அவ்விடத்தில் அவள் இருக்க இருக்க.
கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது அதை இப்போது நினைக்கும் போதும். அன்று தன்னை காத்துக்கொள்ள போராடிய போராட்டம் அவளின் உயிர்வரை மறந்து மரிக்காத ஒன்று.
“ஷக்தி…” என்ற ஷேஷாவின் குரலில் அவனை விழி மலர்த்தி பார்த்தவள் அப்படியே கண் மூடினாள்.
“வா பெட்ல படுத்துக்கோ…” என அவளை எழுப்பி நகர்த்தி கொண்டுவந்தவன் அவளை உறங்கவிட்டுவிட்டு அவளருகிலேயே அமர்ந்துகொண்டான்.
கொஞ்சம் கொஞ்சமாய் அவள் உறங்கிவிட்டாலும் இன்னும் அந்த பயமும் வெளிச்சமும் அவளை பதற செய்ய அதை எல்லாம் உணர்வற்ற பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் ஷேஷா.
இப்போது புரிந்தது அவள் குறுகி அமர்வது ஏன் என்றும், வெளிச்சத்திற்கு அஞ்சுவது ஏன் என்றும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதது ஏன் என்றும், அகத்தியனின் மீதான பயம் ஏன் என்றும்.
அவளறியாமல் கோவத்தில் மெல்லிய குரலில் அவனின் மார்போடு ஒடுங்கிய போது சொல்லிக்கொண்டிருந்தது அவனுக்கும் அட்சுபிசகாமல் கேட்டுவைக்க இறுகி போனான்.
‘அந்த வாழ்க்கை வேண்டாம். சாக்கடை’ அதன் அர்த்தம் விளங்கியது.
“எஸ், சாக்கடை தான் ஷக்தி. சுத்தம் செய்ய வேண்டாமா?…” என உறங்கிக்கொண்டிருப்பவளிடம் முணுமுணுத்தவனின் குரல் அவளை அடையவில்லை.
அந்த குரலின் தீவிரம் தனது செயல்பாடுகளை தீவிரமாக்கி இருந்தது. ஷேஷா இனி தான் என்ன செய்யவேண்டுமென முடிவெடுத்துவிட்டான்.
அவன் எடுத்த முடிவின் முடிவில் வெளிவந்தது என்னவோ வெளிவராத ரகசியங்கள் மட்டுமல்லாது, தோண்ட தோண்ட பூதம் தான்.
அத்தனைக்கும் ஆசைப்படு என்ற அகத்தியனின் ஆசைகளுக்கு அளவில்லாமல் போயிருக்க அதற்கென்ற எல்லையை நிர்ணயித்தான் ஷேஷா. ஆதிஷேஷன்.
அதில் முதல்படி, ஷக்தியை அவளிடத்தில் கம்பீரமாய் அமர செய்வதே. முதல் படியிலேயே சறுக்கிவிட முடியுமா? எடுத்த முடிவில் ஆதிஷேஷனின் தீவிரம் அவள் அறிந்ததே.