இரவு உறக்கம் இழந்து அவ்வப்போது எழும்புவதும் கோபத்தில் ஷேஷாவை பேசுவதும், அகத்தியன் சேர்ந்தவர்களை திட்டுவதும் என ஷக்தி நிம்மதி இழந்துபோனாள்.
பொறுமையாக பார்த்தவனுக்கு அதற்கு மேலும் அவளை இப்படியே விடமுடியாமல் பாலை வரவழைத்து அதில் உறக்கத்திற்கு மருந்தை கலந்து அவளை எழுப்பினான்.
ஒற்றை தொடுகையில் பதறி எழுந்தவள் பின் தனது தலையை கோதிக்கொண்டு அவனை ஏறிட்டாள்.
“மார்னிங் ஆகிடுச்சோன்னு நினைச்சேன் ஷேஷா. நீங்க இன்னும் தூங்கலையா?…”
“தூங்க முடியலை…”
தூக்கம் வரவில்லை என்றால் வேறு. ஆனால் தூங்க முடியவில்லை என்றால் அது தன்னால் தானே என தெளிவாய் புரிந்தது.
“இந்த பாலை குடி….” என நீட்ட,
“நான் நல்லா சாப்பிட்டேன். எனக்கு வேண்டாம்…” என்றாள் மறுத்து முகம் திருப்பி.
“ஷக்தி, குடிச்சுட்டு நல்லா தூங்கு. எனக்கு நாளைக்கு நிறைய வேலை இருக்குது. என்னால தூங்காம இருக்க முடியாது…”
“அப்போ வேற ரூம் போங்க…”
“என் வொய்ப் நீ இங்க தானே இருக்க…”
ஷேஷா அடுத்து வேறு எதுவும் பேசிவிடுவானோ என பாலை வாங்கி குடித்துவிட்டு அவனிடம் தராமல் எழுந்து சென்று டேபிளில் வைத்துவிட்டு வந்து படுத்துவிட்டாள்.
சின்ன சின்ன விஷயத்திலும் அவளின் எதிர்ப்பை அவனிடத்தில் பதிவு செய்துகொண்டே தான் இருந்தாள்.
ஒருவகையில் அவனிடத்தில் அவளுக்கு தோல்வியே எஞ்சினாலும் எதிர்க்காமல் இருந்ததே இல்லை ஷக்தி.
அது ஷேஷாவும் எதிர்பார்த்தது தான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் பழைய ஷக்தியாக மீண்டுவிட்டால் தான் தன்னை என்ன, யாரையும் சமாளிப்பாள். அதற்கு அவளை முதலில் தயார் செய்ய வேண்டும்.
இப்போதும் இந்த சிறு செயலில் கூட புன்னகைக்க வலிந்த இதழ்கள் இறுகியே கிடந்தது அவள் பேசிய விஷயங்களில்.
அருகில் சென்று பார்த்தவன் இப்போது சீரான மூச்சும், சுளிக்காத புருவமும் என அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டதை பறைசாற்றியது.
“ஷக்தி…” என்றவனின் தொடுகை கூட அவளை லேசாய் அசைத்து மீண்டும் உறக்கத்தை தொடர அதிலும் கூட அவள் மனதளவில் விழிப்பில் இருப்பதை உணர்ந்தான்.
எந்த கணம் அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தானோ இப்போது அது நூற்றுக்கு பலமடங்கு சரி என்றே தோன்றியது.
அவனுக்குமே இருதாரமணங்களில் உடன்பாடில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மனது முயன்றதில்லை.
மற்றவர்கள் விஷயம் தனக்கெதற்கு என இருந்துகொள்வான். ஆனால் யாருக்கும் ஷக்தியின் நிலை வரவே கூடாது என மனதார நினைத்தான்.
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதை போல பெரியவர்களின் தவறு அந்த சிறுபெண்ணை பாதித்ததை கண்டு அதிகாரவர்க்க ஆணவன் அவனே கலங்கி நின்றான்.
எத்தனை நேரம் அப்படியே நின்றபடி அவளின் முகத்தை பார்த்திருந்தானோ? மெல்ல திரும்பி சென்று இருக்கையில் அமர்ந்தவன் தனது மொபலில் கரைந்துபோனான்.
என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் கட்சிதமாக போட்டாகிற்று. அதை செயல்படுத்துவது தான் வேண்டும்.
காலை பவன் எழுந்ததும் தன்னை அழைக்குமாறு பவனிற்கு செய்தியை அனுப்பியவன் மீண்டும் வந்து படுத்துக்கொண்டான்.
காலை ஷக்தி எழுந்துகொள்ளும் பொழுது ஷேஷா அறையில் இல்லை. இப்படி என்றுமே அவள் தூங்கியதும் இல்லை.
தன்ராஜிடம் இருந்து தன்னை மீட்ட நாட்களில் இப்படி மயக்க மருந்துகளில், வலி தெரியாமல் இருக்க என்று ஆழந்த உறக்கத்தில் இருந்திருக்கிறாள்.
“இப்போதும் அப்படி ஒரு உறக்கம். அடித்துபோட்டதை போல அயர்ந்த சயனம். மனது லேசாய் அமைதிப்பட்டதை போல இருந்தாலும் இரவு அருந்திய பாலில் விளைவு என்று அவள் சரியாய் கண்டுகொண்டாள்.
ஷேஷா தனக்கு கொடுத்திருந்த போனை எடுத்து முதன்முதலாய் அவனுக்கு அழைத்தாள்.
“ஷேஷா…” என்றவளின் கோபத்தின் சூடு இங்குவரை அவனை பொசுக்கியது.
“ஹ்ம்ம், ஷக்தி, குட்மார்னிங்…”
“உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலை ஷேஷா…” என்றாள் காரமாக.
“இப்போ தான் எழுந்தியா?…”
ஷேஷாவின் குரலில் எந்த மாறுபாடும் இல்லை. திட்டியும், கோபப்பட்டும் அவன் செய்வதைத்தான் செய்துகொண்டு இருந்தான்.
“ஓகே ஷக்தி. நீ ப்ரெஷாகிட்டு ரெடியா இரு. உனக்கு கொஞ்சம் பார்சல் வரும். அதை ரூம்ல அரேஞ்ச் பண்ணி வை. நான் லஞ்ச்க்கும் இன்னைக்கு வர முடியாது…”
“முதல்ல நான் கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க…”
“ஹ்ம்ம்…”
“எனக்கு நேத்து ஸ்லீப்பிங் டோஸ் குடுத்தீங்களா?…”
“எஸ்…”
“எஸ்ஸா?…” என்றவளுக்கு கோபம் கூடியது.
“தென் வாட் நெக்ஸ்ட்?…”
“இப்படி நீங்க எத்தனை நாள் குடுக்க முடியும்?…”
“அதை அப்போ பார்த்துக்கலாம். இப்போ இன்டோர் ப்ளாண்ட்ஸ் சொல்லிருக்கேன். வரவும் ரூம்ல செட் பண்ணிடு. ஈவ்னிங் பேசலாம்…” என சொல்லி தொடர்பை துண்டித்துவிட கோபத்தில் அந்த மொபைலை வீசி எரிய போனவள் அப்படியே கையை மடக்கி அமர்ந்துகொண்டாள்.
உணவையும் மறுத்து அமர்ந்திருந்தவளின் ஆத்திரம் பெருக பெருக கல்லென இருந்தாள்.
காலையில் நேரம் கழித்து எழுந்ததனால் காலை உணவும் இன்றி மதிய உணவையும் மறுத்து கதவை திறக்காமல் ஷக்தி பிடிவாதமாய் இருக்க தகவல் ஷேஷாவிற்கு சென்றது.
“ஓகே, இதை உடனே ரன் பண்ணு. உடனே மூவ் பண்ணி எனக்கு ரிசல்ட் வந்துட்டே இருக்கனும்…” என பவனுக்கு ஆணையிட அவன் யோசனையுடன் பார்த்தான் ஷேஷாவை.
“பாஸ் நாளைக்கு மேம் வந்து சைன் பண்ணனும். அந்த வொர்க் ப்ராசஸ்ல இதுவும்?…”
“அது எவ்வளவு இம்பார்ட்டன்ட்டோ அதை விட இதுவும் இம்பார்ட்டன்ட். டூ இட்…” என ஷேஷா சொல்லவும் பவன் தலையசைத்தான்.
“ஏ டூ இசட் ஒரு சின்ன டாட் கூட மிஸ் ஆகிட கூடாது. அகத்தியன் எந்த புள்ளி வழியாவும் தப்பிடவோ இல்லை சுதாரிச்சிடவோ கூடாது…”
“சூய்ர் பாஸ்…”
“அகத்தியனோட ஆரம்பபுள்ளி ஆவுடையப்பன். அங்க இருந்து மிஷன் ஸ்டார்ட் பண்ணு…”
“பாஸ்…” என்று திகைத்தான் பவன்.
“எஸ், ஆவுடையப்பன், மணிவாசகம், இளவேந்தன், எழில் முக்கியமா எல்லார் எல்லாரோட சீக்ரெட்ஸ் எனக்கு வந்தாகனும். வித் ரெக்கார்ட்ஸ் அன்ட் எவிடன்ஸ். அப் டு டேட்…”
இத்தனை தீவிரம் ஏன் என்று பவனுக்கு விளங்கவில்லை. அகத்தியனை முன்பிருந்தே கவனிக்க சொல்லியிருந்த காரணம் ஷேஷாவை அவன் மூன்றுமுறை கொலைசெய்ய முயன்றதனால்.
ஷக்தியின் வரவின் பின்னர் அவளை சேர்ந்தவர்கள் எல்லாம் ஷேஷாவின் கண்காணிப்பிற்குள் வந்தனர்.
ஆனால் இப்பொழுது அவன் கொடுத்திருக்கும் இந்த வேலையும், அதன் பின்னணியும், விவரங்களும் தங்கள் கையில் கிடைப்பது அத்தனை சாத்தியமா?
நிச்சயம் சாத்தியம் தான் ஷேஷாவினால் முடியும். இருந்தாலும் சுலபமானதில்லையே.
ஒரு தலைமுறைக்கு முன்னோடி சென்று சேகரிக்கவேண்டிய விவரங்கள். அதுவும் அரசியல் குடும்பத்தின் ஆணிவேர்.
அங்கே இருந்து ரகசியங்களை கொண்டுவர முடியுமா என பவன் மலைத்தான். மலைத்து நின்றதென்னவோ ஒரு நிமிடம் தான்.
தன்னால் இதை செய்ய முடியவில்லை என்றால் தான் என்ன சிறந்த விசுவாசி? அந்த குடும்பத்தின் தலைமுறையாக தலைமுறையாக விசுவாசிகளாக தங்கள் பணியை செய்துவருபவர்கள் அவர்கள்.
ஆதிஷேஷனின், அவனின் குடும்பத்தில் நம்பிக்கைக்குரிய மந்திரி, தளபதி என எத்தனைவேண்டுமானாலும் சொல்லலாம் பவனை.
இப்போது குடும்பம் என்பது சுருங்கி ஆதிஷேஷன் மட்டுமே அங்கே பிரதானமாய் வீற்றிருக்கிறான் அவனின் சாம்ராஜ்யத்தில்.
அவனின் பலமும் அதுவே. யாருக்கும் தெரியாத பலவீனமும் அதுவே. ஒற்றையாய் ஆதிஷேஷன். அந்த ஒற்றையை, தன் ஒருவனை தனி ஒருவனாய் மாற்றிக்கொண்டான் தனக்கேற்றவாரு.
“பவன், கால் கிருஷ்…” என்றதும் ஐந்து நிமிடத்தில் கிருஷ் வந்து சேர்ந்தான் அந்த அறைக்கு.
“கிருஷ் டிபார்ட்மென்ட்ல நமக்கு தேவையான விஷயங்களை கலெக்ட் பண்ணிக்கோ. அது பக்கா கிளியரன்ஸ் டாக்குமெண்ட்ஸா இருக்கனும்…” என்ற ஷேஷா,
“ரெண்டுபேரும் ஒண்ணை மைன்ட் பண்ணிக்கோங்க. ஒவ்வொரு டீடெய்ல்ஸும் ஒன்னுக்கு பத்து தடவைக்கு மேல வெரிஃபை பண்ணிருக்கனும். எல்லா எவிடன்ஸும் நமக்கு சாஃப்ட் காப்பி, ஹார்ட் காப்பி ரெண்டுமே இருக்கனும்…”
“எஸ் பாஸ்…” இருவரும் தலையசைத்தனர்.
“டே பை டே பைல் பண்ணி இருக்கனும். மேபி இதை நாம கோர்ட்ல கூட ப்ரட்யூஸ் பன்ற மாதிரி இருக்கும். சோ நோ மோர் எக்ஸ்க்யூஸ் அன்ட் லூப் ஹோல்ஸ். கேர் ஃபுல். எல்லாம் திமிங்கலம். என்ன வேணா கிடைக்கும். எதுலையும் டிஸ்ட்ராக் ஆகிடாம இருக்கனும்…”
இத்தனை விளக்கம் கொடுத்து அவன் சொல்லியதிலேயே விஷயம் பெரிது என புரிந்துகொண்டார்கள்.