“அகத்தியன், உன்னை போஸ்ட்டிங்ல இருந்து தான் தூக்கனும்னு நினைச்சேன். பட், நீ வாழவே தகுதி இல்லாதவன்…” ஷேஷாவின் கோபம் அவன் கையிலிருந்த பேனா முனையில் பிரதிபலித்தது.
தன் மாளிகைக்கு வந்து சேர இரவு ஏழு மணி ஆனது. அதுவரையிலும் ஷக்தி வெளியேயும் வரவில்லை. யாரையும் உள்ளே அனுமதிக்கவும் இல்லை.
ஷேஷா வந்தவன் தனது கை ரேகையை கொண்டு கதவை திறந்து உள்ளே செல்ல, துளி வெளிச்சம் இன்றி இருள் போர்வைக்குள் இருந்தது அந்த அறை.
பார்த்தவனுக்கும் சட்டென கோபம் சூழ விளக்குகளை போட்டவன் ஒன்றும் பேசாமல் கதவை அடைத்துவிட்டு முதலில் குளிக்க சென்றான்.
குளித்து உடை மாற்ற வந்தவன் இன்டர்காமில் அழைத்து உணவுக்கு சொல்லிவிட்டு தனது மடிக்கணினியுடன் அமர்ந்துகொள்ள அவனையே வந்ததில் இருந்து பார்வையிட்டுக்கொண்டு இருந்தவளுக்கு இந்த கண்டுகொள்ளாதன்மை ஆவேசத்தையும், எரிச்சலையும் தூண்டியது.
இத்தனை நாள் தன்னை தாங்கியவனின் இந்த அலட்சியமும் பாராமுகமும் மனதை தைக்க தன்னிடம் பேசமாட்டானா என்பதை போல பார்த்துக்கொண்டே இருந்தாள்.
‘ஓஹ் ஷக்தி’ என அந்த பார்வையின் தீண்டலின் குறுகுறுப்பில் ஷேஷாவால் ஒரு நிலையில் அமர்ந்திருக்கமுடியவில்லை.
சாப்பாடு வரும் வரை அவளின் அசையா பார்வையும், அவனின் அலைபாயும் மனதும் என அந்த அறையே இருவரின் மௌன உணர்வுகளை சுமந்தபடி தள்ளாடியது.
பெல் அடிக்கும் சத்தத்தில் எழுந்து சென்று ட்ராலியை உள்ளே வாங்கிக்கொண்டவன் மீண்டும் வந்து சாப்பிட அமர்ந்தான் ஷக்தியின் எதிரே.
காலையில் எழுந்ததில் இருந்து அப்படியே அமர்ந்திருந்தாள் விரிந்த கூந்தலும், கோபம் கொண்ட விழிகளும் என.
“போய் ப்ரெஷ் பண்ணிட்டு வா ஷக்தி…”
“நோ, எனக்கு வேண்டாம்…”
“ஆனா நீ சாப்பிடனும். காலையில இருந்து சாப்பிடவும் இல்லை தானே?…”
அமர்ந்தவிதமாய் உறங்குவது அவளுக்கு பழக்கமாகி இருந்ததே. அதனால் அவளை மேலும் வற்புறுத்தாமல் அன்றுமட்டும் அவளின் போக்கிலேயே விட்டான்.
விடியலில் அவர்களுக்கான வெளிச்சம் விஸ்வரூபம் எடுக்கவிருந்தது. அது இன்னொருவரின் அஸ்தமனத்திற்கான அஸ்திவாரமாய் அமைந்தது.
——————————————-
“அப்போ நாளைக்கு போய் கையெழுத்து போட்டுத்தான் ஆகனுமா மருமகனே? இதுக்கு வேற எந்த வழியும் இல்லையா?…” அகத்தியன் வெந்துபோய் கேட்டுக்கொண்டு இருந்தான் நூறாவது முறையாய்.
“எழில், நீ இதை நினைச்சு பீல் பண்ணாத. நமக்கு பார்க்க நிறைய தொழில் இருக்கு. இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. இந்த ட்ரஸ்ட் போஸ்ட் நமக்கு இன்னொரு சுமை தான்…”
எழிலின் சோர்வை பார்த்து இளவேந்தான் அவனை தேற்ற முயன்றுகொண்டிருக்க எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாகவே அகத்தியனின் வெதும்பல் பேச்சு இருந்தது.
“அவனை சும்மா விட கூடாது மருமகனே. என்ன பன்றேன்னு பாருங்க. அவனுக்கு பெரிய செக்கா நான் வைக்கறேன். அன்னைக்கு இருக்கு அவனுக்கு…” அகத்தியன் இன்னும் அடங்காமல் குடித்துவிட்டு பேசிக்கொண்டே தான் இருந்தான்.
ஷேஷாவிடம் ஒவ்வொருமுறையும் தோற்பது அத்தனை அவமானமாய் இருந்தது எழிலுக்கு.
இந்த அறக்கட்டளையின் பொறுப்பை ஏற்றிருந்தாலும் ஷேஷாவை மீறி தன்னிச்சையான முடிவெடுத்து அங்கே தனது அதிகாரத்தை காண்பிக்கமுடியவில்லை.
ஏற்கனவே பெயரளவில் தான் அங்கே நிர்வாக பொறுப்பில் இருந்தான். இப்போது அதுவும் இல்லை.
இளவேந்தன் சொல்வதை போல தொழில்கள் இருக்கிறது தான். ஆனால் அதற்கும் அறக்கட்டளையின் ஒரு நிர்வாகியாக இருப்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது.
வானம் அறக்கட்டளை என்றால் அதன் மதிப்பே தனி. ஆரம்பித்ததில் இருந்து அதனை உச்சத்திற்கு உயர்த்தி இருந்தான் ஷேஷா.
ஆதிஷேஷனின் முன்னிலையில் தனக்கு மதிப்பில்லை, மரியாதை இல்லை என்றாலும் அதனை கொண்டு வெளியே எழிலின் மரியாதையே வேறு.
இப்போது அத்தனையும் பறிபோக இருக்கிறது. அதை தாங்கமுடியாமல் எழில் நொறுங்கி போனான்.
“அதை வச்சு பத்து பைசா பார்க்க முடியலைன்னாலும் அந்த பெயரை வச்சு என்னோட தனிப்பட்ட வளர்ச்சியில நான் போய்ட்டிருந்தேன் இளா. இப்ப அதுவும் போச்சு…”
“எழில், ப்ளீஸ்…” என அவனின் தோளை தட்டிக்கொடுத்தான்.
“இப்போ இந்த ட்ரஸ்ட் ஷேரிட்டி அத்தாரிட்டி மட்டுமா கை விட்டு போகுது? அந்த மனுஷன் எழுதி வச்ச அத்தனை ப்ராப்பர்ட்டியும் போக போகுது. அதான் அத்தனை தெளிவா எழுதி இருக்காரே. அவ்வளவும் ஷேஷா கைல இப்போ…” என்ற எழில்,
“என்னடா இது இளா? இந்த அஞ்சு வருஷமா தான் நிம்மதியா சந்தோஷமா இருந்தேன். போனவ எங்கையாவது செத்து தொலைஞ்சிருக்கலாம்ல. ச்சை…” என தன் தலையில் அடித்துக்கொண்டான்.
“இருந்தும் கெடுத்தா. இல்லாமலும் கெடுத்தா. திரும்பி வந்தும் கெடுத்தா. அடுத்த ஹாட் ந்யூஸ் இதுதான். ஷேஷா ந்யூஸ் குடுக்கலைன்னாலும் விஷயம் பரவும். இந்த மனுஷனோட பொண்ணு ஷக்தி, அவ இத்தனை நாள் இருந்தது தலைமறைவா இல்லை மறைத்து வைத்திருந்தார்களா அப்படின்னு…”
எழில் இளாவிடம் புலம்பிக்கொண்டிருக்க ஷக்தி என்ற பெயரில் அதுவரை முழு போதையில் இருந்த அகத்தியன் தடுமாறி எழுந்து வந்து,
“குட்டி அந்த குட்டி எங்க வந்தா? மருமகனே? எங்க அவ…” என குளறினார்.
முழு போதையிலும் ஷக்தியை பற்றி பேசியதில் அகத்தியனின் ஐம்புலன்களும் விழித்துக்கொண்டதில் இளவேந்தன் தன் தந்தையை அருவருப்புடன் பார்த்தான்.
எழில் தன் கவலையில் இதனை கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தான். ஷக்தியின் நோட்டீஸ் பற்றிய விவரங்கள் இன்னும் குடும்பத்தாருக்கும் எழிலின் தாய்க்கும் தெரிந்திருக்கவில்லை.
அதற்கு வேறு பதில் சொல்லவேண்டுமே. அத்துடன் நெருங்கிய சொந்தங்கள், அரசியல் வட்டாரங்களில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்துகொண்டால் தன் மானம், மரியாதை?
இப்படி நினைக்க நினைக்க தலை வெடித்துவிடும் போல இருந்தது. அத்தனை கோபமும் ஷக்தியிடமிருந்து ஷேஷாவின் மேல் பாய்ந்தது.
“அவனுக்கு நம்மை விட உயரத்துல இருக்கோம்ன்னு ஆணவம். அவனை ஏதாவது செஞ்சே தீரனும். இளா நான் செய்யறேன்டா. இல்லனா நான் என்னடா ஆம்பளை?…”
தன் தவறின் அடியை சுட்டி காண்பித்தவன் மேல் இருந்த வன்மத்தில் தன்மானத்தின் அடியாய் அதை எண்ணியவன் பழிவெறியை வளர்த்துக்கொண்டான்.
“அந்த ஷேஷாவை செய்யாம விடமாட்டேன். விடமாட்டேன்…” என முழுவதுமாக அவனும் குடித்துவிட்டு அங்கேயே படுத்துவிட்டான்.
இனி அவனையும் வீட்டிற்கு அனுப்பமுடியாத இளவேந்தன் தனது சகோதரிக்கு அழைத்துவிட்டான்.
“சொல்லு இளா…” என்ற ராஜியிடம்,
“எழில் இன்னைக்கு இங்கயே தான் இருக்க போறானாம்…” என்றதும் அவளிடத்தில் மௌனம்.
“ராஜி…”
“ஓகே இளா, பார்த்துக்கோ…” என்று சொல்லி துண்டித்துவிட்டாள்.
இளவேந்தனுக்கு தெரியும் ராஜி கண்டுகொள்ளமாட்டாள் என்று. எழிலிடம் என்றாவது ஒருநாள் தான் இப்படி நடக்கும். ஆதலால் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டாள். குடித்திருப்பான் என புரிந்துகொள்வாள்.
மறுநாள் ட்ரஸ்ட்டில் என்ன நடக்கும் என்ற பயத்தில் இளவேந்தன் உறக்கம் தொலைத்தான்.
அவனுக்கு நிச்சயம் தெரிந்திருந்தது ஷக்தி அங்கே இருப்பாள் என்று. ஷேஷாவின் மனைவியாய் அவளை பார்க்கையில் எழிலும், தன் தந்தையும் எந்தவிதமாக அதனை எதிர்கொள்வார்கள் என யோசித்தான்.
அதையும் விட ஷக்தியின் ரியாக்ஷன், அதை ஷேஷா கவனித்தால்? நினைக்கவே நடுக்கமாக இருந்தது.
அவனின் வேண்டுதல்கள் எல்லாம் ஷக்தி நடந்ததை அவனிடத்தில் சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதே தான்.
இளவேந்தனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லையே, இவனின் வேண்டுதல்கள் அந்த இறைவனை அடையும் முன்பே விஷயம் ஆதிஷேஷன் அறிந்துகொண்டான் என்று.