காலை விடியும் முன்பே எழுந்துவிட்டான் ஷேஷா. எழுந்தவன் ஷக்தியை எழுப்பி கிளம்பி இருக்க சொல்லிவிட்டு வெளியேறிவிட செய்வதறியாத நிலையில் ஷக்தி.
“நோ வே…” சொல்லிக்கொண்டவளுக்கு கிளம்புவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
அவளுக்கான உடைகளின் பிரிவில் வந்து நின்றவளுக்கு எதை போட்டுக்கொண்டு செல்வதென்றே புரியவில்லை.
இப்போது தான் வெறும் ஷக்தி அல்ல. ஷக்தி ஆதிஷேஷன். முதன் முதலில் அவள் அவனுக்காகவும் யோசித்த தருணமது.
எந்த வித சிலிர்ப்போ, உவகையோ, சந்தோஷமோ எதையும் அவள் அந்த நிமிடம் உணரவில்லை.
அவனின் மனைவி. தன்னை மற்றவர்கள் பார்க்கும் பார்வையில் அவனின் மரியாதையும் அடங்கி இருக்க அவ்விடத்தில் நிதானமாக யோசித்தாள்.
தலைக்கு மேல் போயாகிற்று. இனி தன் தைரியமே துணை. ஷேஷா பார்த்துக்கொள்வான்.
ஆனால் தன்னையும் தான் தான் பார்த்துக்கொள்ள வேண்டுமே என முயன்று தன் பயத்தை, நடுக்கத்தை துரத்தினாள்.
ஷக்திக்கு இப்போது உடுத்தும் வகையிலான உடைகள் நிறையவே ஷேஷா தேர்வு செய்து வரவழைத்திருக்க அதில் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டவள் கண்ணாடியில் தன்னுருவத்தை பார்த்தாள்.
இந்த சில நாட்களில் அவளின் முகமும், உடலும் கொஞ்சமே மாறி இருந்தது. அந்த மாற்றத்தை கண்ணுற்றவள் தலையை வாரி க்ளிப்பில் அடக்கினாள்.
முகத்தை நன்றாக துடைத்துவிட்டு பொட்டை எடுத்து நெற்றியில் வைக்கும் போது தான் ஷேஷா சொல்லியது ஞாபகம் வந்தது.
“என்னை அட்ராக்ட் பண்ணின ஒன்னு உங்ககிட்ட இருக்குது. நீயே கண்டுபிடி ஷக்தி…” மும்பையில் வைத்து ஷேஷா சொல்லியது ஞாபகம் வர பொட்டை வைக்காமல் சிறிது நேரம் கண்ணாடியையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
இரு புருவங்களுக்கு இடையில் நட்சத்திரம் போன்ற மச்சமும் அந்த நட்சத்திரம் சூலம் போன்ற வடிவில் மேல் நோக்கி இருந்தது.
பிறப்பு மச்சம். அழுத்தமாய் பார்ப்பவர்களின் பார்வையில் உடனடியாக பதிந்துபோய்விட கூடிய விதத்தில் இருக்க ஷக்திக்கு புரிந்தது.
முதன் முதலில் தன்னை நேரில் அருகில் காணும் பொழுது பார்த்த அந்த பார்வையும், அவனின் பளபளத்த விழிகளும் ஞாபகம் வந்தது.
“இதை வச்சு தான் என்னை கண்டுபிடிச்சீங்களா ஷேஷா?…” என தனக்கு தானே கேட்டுக்கொண்டே அந்த மச்சத்தை அழுத்தமாய் அழிப்பதை போல அவள் தேய்க்க,
“கரெக்ட். இதை வச்சும் தான் உன்னை கண்டுபிடிச்சேன் ஷக்தி…” என அவளின் பின் வந்து நின்றான் அவன்.
அவனை திரும்பி பார்த்தவளின் விழியில் தெறித்த கனலில் இன்னும் அதே பார்வையில் அவன் நிற்க கையில் வைத்திருந்த ஸ்டிக்கரை கொண்டு அந்த மச்சத்தை மறைத்தாள்.
“இதை அன்னைக்கு நான் கவனிக்காம விட்டதனால இங்க வந்து நிக்கறேன் இப்போ…” சூடான குரலில்.
“கிளம்பலாமா?…” ஷேஷா ஷக்தியின் அந்த பேச்சை காதில் வாங்கவில்லை.
அவன் கிளம்புவதாக சொல்லவுமே மீண்டும் பயம் வந்து ஒட்டிக்கொள்ள பார்க்க இனி பின்வாங்கவோ, ஒளிந்துகொள்ளவோ முடியாதே? கைகளை மடக்கி தன்னை ஸ்திரப்படுத்தினாள் ஷக்தி.
ஷக்தி அவளின் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முயல்வதை கண்ணுற்றவன் அமைதியாய் பார்த்தான். அவள் கண் மலர்ந்ததும்,
“ப்ரேக்பாஸ்ட் முடிச்சுட்டு போகலாமா? இல்லை ட்ரஸ்ட்ல பார்த்துக்கலாமா?…”
“எனக்கு இப்போ சாப்பிடற மூட் இல்லை…”
ஷக்தியின் முகத்திலடித்தார் போன்ற பதிலில் வாசற்புறம் திரும்பி நடந்தான் ஆதிஷேஷன். அவனின் அந்த அசட்டை அவளை இன்னும் வெறியேற்றியது.
‘இத்தனை பேசறேன். கொஞ்சமும் அசரவே மாட்டேன்றான்’ என கோபத்துடன் அவனின் பின்னே சென்றவள் நேராக அவன் பூஜை அறைக்கு செல்ல அங்கேயும் சென்று நின்றவள் ஷேஷாவை தான் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
“முடிஞ்சது. கிளம்புவோம்…” அவன் வெளியே செல்லும் பொழுது அவளின் கையை பற்றிக்கொள்ள உடன் இணைந்து நடந்தாள்.
காரில் செல்லும் பொழுதும் ஷேஷாவின் பேச்சு பவனிடம் இருக்க அதை கவனமாக கேட்டுக்கொண்டு வந்தாள் ஷக்தி.
“இன்னைக்கு எல்லாமே வீடியோ எவிடென்ஸா இருக்கனும் பவன்…”
“எஸ் பாஸ். ரூம்ல ஏற்கனவே கேமரா இருக்குது. நம்ம லாயர்ஸ் கூடவே இருக்காங்க…”
பவன் சொல்லவும் தனது பார்வையை வெளிப்பக்கமாக திருப்பினான். எழில் ஷக்தியை பார்த்ததும் என்ன செய்வான் என்று யோசித்தபடி வந்தான்.
ஷக்தியை திரும்பி பார்க்கவும், பேசவும் எண்ணம் எழுந்தாலும் இப்போதைக்கு அது தேவையில்லை என்று அதரங்களை அழுத்தமாக மூடிக்கொண்டான்.
இந்த விஷயம் முடிந்த பின்னர் தான் ஷக்தியிடம் பேச வேண்டும் என்று அவன் அப்படி இருக்க அவளுக்கு ஆற்றாமை பெருகியது.
அறக்கட்டளையை நெருங்க உள்ளங்கை வியர்க்க ஆரம்பிக்க வளாகத்திற்குள் நுழைந்து கார் அதனிடத்தில் நின்றதும் அதிலிருந்து இறங்கவே பெரும் பிரயத்தனப்பட வேண்டியதாகிற்று ஷக்திக்கு.
“ஷக்தி, லேட் ஆகுது. உள்ள வா…” என தன் கை நீட்டி அவன் அழைக்கவும் அப்போதும் அவனை எரிக்கும் பார்வை பார்த்தவள் உடனே பார்வையை மாற்றி கெஞ்சலாய் பார்க்க,
“கமான்…” என நீட்டிய கையை கீழிறக்காமல் அவன் நிற்க அது மற்றவர்களின் பார்வையை கவருமே என உடனே நகர்ந்து வந்து அவன் இறங்கிய பக்கமாகவே இறங்கிக்கொண்டாள்.
தரையில் கால் பட்டதும் உணர்வுகள் இறுக தனது இறுக்கத்தை ஷேஷாவின் கையில் காண்பித்தாள்.
பெண்ணின் கையில் இத்தனை வன்மையும், வலுவும். அதனை ஷேஷா உணர்ந்தான்.
“கூல்…” என்றவன் அவளுடன் உள்ளே செல்ல எதிரே கடந்து சென்றவர்கள் அனைவருக்கும் ஷேஷாவுக்கு வணக்கத்துடனும், ஷக்தியையும் கூடுதல் கவனிப்போடும் கடந்து செல்ல இன்னும் நெருங்கி அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
அவனின் அறைக்குள் நுழையும் வரை ஒருமனநிலையில் இல்லை ஷக்தி. எத்தனை முறை தந்தைக்கென்று அங்கே வந்திருக்கிறாள். இப்படி வருவாள் என்று நினைத்ததில்லை.
“என்ன ஓகே? என்னால முடியலை. டார்ச்சரா இருக்கு…” என்றவளின் இரைச்சல் அந்த அறையில் எதிரொலிக்க,
“உன்னால முடியும். ஏன் முடியாது? இத்தனை நாள் உன்னை பேசினவங்கட்ட எப்படி பதில் குடுத்தியோ அந்த ஷக்தியா இரு…”
தன் நிலை புரியாமல் மீண்டும் சொன்னதையே சொல்லும் அவனை என்ன செய்வது என முறைத்தவண்ணம் அவள் பார்க்க ஷேஷா அவளருகில் சென்று அமர்ந்து ஷக்தியின் கையை பற்றிக்கொண்டான்.
“என்ன கோபம்னாலும் என்கிட்டே காட்டு. தனியா காட்டு. ஆனா அவங்க முன்னாடி உன் பயத்தையோ காமிச்சு அவங்களை மட்டும் சந்தோஷப்படுத்திடாத…”