ஷக்தியும் கொஞ்சமும் யோசிக்காமல் சொல்ல தலையசைத்து ஆமோதித்தபடி அந்த நாற்காலியில் சுழன்றவன்,
“செய்யலாம். கண்டிப்பா செய்யத்தான் வேணும். எதுவுமே இல்லாம இன்னும் இந்த உலகத்தில் மக்கள் இருக்கத்தான் செய்யறாங்க. அவங்களுக்கு போய் சேர கூடிய நல்லவைல நம்ம பங்கும் கொஞ்சம் இருக்கனும்…” ஷக்தி தலையை மட்டும் அசைக்க,
“வெய்ட் பண்ணு. வந்திடறேன்…” என எழுந்து வெளியே வந்தவன் ஐந்து நிமிடத்தில் மீண்டும் உள்ளே வர ஷக்தி அந்த கோப்புகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“எழில் வந்தாச்சு ஷக்தி…” என்றவனின் குரலில் நிமிராமல் அவள் இருக்க,
“இப்போ வந்திருவாங்க. ஸ்ட்ராங் ஷக்தி. நான் உன் கூடவே தான் இருக்கேன்….” அழுத்தமாய் அவளுக்கு தன்னை அவன் பதிய வைக்க அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.
எழில் வந்துவிட்டான் என்பதிலேயே தான் அவளின் எண்ண அலைகள் அலைமோதியது.
“ப்ளீஸ் அண்ணா, கதவை திறந்துவிடுங்க. அம்மாவோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் உள்ள தான் இருக்குது. அதை மட்டுமாவது எடுத்துட்டு போய்டறேன். ப்ளீஸ்…” என அன்று அந்த இரவில் அவனிடம் கை கூப்பி கெஞ்சியவை ஞாபகமாய் வந்தது.
“இனி இந்த பக்கமே உன்னை பார்க்க கூடாது. எங்கப்பா இருந்தவரைக்கும் எல்லாம் அனுபவிச்ச தானே? அவர் போயாச்சு. நீயும் இங்க இருந்து போய்டு…” என நாயை விரட்டியதை போல அவன் விரட்டியதும் மனதில் எழுந்து ஷக்தியை விழி சிவக்க செய்ய கதவு திறக்கும் ஓசையில் நிமிர்ந்து பார்த்தாள்.
தன்னருகே ஷேஷா வந்து அமர்ந்ததை கூட உணராதவளின் பார்வையின் தீட்சண்யம் உள்ளே நுழைந்த எழிலை சுட்டு பொசுக்கியது.
அவன் ஷேஷாவின் அருகே அமர்ந்திருக்கும் பெண் ஷக்தியாக இருக்குமென்று நினைக்கவே இல்லை.
ஆனால் முன்னால் வர வர ஷக்தியின் உக்கிரம் கூடிய பார்வையும் அதன் வீரியமும் அவனுக்கு அப்பட்டமாய் எடுத்துரைத்தது.
தாய் தந்தையை இழந்து ஊனின்றி, உடமை இன்றி, உறைவிடம் இன்றி ஒரே நாளில் அநாதையாக தான் நின்ற நாள்.
தன் நடுக்கம் எல்லாம் எங்கோ பறந்து சென்றிருக்க எதிரே இருந்தவனை எரித்துக்கொண்டு இருந்தாள் ஷக்தி.
எழிலின் உடன் வந்த இளவேந்தனை ஷேஷா உள்ளே அந்த அறைக்குள் அனுமதிக்கவே இல்லை. அகத்தியனும் வந்திருக்கவில்லை. ஷேஷா வரவிடவில்லை என்பதே பொருத்தமாக இருக்கும்.
எழிலுக்கு அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே நேரம் பிடித்தது. சமைந்துவிட்ட நிலையில் அவன் நின்றிருக்க மேலும் அவனை கலவரமூட்டும் பதிலை கூறினான் ஷேஷா.
“வெல்கம் எழில்…” என்றவன் மனைவியின் பக்கம் பார்த்து,
“இவங்க ஷக்தி. என்னோட வொய்ப் மிஸஸ் ஷக்தி ஆதிஷேஷன்…” என எழிலுக்கு அடுத்த இடியை தலையில் இறக்கினான்.
அவன் அதனை ஜீரணிக்க நேரம் கொடுத்த ஷேஷா லாயரையும், பவனையும் உள்ளே அழைத்தான். எழிலுடன் அவனின் லாயரும் வந்திருக்க டாக்குமென்ட்ன்ஸ் வெரிபிகேஷன் நடந்தது.
எழில் இன்னும் விடாமல் ஷக்தியை பார்த்துக்கொண்டே இருந்தான். மீண்டும் தனது மனதிற்கு அவளை ஊர்ஜீதப்படுத்திக்கொள்ள பார்க்க ஷக்திக்கு அவனின் அந்த பார்வையே பழைய நிமிர்வை தந்தது.
தன்னை கண்டு நடுங்கும் இந்த பார்வையும், உடல்மொழியும் அவளை சமாதானம் செய்ய முற்பட்டது.
‘இல்லை இன்னும் கொஞ்சம் வேண்டும்’ என்னும் ஆவேசம் எழ அதை மொத்தமும் அவளின் விழிகளில் காண்பித்தாள்.
ரௌத்ரம் சுமந்த அவள் கண்கள் எழிலை அச்சுறுத்தியது. மேலும் அடுத்த அடி எடுத்து வைக்கவே அஞ்சியவனாக ஷேஷாவை பார்க்க அவனும் ஊடுருவும் பார்வையுடன் இவனை பார்த்துக்கொண்டு இருந்தான்.
முதல்நாள் ஷேஷாவை ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அப்படியே தொண்டைக்குழிக்குள் சிக்கிக்கொண்டது.
பழி வெறியில் பொங்கிய ஆத்திரங்கள் மொத்தமும் வடிந்துவிட்டது அவர்களின் பார்வையில்.
ஷேஷாவின் மனைவியாக ஷக்தி. ஷக்தியின் இந்த தோற்றம் தான் அவளை தாங்கள் கண்டுகொள்ளவிடாமல் செய்துவிட்டது.
இல்லை என்றாலும் ஷேஷாவிடம் ஷக்தி இருக்கையில் நிச்சயம் தங்களால் ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதில் நிச்சயம். இருந்தாலும் அவன் எப்படி ஷக்தியை மணந்துகொண்டான் என நம்பவும் முடியவில்லை.
அவனின் எண்ணவோட்டங்களை ஷேஷா கவனித்துக்கொண்டே இருக்க எழிலுக்கு அங்கே நிற்கவும் முடியவில்லை.
தன்னை அமர்ந்துகொள்ளவும் சொல்லாத அந்த இடமே நெருப்பில் நிற்பதை போன்று தகித்தது.
கடைசியாக ஷக்தியை பார்த்த அன்று தான் எப்படி உதாசீனம் செய்து துரத்தி அடித்தோம் என நினைத்தவனுக்கு இப்போது அவளின் முன்னே கூனி குறுகி நிற்கும் விதம் கொடுமையாக இருந்தது.
“பவன்…” ஷேஷாவின் அழைப்பிலும் கண் காட்டிய விதத்திலும்,
“ஸார் இங்க உட்காருங்க…” என்றான் பவன்.
அதை கூட தான் சொல்லாது அவனின் கீழ் இருப்பவர்கள் சொல்ல இன்னுமே தன்னை கீழாக உணர்ந்து குறுகி நின்றான்.
“ஸார்…” என்று மீண்டும் பவன் அழைக்க,
“தேவையில்லை…” என இறுக்கத்துடன் பதில் அளித்த எழில்,
“ப்ரசீட் பண்ணலாம்…” என தனது லாயரிடம் சொல்லவும் அவரும் தலையசைத்து முன்னால் வந்தார்.
“சைன் பண்ணிடலாம் ஸார்…” என ஷேஷாவிடம் சொல்ல,
“இத்தனை வருஷம் அவர் ஹேண்டில் பண்ணினதுக்கான இன் அன் அவுட் டாக்குமேன்ட்ஸ் எல்லாம் ப்ராப்பரா இருக்கா?…” என ஷேஷா தன் லாயரிடம் கேட்டான்.
பல்லை கடித்துக்கொண்டு அதையும் சகித்தபடி எழில் நிற்க அவர் இல்லை என்பதை போல பதிலளித்தார் அவனிடத்தில்.
“சில வவுச்சர்ஸ், இன்கம்மோட பேப்பர்ஸ் அத்தனை தெளிவு இல்லை ஸார். அவங்க பிராப்பரா எதையும் குடுக்கலை. ஐ மீன் இதுவரை அவங்க இந்த சொத்துக்கள் மூலமா வாங்கியிருக்கும் வரவு செலவுக்கான கணக்கு எதுவும் சரியா இல்லை…”
“ஓஹ்…” என்றவனின் குத்தும் பார்வை எழிலை குதறியது.
“ஸார் எங்களுக்கு ஒரு ஒன் வீக் டைம் குடுங்க. அந்த கணக்குகளை எல்லாம் முறையா உங்களுக்கு காண்பிக்க வேண்டியது என்னோட பொறுப்பு…” என வக்கீல் சொல்லவும் எழிலை தான் பார்த்தான் ஷேஷா.
“எழில் நீங்க என்ன சொல்றீங்க?…” என கேட்க அவனை கடன்காரன் போல கழுத்தில் கைவைத்து கேட்கும் விதமான இந்த கேள்வியையும், தான் இருக்கும் நிலையையும் அறவே வெறுத்தவன்,
“இது என் அப்பாவோட சம்பாத்தியம். எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு…” என திண்ணக்கமாக பதில் சொன்னான்.
“வாவ், அப்போ உங்களுடைய சொத்துக்களும் கூட மிஸ்டர் மணிவாசகம் சம்பாத்தியம் தானே? ஷக்தி அவரோட பொண்ணுன்ற பட்சத்துல அவங்களுக்கும் எல்லா ரைட்ஸும் இருக்கும் தானே?…”
ஷேஷாவின் இந்த கேள்வியில் ஆடித்தான் போனான் எழில். அடிவயிற்றில் பயப்பந்து சுழல அதுவும் ஷேஷாவின் அந்த பார்வை அவனை நிலைகுலைய செய்தது.
“நீங்க எல்லாத்துக்கும் உரிமை பாராட்டினா என்னோட வொய்ப் உரிமைக்காக நானும் பேசுவேன்…” என்றவனின் பேச்சும் அலட்சியமும் இப்போது எழிலை கட்டிப்போட்டது.
கையறு நிலை. அவன் அப்படித்தான் நின்றிருந்தான். கண்கள் கலங்கும் போல இருந்தது எழிலுக்கு.