இன்னும் அவன் சொல்லியதன் பொருள் உணர்த்திய செய்தியில் இருந்து ஷக்தியால் மீளமுடியவில்லை.
ஷேஷா சொல்லியதன் அர்த்தம் அதுவாகத்தான் இருக்குமோ என்னும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற ஆரம்பித்தது ஷக்திக்கு.
அன்று நடந்த அநியாயமும், அராஜகமும் அவளை உறுதியாய் அப்படிதான் என எண்ண வைத்தது.
“கண்டிப்பா சொல்றேன்னா? எப்போ? என்ன நடந்ததுன்னு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா? இது என்னோட அப்பா சம்பந்தப்பட்டது…” ஷக்தி அவனிடத்தில் இருந்து விடையை தெரிய தவியாய் தவித்தாள்.
“ஷக்தி கூல் டவுன். நான் சொல்றேன்னு சொல்றேன் தானே? எனக்கு இப்போ தான் விஷயம் தெரியவந்தது. வெய்ட் பண்ணு…” என்றான் தற்போது சொல்ல இயலாது என்பதை போல ஷேஷா.
ஷேஷா சொல்லவும் தான் கையெழுத்து போட்டுகொண்டுந்த பொழுது அவன் போன் பேசியதும், தன்னையும், எழிலையும் பார்த்ததும் ஞாபகம் வர அதற்கு மேலும் அங்கே இருக்க முடியாமல் வேகமாய் நகர்ந்தவள்,
“என்னால இங்க இருக்க முடியலை. நீங்க எதுவும் சொல்லவும் போறதில்லை. நான் போறேன். என்னை வீட்டுல ட்ராப் பண்ண சொல்லுங்க…” என்றாள் ஆவேசத்தை அடக்கிய விதமாய்.
ஷக்தி கிளம்ப அவளை முதலில் தடுக்க நினைத்தவன் பின் தானே தனியாய் செல்கிறேன் என்றவளை புன்னகையுடன் தலையசைத்து அனுமதித்தான்.
“குட்…” என ஷேஷா சொல்ல,
“ஒன்னும் தேவையில்லை. உங்க வேலையை நீங்க பாருங்க…” கடுப்புடன் அவள் பேசவும் ஷேஷாவின் புருவம் உயர்ந்து இன்னும் சிரிப்பு வந்தது.
“அப்படியே ஷக்தியும் அவங்க வேலையை பார்த்தா நல்லா இருக்கும்…”
“என்ன? நான் என்ன வேலை பார்க்கனும்?…”
“இன்னைக்கு தான் சார்ஜ் எடுத்திருக்க. அப்போ இங்க உன்னோட வொர்க் எல்லாம் யார் பார்ப்பா?…”
“நீங்க தான். நான் இது எதையும் கேட்கலையே. அதனால நீங்களே பாருங்க…” என முறைத்துக்கொண்டு சொல்ல அதற்கும் கூட தலையசைத்து புன்னகைத்தான்.
“இன்னொருதடவை இப்படி பண்ணிட்டு சிரிக்காதீங்க….” என்றாள் இன்னும் கோபமாக.
“ஓகே, ஆனா உன்னோட ரிலாக்ஸ், உனக்கு தான் ரூம்ல தனியா இருக்க பிடிக்கலையே?…”
“மண்ணாங்கட்டி ரிலாக்ஸ். என்னை பேச வைக்க வேண்டாம் ஷேஷா. நீங்க எதையும் சொல்லமாட்டீங்க. நினைச்சதை நடத்துவீங்க. நான் கேட்டுட்டே இருக்கனுமா? நெவர். அதான் எழுதி வாங்கியாச்சு இல்லையா? என் வேலையும் சேர்த்தே பாருங்க…”
“ஷக்தி இங்க வா….” என அழைத்தான் ஷேஷா.
“ஐ டோன்ட் கேர். நான் வரமுடியாது…” வேகமாய் சொல்லிவிடு கதவை திறந்துகொண்டு செல்ல அவளை அழைத்து செல்லும்படி கூற போனை எடுத்தான்.
பவனுக்கு அழைக்க அவனின் எண்ணை அழுத்தும் முன் கிருஷிடம் இருந்து போன்.
“கிருஷ் ஷக்தி வெளில வராங்க. வீட்டுல ட்ராப் பண்ணிடு…” என சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தான் ஷேஷா.
“பாஸ் அகத்தியன் உள்ள வந்திட்டு இருக்கார்…” கிருஷ் சொல்லவுமே தன் நாற்காலியில் இருந்து மின்னலென எழுந்தவன்,
“ஷிட்…” என்றபடி வெளியே ஓடி வர அவன் வந்த வேகத்தில் அவனை அடைந்து அணைத்திருந்தாள் ஷக்தி.
“ஷக்தி என்னாச்சு?…” என்று அவளை பார்க்க முயல,
“ஷேஷா நோ….” என்றவளின் இறுக்கமான பிடியும், உடலின் நடுக்கமும் அவனின் மொத்த நாளங்களிலும் பெண் கொண்ட பயத்தை பறைசாற்றியது.
“ஷக்தி நத்திங். நான் இருக்கேன்ல…” ஷேஷா சொல்லிக்கொண்டிருக்க அகத்தியன் வந்து சேர்ந்தான்.
“ஏய் குட்டி…” என்ற அழைப்பில் ஷக்தியின் உடல் இறுகி ஷேஷாவின் நெஞ்சத்தை தன் முகத்தால் துளைத்தபடி அழுத்தமாய் புதைந்தாள்.
“பவன்…” என்ற ஷேஷாவின் அலறல் அந்த கட்டிடத்தையே ஆட்டிப்பார்த்தது.
“அன்எக்ஸ்பக்ட்டட் பாஸ்…” என்ற பவன் அவர்களை மறித்து அகத்தியனுக்கு எதிரே வந்து நின்றான்.
“ஸார் இங்க உங்களுக்கு அலோவ்ட் இல்லை. எதுவா இருந்தாலும் அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டு வாங்க…” என பவன் சொல்ல,
“காவலுக்கு வேலை பார்க்கற நாய் நீ. என்னை அதிகாரம் பன்றியா?…” என அகத்தியன் கோபத்துடன் பேசினான்.
“அப்பா…” என அதற்குள் வேக நடையுடன் வந்துவிட்டான் இளவேந்தன்.
வந்தவன் அகத்தியனை மேலும் முன்னே செல்லவிடாமல் தன் கையால் பிடித்துக்கொண்டவன் ஷேஷாவை பார்த்தான்.
அந்த பார்வை அவனை மட்டுமல்லாது அவனின் கையணைப்பிற்குள் நின்றிருந்த ஷக்தியையுமே பார்த்தது.
“வாட்?…” என்றான் இளவேந்தனிடம் ஷேஷா உறுமலாக.
“நத்திங் ஸார். நாங்க கிளம்பறோம்…” என இளா சொல்ல,
“நீ சும்மா இருடா. எல்லாம் உன்னால தான். அன்னைக்கு மட்டும் நீ வராம இருந்திருந்தா?…” என்ற அகத்தியன் சட்டென பேச்சை நிறுத்தி ஷேஷாவை பார்த்தான்.
அதென்ன அத்தனை கொலைவெறி அகத்தியனை பார்த்த ஷேஷாவின் கண்களில்.
இப்படி பார்வையிலேயே கூறுபோடமுடியுமா என தோன்றியது அகத்தியனுக்கும், இளவேந்தனுக்கும்.
“அகத்தியன் யூர் கவுண்டவுன் ஸ்டார்ட்…” என்ற ஷேஷாவின் வார்த்தைகள் புலியின் பற்களில் கடிபட்டு வருபவையாக கர்ஜனை கொண்டு வந்தது.
“ஏன் ஏன் நான் என்ன பண்ணேன்?…” வேகமாய் அகத்தியன் கேட்க ஷேஷா தனது மார்பில் புதைத்திருந்தவளின் தலையை வலது கையால் வருடியபடி ஷக்தியை பார்த்துவிட்டு அகத்தியனை பார்த்தான்.
அந்த விழிகளின் தீட்சண்யம் சுட்டு பொசுக்கியது அகத்தியனை. எச்சிலை விழுங்கியபடி ஷேஷாவை பயப்பார்வை பார்த்த அகத்தியன்,
“இப்படி எல்லாம் பார்த்து பயமுறுத்தினா பயந்துருவேனா? எனக்கு பின்னால அரசாங்கமே இருக்குது…” என்றான்.
“அப்பா, நீங்க பேசாம இருங்க. எதுக்கு இங்க வந்தீங்க?…” என இளா பேச,
“மருமகனை கையெழுத்து போடவேண்டாம்ன்னு சொல்லத்தான். அதுல என்ன எழுதிருக்குன்னு நானும் பார்க்கனும்ல…”
“அதெல்லாம் போட்டு முடிச்சு எழில் வெளில போய்ட்டான். உங்க காரை பார்த்துட்டு தான் நான் அவனை கார்ல இருக்க சொல்லிட்டு வந்தேன். நீங்க கிளம்புங்க முதல்ல. இனி இங்க வரது இதுவே கடைசியா இருக்கட்டும்…” என்றான் இளவேந்தன்.
“என்னது இங்க வர கூடாதா?…” என்ற அகத்தியன் ஷக்தியை பார்க்க முயல ஷேஷா இழுத்துபிடித்திருந்த சிறிது பொறுமையும் அந்த பார்வையில் பறந்தது.
“பவன், இவங்க யாரும் இங்க இருக்க கூடாது. அவுட்…” என்ற ஷேஷா,
“இந்தாளு போகலைன்னா கழுத்தை பிடிச்சு வெளில தள்ளு…” என்று சொல்லிய வேகத்தில் பவன் மிரண்டு போனான்.
நடக்கும் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல்வாதி, அமைச்சர் என்றும் பாராமல் இப்படி பேசுகிறானே ஷேஷா என அதிர்ந்து பார்க்க இளவேந்தனுக்கு அவமானமாக இருந்தது.
இனி அந்த இறைவன் விட்ட வழி. அது புரியாமல் இப்படி தன் தந்தையும் ஆடுகிறாரே என்று கவலையுடன் பார்த்தான்.
“எங்க என் மேல கை வச்சிருவியா? வச்சி பாரேன் அப்போ தெரியும்…” என்ற அகத்தியனுக்கு ஷக்தி ஷேஷாவின் கைகளுக்குள் ஷக்தி நின்றுகொண்டிருப்பதை ஏற்கவே முடியவில்லை.
அவளை இழுத்து தன் அணைப்பிற்குள் வைத்துக்கொள்ளும் வேகம் பிறக்க அது முகத்திலேயே தெரிந்தது.
“இவ உன்னோட இருக்கற தைரியமா? இவ எப்படி உன்கிட்ட?…” அகத்தியன் குதித்தான்.
“அப்பா, ஷக்தி ஷேஷாவோட வொய்ப்…” என இளவேந்தன் சொல்லவும் அடுத்த அதிர்ச்சி அகத்தியனுக்கு.
“என்னடா சொல்ற?…” அந்த கிழவனுக்கு அதையும் தாங்கமுடியவில்லை.
அப்படி இருக்க அவனின் மனைவியானவளை நெருங்குவதென்பது அகத்தியனுக்கு எட்டா கனி ஆகிற்றே.
“வாங்க போகலாம்…” என இளவேந்தன் தந்தையை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல வெறித்த பார்வையுடன் ஷேஷா அகத்தியனையே பார்த்தபடி நின்றான்.
அவனிருக்கும் அந்த கட்டிடம் தனியே அவனின் உபயோகதிற்கென்று பிரத்யோகமாய் கட்டப்பட்டது.
அது மொத்தமும் அவனின் நேர்பார்வையில் இருக்கும் கட்டிடம். அகத்தியனாகட்டும், எழிலாகட்டும், மற்ற அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ வருபவரை தவிர்த்து வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது.
அகத்தியனின் அரசியல் வாகனத்துடன் பாதுகாப்பிற்கென வந்தவர்களும் கூட வெளியே தான் இருக்க வேண்டும்.
இப்படி எல்லாவற்றிலும் கவனத்தில் இருப்பவனிடத்தில் திரும்பவும் தோற்கிறோம் என்னும் எண்ணமே அகத்தியனை நிலையிழக்க செய்தது.
“ஏன்டா ஷக்தி ஷேஷா பொண்டாட்டியா? நிஜமாவா? உண்மைய சொல்லு…” என இளவேந்தனை பிடித்து தன்னுடைய காருக்குள் இழுத்து அமர்ந்தவன் கேட்க இளவேந்தன் ஆமாம் என்றான்.
எழிலை எந்த கையெழுத்தும் போடாமல் இருக்க செய்யவும், ஷக்தி வந்திருக்கிறாளா என பார்க்கவும் கிளம்பி வந்தவனின் வேகத்தில் தடை ஏற்படுவதை போல கட்சி அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு.
தவிர்க்கமுடியாமல் கிளம்பி சென்றவன் அங்கே வேலையை முடித்துகொண்டு அவசரமாக கிளம்பி வர வரும் வழியெல்லாம் எழிலின் எண்ணிற்கு முயற்சிக்க தொடர்புகொள்ளவே முடியவில்லை.
எங்கே கையெழுத்தும் போட்டுவிட்டு, ஷக்தியும் கிளம்பி சென்றுவிட்டால் எனும் நினைப்போடு வந்து சேர்ந்தவன் எழிலின் காரை கவனிக்கவில்லை.
தனது வாகனத்தில் இருந்து இறங்கி விறுவிறுவென வேஷ்டியை தூக்கி பிடித்துக்கொண்டு உள்ளே ஓட்டமும் நடையுமாக வர எதிரே வந்துகொண்டிருந்த பெண் மீது அந்த வளைவில் எதிர்பாராத விதமாக மோதி தடுமாறினான்.
நெற்றியில் இருவரும் நன்றாக முட்டிக்கொள்ள தலையை தேய்த்துவிட்டு யார் என பார்க்க,
“அவுச், பார்த்து வரமாட்டீங்களா?…” என்ற அந்த குரலும் தன்னை பார்த்ததும் நெற்றியோடு கண்ணையும் சேர்த்து தேய்த்தபடி இருந்தவளின் அதிர்ச்சியும், கைகொண்டு தேய்த்ததில் ஸ்டிக்கர் பொட்டு விழுந்திருக்க இரு புருவத்தின் இடையே தெரிந்த மச்சமும் காட்டிக்கொடுத்தது ஷக்தியை.
“ஏய் குட்டி…” என்ற அழைப்பை கேட்டதுமே அவள் நடுங்கியதில் உறுதி செய்தவர் கையை நீட்டும் முன்னே வேகமாய் அவள் ஓடிவிட பின்னால் துரத்தி வந்தவருக்கு சகலமும் மறந்தது.
ஓடியவள் ஷேஷாவை சென்று அணைத்துக்கொண்டாள். அதை கண்டதும் ஷக்தியை தன்னிடம் இழுத்துக்கொள்ள கை பரபரத்தது.