இப்போது நினைக்கும் பொழுது தான் தான் எத்தனை மடத்தனமாய் இருந்திருக்கிறோம் என நினைத்தான் அகத்தியன்.
“ச்சே, அன்னைக்கே பொறி தட்டுச்சு. மருமகன் தான் இருக்காதுன்னு சொல்லி மனசை மாத்தி விட்டுட்டாப்ல. இல்லன்னா…” என்று அகத்தியன் கூச்சலாய் சொல்ல,
“அப்பா போதும்…” என்றான் இளவேந்தன்.
“என்னடா போதும்? நீயெல்லாம் எனக்கு பிள்ளையா? கைக்கு கிடைச்ச அவளை கை நழுவ காரணமே நீ தான்…” என மகனை திட்டினான்.
“அன்னைக்கு நான் வரலைன்னா நீங்க உயிரோட இருந்திருக்க மாட்டீங்க…”
“என்னை காப்பாத்தனும்னா அதுக்கு அவளை தப்பிக்க விடுவியா? அன்னைக்கே அவளை என் பிடிக்குள்ள கொண்டு வந்திருந்தா இன்னைக்கு இப்படி மருமகன் இருக்க வேண்டி வந்திருக்குமா?…” அகத்தியன் பேசவும் இளவேந்தனுக்கு எரிச்சல் கூடியது.
கொஞ்சமும் மனசாட்சி இல்லாது மகனிடம் என்ன பேசுகிறோம் என அறிவின்றி அவர் பேச இளவேந்தன் தான் கூசி போனான்.
‘என்ன மனிதனோ’ என அகத்தியனின் மகனாய் அவமானமாய் உணர்ந்தான் இளவேந்தன்.
“எங்கடா மருமகன்? எதுக்கு கையெழுத்து போட்டீங்க? நான் வரனும்னு சொல்ல தோணுச்சா? சொல்லிருந்தா அந்த ஷேஷாட்ட பேசி இன்னும் கொஞ்ச நாள் நேரம் வாங்கிருப்பேன்ல…”
“அப்பா, நம்ம பேச்சை கேட்கிற ஆள் இல்லை ஷேஷா…” என சொல்லிய இளா,
“எனக்கு தெரிஞ்சு ஷேஷா பெருசா எதுவோ பண்ண போறான். எனக்கு எதுவுமே சரியாப்படலை…” என்று சொல்லி இளா காரில் இருந்து இறங்கிவிட்டான்.
அகத்தியனும் அதை உணரத்தான் செய்தான். ஆனாலும் ஒரு தைரியம். தான் பதவியில் இருக்கும் பொழுது இத்தனை பாதுகாப்புகளை மீறி என்ன செய்துவிட முடியும் என்று ஒரு அகம்பாவம் அகத்தியனுக்குள்.
“என்னை ஒன்னும் பண்ண முடியாது என் கெண்டைக்கால் ரோமத்தை தொடமுடியுமா அவனால?…” என திமிராக சொல்லியபடி எழிலிடம் வந்து பேசினான்.
“இல்லை மாமா. அவனை நம்ப முடியாது. என்னவோ பன்றான். அவனுக்கு என்னவோ தெரிஞ்சிருக்கு…” எழில் சொல்ல,
“ஹ்ம்ம்…” என்ற இளா தங்களின் ட்ரைவரை அழைத்து காரை எடுக்க சொல்லி,
“அப்பா எங்களோட வரீங்களா?…” என கேட்க,
“எனக்கு என்னோட வண்டி இருக்கும் போது இதுல எதுக்கு? நீங்க போங்க. நான் என் கார்ல வரேன்…” என இறங்கிக்கொள்ள இளாவும் சேர்ந்தே இறங்கினான்.
“நீங்க கார்ல ஏறுங்க…” என்று அகத்தியனை காரில் ஏற்றி அமர வைத்துவிட்டு தான் வந்து கிளம்பினான்.
அவர்களின் கார் ரிவர்ஸ் எடுத்து அந்த இடத்தில் இருந்து கிளம்பும் நேரம் ஷேஷாவோடு ஷக்தி வெளியே வருவதை பார்த்தார்கள் அவர்கள் அனைவருமே.
ஷக்தி இன்னுமே தலை நிமிர்ந்தும் பாராமல் கண் மூடியபடி அவனின் தோள் சாய்ந்துகொண்டு நடந்துவர, அவளிடம் குனிந்து பேசிக்கொண்டே எதையோ அவளுக்கு அறிவுறுத்திக்கொண்டே அணைத்தபடி ஷேஷாவும் வந்தான்.
எழில், இளவேந்தன், அகத்தியன் மூவருமே ஒவ்வொரு மனநிலையில் இந்த காட்சியை பார்த்தார்கள்.
இன்னும் நம்பமுடியாத ஒன்று தான் அவர்களுக்கு ஷேஷா ஷக்தி திருமணமும், இருவரின் இந்த இணக்கமும், அனுசரணையும்.
ஷேஷாவிடம் இவ்வளவு மென்மையா என்னும் விதமாய் இருந்தது ஷக்தியிடம் அவன் பேசும் போதிருந்த முகபாவனை.
‘இவனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா? அதான் அத்தனை சினிமாக்காரிகளும் இவன் பின்னால சுத்துறாளுங்களே. போயும் போயும் இந்த குட்டியை கட்டிருக்கானே? தானும் வாழமாட்டான். தள்ளியும் போகமாட்டான்’ என மனதிற்கு வெந்துபோனான் அகத்தியன்.
வயதிற்கு மீறிய ஆசை கொண்டதோடில்லாமல் பின்றன்மனையையையும் எப்படி களவுகொள்ளலாம் என்னும் திட்டத்தையும் தீட்ட ஆரம்பித்தான் அகத்தியன்.
எழில் தனது கைவசமிருந்த அதிகாரங்கள் எல்லாம் பறிபோன ஆத்திரத்தில் இருந்தான்.
‘தன்னிடம் அத்தனையும் தட்டிப்பறித்து இன்று அவள் இருக்கும் இடம் தனக்கும் மேல். இவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?’ என வெறுப்புடன் பார்த்தான்.
இவர்கள் இருவரை விட இளவேந்தனின் மனதில் எழுந்தது தான் நிம்மதியா, நிறைவா, வலியா என்னவென்றே பிரித்தறியமுடியாத உணர்வு.
‘உன்னை எனக்கு புடிக்கும் தான். நீ அழகா இருக்க. அதனால பார்க்க புடிக்கும். ஆனா உன்னை வச்சுக்க வேணா முடியும். கட்டிக்க எல்லாம் நீ லாயக்கில்லை. உன் பிறப்புக்கு ஏத்த விதமா யோசி. காசு இருந்தா யார் மேல வேணா ஆசைப்படலாமா?’ என அன்று அவளின் ஆசையை கூறுபோட்டவன்.
இப்போது புரிந்தது வாழ்க்கையின் நிம்மதியும், சந்தோஷமும் பிறப்பால் மட்டுமே கண்டுவிடக்கூடியதில்லை என.
அவளின் கண்களில் மிதந்த தன் மீதான நேசத்தை காலில் போட்டு மிதித்தவன். எத்தனை ஏளனம் செய்தான் அவளை.
அத்தனையும் சேர்ந்து இப்போது உப்பில்லாத வாழ்க்கை போல தன்னுடைய வாழ்க்கை செல்வதை எண்ணி பார்த்தான்.
இழந்ததை எண்ணி எந்த பிரயோஜனமும் இல்லை என்றாலும் கை நழுவி சென்றதன் ஏக்கம் இப்போது அதிகமாகியது.
இந்த நிமிடம் தான் கண்ட காட்சி, ஷேஷாவின் இணக்கமும், ஷக்தியின் நெருக்கமும் மனதை பிசைந்தது.
தவறு என்று தெரிந்தாலும் ஏற்க மறுத்தது மனது. அவர்கள் திருமணத்தன்று திரையில் காணுகையில் கூட இத்தனை பாதிப்பில்லை.
அவனின் அணைப்பில் இருக்கையில் தன் குரலில் கூட அவள் கொஞ்சமும் அசைவின்றி இருந்ததை ஏற்கமுடியவில்லை இளவேந்தனால்.
இப்படி இப்போது வரிசையாய் மூளையை நிரப்பிய திட்டங்கள் எல்லாம் அன்று ஏன் தனக்கு தோன்றாமல் போனது என தன்னை நொந்துகொண்டவனுக்கு சுரீரென்ற எண்ணம் அப்போது தான்.
‘ச்சீ, இன்னொருத்தன் மனைவியானவளை நினைத்து இப்படி யோசிக்கிறோமே? தந்தைக்கும் தனக்கும் வித்தியாசமில்லாமல் போய்விட்டதா?’ என தன்னை தன் எண்ணத்தை மனதிற்குள்ளேயே உமிழ்ந்துகொண்டான்.
இனியாவது அவள் அவனுடன் நன்றாக இருக்கட்டும். தான் தூசியாக நினைத்தவள் இப்போதிருக்கும் இந்த மரியாதையான நிலை அவனுக்கு ஒருவிதத்தில் ஆறுதலை கூட தந்தது.
அந்த நிம்மதியும் நிலைக்கவிடாமல் ஷேஷாவின் பார்வை அடிவயிற்றில் தீயை பற்றவைக்க தந்தையின் தவறுகளின் பட்டியலை கவனத்திற்கு கொண்டுவர ஆரம்பித்தான் இளவேந்தன்.
எழிலிடம் பேசலாம் என்றால் அவன் கேட்கும் நிலையில் இல்லை. இப்போது இளாவின் பயத்தை மெய்ப்பிப்பதை போல மணிவாசகத்தின் மரணத்தை பற்றிய கேள்வியை எழுப்பிவிட்டிருந்தான் ஷேஷா.
நிச்சயம் தன் தந்தையின் பங்கு இதில் எந்தளவிற்கென்று தெரியாமல் ஒன்றும் செய்ய இயலாது. தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு.
இந்த இரண்டு நாட்களாக தங்கள் கண்ணுக்கு முன்னால் தான் எல்லாம் நடந்துகொண்டிருந்தது.
கட்டுப்பாடுகள் மொத்தமும் கைவசம் இருந்தாலும் கண்ணுக்கு தெரியாமல் ஷேஷா எங்கோ ஒரு மூலையில் இருப்பதாக உள்ளுணர்வு எச்சரித்துக்கொண்டே இருந்தது அவனை.
இளவேந்தன் அளவிற்கு இவ்வளவு தூரம் யோசிக்கவே இல்லை எழிலும் அகத்தியனும்.
அவர்கள் இருவருக்கும் வேறு சிந்தனை. அதனால் இதை எல்லாம் யோசிக்கும் மனநிலையில் இல்லை.
முற்றிலும் நிம்மதி இழந்திருந்தவனோ இளவேந்தன் மட்டுமே. அதை ஊர்ஜிதமாக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேற ஆரம்பித்தது.
முதலில் தொழிலில், அரசியலில் ஆரம்பிப்பான் என்று பார்க்க ஷேஷா எடுத்து வைத்த அடியோ அவர்கள் துளியும் எதிர்பாராதது.