வீட்டை அடையும்வரை ஷக்தியிடம் எந்த பேச்சுக்களும் இல்லை. அமைதியாக வந்தவள் ஷேஷாவின் அணைப்பிலிருந்தும் தள்ளி அமர்ந்திருந்தாள்.
அவளின் விலகல் புரிந்தாலும் இளவேந்தனின் பார்வையும், வலியும் ஷேஷாவை யோசிக்க வைத்தது.
ஷக்தியின் முகம் காண அவனுக்கு ஏன் அத்தனை பரிதவிப்பு? மனதிற்குள் என்னவோ நெருடியது.
யோசித்தபடி வந்தவன் வீட்டிற்கு வந்ததும் இறங்கி உள்ளே சென்றான். ஷக்தியை திரும்பி பார்த்துவிட்டு உள்ளே நடக்க,
“வரும் போது கூப்பிட்டு வந்துட்டு இப்போ நான் கூட வரேனானும் பார்க்கலை நீங்க?…” கோபமாய் அவனிடத்தில் கூறினாள்.
ஷக்தியின் கோபமும், சத்தமும் அமைதியான அந்த மாளிகையில் பலமாய் எதிரொலித்தது.
நடுவீட்டில் இருந்துகொண்டு அவள் பேச அதில் உரிமை உணர்வு தெறித்தாலும் ஷேஷா அதற்கு பதில் சொல்லாமல்,
“ஷக்தி ரூம்ல வச்சு பேசிப்போம்…” அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் சொல்லி விறுவிறுவென அவன் நடந்து செல்ல ஷக்தியும் பின்னே சென்றாள்.
“இப்போ சொல்லு…” என்று அறைக்குள் நுழைந்ததும் தனது உடையை தளர்த்தி அகன்ற இருக்கையில் அமர்ந்தான் ஷேஷா.
“எப்படி எப்பவும் அலார்ட்டாவே இருக்கீங்க? உங்களால எப்படி எல்லா நேரமும் இருக்க முடியுது? இங்க பேசனும், பேச கூடாதுன்னு டான்னு திருப்பி விடறீங்க. உங்க பிரசன்ட்ஸ் ஆஃப் மைன்ட் பக்கா….” என வெளிப்படையாக சில்லாகித்துவிட்டாள் அவனை அவனிடத்தில்.
கேட்க வந்ததை விட்டுவிட்டு வேறு ஒன்றை ஷக்தி கூற ஷேஷாவின் முகத்தில் இருந்த யோசனை மறைந்து இளநகை மிளிர்ந்தது.
“நீ என்கிட்டே என்ன எக்ஸ்பெக்ட் பன்றன்னு உனக்கு புரியுதா ஷக்தி?…” என்றான் நிதானமாய்.
எதையும் யோசிக்கும் நிலையில் அவளும் இல்லை. யோசிக்க விரும்பவும் இல்லையே.
ஷேஷாவிற்கு புரிந்தது அவளறியாமல் தன்னை அவளுக்கென எதிர்பார்க்கிறாள் என்று.
அந்த உணர்வு பிடித்தாலும் அவளிடம் அவன் எதிர்பார்ப்பது இதுவல்லவே.
ஷக்தி அவள் எப்படி இருந்தாலும் அவனுக்கு பிடிக்கும். ஆனால் அப்படி அவனின் கைகளுக்குள்ளேயே யாரோ ஒருவருக்காக அதுவும் அவளை காயப்படுத்திய ஒருவருக்காக பயந்து அஞ்சுவதா?
ஷேஷாவிற்கு அது ஒப்பவில்லை. அவனுக்கு எல்லாவிதத்திலும் ஷக்தி தனக்கு இணையாக துணை வர வேண்டும் என்ற அளப்பறியா அவா நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருந்தது.
ஷேஷா கேட்டதுமே தன்னிடமே அந்த கேள்வியை கேட்டுக்கொண்டவளுக்கு கிடைத்த விடையும், அதை புரிந்தவிதமாய் அவனை கலவரத்துடன் எதிர்கொண்டாள்.
“கூல் ஷக்தி…” என்றான் ஷேஷா.
“இல்லை நான் வேற என்னவோ கேட்க வந்துட்டு…” என தலையை பிடித்தபடி அவள் கட்டிலில் அமர அருகே செல்லவில்லை அவன்.
இருவருக்கும் தற்போது குடிக்க ஏதேனும் கொண்டுவரும்படி இன்டர்காமில் உத்தரவிட்டவன் அது வரும் வரை ஷக்தியை நெருங்கவில்லை.
அவளுக்காக சிறிது நேரம் கொடுப்பதை போல தானும் தன் மௌனம் கடக்க காத்திருந்தான்.
இருவருக்கும் குடிக்க பழச்சாறு வர ஷக்தியின் முன்னால் கொண்டுசென்று வைத்துவிட்டு எதிரே அமர்ந்தான்.
“எடுத்துக்கோ ஷக்தி…” என சொல்லி அவளுக்கு தந்து தனக்கு எடுத்ததும் பருக ஆரம்பிக்க ஷக்தி கையில் வைத்திருந்தவள் குடிக்கவில்லை.
ஷேஷவின் பார்வையை கண்டு குடிப்பதை போல இதழருகே கொண்டுசென்றுவிட்டு குடிக்காமல் எடுத்துவிட,
படபடப்புடன் அவள் சொல்லவும் ஷேஷா இன்னுமே தன் பார்வையை மாற்றிக்கொள்ளவில்லை.
ஷக்தியால் ஷேஷா தன்னை சுட்டி காண்பித்ததை ஏற்கவும் முடியாமல், உணர்ந்ததை பின்பற்றவும் முடியாமல் அவஸ்தை நிலைக்கு தள்ளப்பட்டாள்.
“என் இந்த பார்வை உன்கிட்ட மாறாது. இப்படித்தான்…” ஷேஷா சொல்ல அவனை முறைக்கவும் முடியாமல் அங்கிருந்து எழுந்து வெளிபக்கத்தை வெறிக்க சென்று நின்றுவிட,
“ஷக்தி இங்க வா, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்….” எனவும் திரும்பி பார்த்தவள்,
“அங்க இருந்தே கேளுங்க…” என்றாள் பிடிவாதமாய் அருகே வரமாட்டேன் என்பதை போல.
மார்பின் குறுக்கே கையை கட்டிக்கொண்டு அவள் நின்றவிதம் ஷேஷாவின் மனதை பெருமளவு அசைத்தது.
‘நோ, இப்போ அதுக்கான நேரமும் இல்லை. நான் ஷக்தியை கட்டாயப்படுத்த போவதும் இல்லை’ என நினைத்துக்கொண்டவனின் பார்வையின் தீட்சண்யம் ஷக்தியை அருகே வரவழைத்தது.
“என்ன நினைக்கறீங்க நீங்க? எனக்கு தெரியலை. இந்த பார்வை, இது என்ன சொல்லுது?…” என வேகமாய் வந்தவள் கேட்டுவிட,
“உனக்கு தெரிஞ்ச இந்த கேள்விக்கான பதில் என்கிட்ட இருந்து வராது ஷக்தி…” என்றான் அமர்த்தலாக.
“அப்போ என்கிட்டே பேச வேண்டாம்…”
“ஹ்ம்ம், பேசவேண்டாம்ன்னு நீ எப்படி சொல்லலாம்? இதுவா நீ? இந்தளவுக்கு பயந்து மிரண்டு, ஒடுங்கி. இந்த ஷக்தி ஷக்தியே இல்லையே…”
ஷேஷா சொல்லவும் முகம் கன்றி சிவந்தது ஷக்திக்கு. சற்றுமுன் அவன் உணர்த்திய அந்த இதமான மனநிலை துடைத்துவிட்டதை போல மாறிவிட்டது.
அகத்தியனை பார்த்ததில் இப்பொழுதும் உடலில் அருவருப்பு ஓட ‘எப்படி இத்தனை நேரம் தான் தாக்குபிடித்து நின்றோம்?’ என்று நினைத்தபடி பாத்ரூமிற்குள் நுழைந்துகொண்டாள்.
உள்ளே சென்றவள் நீரில் நனைய ஐந்து நிமிடம் கூட தாண்டியிராமல் அதற்குள்ளும் வந்தான் ஷேஷா.
“நீங்க எப்படி உள்ள? லாக் பண்ணிருக்கேன்…” என்று சொல்ல ஷவரை நிறுத்தியவனுக்கு கோபம் கனன்றது.
“ஆர்ட்னரி பொண்ணா ஏன் பிஹேவ் பன்ற ஷக்தி?…”
“ஓஹ் அப்போ நான் இப்படி பண்ண கூடாதோ?…” என அவனுக்கு மேல் அவள் கத்தினாள்.
தெப்பமாய் நனைந்திருந்தவளின் விழிகளில் இப்போது ரௌவுத்திரம் குடிகொண்டிருக்க அவனுக்கும் வேண்டியதும் அதுதானே?
அவளை கைபிடித்து அழைத்துவந்து வெளியில் நிறுத்தியவன் ஒரு டவலை தூக்கி அவள் மேல் போட்டான்.
“சேஞ்ச் பண்ணிட்டு வா…” என சொல்லிவிட்டு செல்ல ஷக்திக்கு இன்னுமே கோபம்.
அதுவும் ஷேஷாவின் மேல் அந்த கோபம் பன்மடங்காகியது. சற்று முன்னர் கூட அந்த நினைவின்றி அவனிடத்தில் சகஜமாக உரையாடியவள் மனநிலை அவளுக்கே பிடிபடவில்லை.
இதே முன்பாக இருந்திருந்தால் அகத்தியனை அப்போது பார்த்திருந்தால் இதைவிட்டு வெளிவரவே மாதங்கள் பிடித்திருக்கும்.
ஆனால் தனது மாற்றமும், மாறுதலும் உவப்பாக உள்ளதா இல்லையா என்றே தெரியாமல் குழம்பினாள். ஆனால் ஒன்றுமட்டும் மறுக்கமுடியாது ஷக்தியால்.
ஷேஷாவை அவளின் மனது அணுக தொடங்கிவிட்டது. எந்த நொடியில் தொடங்கியதோ? தொடங்கிவிட்டது.
அவனிடம் மனது தனக்கான நேரத்தையும், அனுசரனையையும் தேட ஆரம்பித்துவிட்டது. அந்த தேடல் எதிர்பார்ப்பை விதைக்க உள்ளுக்குள் திடுக்கிட்டு போனாள்.
“ஷேஷா…” என்றவள் வாய்விட்டே அவனின் பெயர் சொல்லி அழைக்க அந்த பெரிய அறையின் நிசப்தத்தில் அவனை சரியாய் சென்று சேர்ந்தது அவளின் மூச்சுக்காற்றும், காற்றில் மிதந்த குரலும்.
“ஷக்தி கூப்பிட்டியா?…” என வந்துவிட்டான் அவன்.
“என்ன? நானா?…” என்று அவள் விழிக்க,
“நீ இன்னும் சேஞ்ச் பண்ணலையா?…” என முறைத்தான்.
“இதோ, டூ மினிட்ஸ்…”
அவள் சொல்லவும் அங்கிருந்து அவன் சென்றுவிட உடை மாற்றி நீர் சொட்டிய கூந்தலை விரித்துவிட்டு வெளியே வந்தாள்.
“கம், சிட்…” என அவளை அமர சொல்லியவன் கிருஷ் அனுப்பியிருந்த ஆவணங்களை பார்வையிட்டுகொண்டு இருந்தான்.
“அந்த ஜூஸை குடிச்சு முடி ஷக்தி…” என நிமிராமல் சொல்ல ஒரே மூச்சில் குடித்தவள் என்ன பேசுவானோ என காத்திருந்தாள்.
“இளவேந்தன் பத்தி நீ என்ன நினைக்கிற?…” என நேரடியாக இப்போது கேட்க பரிதவிப்புடன் அவனை ஏறிட்டாள் அவள்.
“வாட்?…” என்றவன் அவளின் பதிலற்ற நிலை கண்டு,
“உனக்கு தெரிஞ்சதை நீ சொல்லு…” என்றான்.
“நீங்க நேரடியா கேட்கலாம் ஷேஷா…” என ஷக்தி இப்போது ஒரு முடிவுடன் பேசவும் மெச்சுதலாய் அவளை பார்த்தான்.
“நேரடியான்னா?…” என தனது கையில் இருந்தவற்றை தள்ளி வைத்துவிட்டு அவளிடம் கேட்டான்.
“எஸ், நான் இளா அத்தானை…” என்றவள் ஷேஷா இதற்கு என்ன நினைக்கிறான் என அவனின் கண்களை பார்த்துக்கொண்டே,
“ப்ச், இளவேந்தனை எனக்கு பிடிச்சிருந்தது. ஒன்ஸ் அப்-ஆன் எ டைம்…” என்றாள்.
“ஹ்ம்ம்…” என்றதை தவிர வேறு எந்த பிரதிபலிப்பும் இல்லை அவனிடத்தில்.
சற்று ஏமாற்றம் கொண்டது ஷக்தியின் மனது. ஷேஷா இப்படி எந்த உணர்வையும் காண்பிக்காதது பிடிக்கவில்லை.
“இளவேந்தனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு குழந்தையும் இருக்குது…” ஷேஷா சொல்ல,
“எனக்கு அது தேவை இல்லை. என்கிட்டே ஏன் சொல்றீங்க?…” என ஷக்தி தன் நிதானத்தை கைவிட்டு வேகமாக கேட்டதும் ஷேஷாவின் புருவங்கள் நெரிந்தன.
அதை கண்டவள் தான் எதிர்பார்த்த அந்த உணர்வை அவன் வெளிப்படுத்தியும் இறுக்கத்துடன் அவனை எதிர்க்கொண்டாள்.
“பாஸ்ட்க்கு எல்லாம் இத்தனை எக்ஸ்ப்ரஷன் தேவை இல்லை ஷக்தி…”
“பட் எனக்கு பிடிக்கலை. பிடிக்கலை. இதை தான் பேசனும்ன்னா பேசவே வேண்டாம்…” என்று அவள் எழுந்துகொள்ள கையை நீட்டி அவளை பிடித்து நிறுத்தினான்.
“சிட் டவுன் ஷக்தி…” என்றவனின் குரல் அவளை மேலும் யோசிக்கவிடவில்லை.
“எல்லாத்தையும் ஓவர் கம் பண்ணி வர பழகு. அதுதான் உனக்கு, நமக்கு நல்லது. பாஸ்ட் இஸ் பாஸ்ட்…” எனவும்,
“எனக்கு இப்ப இல்லை அப்பவுமே எந்த எண்ணமும் இல்லை. என்னைக்கு நான் கல்யாணம் பண்ணிக்க, குடும்பத்துக்கு லாயக்கு இல்லைன்னு சொன்னானோ அன்னைக்கு தூக்கி எறிஞ்சிட்டேன். ஆனா அவனோட ஒரு உதவி என் உயிர் இருக்கற வரைக்கும் மறக்க முடியாது…”
நிச்சயம் இளவேந்தன் பேச்சிற்கு பின் ஷக்தி அவன் பின்பு திரும்பிருந்திருக்கமாட்டாள் என ஷேஷாவுக்கும் நிச்சயம் தான்.
ஆனால் மறக்கமுடியாத அளவிற்கு வெறுப்பை தாண்டிய இந்த நன்றி எப்படி என ஓரளவுக்கு புரிந்தது ஷேஷாவிற்கு.
ஷக்தி அரைகுறையாக உறக்கத்தில் சொல்லிய விஷயத்தில் இருந்து ஷேஷா கண்டுகொண்டது ஏதோ ஒருவிதத்தில் இளா ஷக்தியை ஆதரிக்கிறான் என்று.
“ஓகே, இதை விடு. இப்போ அகத்தியன் விஷயத்துக்கு வருவோம்…”
“எனக்கு பேச வேண்டாம்…”
“அப்போ திரும்ப அகத்தியனை பார்த்தா இப்படித்தான் பயந்து ஒளிஞ்சி நடுங்குவியோ?…”
“ஷேஷா ப்ளீஸ்…”
“நோ ஷக்தி, தப்பு பண்ணின அவனே தைரியமா துணிஞ்சு நிக்கறான். அவனை நீ அப்படி நிக்கவிட்டு அந்த சந்தோஷத்தை கொடுத்துட்டு நீ இப்படி இருக்கற?…”
“என்னால முடியல ஷேஷா, எனக்கு அவனை பார்க்கவே பிடிக்கலை. பார்க்கும் போதெல்லாம் அந்த நாள் தான் நியாபகம் வருது…”
“ஷக்தி…” என எழுந்து அவளருகே வந்து அவன் அமர்ந்து ஆதரவாய் கையை பிடித்ததுமே தானாக அவனின் தோள் சேர்ந்து சாய்ந்துகொண்டாள்.
“நீயே சொல்லிட்ட அதை அசிங்கம்ன்னு. அசிங்கத்துக்கு உயிர் இல்லை. உணர்வில்லை. மதிப்பில்லை. காலுக்கு அடில இருக்கறதுக்கு கூட அருகதை இல்லை. அதுக்கு இத்தனை தூரம் நீ ரியாக்ட் பன்றது தான் தப்பு…”
மிக மிக அமைதியான குரலில் மென்மையாய் அவளுக்கு விளக்க கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு தன்னை அதுவரை சூழ்ந்திருந்த கருமேகங்கள் கலைந்து செல்வதை போன்ற பிரம்மை.
“இதனால எந்தவிதத்துலையும் நீ பாதிக்கப்படக்கூடாது. அப்பவே இங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருந்து நீ அவனை உன் கால்ல போட்டு நசுக்கிருக்க வேண்டாமா? உனக்கு செஞ்சவன் எத்தனை பெண்களை இப்படி பண்ணிருப்பான்?…”