“எஸ், அன்னைக்கு உன்னை இளா காப்பாத்தின மாதிரி எல்லா நேரமும் அவன் எல்லாரையும் காப்பாத்துவானா? இப்படி பயந்து, ஒதுங்கி, ஒடுங்கி போறது தான் அகத்தியனோட பலமே? அதுக்கு நீ வாய்ப்பு தருவியா?…”
“ஒரு தூசிக்கான மரியாதையை கூட நீ தர கூடாது அவனுக்கு. உன் குடும்பம் இப்படி சிதறி போனதுக்கு காரணமானவனை பார்த்து நீ ஒளிஞ்சு போவியா? எதிர்த்து நிக்க வேண்டாமா?…” என்றவன் அவளின் முகத்தை தன் கையில் ஏந்தி,
“உனக்கு நான் இருக்கும் போது இன்னும் எதுக்கு பயம் ஷக்தி?…” என்றதும் அவனின் கையை பற்றிக்கொண்டவளின் கருவிழிகள் அலைப்புருதலுடன் சுழன்றது.
“கேட்கும் போது எனக்கு சரின்னு தோணுது. ஆனா அந்த நாள்…” இன்னும் ஷக்தி அங்கேயே சுற்றிக்கொண்டிருக்க,
“என்ன ஷக்தி நீ? ஒரு மிருகத்துக்கும் கேவலமான ஜந்துவோட முன்னால நின்னதா நினைச்சுக்கோ. அது ஒரு அஃறிணை. அதை தாண்டி உயிர் குடுக்காத அந்த ஜென்மத்துக்கு…” என்றவன்,
“உன்னோட பெத்தவங்களோட உயிரை பறிச்சு, உன்னோட உணர்வுகளை சிதைச்சு அவன் சந்தோஷமா இருக்கான். இங்க நீ அதுக்கு முக்கியத்துவம் குடுத்துட்டு இருக்க. பார்த்த தானே, நீ பயந்ததை பார்த்து உன்னை துரத்தி வந்ததை. இன்னும் எவ்வளவு தான் ஓடுவ நீ?…”
“உன்னோட அனுமதி இல்லாம உன்னை அவன் நெருங்கவும் விடாதே. எந்த சூழ்நிலையிலும் உன்னை நீ பார்த்துக்கனும். இல்லையா உன்னை கருப்பு நிழலா துரத்திட்டே தான் இருக்கும். நானே நினைச்சாலும் உன்னை காப்பாத்த முடியாது…”
“என்னடா இவன் இப்படி சொல்றானேன்னு பார்க்கறியா? இங்க அகத்தியன் இல்லை. அவனோட எண்ணங்கள் உன் மூலமா இந்த பயத்தோட வெளிச்சத்துல சுதந்திரமா உன்னை சுத்தி வளைச்சிருக்குது. என்னைக்கு அதை உடைச்சுட்டு வெளில வர போற?.”
“எப்போ உனக்கு நீயே நம்பிக்கையை, தைரியத்தை வளர்த்துக்க போற? இன்னும் அவனை உன்னை சுத்தி நடமாட விட போறியா? இங்க இந்த இடத்துல அவனோட அசிங்கமான எண்ணங்கள் கூட உருவமெடுக்குது ஷக்தி…”
“இங்க ஆதிஷேஷன், ஷக்தியோட அறையில மூணாம் மனுஷனோட நிழல் கண்ணுக்கு தெரியாம சுத்திட்டு இருக்குது. என்ன பண்ண போற? அதை வளரவிட்டுட்டு வேடிக்கை பார்க்கனுமா? சொல்லு…”
எழுந்து நின்று கோபத்துடன் அவன் பேச ஷக்திக்கே அகத்தியன் அங்கே தன் முன்னால் வந்துவிட்டதை போல தோன்ற ‘நோ’ என்று கத்தியவன் அங்கிருந்த இருக்கைகளை மாறி மாறி ஆக்ரோஷத்துடன் தள்ளிவிட்டு கோபத்துடன் கட்டிலில் இருந்த தலையணை போர்வைகள் என அனைத்தையும் இழுத்து போட்டாள்.
“போ, போ, போ…” என ஆவேசம் கொண்டவளாக அத்தனையையும் விசிறியடித்தவள் ஓடிவந்து வந்து ஷேஷாவை அணைத்துக்கொண்டாள்.
“இல்லை, இல்லை. இது நம்ம ரூம். நோ ஷேஷா. இங்க யாரும் வேண்டாம். நான் அலோவ் பண்ணமாட்டேன். அலோவ் பண்ணமாட்டேன்…” என சொல்லிக்கொண்டு தன் அணைப்பை இறுக்க,
“நோ, என்னை தேடாதே. தனியா நீ அதை ஹேண்டில் பண்ணனும்…” என்றான்.
“ஏன்?…” அவனை நிமிர்ந்து ஷக்தி பார்க்க,
“உன் கூட எப்பவும் இருப்பேன். அதை மறக்காத. ஆனா அதுக்குன்னு என் பின்னால நீ நிக்க கூடாது. என் நிழல் உன்னை இளைப்பாற வைக்கலாம். அதே இடத்துல இருக்க வச்சிட கூடாது. கணவன், மனைவியா இருந்தாலும் உனக்காக நீ தான் போராடனும். யூ’ர் ட்ரூ வாரியார் ஷக்தி…”
“ம்ஹூம். நான் பயந்த பொண்ணு. ஓடி ஒளிஞ்ச கோழை. தலைமறைவா இருந்து யார் கண்ணுலையும் பட்டுட கூடாதேன்னு செத்து செத்து பிழைச்ச…” ஷக்தி கூற,
“ஷ்ஷ், ஷக்தி. வீழ்வதற்கல்ல வாழ்க்கை. வாழனும். உன்னோட வாழ்க்கை இன்னும் சிலருக்கு வெளிச்சம் தருவதா இருந்தா மெழுகா தான் இருக்கனும்னு அவசியமில்லை. தீப்பந்தமா இரு. சுட்டெரிக்கவும் தயங்க கூடாது. வழிகாட்டியா இருக்கவும் மறக்க கூடாது…”
“எது யாருக்குன்னு நீ தான் முடிவு பண்ணனும். ஒரே நாள்ல எல்லாம் மாறிடாது. மாற்றம் அதுக்கான வேலையை சரியா செய்யும். நாம அதை ஏத்துக்க தயாரா இருக்கனும்…” என ஷேஷா வலியுறுத்த,
“வெய்ட் அன்ட் வாட்ச்…” என்றாள் ஷக்தி.
இனி ஷக்தியே பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை ஷேஷாவிற்கு வந்துவிட்டது.
தனது அடுத்த காயை நகர்த்த ஆயத்தமானான் ஷேஷா. அது முதலில் வெடித்தது என்னவோ அகத்தியனின் அடிமடியில்.
——————————————–
எழிலின் வீட்டில் குடும்பத்தினர் அத்தனைபேரும் ஒன்றாக கூடி இருக்க நடுநாயகமாக அமர்ந்திருந்தார் வடிவழகி.
“என்னங்க, இதை பத்தி ஒரு வார்த்தை எங்க யார்க்கிட்டயும் நீங்க சொல்லவே இல்லை…” ராஜி எழிலிடம் பேச அவன் தனது கோபத்தை எல்லாம் மனைவியின் மேல் தான் திருப்பினான்.
“ராஜி திஸ் இஸ் நன் ஆஃப் யூர் பிஸ்னஸ். சாப்பிட்டோமா, தூங்கினோமா, இருந்தோமான்னு இருக்கனும். என்னை கேள்வி எல்லாம் கேட்கற நீ? உன்கிட்ட எல்லாம் சொல்லிட்டு தான் செய்யனுமா?…” என எரிந்து விழுந்தான் எழில்.
எழில் அடிக்குரலில் சீறினாலும் பல்லை பிடுங்கப்பட்ட நாகத்தின் சீற்றம் அங்கே கேலிக்குரியதாக தான் பார்க்கப்பட்டது வடிவழகியின் பார்வையில்.
“மருமகனே என் பொண்ணு என்ன பண்ணுவா? அவ மேல கோவப்படறது நியாயமே இல்லை…” என அகத்தியன் பேச,
“அப்பா நீங்க சும்மா இருங்க. அவர் பேசினா பேசட்டும்…” என ராஜி தான் தந்தைக்கும் கணவனுக்கும் இடையே வந்தாள்.
“என்னம்மா நீ? உன்னை என் முன்னாடியே இப்படி பேசினா நான் வேடிக்கை பார்க்கனுமா?…” என அகத்தியன் எதிர்த்துக்கொண்டு நிற்க,
“மாமா அதான் அண்ணா சொல்றான்ல பேசாம இருக்க சொல்லி. அப்பறம் என்னவாம் அண்ணிக்கு? இங்க ஏற்கனவே தலைக்கு மேல பிரச்சனை…” என்றாள் சுடர்கொடி.
“சுடர், இப்போ நீ ஏன் இன்வால்வ் ஆகற? பேசிட்டு இருக்கோம்ல…” என இளவேந்தன் தனது மனைவியை கண்டித்தான்.
“ஏன் இது நம்ம குடும்பம் சம்பந்தப்பட்டது தானே? அப்போ நான் கேட்கலாம். எனக்கு உரிமை இருக்கு. ஏனா இது என் அப்பாவோட சம்பாத்தியம்…” என சுடர்கொடியும் பதிலுக்கு பேசினாள்.
“அப்போ என் அக்காவும் கேட்க எல்லா உரிமையும் இருக்கு. அது ஏன் உன் அண்ணனுக்கு புரியலை? இத்தனை பேர் முன்னாடி எடுத்தெறிஞ்சு பேசறான்…”
“அது அவன் விருப்பம். அதுல நான் தலையிட முடியாது…” என சுடர்கொடி அலட்சியமாக பேச பதிலுக்கு இளவேந்தன் பேசும் முன்,
“ஐயோ போதும். கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க…” என தலையை பிடித்தபடி எழில் அமரவும் ராஜி ஒரு தலைவலி மாத்திரையையும், தண்ணீர் தம்ளரையும் கொண்டுவந்த நீட்ட எழிலுக்கு மனதில் சுருக்கென்ற வலி.
தன்னை மன்னிக்கும் பார்வையை மனைவியிடம் தந்தவன் ராஜி கொடுத்த அந்த மாத்திரையை போட்டுவிட்டு தண்ணீரை பருகினான்.
சிறு சத்தம் கூட இல்லாத அந்த அறையில் ஆளுக்கொரு பக்கம் அனைவரும் அமர்ந்திருக்க,
“ஷக்தி எங்கன்னு கேட்டேன்…” என அழுத்தமாக வந்த குரலில் அதிகாரத்தில்,
“அவ ஆதிஷேஷன் வொய்ப். இப்போ அவன் வீட்டுல தான் இருப்பா…” என்றான் எழில்.
சிலநொடி மௌனம் வடிவழகியிடம். அனைவரின் மீதும் பார்வையை பதித்து மீட்டவர்,
“நான் நேர்ல பார்க்கனும். ஏற்பாடு பண்ணு…” என சொல்லி எழுந்து சென்றுவிட்டார்.
விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து அவரிடம் எதுவும் பேசமுடியவில்லை. சமாளிப்பாக கூட பதில் சொல்ல முடியவில்லை.
கேட்கும் கேள்விகள் வடிவழகியிடத்தில் இருந்து ரத்தின சுருக்கமாக வர அதற்கான பதில் கூட அதே பாணியில் பெற்றுக்கொண்டார்.
ஆம், இல்லை என்பதை போன்ற கேள்விகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே சொல்லமுடிய, அது ஏன் என்ற விளக்கம் எல்லாம் அவர் கேட்க விரும்பவில்லை.
ஷக்தியை பார்க்க வேண்டும் என்றதும் பிடிக்கவில்லை என்றாலும் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமே என வெறுப்புடன் எழில் கிருஷிற்கு அழைத்தான்.
அதிலும் அத்தனை எரிச்சல். அந்த அறக்கட்டளையில் நுழைந்து இத்தனை வருடமாகிற்று. பவனிடம் கூட அத்தனை எளிதில் பேசிவிடமுடியாது.
கிருஷ் அனுமதித்தால் பவனிற்கு. பவன் அனுமதித்தால் ஷேஷாவிடம். இப்படி இருக்க அவர்கள் இதற்கு அனுமதிக்க வேண்டுமே?
“எல்லாம் என் நேரம்டா. இவனுங்கட்ட எல்லாம் அப்பாயின்மென்ட் வாங்கனும்னு…”
கிருஷிடம் அழைத்து விஷயத்தை சொல்லியிருக்க அவன் பவனிடம் பேசுகிறேன் என சொல்லி வைத்துவிட்டான்.
“அசிங்கமா இருக்குடா. அதுவும் அவக்கிட்ட பேச நான் காத்துக்கிட்டு இருக்கனுமா? என் அம்மான்னா அவ்வளவு லேசா போச்சா?…” எழில் இளவேந்தனிடமும், அகத்தியனிடமும் தனது ஆற்றாமையை கொட்டிக்கொண்டிருந்தான்.
பவனிடமும் பேசி விஷயம் ஷேஷாவின் காதுக்கு செல்ல எழில் அழைப்பில் இருக்கும் பொழுதே ஷக்தியின் குரல் ஒலித்தது.
“எனக்கு யாரையும் பார்க்க இஷ்டமில்லை. அலோவ் பண்ணாதீங்க…” என்ற ஷக்தியின் அந்த குரல் ஐந்து வருடங்கள் முன்பிருந்த அதே அதிகார குரல்.
“என்ன ஒரு திமிர்?…” என கொதித்து போனான் எழில்.
அவனின் இந்த கொதிப்புகள் இனி தொடர்வண்டியாய் புகையை கக்கியபடி தான் வளைய வர போகிறதென்ற அறிகுறியின் ஆரம்பப்புள்ளி.