“அப்படியெல்லாம் நாம நினைச்சாலும் தூக்கற அளவுக்கு ஷக்தியை பாதுகாப்பில்லாம விடமாட்டான் ஷேஷா. அவன் யாருன்னு தெரிஞ்சும் இப்படி பேசறதை முதல்ல நிறுத்துங்க…” என தந்தையை மறைமுகமாக எச்சரித்தான்.
“இவன் எப்பவும் இப்படித்தான். ஒரு காரியமும் உருப்படாது இவனை வச்சு. எல்லாத்துக்கும் தடங்கல் தான்…” என்று மகனை திட்டிய அகத்தியன்,
“மருமகனே நான் பார்த்துக்கறேன். என்கிட்ட விடுங்க…” என்றதும் இளவேந்தனுக்கு கோபம் கனன்றது.
“அப்பா நீங்க கொஞ்சம் நேரம் சும்மா இருங்க. வீட்டுல வச்சு பேசற பேச்சா இது?…” என்றான் அவன் கொஞ்சமும் குறையாத சீற்றத்துடன்.
அப்போது தான் பெண்கள் இருவரும் வேடிக்கை பார்த்தபடி நிற்பதை கண்டான் எழில்.
“ப்ச், அதான் பேசிட்டு இருக்கோம்ன்னு தெரியுதுல. என்ன வேடிக்கை? போங்க உள்ள…” என எழில் கத்திய காட்டுக்கத்தலில் வடிவழகி மீண்டும் வந்துவிட்டார் கூடத்திற்கு.
வந்தவர் மகனிடம் எதற்கு கோபம், ஏன் இந்த எரிச்சல் பேச்சு என எதையும் கேட்கவில்லை.
“நான் சொன்னது என்னாச்சு?…” என்றார்.
“ம்மா, நான் பேசிட்டேன்…”
“ம்ம்ம்..”
“ஆனா…”
“உடனே சொல்ல வராதா எழில்?…” என்றார் அவனின் தயக்கத்தில்.
“அவ பார்க்க இஷ்டமில்லைன்னு சொல்லிட்டாம்மா…” என்று சொல்லிவிட்டான் தாயின் கோபத்தில்.
வடிவழகிக்கு புரிந்தது ஷக்தி தன்னை பார்க்க விருப்பமில்லை என மறுத்தது ஏன் என்று. அன்று தான் அவளை பார்க்க மறுத்ததற்கான பதிலடி இது என புரிந்துகொண்டார்.
‘எல்லாம் இவள் விருப்பமா? அப்படி என்னை பார்க்காமல் தவிர்த்து விடுவாளா?’ என நினைத்தவர்,
“எப்போ பேசின?…” என்றார் மகனிடம்.
“இப்போ தான் போன் பண்ணேன்…” என்றதும் வடிவழகி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவர் காண நேர சிந்தனைக்கு பின்னர்,
“ட்ரஸ்ட் டொனேஷனுக்கு ஏற்பாடு பண்ணு. நாளைக்கு ஆதிஷேஷனை பார்க்க அப்பாயின்மென்ட் வாங்கிரு…” என சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.
“பார்த்தீங்களா மாமா? அந்த ட்ரஸ்ட்க்கு டொனேஷனா? என்ன பன்றாங்க இவங்க?…” என்று அகத்தியனிடம் பொரிந்தான் எழில்.
“எழில், நீ முதல்ல இந்த கோபத்தை குறை. அத்தை ஷக்திட்ட பேசனும்னு நினைக்கறாங்க. ஏன்னு விஷயம் தெரியாம நீயா முடிவு பண்ணாத…” என அவனை அமைதிப்படுத்தவே முயன்றான் இளவேந்தன்.
இப்போதைக்கு அவனின் அமைதி தான் தங்களின் பல பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும் என நம்பினான்.
ஷேஷா, அவனின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என கணிக்கமுடியவில்லை. எங்கிருந்து ஆரம்பித்து எதில் கொண்டு வந்து முடிப்பான் என்றும் விளங்கவில்லை.
எழிலை அவனறைக்கு அனுப்பிவிட்டு வெளியே கீழே இருக்கும் வரவேற்பறை வந்தவன் வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.
அத்தனை வேலையாட்களும் அவரவர் வேலையில் கவனமாக இருந்தார்கள். யாரும் ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளாமல் வேலையில் சிரத்தையாக இருந்தார்கள்.
இளவேந்தன் வந்ததையும் கூட யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஆனாலும் உறுத்தியது. அத்தனை பேரின் நிழலிலும் ஷேஷா பிரதிபலித்தான்.
தலையை சுற்றியது இளவேந்தனுக்கு. இதில் தான் என்ன செய்ய முடியும் என்ற யோசனைகளை வேறு அவன் துவக்க அதிலும் இடியாப்ப சிக்கல் தான்.
ஒன்றும் முடிவுக்கு வராமல் அங்கிருந்து கிளம்பி சென்றான். அதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
இளவேந்தன் வரை அவனறிவுக்கு இன்கம்டாக்ஸ் என்று ஷேஷா தொடங்குவான் என அலுவலகம், தொழிற்சாலை என எல்லா இடத்திலும் கணக்குவழக்குகளை பார்வையிட உத்தரவிட்டிருந்தான்.
அடுத்ததாக எலெக்ஷனில் அகத்தியனுக்கு சீட் கிடைக்காமல் இருக்க ஏதேனும் செய்வான் என யோசித்து வைத்திருந்தான்.
அகத்தியனுக்கு அடுத்த ஆட்சியில் இடம் கிடைக்காததை பற்றி கவலையும் இல்லை அவனுக்கு.
இருக்கும் சொத்துக்களை பராமரித்தாலே போதும். எதற்கு இந்த அரசியல் என்பதை போல இளவேந்தன் யோசித்திருந்தான்.
ஷேஷாவை அவ்விடத்தில் தான் அவன் சற்று குறைவாக எடை போட்டிருந்தான் இளவேந்தன்.
தங்களின் தவறுகள் இந்தளவிற்கு தான் என அவன் நினைத்திருக்க எழிலின் துணையுடன் எழிலுக்கே முழுதாய் தெரியாமல் அகத்தியன் செய்திருந்த காரியங்கள் எல்லாம் பெரிது என முழுதாய் அறியாமல் போனான்.
சில தவறுகள் யாராலும் கண்டுபிடிக்கமுடியாதளவிற்கு இருக்க சற்று தைரியமே அவனுக்கு. அந்த விதத்தில் அகத்தியனின் ரத்தம் இளவேந்தன் என நிரூபித்தான்.
எழில் வடிவழகி சொல்லியதை போல அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பதற்காக மறுநாள் வரவிருக்கும் தகவலை கிருஷிடம் சொல்ல விவரங்களை கேட்டுக்கொண்டவன் பவனிற்கு அழைத்து தெரிவித்தான்.
இவை எல்லாம் ஷேஷாவின் காதிற்கு வரவும் யோசனையுடன் ஷக்தியை பார்த்தான் அவன்.
“அவங்க ஏன் உன்னை பார்க்கனும்னு இத்தனை ஆர்வமா இருக்காங்க ஷக்தி?…” என ஷக்தியிடம் கேட்டான். (studybizz.com)
ஷக்தியோடு இல்லம் வந்தவன் இன்னும் வெளியே செல்லவில்லை. அவளுடனே தான் இருந்தான்.
இப்போது தான் சரியான பாதையில் யோசிக்க ஆரம்பித்திருக்கிறாள். தன்னை மிகவும் தேடுபவளை அகன்று அவனால் செல்ல முடியவில்லை என்பதும் மறுப்பதற்கில்லாத உண்மை.
ஷக்தி கோபத்தில் கீழே தள்ளி உடைத்த பொருட்களை எல்லாம் ஆட்களை வரவழைத்து அப்போதுதான் சுத்தம் செய்து முடித்திருக்க பவனிடமிருந்து போன் வந்தது.
வடிவழகி ஷக்தியை சந்திக்க விரும்புகிறார் என்று. முதலில் ஆச்சர்யமானவன் ஷக்தியிடம் சொல்ல பவனின் மூலம் இணைப்பில் இருந்த எழிலுக்கு சிறந்த மூக்குடைப்பை கொடுத்தாள் ஷக்தி.
அதை பற்றி கூட கேட்க நினைத்திருக்க அதற்குள் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துவிட முக்கியமான சந்திப்பை அந்த அறையில் இருந்த வீடியோ கான்பரென்சில் முடித்தான்.
அவனின் வேலையில் குறுக்கிடாமல் அறக்கட்டளையில் இருந்து வரும் பொழுதே ஷேஷா சில கோப்புகளை கையோடு கொண்டு வந்திருக்க அதை பார்த்துக்கொண்டு இருந்தாள் ஷக்தி.
பாதி புரிந்தும் புரியாத விதமாய் இருந்தது. அத்தனையும் அவள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
இதுவரை எழில் பார்த்துக்கொண்டதன் ஆவணங்கள். கவனமாய் அதனை உள்வாங்க முயன்றுகொண்டு இருந்தாள்.
ஷேஷா பேசியதிலிருந்து தன்னை ஓரளவு வெளிக்கொணர முயன்றவள் தற்போதைய மனநிலையை மாற்றவென அந்த கோப்புகளில் தலை கொடுக்க உள்ளிழுத்துக்கொண்டது அந்த ஆவணங்கள்.
அதில் தனக்கு தெரியாததை மொபைலில் தேடி படித்து புரிந்துகொள்ள முயன்றாள் ஷக்தி.
தான் சொல்லாமலே அவற்றில் கவனம் கொண்டவளையும் ஒருபுறம் கவனித்துக்கொண்டு தான் இருந்தான் ஷேஷா.
பேச்சுவார்த்தை முடிந்ததும் ஷக்தியிடம் திரும்பினான். தான் பார்ப்பதை கூட அவள் கண்டுகொள்ளவில்லை.
“ஷக்தி…” என்ற அழைப்பில் தலையசைத்து நிமிராமல்,
“சொல்லுங்க ஷேஷா…” என கேட்கவும் ஷேஷாவுக்கு மென்னகை.
அந்த நேரம் பவன் அழைத்து வடிவழகி மறுநாள் வரும் விஷயத்தை பகிர கேட்டுக்கொண்டவன்,
“பவன் அவங்க டொனேஷன் குடுக்க தானே வராங்க. ஆபீஸ் ரூம்ல பே பண்ண சொல்லிரு. என்னை நேர்ல பார்த்து தான் குடுக்கனும்னு இல்லை…” என்றான்.
“பாஸ், உங்களை மீட் பண்ணனும்னு திரும்ப கேட்கறாங்க…”
“ஷக்திக்கு இஷ்டம் இல்லை…”
“எஸ் பாஸ். ஆனா உங்க அப்பாயின்மென்ட் கேட்கும் போது…”
“நான் பிஸின்னு சொல்லு பவன்…” ஷேஷாவின் அழுத்தம் அதற்கு மேல் பேசாதே என்று இருந்தது.