ஆனாலும் வடிவழகியின் இந்த பேச்சும், ஷக்தியை சந்திக்க அவர்கள் முயல்வதும் ஷேஷாவிற்கு சரியாய் படவில்லை.
அதற்கே அவர்களை சந்திக்க முடியாதென மறுத்தவன் ஷக்தியின் மனதை அறிய கேட்டான்.
“திடீர்ன்னு உன்னை பார்க்கனும்னு நினைக்கறாங்க ஷக்தி…” என ஷேஷா சொல்லவும் கசப்பாய் புன்னகைத்தாள்.
“அவங்க என்னை பார்க்கனும்னு பேசனும்னு நினைக்கிற காரணம் எதுவாவும் இருக்கட்டும். ஆனா எனக்கு இஷ்டம் இல்லை. பார்க்க வேண்டிய நேரத்துல பார்க்காதவங்க இப்போ பார்க்க தேவை இல்லை…”
“ஓகே, யூர் விஷ்…” என மேலும் அவன் கேட்டுக்கொள்ளவில்லை.
“நாளையில இருந்து ஷக்தி ட்ரஸ்ட்டுக்கு வரனும்…” என்றான் ஷேஷா.
“வரனுமா?…”
“வரனும்…” என சொல்லியவன்,
“இன்னைக்கு நீ இங்க ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளையில இருந்து ஓட தயாரா இரு…” என சொல்லி கிளம்பிவிட்டான்.
மதிய உணவிற்கும் அவன் வராமல் சென்றிருக்க இரவு அவன் வரும் பொழுதும் ஷக்தி அந்த கோப்புகளில் தான் இருந்தாள்.
தனியாய் சில தாள்களில் நிறைய எழுதி இருந்தாள். ஒவ்வொன்றிற்கும் தனி தனி குறிப்புகள்.
“டின்னர் சாப்பிடலையா ஷக்தி?…” என்றவனின் கேள்வியில் தான் ஷேஷா வந்ததையே பார்த்தாள்.
“ஷேஷா எனக்கு இது புரியலை. எக்ஸ்ப்ளைன் பண்ண முடியுமா?…” என கேட்க,
“பண்ணலாம். பர்ஸ்ட் டின்னர். அடுத்து தான் இது…” என சொல்லிவிட்டு அவன் குளியலறைக்கு செல்ல ஒவ்வொன்றையும் தான் எடுத்து வைத்ததை போல நேர்த்தியாய் அடுக்கி வைத்தாள்.
எதை முதலில் கேட்கவேண்டும் என்ற பட்டியல் தனியே. தான் சரிபார்த்தவை சரியா என்னும் பட்டியல் தனியே. கண்டுபிடித்த தவறுகளும், குளறுபடிகளும் உண்மை தானா என்னும் பட்டியல் தனியே.
பெரிதாய் எதையோ சாதித்த பாவனை ஷக்தியின் முகத்தில். முன்பே அவளின் தந்தை சிறிது கற்றுக்கொடுத்திருந்த பாடம் இன்று உபயோகப்பட்டது.
தனக்கு தெரிந்தவகையில் அவள் கவனித்து பார்த்திருக்கிறாள். இன்னும் அதன் ஆழம் செல்லவில்லை.
அறையின் அழைப்பு மணி அடிக்க வரும் பொழுதே ஷேஷா சொல்லி வந்திருப்பான் போலும். கதவை திறந்து ட்ராலியை உள்ளே இழுத்துக்கொள்ள ஷேஷா வந்துவிட்டான்.
“கம் அன்ட் சிட்…” என்றவன் அவளும் சென்று கை கழுவிவிட்டு வர இருவரும் அமைதியாகவே உணவை பரிமாறிகொண்டனர்.
சாப்பிட்டு முடித்ததும் தான் எடுத்துவைத்தவற்றை எல்லாம் அவனிடத்தில் காண்பித்து ஆர்வத்துடன் அவனை பார்த்தாள்.
“பெட்டர்…” என மெல்லிய மெச்சுதல் அவனிடத்தில்.
“எனக்கு நிறைய தெரியாது ஷேஷா…”
“தெரிஞ்சிப்போம். இப்போ தானே பொறுப்பை வாங்கி இருக்க…” என அவளை அமர வைத்து ஒவ்வொன்றையும் விளக்கினான்.
“பர்ஸ்ட் நீ சரி பார்த்த இந்த லிஸ்ட்டை முடிச்சிடலாம். சரியை கிளியர் பண்ணி தள்ளி வச்சுட்டா தவறை ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். தவறை கண்டுபிடிச்சா அடுத்தது இன்னும் சுலபம்…”
“அப்போ நான் பார்த்தது எல்லாம் சரியா?…”
“ஒரே நாள்ல எல்லாமே கத்துக்க முடியாது ஷக்தி. அதோட உனக்கு இதையும் தாண்டி இன்னும் சில பொறுப்புகள் இருக்குது…”
“முதல்ல நமக்கு தூக்கம் ரொம்ப இம்பார்ட்டன்ட். அதை நீ ஃபாலோவ் பண்ணு. நல்ல டீப் ஸ்லீப் நமக்குள்ள நிறைய பவரை கெயின் பண்ணி தரும். குறைஞ்ச நேர தூக்கமா இருந்தாலும் ஆழ்ந்த உறக்கமா இருக்கனும்…”
இதை சொல்லவும் ஷக்தி அமைதியாகிவிட ஷேஷா அவளை மேலும் வற்புறுத்தவில்லை.
“ஓகே, இதை எல்லாம் எடுத்து வச்சிடு…” என சொல்லி படுக்கையில் சாய்ந்து கண்ணை மூடிவிட்டான்.
கவனமாய் அதை தனியாய் எடுத்து வைத்தவள் வந்து படுக்க ஷேஷா சொல்லிய உறக்கம் தான் அவளை நாடவில்லை.
அந்த இருளும் கூட அவளுக்கு நிம்மதியை தரவில்லை. உறக்கத்தையும் தரவில்லை.
சிறிதளவேணும் ஒரு தூக்கம் தூங்கிவிடுபவள் இன்றோ துளியும் உறங்காமல் அசையாமல் படுத்திருந்தாள்.
தன்னை மீட்டுக்கொண்டுவர எந்தளவுக்கு முயன்றாளோ அந்தளவிற்கு மனதில் வடுவாய் படிந்துபோன உணர்வுகள் பழைய ஷக்தியை வெளிக்கொணர்ந்து வர அனுமதிக்கவில்லை.
அன்று அவ்வளவு வேலையில் ஆழ்ந்திருந்தவள், ஷேஷாவிடம் பேசிக்கொண்டிருந்தவள் என தன்னை அந்த பயத்தை, பதட்டத்தை அணுகவிடாமல் பிரயத்தனப்படிருக்க தற்போதோ கேளாமலே வந்து அடங்கிகொண்ட அந்த உணர்வில் பரிதவித்தாள்.
மீண்டும் மீண்டும் தன்னை தொற்றிக்கொண்டு உறங்கவிடாமல் செய்யும் நினைவுகளை விரட்ட முயன்று தோற்றவள் திடுக்கென்று எழுந்தமர்ந்தாள். அவளின் வேகமான அசைவில் ஷேஷாவும் கண் விழித்துவிட,
“வாட் ஹேப்பன்ட் ஷக்தி?…” என்றான்.
‘கொஞ்சமும் பதறவே மாட்டானா இவன்?’ என மெல்லிய வெளிச்சத்திலும் அவனின் முகத்தை ஊடுருவி பார்த்தவளுக்கு அவன் சொல்லிய அகத்தியனின் நினைவுகள் ஞாபகம் வர சுற்றிலும் பார்த்தாள்.
இருள் சூழ்ந்த அந்த அறையின் சின்ன விளக்கொளியிலும் கூட ஷக்திக்கு அந்த பேச்சுக்கள் தாக்கத்தை உண்டு பண்ண நகர்ந்து ஷேஷாவின் அருகே சென்றாள்.
“ஷக்தி என்னன்னு சொல்லு?…”
“இல்லை, தூக்கம் வரலை…”
“ஊஃப், இதுதானா?…” என்றவன்,
“கண்ணை மூடிக்கோ…” என சொல்ல,
“அதான் வரலைன்னு சொல்றேன்ல. கண்ணை மூடிக்கோன்னா? வந்தா நான் ஏன் உங்க பக்கத்துல வர போறேன்?…” என தன்னை கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் ஷேஷாவிடம் பேசிவிட்டாள்.
“பட் நானும் மனுஷன் தான் ஷக்தி. கூடவே நான் உன்னோட ஹஸ்பண்ட் கூட….” என்றான் ஷேஷா ஆழ்ந்த குரலில்.
அவன் பேச்சில் திகைத்து போனவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே விளங்கவில்லை.
அசைவற்று அமர்ந்திருந்தவளின் அதிர்ந்த முகத்தையும், அவளின் உணர்வுகளையும் புரிந்தவனுக்கு மேலும் அவளை சோதிக்க மனமில்லாமல்,
“ஓகே, லீவ் இட். நான் உன்னோட தானே இருக்கேன். என் கையை பிடிச்சுக்கோ…” என்று மீண்டும் படுக்க ஷக்திக்கு தான் எப்படி அந்த நேரம் நடந்துகொள்வதென்று தெரியவில்லை.
“ஷக்தி…” என்ற அதட்டல் மிகுந்த அந்த குரலை அலட்சியப்படுத்தாமல் உடனே சாய்ந்தாள்.
“இது யாரோட ரூம்?…” என்று அடுத்த கேள்வியை ஷேஷா கேட்டதுமே இப்போது அவனின் கையை பிடித்தவாறே கண்ணை மூடிக்கொண்டாள்.
காலை எழும் பொழுது மனதில் மற்றவை எல்லாம் பின் சென்று ஷேஷாவின் வார்த்தையே காதுக்குள் ரீங்காரமிட்டது.
‘அவனின் எதிர்பார்ப்பு தவறில்லை. தன்னால் அதனை தவிர்க்க முடியுமா?’ நினைவுகள் எல்லாம் பந்தாய் சுழன்று அவளை தண்ணீருக்குள் அமிழ்த்தியது.
‘ஷக்தி அது ஒரு அஃறிணை. மதிப்பு குடுக்காத. உயிர்ப்பு குடுக்காதே’ ஷேஷாவின் பேச்சுக்கள் மீண்டும் மீண்டும் அவளை அலைகழித்தது.
ஷக்தியின் அலைபேசியில் அழைப்பு வர அதுவரை அலைமோத வைக்கும் நினைவுகளில் சஞ்சரித்திருந்தவள் அவற்றில் இருந்து திசை மாறினாள். வந்த அழைப்பு கிருஷிடம் இருந்து தான்.
“மேம், வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்…” அவன் சொல்லவும்,
“டென் மினிட்ஸ்…” என சொல்லி அத்தனையையும் ஒதுக்கி வைத்து கிளம்பி கீழே வந்தாள்.
அவள் காலை உணவிற்கு சொல்லாததால் அதற்கென்று காத்திருந்த மேற்பார்வையாளர் இப்போது அவள் கிளம்பி கீழே வந்ததும் பதட்டத்துடன் பார்த்தார்.
“மேம்…” என முன்னால் வர, அவரை ஷக்தி பார்த்ததும்,
“இன்னும் நீங்க ப்ரேக்பாஸ்ட் எடுத்துக்கலை…” என்றார்.
“சூர்…” என சொல்லி மறுக்காமல் நேராக உணவருந்தும் கூடத்திற்கு செல்ல அவருக்கு நம்பவே முடியவில்லை.
இத்தனை நாளில் ஒருமுறை கூட இங்கே வந்து உண்டிறாதவள் இன்று வரவும் அங்கே பரபரப்பாகியது.
ஷக்தி அதை எல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை. சாப்பிட்டு முடித்து கிளம்பிவிட்டாள்.
ஷேஷா காலையிலேயே கிளம்பி சென்றிருக்க இப்போது தான் ஷக்தி அறக்கட்டளைக்குள் நுழைந்தாள்.
வளாகத்திற்குள் அவள் வாகனம் வரும் நேரம் சரியாய் வடிவழகியும் வந்து சேர்ந்தார் அங்கே.
இறங்கும் பொழுதே ஷக்தியை கண்டுவிட்டவர் அவளை நெருங்கும் முன்னர் அவள் தங்களுடைய கட்டிடத்திற்குள் நுழைந்துகொண்டாள்.
“எழில்…” என மகனை அழைத்தார் வடிவழகி.
“சொல்லுங்கம்மா…” உடன் வந்திருந்தவன் தாயிடம் கேட்க,
“ஷக்தியை பார்க்கனும்…” என்றார் மீண்டும்.
“அடுத்த வாரம் நடக்க போற இலவச ஹார்ட் சர்ஜரிக்கான டொனேஷனை சேர்மனை பார்த்து தான் தரனும்னு சொல்லிரு. நான் கார்ல வெய்ட் பன்றேன்…” என சொல்லிவிட்டார் வடிவழகி.
அதே நேரம் ஷேஷாவின் பிரத்யோக அறையில் பவன் ஷேஷாவின் முன் நின்றுகொண்டு இருந்தான்.
பவன் தந்த புகைப்படங்களையும், அதன் பின்னால் இருந்த குறிப்புகளையும் தீவிரமாக பார்த்துக்கொண்டு இருந்தான் ஷேஷா.
“இவங்க தான் பாஸ்…”
“நம்பிக்கையானவங்க தானே பவன்?…”
“அதுல சந்தேகம் இல்லை பாஸ்…” பவனின் குரலில் தெரிந்த உறுதி ஷேஷாவை தலையசைக்க வைத்தது.
“ஓகே டூ இட்…”
“நீங்க சொன்ன மாதிரி நாமினேஷன்க்கு டூ டேய்ஸ் முன்னாடி தானே பாஸ்?…”