ஷேஷாவின் அறைக்குள் ஷக்தி நுழைய அங்கே அவன் இல்லாது வெற்று இருக்கையே காட்சியளித்தது.
அங்கிருந்த அந்த நாற்காலிக்கும் கூட அவனின் கம்பீரம் சற்று ஒட்டியிருந்ததோ என்னும் விதமான தோற்றம் ஷக்தியின் மனதில்.
‘என்ன இது?’ என தலையை இடவலமாக அசைத்து கொண்டவள் உள்ளே நுழைய அங்கிருந்த சுவர் போன்ற அமைப்பு நகரும் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினாள்.
உள்ளிருந்து அறை போல தெரிய அதிலிருந்து பவனுடன் ஷேஷா வெளியே வந்தான்.
அவனை பார்த்ததும் அதிர்ச்சியும், வியப்புமான பார்வையை கொடுத்தவள் கை தன்னையறியாமல் நெஞ்சாங்கூட்டிற்கு சென்று திரும்ப விழிகளால் அதனை அளந்தான் ஷேஷா.
“ஓகே பவன். இதை டிஸ்போஸ் பண்ணிடு…” பவனின் கையில் இருந்த கவரை காண்பித்ததும்,
“சூர் பாஸ்…” என பவன் வெளியேறிவிட்டான்.
“ஷக்தி, உனக்கு தனி ரூம் அரேஞ்ச் பண்ணவா? இல்லை இங்கயே ஷேர் பண்ணிக்கலாமா?…” ஷேஷா கேட்டதும் இன்னுமே அவன் எதற்கு அங்கிருந்து வந்தான் என்னும் சிந்தனையிலிருந்து அவள் வெளிவரவே இல்லை.
பார்த்தபடியே நின்றவளின் முன்னே விரலால் சொடுக்கிட்டவன் அவளை நிகழ்வுலகத்திற்கு அழைத்து வந்தான்.
“என்ன திங்கிங்?…” ஷக்தியிடம் கேட்டவாறு தன்னிருக்கையில் சென்று அமர்ந்தவன் மடிக்கணினியை திறந்தான்.
தனது கை ரேகையை பதிந்து அதற்கு உயிர் கொடுத்தவன் அருகில் இருந்த கணினியின் பெரிய திரையின் வழி வெளியே என்ன நடக்கிறது என்றும் பார்வையிட்டான்.
அதில் வடிவழகியும், எழிலும் பேசிக்கொண்டிருந்தது தெரிந்தது. அதை கண்ட ஷேஷா முகத்தில் ஒரு இகழ்ச்சியான புன்னகை வந்து சென்றதன் அரவமின்றி மீண்டும் முகம் சாதாரணமாக இருந்தது.
“வடிவழகி வந்துட்டாங்க…” என திரையை திருப்பி முழுதாய் மாற்றி ஷக்தியிடம் காண்பித்தான். அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை அவள்.
‘தான் வந்திருக்கிறோம். அதிலும் அவன் காலையில் வலியுறுத்தாமலே கிளம்பி வந்திருக்கிறோம். ஆனாலும் கொஞ்சமும் மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் எப்பொழுதும் போலவே இருக்கிறானே?’ என கோபமாய் பார்த்தாள் அவனை.
“வாட்?…” என அவளிடம் அவன் வினவ,
“நீங்க சொல்லாமலே நான் கிளம்பி வந்திருக்கேன். அதை பத்தி எதுவும் பேசலை நீங்க?…” என்றவளின் முகத்தில் தெரிந்த அதிருப்தியில் ஷேஷாவின் இதழ்கள் இளமுறுவலில் வளைந்தன.
“என்ன பேசனும்? இது உன்னோட ட்ரஸ்ட். நீ இங்க வர நான் என்ன பேசனும்? இது உன்னோட கடமை ஷக்தி…” என்றான்.
அவனுக்கு தெரிந்தது அவளை தான் கவனிக்கவில்லை என்னும் விதமாய் கோபப்படுகிறாள் என்று.
இதற்கெல்லாம் பழக்கப்பட்டவன் அல்லவே ஷேஷா. எதையுமே ஒரே நேர்கோட்டில் எடுத்து செல்பவனின் உணர்வுகள் சிலநேரம் கொந்தளிப்பது ஷக்தியிடம் மட்டுமே.
அதை அவள் அறிந்ததில்லை. அதன் தவறும் தன்னிடமில்லை என்று நினைத்தான்.
விருப்பங்களை காட்டிக்கொண்டேவா இருப்பது? உண்மையில் அவள் வந்ததில் மனதிற்குள் திருப்தி தான்.
ஆனாலும் வாய்விட்டு சொல்லிவிட முடியவில்லை. ஈகோ இல்லை. ஆனாலும் அது ஷேஷாவிற்கு பழக்கமில்லை.
ஷக்தியோ சின்ன சின்ன விஷயத்திற்கும் அவனின் பார்வையை தன்மீது எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
“ஓகே, இப்போ எதுக்கு இந்த கோபம்? பர்ஸ்ட் டே. ப்ரெஷ் மார்னிங். ப்ரீஷியஸ் டைம். இதை ஸ்பாயில் பண்ணிக்காத ஷக்தி. கம்…” என்றதும் அவனருகே சென்றவளுக்கு எங்கே அமர என்று சுற்றிலும் கண்களை சுழலவிட்டாள்.
“நேத்து இருந்த சீட் அங்க இருக்கு பாரு. இப்போதைக்கு அதை யூஸ் பண்ணிக்கோ…” என சொல்லவும் அதனை நகர்த்தி எடுத்து வந்து ஷேஷாவின் அருகே போட்டு அமர்ந்தாள்.
அவளின் செயல்களை எல்லாம் அதரங்களுக்குள் ஒளியாத புன்னகையுடன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ஷேஷா.
“உனக்கு இங்கயே ஒரு மேனேஜிங் செட் அலார்ட் பன்றேன். இன்னைக்கே வந்திரும்…” என சொல்லி கிருஷிற்கு அழைத்தான்.
ஷக்தி அவன் பேசட்டும் என டேபிளில் இருந்தவற்றை கவனித்துக்கொண்டு இருந்தாள்.
முதல்நாள் அதற்கு எங்கே நேரம் இருந்தது? எழிலை பார்த்ததும், கையெழுத்திட்டதும், உடனே வெளியேறி அங்கே அகத்தியனை பார்த்து ஓடி சென்று ஷேஷாவினுள் அடைக்கலமாகியது, வீட்டிற்கு சென்றது என அடுத்தடுத்த நிகழ்வுகள்.
கிருஷிடம் பேசி முடித்தவன் ஷக்தி பக்கம் திரும்பினான் வடிவழகி வரவிருக்கிறார் என சொல்வதற்காக.
ஷக்தி அசையாது அமர்ந்திருந்தவிதத்தில் இடுங்கிய விழிகளுடன் அவளை பார்த்தான்.
“ஷக்தி, ஏன் அப்பப்போ ப்ரீஸ் ஆகிடற?…” என்றதும் தன் தோள்களை குலுக்கியவள்,
“நேத்து நடந்ததை எல்லாம் நினைச்சுட்டு இருந்தேன். நத்திங்…” என இலகுவாய் சொல்ல அதற்கு அவன் அலுக்காமல் ய அவள் சொல்லிய தோரணைக்கு முறுவல் புரிந்தான்.
“குட், வெல் சேஞ்ச்ட்…” என பாராட்ட அதை ஏற்றுக்கொள்ளும் விதமான பாவனை அவளிடத்தில் இல்லை.
“ஓகே, இப்போ இங்க ஒரு லேடி வராங்க…”
“யார்?…”
இன்னும் அவனை பார்க்கவில்லை. மேஜை மேல் இருந்த கோப்புகளையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“வடிவழகி…” என ஷேஷா சொல்லவுமே அவனை நிமிர்ந்து அனல் பறக்க பார்த்தவள்,
“நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேனே? திரும்பவும் ஏன் இப்படி பன்றீங்க?…” என இருக்கையில் இருந்து கோபமாக எழுந்து நிற்க அவளின் கை பற்றி உட்கார வைத்தவன்,
“ஷக்தி கூல்…” என்றான் இலகுவாக.
“உங்களுக்கு எல்லாமே கூல் தான். இல்லையா? என்னை எப்படியான சூழ்நிலையில நிக்க வச்சாங்க தெரியுமா? அதுக்கு அவங்களும் ஒரு காரணம். நான் அவங்களை பார்த்து பேசனுமா?…”
“ச்சே, இதான் உங்ககிட்ட எதுவும் பேசறதில்லை. என்ன புரியுது உங்களுக்கு? எல்லாத்துக்கும் இதே பார்வை. ஒரே பார்வை. கொஞ்சமும் என்னை புரிஞ்சுக்கிற பார்வை இல்லை…”
“உன்னை புரிஞ்சு அப்படின்னா? நான் உன்மேல பரிதாபப்படனும், பாவப்படனும்னு சொல்ல வரியா ஷக்தி?….” என்றவனின் குரல் இப்போதும் எந்த ஏற்ற இறக்கங்களும் இல்லாதிருக்க பொறுமை மறைந்தது ஷக்திக்கு.
“நான் பரிதாபமா? ஹவ் டேர்…” என ஆரம்பித்தவள் நொடியில் தன்னை சுதாரித்து வார்த்தைகளை அடக்கிக்கொண்டு அவனை பார்த்தாள்.
“ஹ்ம்ம், சொல்லு…” ஷேஷா கால் மேல் காலிட்டு அவள் பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்தான்.
“உங்ககிட்ட பேச முடியாது. நான் கிளம்பறேன். இங்க யாரையும் பார்க்கமாட்டேன்…” என்றவளால் முடியவில்லை.
ஷேஷாவின் கைகளுக்குள் அவளின் கரம். அதை அவனிடத்திலிருந்து விடுவிக்க பார்க்க அது முடியவில்லை.
“நீ பேசறதுக்கான மீனிங் அதான் ஷக்தி. நான் சொல்லும் போது உனக்கு கோவம் வருதே?…”
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நானும் கேட்கலை. உங்ககிட்ட நிறைய எக்ஸ்பெக்ட் பன்றேன்ல. நீங்க என்னை பேசுவீங்க…” எனும் பொழுதே முகம் சூடாகிவிட சத்தம் குறைந்தது அவளிடத்தில்.
அவளின் மாற்றம் புரிந்து பார்த்திருந்தவனின் கைகளும் மிதமான நெகிழ்ச்சிக்குள் செல்ல, அதை பயன்படுத்தி அவள் உருவ முயன்றாள்.
தன் நொடி நேர நெகிழ்வை இறுக்கமாக்கியவன் மீண்டும் இரும்பாய் பற்றிக்கொண்டான் அவள் கையை.
“நீ கிளம்ப முடியாது ஷக்தி…”
“ஏன் முடியாது? என்னை யாராலையும் நிறுத்த முடியாது. லீவ் மீ…” என்றாள் ஆக்ரோஷமாக.
“அவங்க இப்போ பார்க்க வந்திருக்கறது ஷக்தியை இல்லை. வானம் அறக்கட்டளையோட ஒரு நிர்வாகியை…” என்றதும் ஷக்தி தனது திமிறலை நிறுத்தி நிதானமாக பார்த்தாள்.
“இங்க வரவங்களுக்கு சரியான பதிலை கொடுக்க வேண்டியது நம்மோட கடமை. அதனால அவங்களை ரிஸீவ் பண்ணி என்ன பதில் குடுக்கனுமோ குடுத்து அனுப்பு…” என்றான் ஷேஷா.
‘என்ன பதில் குடுக்கனுமோ’ என்றதில் அவன் அழுத்தம் தர இப்போது தான் ஷேஷா வடிவழகியை இங்கே அனுமதித்ததற்கான காரணம் ஷக்திக்கு புரிந்தது.
‘அதை புரிந்துகொள்ளாமல் பேசிவிட்டோமே?’ என கொஞ்சமே எழும்பிய குற்ற உணர்வில் அமைதியாக அவள் அமர்ந்தாள் ஷக்தி.
அதை எல்லாம் கண்டுகொள்ளாதவன் அவர் வந்ததும் டொனேஷன் சம்பந்தமாக என்றால் என்ன சொல்லவேண்டும் என்றவற்றை எல்லாம் விவரித்தான்.
அதற்குள் வெளியே இருந்து கதவு தட்டப்பட அந்த ஓசையில் அனுமதி வழங்கினான்.
வடிவழகியுடன் எழிலும் வர ஷக்தி கவனிக்காததை போல வேண்டுமென்றே முகம் திருப்பி அமர்ந்திருந்தாள்.
“வாங்க…” என ஷேஷா அவரை அழைக்க இங்கே கோபத்தில் அவனின் கைவிரலை பற்றியிருந்தவள் கடைசி விரலை திருகினாள்.
அவளின் பிடியிலிருந்து தனது கரத்தை விலக்கிக்கொண்டான் ஷேஷா. ஆனால் ஷக்தி மீண்டும் தேடி அவனின் கையை பற்றிக்கொள்ள ஒன்றும் செய்ய முடியவில்லை அவனால்.
“வணக்கம் தம்பி…” என வடிவழகி ஷேஷாவை பார்த்து சொல்லவும்,
“சொல்லுங்க…” என்றான் பதில் வணக்கம் சொல்லாமல்.
அதுவே எழிலின் கோபத்தை இன்னும் பலமடங்கு கூட்டியது. தங்களை அவமதிப்பதாக எண்ணி கை முஷ்டியை மடித்தபடி நின்றான்.
“உட்கார் எழில்…” என மகனை சொல்லிய வடிவழகி ஷேஷாவிடம்,
“அடுத்த வாரம் நடக்க இருக்கிற முகாம்க்கு நன்கொடை குடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்…” என்று பேசினார்.
“டொனேஷன் நீங்க நேர்ல தான் குடுக்கனும்னு அவசியமில்லை. ஆபீஸ் ரூம்லயே அதுக்கான எல்லாம் பார்மாலிட்டீஸும் இருக்கே…” என்றான் ஷேஷா.
ஷேஷாவின் பேச்சில் வடிவழகி சிரமப்பட்டு தனது முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள போராடினார்.