வடிவழகி வீட்டிற்கு வந்ததில் இருந்து அறைக்குள் நுழைந்திருந்தவர் வெளியே வரவில்லை.
கோபமான கோபம் தன் மீதும் கூட. தான் சென்றால் ஷக்தியை ஆட்டிப்பார்க்கலாம், ஒருவேளை தான் பேசியதால் தங்களை விட்டு விலகவும் வாய்ப்பிருக்கிறது என நினைத்து தான் சென்றதே.
ஆனால் நடந்ததோ வேறு. அவளிடம் பேசிய முதலும் கடைசியான ஐந்து வருடங்களுக்கு முன்னான அந்த பேச்சில் இன்றும் அவள் அந்த ஷக்தியாகவே இருக்க கூடும் என நினைத்து சென்றது தனது முட்டாள்தனம் தானே என எண்ணி தன் ஆத்திரத்தை முயன்று அடக்கினார்.
ஆனால் நடந்ததை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவர். அதனோடு ஷக்தி சொல்லிய அந்த விஷயம்.
ஏன் ஏன் ஏன் என்ற யோசனையில் புருவம் சுருங்கியது. இத்தனை நாள் அதை பற்றி தான் கண்டுகொள்ளவோ, கேட்டுகொள்ளவோ இல்லையே.
வேகமாய் வெளியே வந்தவர் மாடியில் இருக்கும் அந்த அறைக்குள் நுழைந்தார். அவர் சென்ற வேகத்தில் ராஜியும் உடன் செல்ல,
“எழிலை வர சொல்லு…” என சொல்லி இருக்கையில் அமர்ந்துகொண்டார்.
என்னவோ படபடப்பாய் இருந்தது. என்ன நடந்துகொண்டிருக்கும் என தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேகத்தில் சிந்தனைகள் எல்லாம் ஷக்தியே.
‘உங்க மகனை தயாரா இருக்க சொல்லுங்க’ இது சாதாரணமாக தெரியவில்லை அவருக்கு.
“அம்மா…” என உள்ளே வந்தவன் அவர் அமர்ந்திருந்த விதத்தில் துணுக்குற்றான்.
அறக்கட்டளையை விட்டு வெளியே வந்தவர் ஒரு வார்த்தை கூட பேசாது மௌனமாய் வந்தவரிடம் தன்னாலும் பேச முடியவில்லை.
அவராக சொன்னால் அன்றி வேறு எதுவும் செய்ய முடியாதே என எழிலும் பேசாமல் தான் இருந்தான்.
வீட்டிற்கு வந்ததும் வடிவழகி தனதறைக்கு சென்றுவிட அகத்தியன் உடனே போன் செய்து சென்ற விஷயம் என்னவாகிற்று என்று எழிலிடம் விசாரித்தான்.
“என்னாச்சுன்னா? இங்க எதுவும் அம்மா சொல்லலை? நான் என்ன மாமா பன்றது?…”
தாயிடம் காண்பிக்க முடியாத ஆற்றாமையை மாமனிடம் காண்பிக்க அகத்தியனுக்கும் என்ன நடந்திருக்குமோ என சிந்தனை தான்.
“பொறுங்க மருமகனே. என்னன்னு வந்து தானா சொல்லட்டும். கேட்டு தெரிஞ்சதும் எனக்கும் சொல்லுங்க. சொல்லாம எங்க போக போறாங்க?…” என்றான் அகத்தியன்.
“எனக்கென்னவோ எதுவுமே சரியாப்படலை மாமா. அவ வந்ததுல இருந்தே நிம்மதி இல்லை…”
“இதுல உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க. அடுத்த வாரம் ஹார்ட் சர்ஜரி கேம்ப் போடறாங்க…”
“அது தான் வருஷா வருஷம் நடக்குதே மாமா…”
“மருமகனே கொஞ்சம் பொறுங்க. பொறுமையே இல்லை உங்களுக்கு…” என்ற அகத்தியன்,
“பர்ஸ்ட் ஆரம்பிச்சதும் பிரஸ் மீட் நடக்கும்…”
“வழக்கம் போலதானே மாமா? இதுல என்ன புதுசா?…” என்றான் எழில் மீண்டும் கோபத்துடன்.
குரல் சலித்து வந்தது. தெரிந்த விஷயத்தை ஏன் சொல்கிறார் என்பதை போல அதை கேட்கவே விரும்பவில்லை அவன்.
தான் ட்ரஸ்ட்டில் இருக்கும் பொழுதே அதில் நிர்வாகி என்னும் பொறுப்பில் வெறும் பொம்மையாய் தான் நின்றிருக்கிறான் எழில்.
எந்த உரிமையையும் ஷேஷா அவனுக்கு தரவில்லை. அந்த மருத்துவமனை கூட அவனின் கட்டுப்பாட்டில்.
அவனை சேர்ந்தவர்கள் எழிலை உள்ளார்ந்து ஒன்றும் மதித்துவிடவில்லை என்று எழிலுக்குமே விளங்கியது.
‘மாச சம்பளத்துக்கு நிக்கிற இதுங்களுக்கு கூட அவ்வளவு திமிரா போச்சு’ என நினைத்துக்கொள்வான் மனதிற்குள்.
ஆனால் வெளியே தானும் அங்கு நடக்கும் நல்லவைகளுக்கு ஒரு காரணம் என காட்ட தவறுவதில்லை.
அதில் தனக்கு ஒரு ஆதாயம் இருக்க அதனை கொண்டு தன்னுடைய தொழிலை மட்டுமல்லாது நற்பெயரையுமே வளர்த்துக்கொண்டான்.
இன்னொருவரின் உழைப்பில், தன்னுடைய ஏகபோக வாழ்க்கையை செம்மை படுத்திக்கொண்டான் எழில்.
இப்பொழுது அந்த ட்ரஸ்ட்டில் இருந்து கறிவேப்பிலை போல் தூக்கி எறியப்பட்டதாக தான் நினைத்துக்கொண்டிருக்க அதன் பெருமைகள் தனக்கெதற்கு என்னும் வன்மம் எழில் மனதில்.
“என்ன மருமகனே திரும்ப திரும்ப சின்ன பிள்ளை மாதிரி பேசிட்டு இருக்கீங்க?…” என்ற அகத்தியன்,
“பிரஸ் மீட்ல அவனோட பொண்டாட்டின்னு அந்த குட்டியை காமிப்பானே?…”
“அதான் ஏற்கனவே சொல்லிட்டானே கல்யாணம் பண்ணின அன்னைக்கே. இன்னும் என்ன மாமா? அந்த பேச்சே வேண்டாம். எரிச்சலா இருக்குது. அதை பத்தி, ஷேஷா பத்தி பேசாதீங்க. எரிச்சலா இருக்குது. என்னவோ நான் கையாலாகாதவன் மாதிரி…”
எழிலின் வார்த்தையில் இருந்த குமுறலை அகத்தியனால் கண்டுகொள்ள முடிந்தது.
“அட அது வேற யாரோ ஒருத்தின்னு சொன்னது. ஆனா இந்த முறை அப்படியா சொல்லுவான்? நல்லா யோசிங்க மருமகனே?…” என்றதும் தான் எழிலுக்கு பொறிதட்டியது.
“மாமா…”
“அவன் செய்வான் மருமகனே. வினயம் பிடிச்சவன்…”
அகத்தியன் சொல்லியதை போலவும் நடக்க சாத்தியக்கூறுகள் உண்டு. ஆனாலும் அப்படி செய்தால் அன்று ஏன் மாற்றி சொன்னாய் என்னும் விதமான கேள்விகள் ஷேஷாவை நோக்கி பாயும் என்பதால் செய்ய மாட்டான் என எழில் நினைத்திருந்தான்.
தன்னை தொடரும் கேள்விகளை எப்படி சமாளிப்பது என அவன் அறியாததா? அதை மறந்து போனான் எழில்.
“மாமா, இப்போ இதை பத்தி பேச வேண்டாம். எனக்கு நேரமும் இல்லை. இப்போ அம்மா அங்க என்ன பேசினாங்கன்னு தான் எனக்கு தெரியனும்…” என சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே ராஜி வந்துவிட்டாள் அவனை அழைக்க.
“அத்தை உடனே வர சொன்னாங்க…” என சொல்லவும்,
“மாமா அம்மா தான் கூப்பிடறாங்க…” என்று அழைப்பை துண்டித்தவன் ராஜியை தாண்டிக்கொண்டு வேகமாய் சென்றான்.
“சொல்லுங்கம்மா…” என எழில் கேட்டதும் அவனை உற்று நோக்கியவர்,
“லெதர் பேக்டரில எந்த ப்ராப்ளமும் இல்லையே?…” என்றார்.
அது ஷக்தியின் தொழிற்சாலை. முதல் நாள் தான் அவளிடம் ஒப்படைப்பதாக கையெழுத்திட்டு வந்திருக்கிறான். இப்போது ஏன் அதை பற்றி என தாயை பார்த்தான்.
“எழில்…” என்ற வடிவழகியின் அதட்டலில்,
“அம்மா இல்லை நாம தான் அதை திருப்பி…”
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லனும் எழில்…”
“எந்த ப்ராப்ளமும் இதுவரைக்கும் இல்லைம்மா…”
“உண்மையாவா?…”
“என்னாச்சும்மா? ஏன் இதெல்லாம் கேட்கறீங்க?…”
“நான் கேட்டதுக்கு மட்டும் பதில். ஷக்திக்கு நீ குடுத்த அந்த சொத்துக்கள் எல்லாத்துலையும் எந்த குழறுபடியும் இல்லையே?…”
அப்போதும் கூட அது ஷக்தியின் சொத்துக்கள் என சொல்லாமல் மகன் அவளுக்கு வழங்கியதை போலவே நீ கொடுத்த சொத்துக்கள் என்றார்.
மீண்டும் மீண்டும் அதையே அழுத்தி கேட்டார் வடிவழகி. ஒவ்வொரு சொத்துக்களையும் அவர் சொல்லி கேட்க எழில் குழம்பினான்.
“இதுவரைக்கும் எதுவும் இல்லைம்மா. எல்லாமே ஸ்மூத்தா போகுது. சில கணக்குவழக்குகள் தான் முரண்டிட்டு இருக்குது. அதை சரி பண்ணிடலாம். கேட்டா சொல்லிக்கலாம். இல்லைன்னா அதுக்கான அமௌண்ட் நாம செட்டில் பண்ணிடலாம்…”
எழில் இலகுவாக சொல்லிவிட்டான். ஆனால் வடிவழகிக்கு அது போதவில்லை. மனதிற்குள் நெருடல் இன்னும் அதிமாகியது.
“எல்லாமே நீ தான் கவனிச்சியா எழில்?…”
“அம்மா…”
“எல்லா கணக்கு வழக்குகள் தாண்டி நான் சொல்றது புரியுதா?…” என்றார்.
“நான் வீக்லி ஒன்ஸ் தான் அங்க விசிட் பண்ணுவேன். மத்த எல்லாமே நம்மாளுங்க தான் பார்த்துப்பாங்கம்மா…”
“நம்மாளுங்கன்னா?…”
“மாமா ஏற்பாடு பண்ணின ஆளுங்க. எல்லாம் நம்ம நம்பிக்கையானவங்க…”
“ம்ஹூம். என்னவோ சொல்ற. ஆனா ஏத்துக்க முடியலை. இதை கூட பார்த்துக்கலைன்னா ஏன் நீ அந்த பொறுப்பை வாங்கிக்கிட்ட?…” என்றார் ஆத்திரத்துடன்.
“அம்மா, என்னாச்சுன்னு இத்தனை கோவம்? அங்க போகலையே தவிர மாமாவும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க. நம்மோட சொத்துக்களே ஏகப்பட்டது இருக்க இதை என்ன பெருசான்னு ஒரு…”
ஆனாலும் அப்படியே அவனை விட்டுவிட்டு செல்ல மனமில்லாதவள் தள்ளி அமர்ந்துகொண்டாள்.
வெகுநேரம் அங்கேயே இருந்தவன் நேரம் சென்று தான் எழுந்து வெளியே சென்றான்.
அகத்தியனை அழைத்து வடிவழகி பேசும் முன் அந்த விஷயம் வேறாக மாறி இருந்தது.
தொழிற்சாலைகள், கம்பெனிகள் எல்லாம் முக்கிய பதவி வகித்தவர்களும், தங்களுடைய விசுவாசிகளும் வரிசையாக மாற்றப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.
நான்கு நாட்கள் கழித்து எழிலின் காதுக்கு இந்த விஷயம் வந்த பொழுது மொத்தமும் அந்த தொழில்கள் எல்லாம் ஷக்தியுடையதாய் மாறியிருந்தது.
எழில் இதை பெரிதாய் கண்டுகொள்ளவில்லை என்றாலும் வடிவழகிக்கு உவப்பாக இல்லை.
அகத்தியனிடம் பேச எந்தவித பதட்டத்தையும் காண்பித்து கொள்ளாமல் தான் வடிவழகியிடம் பேசினான்.
“என்ன பண்ண முடியும்? அங்க தொழில் தான நடந்துச்சு. மருமகன் சொன்ன மாதிரி காசை குடுத்து செட்டில் பண்ணிடலாம்…” என அலட்சியமாக பதில் சொல்லவும் வடிவழகிக்கு நிம்மதி.
இத்தனை உறுதியாக சொல்வதனால் நிச்சயம் எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அகத்தியனை முழுவதுமாக நம்பினார்.
ஆனால் அகத்தியனுக்கு தான் நடுக்கம். அங்கே எந்த ஆதாரங்களும் மாட்டி இருக்காது என நம்பிக்கையாக இருந்தாலுமே ஏதோ உதறல்.