இப்படி ஷேஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதுமே சுதாரித்த அகத்தியன் எந்த ஆதாரங்களும் சிக்கிவிடாதபடி அழித்துவிட்டதாக நினைத்திருக்க மொத்தமும் ஷேஷாவின் கையில் சிந்தாமல் சிதறாமல் முன்பே சென்று சேர்ந்திருந்ததை அறியாது போனார்கள்.
ஆட்கள் மாற்றப்பட்டு புது ஆட்கள் வந்திருக்க அங்கிருந்து வேறு எந்த தகவலையுமே அறிந்துகொள்ள முடியவில்லை.
ஷக்தியின் தாய் விஷயத்திலும் அவரின் மறைவின் காரணத்தினால் மருத்துவமனையில் ஷேஷா நடந்துகொண்டதை ஞாபகத்திற்கு கொண்டு வந்த அகத்தியன் ஷேஷா இதை தான் செய்வான்.
அதை செயல்படுத்த ஓரிரு மாதங்கள் எடுக்கும் என ஓரளவு நினைத்திருக்க ஆனால் இத்தனை வேகத்தை எதிர்பார்க்கவில்லை.
தயாராக ஆட்களை வைத்திருந்ததை போலவே எந்த தாமதமும் இன்றி ஆட்கள் புதிதாய் அமர்த்தப்பட்டனர்.
அவனிடத்தில் வேலை செய்பவர்கள் சூழ்நிலையால் தவறு செய்தால் கூட மன்னிப்போ, எச்சரிக்கையோ அங்கே இல்லவே இல்லை. ஷேஷாவை சுற்றிலும் உண்மையானவர்கள். அதுவே அவனின் பலம்.
அதனை கொண்டே அங்கே வேலை செய்பவர்கள் நேர்மைக்கு தலைவணங்குபவர்களாக இருந்தார்கள்.
இப்போது ஷக்தியின் சொத்துக்களிலும் ஷேஷாவின் ஆட்சி. எந்த ஓட்டை வழியேனும் உள்ளே நுழைய முடியவில்லை. அத்தனையும் இரும்பு அரணாய் சுற்றி இருந்தது.
அகத்தியன் முயன்று சோர்ந்து விட எழிலுக்கு ‘இது எதற்கு நமக்கு?’ என்று அகத்தியனை தான் காய்ந்தான்.
————————————————-
ஒரு வாரம் ஆகிற்று. அன்று இலவச இதய அறுவை சிகிச்சை நடைபெறும் நாள். அதிகாலையே கிளம்பி ஷேஷாவுக்காக தாயாராக இருந்தாள் ஷக்தி.
ஷேஷா இரவு வந்தவன் உணவை முடித்து சிறிது நேரம் உறங்கிவிட்டு எழுந்து கிளம்பிவிட்டான்.
அந்த மருத்துவமனைக்கு தனியே செல்ல ஷக்தியால் முடியாது. ஆனால் கிளம்ப வேண்டும்.
அவள் ஷேஷாவின் மனைவி. அங்கே அவனுடன் அந்த நற்காரியத்தில் தான் இல்லாது போனால் அவனுக்கென்ன மரியாதை?
கிளம்பி இருந்தாள் எப்படியும் தன்னை அழைத்து செல்ல ஷேஷா வந்துவிடுவான் என்று.
அவள் நினைத்ததை போலவே வந்து சேர்ந்தான். வந்தவன் அவளை பார்த்துவிட்டு தானும் குளித்து கிளம்பி வந்தவன்,
“போலாமா ஷக்தி..” என்று தன் வலது கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.
கண்கள் சிவந்து நீர் படர்ந்து இருக்க அவனை ஏறிட்டவளை பார்த்தவனுக்கும் மனது கனத்தது.
“ஷக்தி, கூல்…”
அவன் சொல்லியதன் அபத்தம் அவன் அறிந்திருந்தும் அதை தவிர வேறு என்ன சொல்லிவிட முடியும் அவனால் என மௌனம் காத்தான்.
“ஷேஷா அம்மா…” என்றவளை தன்னருகே அழைத்து ஆறுதலாய் அணைத்துக்கொண்டான்.
“போனவங்களை நினைச்சு அழுது உன்னை நீயே கஷ்டபடுத்திக்காத ஷக்தி. இன்னைக்கு நடக்க போற இந்த ஆப்பரேஷன்ல நிறைய பேருக்கு அம்மாவும், அப்பாவும், சில உறவுகளும் கிடைப்பாங்க. அதை நினை…”
“அன்னைக்கு ஏன் அம்மாவை உங்க ஹாஸ்பிட்டல்ல அப்படி பண்ணினாங்க? ப்ராப்பர் ட்ரீட்மென்ட் குடுத்திருந்தா அவங்களும் பிழைச்சிருப்பாங்க தானே?…”
“இருக்கலாம். அன்னைக்கு நான் இருந்திருந்தா மணிவாசகம் ஸாரும் கூட உயிரோட இருந்திருக்கலாம். பட் இப்போ அதை நினைச்சு நேரத்தை கடத்த முடியாது. இது நம்ம நடத்தற கேம்ப். நாம சீக்கிரம் போகனும்…”
ஷேஷா சொல்லவும் தன்னை முயன்று சரி செய்துகொண்டாள். கண்ணீரை உள்ளிழுத்தவள் மனதை திடமாக்கிக்கொண்டாள்.
“போகலாம்….” என சொல்லவும் அவளிடம் சிறு புன்னகையை காட்டியவன் கிளம்பி வந்தான்.
வானம் மருத்துவமனை. அறக்கட்டளையை தாண்டி தள்ளியே இருந்தது. அன்றைய முகாமிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க ஆரம்பித்து வைப்பதற்கென சமூக ஆர்வலர்கள் சிலர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்று இருந்தார்கள்.
கூடவே சில தன்னார்வு தொண்டு நிறுவனங்களும் இதில் கை கோர்த்து இருக்க மருத்துவமனை முழுவதும் அதன் பரபரப்பில் இருந்தது.
நிகழ்ச்சி நிரல் வாசித்து முகாமை ஆரம்பித்து வைக்க பெண்மணி ஒருவரை ஏற்கனவே பேசி வைத்திருந்தான் ஆதிஷேஷன்.
பத்திரிக்கையாளர்கள் ஷேஷாவின் வருகையை படம்பிடித்ததோடு ஷக்தியையும் சேர்த்தே உள்வாங்கிக்கொண்டார்கள் தங்களது கேமராவில்.
இதை எதையுமே கவனிக்காத ஷக்தியின் விழிகள் அந்த கட்டிடத்தை சுற்றி வந்தது.
‘இங்கே தானே நின்று அழுதோம்? இங்கே தானே கெஞ்சினோம்? இப்படி தானே உள்ளே சென்றோம்?’ என அந்த கசந்த நிமிடங்கள் அவள் கழுத்தை பிடித்தது.
அவள் மீதும் பார்வையை வைத்திருந்தவன் நீர் அருந்த அவளிடம் நீட்டினான். வேண்டாம் என தலையசைத்து அவள் மறுத்தும் நீட்டிக்கொண்டே இருக்க வாங்கி குடித்தவள் சமநிலைக்கு வரவே போராடிக்கொண்டு இருந்தாள்.
சிறிதாய் மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருக்க அதில் போடப்பட்டிருந்த இருக்கையில் ஷக்தியை அழைத்து சேர்ந்து அமர வைத்தவன் அங்கிருந்தவர்களுக்கு அவளை அறிமுகப்படுத்தவும் செய்தான்.
சற்று நேரத்திற்கெல்லாம் எதிர்பாராத விதமாக வெளியே சலசலப்பு. காவல்துறை வாகனங்களும், பாதுகாப்பு படையும் உள்ளே நுழைய நடுவில் அகத்தியன் வந்துகொண்டிருந்தான் சுற்றி இருந்தவர்களுக்கு கை கூப்பியபடி.
“இவன் எப்படி இங்கே?…” என ஷக்தி கோபத்துடன் அவனை பார்த்துக்கொண்டு மேடையை விட்டு இறங்க பார்க்க,
“ஷக்தி…” என்றான் ஷேஷா அழுத்தமாய்.
“என்னால இவன் இருக்கற இடத்துல இருக்க முடியாது. இவன் எப்படி இங்க வந்தான் ஷேஷா?…”
“வெய்ட்…” என பார்த்துக்கொண்டே தான் இருந்தான் ஷேஷா.
ஆனால் கண்காணிப்பின் படி அகத்தியன் அறக்கட்டளை வழியாக அன்று வந்துகொண்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்க ஓரளவு அனுமானித்திருந்தான் ஷேஷாவும்.
அகத்தியனை பார்த்ததுமே தானும் சபை நாகரீகமாக எழுந்து நின்று லேசாய் இதழ் வளைத்தான்.
வந்திருப்பது அறநிலையத்துறை அமைச்சர் அகத்தியனாக இருக்கவே ஷேஷா எழுந்து நின்றான்.
“என்ன தம்பி என்னை எதிர்பார்க்கலை போல?…” என கூப்பிய கையை இறக்காமல் வஞ்சகத்துடன் சிரித்த அகத்தியனிடம்,
“எக்ஸ்பெக்ட் பண்ணினேன்…” என ஷேஷா அலட்டிக்கொள்ளாமல் சொல்ல,
“என்ன?…” அந்த பதிலில் திகைத்த அகத்தியன் முகம் தான் மாறிவிட்டது.
தன்னை கண்டதும் குறைந்தபட்சம் வெறுப்பாய், கோபமாய் பார்ப்பான். எரிச்சல் கொள்வான் என நினைத்திருக்க ஷேஷாவின் முகத்தில் அகத்தியன் எதிர்பார்த்த உணர்வில்லாது போக கூடுதலாக உன்னை எதிர்பார்த்தேன் என ஷேஷா சொல்லியதில் ஏமாற்றமே மிஞ்சியது.
அமைச்சரே அழைக்காமல் வந்ததில் அகத்தியனின் மேல் அத்தனை பேரின் பார்வையும் மரியாதையாய் படிய அகத்தியனின் பார்வை ஷக்தியின் மேல் விழுந்தது.
“வந்த வேலையை பாருங்க…” என்றான் ஷேஷா எச்சரிக்கும் விதமாய்.
“அவ எனக்கு யாருன்னு தெரியுமா உனக்கு?…” என்றான் அகத்தியன்.
அவனின் பார்வையும், பேச்சும் ஷக்தியை வெறியேற்ற அங்கேயே வைத்து அடித்துவிடுவேன் என்பதை போல அவள் நிற்க அவளின் கை பிடித்து தனது கட்டுப்பாட்டில் நிற்க வைத்திருந்தான் ஷேஷா.
ஏற்கனவே தாயின் இழப்பை எண்ணி தவித்திருந்தவளின் கோபத்தை கூட்டுவதை போல அகத்தியனின் பிரசன்னம்.
முதலில் அகத்தியனை திசைதிருப்பவென அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை முன்னே அழைத்தான்.
“ஆரம்பிக்கலாம்…” என ஷேஷா சொல்லவும் அவன் அழைத்திருந்த பெண்மணி,
“அமைச்சரே வந்திருக்கார். அவர் கையால் ஆரம்பிக்கலாமே?…” என்றார் ஷேஷாவிடம்.
ஷேஷா அமைதியாக அவர்களை பார்க்க அகத்தியனின் கண்களில் மிதப்பு ஏறியது.
ஷக்தியை தனது பார்வையால் கட்டுப்படுத்தி வைத்த ஷேஷா எழுந்து மேடையின் மீதுள்ள மைக்கை எடுத்தான்.
அதுவரை அவர்கள் நடத்தி வரும் இலவசம் முகாம்களை, வானம் அறக்கட்டளையை பற்றிய ஆரம்ப பேச்சுக்களை எல்லாம் பேசிவிட்டு,
“அமைச்சர் அகத்தியன் இங்கே வருகை புரிவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வந்ததும் இன்றி இந்த முகாமை தொடங்க இருந்தவர்களையே அதை செய்யும் படி வலியுறுத்தியது பாராட்டுக்குரியது…”
இவ்வாறு சொல்லியவன் அகத்தியனை கண்டு தனது கையை தட்டிக்கொள்ள அகத்தியனுக்கு அங்கேயும் தோற்ற உணர்வு.
ஒன்றும் முகத்தில் காட்டிக்கொள்ள முடியாமல் அகத்தியன் ஷேஷாவை முறைக்கவும் முடியாமல் அமர்ந்திருக்க,
“இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம், என் மனைவி ஷக்தியை, மறைந்த அமைச்சர் மணிவாசகத்தின் மகளான ஷக்தியை…” என்று சொல்லவும் ஷக்தியும் திடுக்கிட்டு, அகத்தியனும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“ஷக்தியா? ஸார் ஷக்தி மறைந்த அமைச்சர் மணிவாசகம் அவருடைய பொண்ணா?…” என்றார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.
“அவங்களே தான்…” என்றவனும் எதிர்பார்த்தது இதை தானே.
“ஆனா நக்ஷத்ரான்னு…” கூட்டத்திற்குள் சிறு சலசலப்பு.
“உங்களுடைய கேள்விகள் எனக்கும் புரியுது. பட் இந்த முகாமை தொடங்கிட்டு உங்களுக்கு பதில் சொல்லலாம் இல்லையா?…” என்றவனின் அமர்த்தலான பேச்சில் அங்கிருந்தவர்கள் அமைதியாகினார்கள்.
ஷேஷாவின் முடிவு போல அந்த பெண்மணியே துவங்கி வைக்க உள்ளே அவருடன் சென்றவன் சிறிது நேரத்தில் ஷக்தியுடன் வெளியே வந்தான்.
“பவன் அகத்தியன் உள்ள தான் இருக்கார். வாட்ச் பண்ணு…” என்றதும்,
“பாஸ், அவருக்கு ஷேடோ போயாச்சு…” பவன் சிறந்த காவலன் என நிரூபித்தான்.
உள்ளே சென்ற அகத்தியனுக்கு ஷேஷா அங்கில்லாதது பதட்டத்தை விளைவித்தது. தான் இங்கே வந்திருக்கவே கூடாதென்று நினைத்துக்கொண்டான்.
அந்த மருத்துவமனையின் முக்கிய பதவியில் இருப்பவர் அகத்தியனுக்கு விவரித்துக்கொண்டு வர விருப்பமின்றி காது கொடுத்தவன் மனதெல்லாம் வெளியில் இருக்கும் பத்திரிக்கையாளர்களிடமும், ஷேஷாவிடமுமே.
எழில் சொல்லியதை போல தானாக ஷக்தியை அறிமுகப்படுத்த மாட்டான். ஏன் நக்ஷத்ரா என சொன்னான் என கேள்விகள் அவனிடம் திரும்பும் என வெளிப்படுத்தமாட்டான் என நினைத்திருக்க அவனாகவே சொல்லியதில் குழம்பி போனான் அகத்தியன்.
அகத்தியன் பயந்ததை போலவே தான் நடந்துகொண்டு இருந்தது வெளியே. ஷேஷா தனது அடுத்த திட்டத்தை அரங்கேற்றி இருந்தான்.
எழிலுக்கும், அகத்தியனுக்கும் அவர்களை சேர்ந்தவர்களுக்கும் எதிராக பத்திரிக்கை உலகத்தை திருப்பி இருந்தான்.
அகத்தியன் நினைத்து வந்ததோ வரும் எலெக்ஷனில் ஷேஷாவின் இந்த முகாமிற்கு வந்ததன் மூலம் தனது பெயரை தக்க வைத்துக்கொள்ள என நினைத்திருக்க ஷேஷாவோ அதற்கு எதிர்பதமாய் நிலையை மாற்றி இருந்தான்.
“என்ன ஸார்? அன்னைக்கு நக்ஷத்ரான்னு சொன்னீங்க. இப்போ ஷக்தின்னு சொல்றீங்க?…” என்ற ஒருவரின் கேள்விக்கு,
“ஷக்தியோட உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. பாதுகாப்புக்காக பெயரை மாற்றி சொல்ல வேண்டிய கட்டாயம்…” என ஷேஷா சொல்ல,
“அப்போ இத்தனை நாள் இவங்க இருந்தது எங்கே?…” என்ற கேள்விகள் அதற்கும் வேண்டுமென்றே ஷேஷா பதில் சொல்லவில்லை.
“எங்க இருந்தாங்கன்னு அவங்களுக்குமே தெரியலை. மணிவாசகம் இறப்பு அன்னைக்கு காணாமல் போனவங்க…”
அவனின் பதில்கள் எல்லாம் அஸ்திரமாய் மாறி இருந்தது. அப்படி தான் அவன் சொல்லிக்கொண்டு இருந்தான்.
ஷக்திக்கு ஷேஷா ஏன் இதை செய்கிறான் என புரியவில்லை என்றாலும் அவள் அவனுக்கு துணையாய் நின்றாள்.
கடத்தி வைத்து அடைக்கவில்லை என்றாலும் அவள் அடைந்திருந்தது உண்மை தானே? காரணம் அவர்கள் தானே?
ஷேஷாவின் பேச்சு சாதுர்யமும், கேட்கபடும் கேள்வியை எதிராளியின் பக்கம் சந்தேகத்தை கிளப்பும் வகையில் அவன் பதில் இருக்க மெச்சுதல் பூத்தது விழிகளில்.
நேரலையில் இவை காட்டப்பட்டு கொண்டு இருந்தாலும் அன்று மாலையே செய்தித்தாளிலும், மறுநாள் காலை செய்தித்தாளிலும் முழுவதும் ஷக்தியின் புகைப்படங்களும், ஷேஷாவின் பதில்களும்.
மணிவாசகத்தின் பெண் கடத்தப்பட்டாரா? துன்புறுத்தப்பட்டாரா? இத்தனை நாட்கள் அவரை அடைத்து வைத்திருந்தது யார்?
அச்சுறுத்தல் எங்கிருந்து? மீட்கப்பட்ட சொத்துக்கள் தான் காரணமா ஷக்தியை மறைத்து வைக்க?
இத்தனை நாள் மணிவாசகத்தின் மகன் நிர்வகித்து வந்த வானம் அறக்கட்டளையின் நிர்வாக பொறுப்புக்கள் மீட்கப்பட்டன என்பதன் அர்த்தம் என்ன?
இப்படி பலதரப்பட்ட கேள்விகள் யூகங்களை தொகுக்க அத்தனையும் ஷேஷாவின் வியூகங்கள் என அறிந்திருந்தவர்களுக்கு நெருப்பின் மேல் நிற்கும் அவலம்.
கேள்விகள் எல்லாம் இப்போதிருந்து மணிவாசகம் மறைவில் தொடங்கி ஷக்தியின் தாயின் மறைவு வரை பேசப்பட அதில் ஷக்தி இல்லாதிருந்ததும் கூட இடம்பெற்றிருந்தது.
தந்தையின் இறப்பில் உரிமை மறுக்கப்பட்டிருந்தாலும், தாயின் இறப்பில், இறுதி சடங்கில் ஏன் கலந்துகொள்ளவில்லை அப்பெண்? என்ற கேள்விகளும் பூதாகரமாக கிளம்ப வடிவழகி, எழிலுக்கு பேரதிர்ச்சி.
இது இங்கு வரை வரும் என்று எதிர்பார்க்கவில்லை அவர்கள். அவர்களின் நிலை அப்படி என்றால் அரசியலில் இருப்பவனின் நிலையோ வேறு.
அகத்தியனுக்கு குடைச்சல்கள். இப்போது மணிவாசகத்தின் பதவியில் தானே அகத்தியன் வகித்து வருகிறான்.
மணிவாசகத்தின் இறப்பை வைத்து அந்த பதவியை பெற்று நாற்காலியை பிடித்துக்கொண்டவன் மேல் சந்தேகங்களும் கிளம்பியது மணிவாசகத்தின் அபிமானிகளுக்கும், விசுவாசிகளுக்கும்.
எதையும் சமாளிக்க முடியாமல் அகத்தியன் திண்டாடிக்கொண்டிருக்க பத்திரிக்கையாளர்கள் அந்த விஷயத்தை அப்படியே விடவில்லை.
ஒவ்வொரு செய்தியாய் கொண்டு சென்று இறப்பின் முடிச்சுக்களை அவிழ்க்கும் விதமாய் இருந்தது.
கடைசியில் மணிவாசகம் ஏன் பாதுகாவலர்கள் இன்றி காரில் தனது துணைவியுடன் பயணித்தார்?
விபத்து நேரக்கூடிய சாத்தியங்கள் எதுவுமற்ற அந்த சாலையில் மிதமான வேகத்தில் எப்படி அந்த விபத்து நேர்ந்தது?
காத்திருந்தது போல வந்த மருத்துவ வாகனம் மணிவாசகத்தை மட்டும் ஏன் எடுத்து சென்றது?
இதை எதிர்பாராத அகத்தியன் சுதாரிக்கும் முன்பே அடுத்த அடி விழுந்தது ஆதிஷேஷனால்.