“கேர்ஃபுல் கிருஷ். அகத்தியன் வர வாய்ப்பிருக்கு…” என சொல்லி அனுப்பி வைத்தான்.
வீட்டிற்கு அனுப்பிவிடலாம். ஆனால் எத்தனை நாள் தான் இப்படி ஒவ்வொன்றிற்கும் அவள் உள்ளே பதுங்கி கொள்வது என தோன்றியது ஷேஷாவிற்கு.
கார் வளாகத்தை கடந்து செல்லும் வரை பார்த்தபடி நின்றான் அவன். அதற்குள் பவன் வந்துவிட்டான் கையில் அலைபேசியுடன்.
“வாட்?…” என்றான் ஷேஷா.
“சி.எம் லைன்ல…” என பவன் சொல்லவும் சுழித்த புருவத்துடன் அதனை வாங்கி காதில் வைத்தான்.
“ஷேஷா, மை யங் பாய்…” என அவர் சிரித்தபடி ஆரம்பிக்க அதிலேயே அவர் கேக்க வருவதை அனுமானித்தவன்,
“சொல்லுங்க ஸார்…” என்றான்.
நலம் விசாரிப்பதை போன்ற குரலும் இல்லை. எந்த மேல் பூச்சும் இல்லை. சாதாரணமாகவே இருந்தது.
எத்தனையோ முறை அவனின் செல்வாக்கை கொண்டு தங்களது கட்சியில் இணையுமாறு கேட்டிருந்தவர் இந்த முதலமைச்சர்.
செய்யும் சேவையை பதவியில் இருந்துகொண்டு செய்தால் கட்சிக்கும் பலன் அல்லவா என ஷேஷாவை ஆழம் பார்க்க அலட்டாமல் மறுத்துவிட்டான்.
“என் வேலையை எங்க இருந்து செய்யனும்னு நான் முடிவு பண்ணிக்கறேன். உங்க பதவில என்ன செய்யனும்னு நீங்க முடிவு பண்ணுங்க. என்னை அதுக்குள்ளே அழைக்க வேண்டாம்…” என்று அழுத்தமாய் பதில் கொடுத்த பின் அவனிடம் இதை பற்றிய பேச்சை எடுக்க முடியவில்லை.
ஆளும் கட்சி. இப்போது தீயாய் பரவிக்கொண்டிருக்கும் செய்தியோ தங்கள் கட்சியின் கூட்டணி கட்சி அமைச்சர் பற்றி. வரவிருக்கும் தேர்தலிலும் கூட்டணியே.
இது இன்னுமே வளர்ந்தால் கட்சிக்கும் சேர்த்தே தான் ஆபத்து. கூட்டணி கட்சியில் இதுவொரு பிரச்சனை.
இப்போது அதற்காகவே அவர் அவனுக்கு அழைத்திருக்க எடுத்தவன் வழக்கம் போலவே பேச உடைத்தே பேசிவிட நினைத்தார்.
“இப்ப தான் நியூஸ்ல பார்த்தேன் ஷேஷா…”
“ஓஹ், இன்னைக்கு நடக்கற கேம்ப் பத்தி தானே?…” என ஷேஷா சொல்லவும்,
“அதுவும் தான் ஷேஷா. அதோட உங்களோட பேட்டியும் தான் பார்த்தேன்…”
“ஓஹ்…”
“அகத்தியன் பத்தி நீங்க சொல்லிருக்கறத கேட்டுட்டு…”
“நான் யாரை பத்தியும் பேசலையே…” என்றான் ஷேஷா.
இத்தனை பேச்சிலும் அவன் அத்தனை கவனமாக இருப்பது புரிந்தது முதலமைச்சருக்கு. இந்தளவிற்கு புத்திசாலியாக இவன் இருக்கிறானே என நினைத்தார்.
பகைத்துக்கொள்ளவும் முடியாது. அந்தளவிற்கு கட்சி நடத்துவதில் இருந்து, எலெக்ஷன் நேரம், பிரச்சாரம் என அனைத்திற்கும் அவனின் தயவு தேவை. அடக்கி வாசித்தார்.
“இல்லை ஷேஷா. நான் புரிஞ்சிக்கிட்டதை சொல்றேன்…”
“அப்போ நான் சொன்னதா நீங்க சொல்லியிருக்க கூடாது…” ஷேஷாவின் குரல் கடுமை அவருக்கு கோபத்தை தந்தாலும் பிரயோஜனமில்லை.
“மணிவாசகம் பொண்ணு கடத்தப்பட்டதா சொல்லியிருந்ததை பத்தி தான் பேச வந்தேன்…”
“நீங்க இன்னொருதடவை அந்த மீட்டை பார்த்துட்டு வந்தா பெட்டர். நான் அப்படியும் சொல்லலை…” என்றான் ஷேஷா.
“ஆனா அந்த பேட்டில அப்படி தானே பொருள் வருது…”
“சோ?…”
“நாங்க அவரோட கூட்டணி வச்சிருக்கோம் ஷேஷா. இப்போ எலெக்ஷன் வேற வருது. இந்த சமயத்துல இந்த மாதிரியான ரூமர்ஸ் கிளம்பினா அது கட்சிக்கும் பாதிப்பு. மணிவாசகம் மேல மக்களோட அபிமானம் என்னன்னு உங்களுக்கு தெரியாததா?…”
“ஆவுடையப்பன், மணிவாசகம் இவங்களோட நற்பெயர் தான் அந்த கட்சியோட நீங்க கூட்டணி வச்சதுக்கு காரணம். எனக்கு இதுவும் தெரியும்…”
“ஆமா ஷேஷா. ஆனா இப்போ அந்த கட்சி சம்பந்தமான ஆள் அகத்தியன். அகத்தியன் யாருன்னும் எல்லாருக்கும் தெரியும். இப்போ ரெண்டு கட்சியும் சேர்ந்திருக்குதுன்னும் தெரியும். இப்போ போய் அவரை பத்தியும், அவங்க குடும்பத்தை பத்தியும் இப்படி ஒரு களங்கம் வந்தா?…”
“வாட்?…” என்றான் ஷேஷா கடுமையாக.
“என் வேலை என்னன்னு எனக்கு தெரியும். இந்த எலெக்ஷனுக்கான ஃபண்ட் இன்னும் ஒன் வீக்ல வரும்…” என சொல்லிவிட்டு போனை அவன் கட் செய்துவிட தலைவலியாக போனது முதலமைச்சருக்கு.
அகத்தியனுக்கு உடனே அழைத்தார். அகத்தியனும் அப்போது தான் கட்சி சார்பாக தலைமை தாங்க ஒரு விழாவிற்கு சென்றிருந்தான்.
அங்கிருந்து விடைபெற்று கிளம்பும் நேரம் அகத்தியனுக்கு முதலமைச்சரிடம் இருந்து போன்.
“என்னையா செஞ்சிட்டு வந்திருக்க நீ? அறிவிருக்கா? யாரை கேட்டு அந்த முகாமுக்கு போன?…” என்று சகட்டுமேனிக்கு திட்ட அகத்தியனுக்கு அதிர்ச்சியானது.
இந்த இடத்தில் மணிவாசகமோ, ஆவுடையப்பனோ இருந்திருந்தால் ஒற்றை வார்த்தைக்கு ‘இந்த பதவியே வேண்டாம்’ என அத்தனையையும் தூக்கி வீசி இருந்திருப்பார்கள்.
அகத்தியனுக்கு அந்த தன்மானம், ரோஷம் இப்படி எதுவும் இல்லை. அதனால் கேட்டுக்கொண்டு மீண்டும் அசட்டு சிரிப்புடன்,
“எல்லாம் நம்ம கட்சிக்காக தான் தலைவரே. அடுத்த அஞ்சு வருஷத்துக்கும் நம்ம ஆட்சி தான். இன்னைக்கு அழையா விருந்தாளியா அந்த முகாமுக்கு போனதால நம்ம கட்சிக்கு எத்தனை நல்ல பேர்…”
“நான் என்ன சொல்ல? அதான் ஊரே பேசுதே. முதல்ல நியூசை பாருய்யா. உன் மச்சான் மகளை நீ தான் கடத்தினதா பேசிக்கறாங்க…” என சொல்லவும்,
“யாருக்கு யார் மக?…” என அகத்தியன் கொந்தளிக்க,
“அப்ப நீ தான் செஞ்சியா? அந்த பொண்ணை அஞ்சு வருஷம் அடைச்சு வச்சிருந்தியா?…” என்றார்.
“ஐயோ இல்லை தலைவரே. எனக்கென்ன தலையெழுத்தா அவளை அடைச்சு வைக்கனும்னு…”
அகத்தியன் சொல்லும் பொழுதே கை நழுவி போனவள் அன்றே தன் கைவசத்தில் அகப்பட்டு இருந்திருந்தால் என நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“முதல்ல செய்தியை பாருய்யா. நீ மட்டும் எதாச்சும் செஞ்சு அந்த பிரச்சனை பெருசாச்சுன்னா…” என்றவர் போனை வைத்துவிட்டார்.
அவருக்கும் அகத்தியனின் சப்போர்ட் தேவைப்பட்டது. மணிவாசகத்தின் பெயரை கொண்டே மெஜாரிட்டி காண்பித்து ஆட்சியை அமைத்துவிட்டார்கள் சென்ற முறை.
மணிவாசகத்தின் பேரில் அவருக்கென்ற மக்களின் ஓட்டு கணிசமானது. அந்த பெயரே போதும் மக்களின் அபிமானத்தை பெற.
இப்போது அதற்கு பங்கம் விளைவிப்பதை போன்றொரு செயலை அகத்தியன் செய்திருந்தால் தனது கட்சிக்கும், அது இப்போது இருக்கும் சூழ்நிலையில் பெயர் கெடும்.
நிச்சயம் ஷேஷாவும் பின்வாங்க போவதில்லை என தெரிந்திருந்தது. காரணமின்றி இத்தகைய வார்த்தைகளை விடுபவன் இல்லையே அவன். அகத்தியன் இதை சமாளிக்கட்டும் என நினைத்தார் முதலமைச்சர்.