“என்ன சந்தேகமா?…” என்றவனுக்கு மிதமான புன்னகை உதட்டில்.
“சந்தேகமே இல்லை. இதோட மொத்த பிளானும் நீங்க. இல்லையா? இத்தனை நாள் இல்லாம இந்த ஒன் வீக்ல இதை செஞ்சிருக்கீங்க. முதல்லையே தடுத்திருந்திருக்கலாமே ஷேஷா?…”
ஷக்தியின் குரலில் அப்பட்டமான ஆதங்கம் நிரம்பி இருந்தது. அவனுக்கும் அது புரிந்தது.
“அப்போ எனக்கு அகத்தியன் யாரோ ஷக்தி. அதோட இது என்னோட வேலை இல்லை. இதுக்குன்னு சம்பளம் வாங்கிட்டு சும்மா இருக்கறவங்களுக்கு வேலை பார்க்க நான் இல்லை. எனக்கு என்னோட வேலையை சரியா செய்தா போதும்…”
“ஆனா இப்போ ஏன்?…”
“இப்போவும் இது என்னோட வேலை தான். ஷக்தியோடது என்னோடதும் தானே? நான் செய்வேன். தெரியாம வேற எதுக்கோ தொட்டிருந்தா வார்னிங் உண்டு. ஆனா சில விஷயங்களுக்கு மன்னிப்பு கூட இல்லை…” ஷேஷாவின் முகம் இறுகிவிட்டது அந்த நொடி.
“இது எப்போ உங்களுக்கு கிடைச்சது? இந்த வீடியோல அகத்தியனும் இருக்கான்றப்போ இது முன்னாடியே எடுத்ததா?…” என்றவள் அதில் தெரிந்த நாட்குறிப்பை கவனித்தாள்.
விழிகள் இன்னும் விரிந்தது. அது மும்பையில் ஷேஷாவின் வீட்டில் தான் இருந்த நாட்கள். திருமணம் என முடிவெடுத்த பின்னான நாட்களில் ஒருநாள்.
“ஷக்தி, இது அவசியப்படும்னு தான் எடுத்து வச்சிருந்தேன்…” என சொல்லவும் தன்னை நிதானத்திற்கு கொண்டுவரவே சில நொடிகள் பிடித்தது.
“இன்னுமா புரியலை? தேங்க்ஸ் சொல்லி இந்த விஷயத்தை அவங்களே ஹேண்டில் பண்ணிக்கறோம்னு மறைமுகமா சொல்ல…”
“வாட்?…”
“அவங்களுக்கு அமைச்சரை எதிர்த்து இதை வழக்கா பதிவு பண்ண யோசிப்பாங்க. ஆனா அதுக்கும் வேலை இல்லாம சரண்டர் ஆகியிருக்கும் அந்த ஆட்கள் அவங்க வாக்குமூலத்துல இருந்து மாற போறதில்லை…”
“அது எப்படி உங்களுக்கு தெரியும் ஷேஷா?…”
“தெரியும்…” என மர்ம புன்னகை புரிந்தான் அவன்.
சொல்லியவன் உணவு மேஜையில் வந்து அமர்ந்துகொள்ள ஷக்தியும் பெயருக்கு சாப்பிட்டு முடிக்க முகம் முழுவதும் பரபரப்பு.
கமிஷனர் ஆபீஸ் முன்பு வந்து நிற்கவும் கிருஷ், ஓட்டுனர் இருவரும் இறங்கிவிட்டார்கள்.
“இங்க நிறைய கேள்விகள் வரும் ஷக்தி. ஸ்ட்ராங்கா பதில் சொல்லு. எதுக்கும் பயப்படாத. அதோட பேக்டரி பத்தி எந்த கவலையும் வேண்டாம். ஓகே…” என ஷேஷா சொல்ல,
“கூல்…” என்றாள் ஷக்தி.
ஷக்தி அவனை போல சொல்லியதில் முகம் ஒளிர ஒரு புன்னகை ஷேஷாவின் முகத்தில்.
கமிஷனர் ஆபீஸில் கார் நின்றதும் கதவை திறந்துகொண்டு ஷேஷா இறங்கவும் ஷக்தியும் உடன் வர ஏற்கனவே இந்த விஷயம் காட்டுத்தீயாய் பரவியிருக்க பத்திரிக்கையாளர்கள் மொத்தமும் அங்கே தான் சூழ்ந்திருந்தார்கள்.
ஷேஷாவின் எதிர்பார்ப்பு நிறைவேறி இருந்தது. பிரஸ்மீட் ஏற்பாடு செய்திருந்த வடிவழகி இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை.
அதுவும் ஷக்தியிடம் ஒப்படைக்கப்பட்ட தொழிற்சாலையில் இப்படி ஒரு நிகழ்வு துளியும் எதிர்பாராதது.
“பண்ணட்டுமே? நாம தான் எதுவும் செய்யலையே? அதுவும் அவங்க கையில இருக்கும் போது தான இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குது. யாரோ அதை பயன்படுத்தினதுக்கு நம்ம எப்படி பொறுப்பாக முடியும்?…” என்றான் அடக்கத்துடன் ஆனால் அலட்சியமாக.
வடிவழகியால் அப்படி அலட்சியமாக கடக்க முடியவில்லை. எங்கோ கண்ணுக்கு தெரியாத நூல் ஒன்று எங்கிருந்தோ ஆரம்பித்து எதற்கோ முடிச்சு போடுவதாக தோன்றியது.
எத்தனை யோசித்தும் அத்தனையும் சிக்கலான நூல்கண்டாக தொக்கி துண்டு துண்டாய் நின்றது.
முதல்நாள் மாலை செய்தியை மறுப்பு தெரிவிக்க காலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தால் இப்படி அதற்கும் வாய்ப்பில்லாது அடுத்த தலைவலி.
“மாமாவை வர சொல்லு எழில்…” என்று உள்ளே சென்றுவிட்டார் வடிவழகி.
அகத்தியனிடம் பேசிவிட்டு அவரை வீட்டிற்கு அழைத்த எழில் என்ன நடந்துவிட போகிறது என அசட்டையாக இருந்தான்.
அதே நேரம் இது ஷக்தி, ஷேஷாவை பழி தீர்க்க அகத்தியன் செய்திருக்கும் ஏற்பாடோ என்றும் நினைத்தான்.
அவனின் பார்வை நேரலையில் ஷேஷா கமிஷனர் அலுவலகம் முன் வந்ததில் நின்றது.
என்ன பேச போகிறான் என கவனமாக பார்த்துக்கொண்டே இருக்க ஷக்தியும் அங்கே வந்தது அவனை சித்திக்க வைத்தது.
“இவளுக்கு இங்கே என்ன வேலை?…” என சொல்லிக்கொண்டவன் இன்னும் பெரிதாய் வேறு இருக்கும் என எண்ணவில்லை.
ஷேஷா ஷக்தியுடன் உள்ளே அலுவலகத்திற்குள் தனது செக்யூரிட்டி காட்ஸ் மூலமாக பாதுகாப்புடன் சென்றான். செல்லும் முன் அவனிடம் கேள்வி எழுப்பியவர்களிடம்,
“என் வேலையை முடிச்சுட்டு வந்து உங்க கேள்விகளுக்கு பதில் சொல்றேன்…” என்று சொல்லியே செல்ல அங்கிருந்தவர்கள் அவனின் அணுகுமுறையில் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
உள்ளே சென்றவன் கமிஷனரை பார்க்க அவர் ஷேஷாவை எதிர்பார்க்கவில்லை.
முதலில் ஷேஷா புகார் அளித்த பொழுது ஏதேனும் திருட்டு, இல்லை வேறு ஏதோ ஒன்று என்று தான் நினைத்திருந்தார்.
அங்கே சென்ற பின்பு அந்த இருவரையும் பிடித்து, விசாரிக்கவும் தான் அங்கிருந்த அன்டர்க்ரவுன்ட் இடமும், அங்கே இருந்த சிலையும், அவர்கள் சொல்லிய பதிலும் அவரை புரட்டி போட்டது.
பாரம்பரிய கோவில்களில் சிலைகள் மாற்றப்பட்டு போலி சிலையை வைத்துவிட்டு ஒரிஜினல் சிலையை நாடு கடத்துவது தான் அவர்களின் வேலை என அறிந்ததும் நடுங்கிப்போயினர்.
அத்தனைபேரின் முன்னிலையிலும் இதனை சொல்லி வைக்க அப்போதுதான் நிலைமையின் விபரீதம் உணர்ந்தார்.
ஏற்கனவே மேலிடத்தில் இருந்து மாற்றி மாற்றி அழைப்புகள் வந்துகொண்டே இருக்க, போதாதவைக்கு பிடிபட்ட இருவரும் சொல்லி வைத்ததை போல ஒரே பதிலை தான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.
“வஜ்ரம் ஸார் சொன்னதை தான் ஸார் நாங்க செஞ்சோம். அடுத்த வாரம் அந்த சிலையை அனுப்பனுமாம். அதுக்குள்ளே பேக்டரி கை மாறிடுச்சு. உள்ள நுழைய முடியலை. அதான் தூக்கிடலாம்ன்னு ப்ளான் போட்டு இறங்கினோம்…” என்றனர் இருவருமே.
வஜ்ரம். எழில் அந்த தொழிற்சாலையை நிர்வகித்துக்கொண்டிருந்த நேரம் அதனின் மொத்த கட்டுப்பாட்டையும் தன் கையில் வைத்திருந்த ஆள் வஜ்ரவேல்.
அவனின் பொறுப்பில் தான் எழில் நம்பிக்கையுடன் தொழிற்சாலையை அவன் வசம் ஒப்படைத்திருந்தான்.
இப்போது வஜ்ரவேலும் தலைமறைவாகி இருக்க அவனை பிடித்தால் தான் அடுத்த முயற்சி எடுக்க முடியும் என்பதாக நினைத்தபடி அமர்ந்திருந்தார் கமிஷனர்.
அவன் யாரை கை காட்டுவானோ என்று இருந்தது. மறைமுகமாக ஓரிரு வதந்திகள் அவ்வப்போது வந்தது தான்.
இப்போது இப்படி சிக்கி, அதுவும் ஷேஷாவின் மூலம் தெரிய வந்திருக்க இனி அவனின் தலையீட்டை தங்களால் தவிர்க்க முடியாதென புரிந்துபோனது.
“டேய் பொய் சொன்னீங்க, ஜென்மத்துக்கும் வெளில வர முடியாது பார்த்துக்கோங்க…” என மிரட்ட,
“நெசமா தான் ஸார் சொல்லுறோம். மாட்டிக்கிட்ட பின்னால நாங்க பொய் சொல்லி என்ன ஆக போகுது? தப்பிக்கத்தான ஸார் பாப்போம்? அவர் தான் சொன்னார். வேணும்னா எங்க போனை எடுத்து பாருங்க. அவர் நம்பர் தான்…” என ஒருவன் அடித்து பேச,
“அவர் தான் போன் போட்டு, பேக்டரி புது ஆளுங்க வந்துட்டாங்க. உடனே சிலையை இடம் மாத்த முடியாது. நேரம் பார்த்து நவுசா தூக்கிருங்கன்னு சொன்னாரு…” என்றான் இன்னொருவன்.
எத்தனை முறை கேட்டாலும் பிசிறின்றி அவர்கள் சொல்ல அடித்தும் பார்த்தாகிற்று. எந்த பிரயோஜனமும் இல்லை.
அவருக்கு இது மினிஸ்டர் வரை தொடரும் என அனுபவ அறிவு சொல்லிக்கொண்டு இருந்தது.
எலெக்ஷன் நேரம் இப்போது இப்படி ஒரு சங்கடம் வந்திருக்க முதலமைச்சர் வேறு பிரஷரை கூட்டினார். கட்சிக்கு எந்த களங்கமும் வந்துவிட கூடாது என.
விஷயம் தெரிந்த மீடியாக்களும் இதனை பெரிது பண்ணி கொண்டு இருந்தனர். முதல்நாள் ஷேஷாவின் பேச்சு, இன்று அவன் சம்பந்தப்பட்ட இடத்தில் இப்படி ஒரு நிகழ்வு. ஹாட் நியூஸ் ஒரு இடம் விடாமல் பரவிக்கொண்டிருந்தது.
இப்போது ஷேஷாவும் வந்து நிற்க எல்லாம் சேர்த்து கழுத்தை பிடிப்பதை போல இருந்தது.
ஷேஷா வீட்டிற்கு ஏற்கனவே சென்று வந்த ஏசி ஷக்தி புகார் அளித்திருப்பதாக சொல்லியிருக்க பொறுமையாக விசாரிக்கலாம் என சொல்லி தள்ளி வைத்து இருந்தார்.
இப்போது அவனே நேரில் வந்து நிற்க அதுவும் வெளியே மொத்த மீடியாவும் சூழ்ந்திருக்க நொந்துகொண்டார்.
“வாங்க ஷேஷா…” என வந்தவனை வரவேற்றவர்,
“உட்காருங்க. நீயும் உட்காரும்மா…” என்றார்.
“தேங்க் யூ…” என ஷேஷா அமரவும் அவனருகே இருந்த ஷக்தியை பார்த்து,
“நானும் நேத்து ந்யூஸ் பார்த்தேன். இந்த அஞ்சு வருஷமா எங்கம்மா இருந்த? அதுவும் உன்னோட அப்பா, அம்மாவோட இறுதி சடங்குக்கு கூட இல்லாம?…” என்றார் அவளிடம் பரிதாபப்படுவதை போல.
ஷேஷா சொல்லவும் சர்வமும் ஒடுங்கியது அவருக்கு. கத்தி மேல் நடப்பதை போன்ற ஒரு நிலை.
“இதுக்கு நீங்க இத்தனை தூரம் வரனும்னு இல்லை ஷேஷா…”
“ஆனா பாதிக்கப்பட்டவங்க நேர்ல வந்தா தானே நல்லது. எங்களை விசாரிக்கிறதா இருந்தாலும் நாங்க இங்க வரனுமே? அந்த பேப்பர் இல்லைன்னா நாங்க இங்கயே இன்னொரு கம்ப்ளைண்ட் குடுக்கறோம்…”
“இல்லை ஷேஷா, கம்ப்ளைண்ட் உள்ள தான் இருக்கு. வெய்ட் பண்ணுங்க. எஃப்.ஐ.ஆர் காப்பியோட வந்திடறேன்…” என எழுந்து சென்றவர் உடனடியாக அழைத்தது முதலமைச்சருக்கு தான்.
மீண்டும் அவர் வரும் பொழுது எஃப்.ஐ.ஆர் காப்பியை கையோடு கொண்டு வந்திருந்தார்.
“நாங்க கண்டிப்பா இது சம்பந்தமா விசாரிக்கிறோம் ஷேஷா…” எனவும்,
“ஓகே…” ஷக்தியுடன் வெளியேறினான் ஷேஷா.
பத்திரிக்கையாளர்களை நெருங்கும் முன் அகத்தியனிடமிருந்து அழைப்பு ஷேஷாவிற்கு.
“சொல்லுங்க அகத்தியன்…” ஷேஷா சாதாரணமாக பேச அகத்தியனின் ரத்தக்கொதிப்பு இன்னும் சூடாகியது.
“ஷேஷா, நீ எங்க கை வச்சிருக்க தெரியுமா?…” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல்,
“பணம் கெட்டதுக்கு மட்டுமில்லை, நல்லதுக்கும் பயன்படும் அகத்தியன்…” என சொல்லிவிட்டு ஷேஷா அந்த அழைப்பை துண்டிக்க அகத்தியனின் பற்கள் நறநறத்தன.
“ஷேஷா…” என்ற ஷக்தியிடம்,
“கூல். வா போகலாம்…” புன்முறுவல் கொண்டு நடந்தான்.
அகத்தியன் இப்போது இத்துடன் நிற்க மாட்டான். இது தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை தான்.
ஆனால் அத்தனை சுலபமாக எதையும் அகத்தியன் அடைந்துவிட கூடாதே? அது தண்டனையாகவே இருந்தாலும்.
தலைக்கு மேல் தொங்கும் கத்தி எப்போது மூளையை துளைத்து கிழிக்குமோ என பயந்து தவித்து, துடிக்க வேண்டும்.
தப்பிக்க வழியை தேடி தோற்று அத்தனையையும் இழந்து கீழே விழ வேண்டும் என நினைத்தான். அடுத்த காயை நகற்றிவிட்டான்.
வஜ்ரவேல் மீடியா முன்பு ஆதாரங்களுடன் சரணடைந்தான். ஆதாரங்கள் மட்டுமல்ல இன்னும் சில ஆக்கிரமிப்புகளின் அடையாளங்களும்.