“எழில் அமைதியா இரு. இப்போ ஷக்தி சொன்னதை நினைச்சு இத்தனை கோவப்படாத. இது அதுக்கான நேரம் இல்லை…”
“கோவப்படாதன்னு நீ சொல்லாதடா. இளா உனக்கு என் பீலிங்க்ஸ் புரியலையா? ஆமா உனக்கு புரியாது….” என சொல்லும் பொழுதே,
“அப்பா…” என வந்தாள் எழிலின் மகள். பதிமூன்று வயதான அபிநயா.
தன்னுடைய கோப முகத்தை முயன்று கட்டுக்குள் கொண்டுவந்தவன் மகளை சிரித்த முகமாய் பார்த்தான். மனதிற்கு இதை எல்லாம் மகள் கேட்டிருப்பாளோ என அச்சம்.
“என்னடாம்மா?…” என வாஞ்சையுடன் கேட்க அவள் உடைந்திருந்த டிவியை பார்த்துவிட்டு தந்தையை பார்த்தாள்.
“ஒண்ணுமில்லைப்பா. நான் ரூம்க்கு போறேன்…” என சொல்லியவள் தந்தையை விட்டு செல்ல,
“பாப்பா, அப்பா கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேன். ஆபீஸ் டென்ஷன்டா…” என்றான் மகளிடம்.
“ஓகேப்பா, டேக் கேர்…” என சொல்லி செல்ல மகள் உள்ளே செல்லும் வரை பார்த்திருந்தவன்,
“அபி இங்க வர வரைக்கும் நீ இங்க என்ன பன்ற ராஜி? முதல்ல போய் பொண்ணை பாரு. என்னை எனக்கு பார்த்துக்க தெரியும்…” என்று அடிக்குரலில் கத்தினான் எழில்.
“இல்லைங்க நீங்க நியூஸ் பார்த்துட்டு…”
“பார்த்துட்டு என்ன செத்தா போய்ட்டேன்? இல்லை இவ பழிவாங்க இந்த கேஸை என் பக்கம் திருப்ப வேலை செய்யறதை பார்த்துட்டு சந்தோஷமா இருக்கனுமா?…” என்றான் ஆத்திரத்துடன்.
“அக்கா, நீங்க உள்ள போங்க. நான் பார்த்துக்கறேன்…” என இளவேந்தன் தன் அக்காவை அனுப்பிவிட்டான்.
கன்றிய முகத்துடன் நின்றிருந்தவள் இளவேந்தன் சொல்லவும் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
இத்தனையையும் பார்த்துவிட்டு வடிவழகி அமைதியாக அமர்ந்திருந்தார். அவரின் மனதில் பயம் அதிகமாகி இருந்தது.
கணவரின் இறப்பில் மர்மம் என்றதிலே சுழன்றதோடு, அதை தாண்டி இந்த சிலை கடத்தல் விஷயம் நிச்சயம் எழிலை பாதிக்கும் என நினைத்தார்.
“இளா, கமிஷனருக்கு போன் பண்ணு…” என சொல்லவும்,
“அம்மா…” என எழில் பேச வர,
“கொஞ்ச நேரம் கத்தாம இருக்கியா?…” என்றார் மகனிடம்.
எழிலின் முகம் சிறுத்துவிட்டது. நிறைய விஷயங்களில் அவர் அணுகுவது இளவேந்தனை தான்.
அதில் முன்பெல்லாம் பெரிதாய் பிரச்சனை இல்லை. மனதிற்குள் குத்தினாலும் காட்டிக்கொண்டதில்லை.
ஆனால் இன்று வலித்தது. தன்னை என்ன நினைக்கிறார்கள் இவர்கள் என்று தோன்றியது.
‘தந்தையின் இழப்பிற்கு முன்னும், பின்னும் தொழிலை திறன்பட நடத்தியவன் தான். இன்று இவர்களுக்கு ஒன்றும் அறியாதவன் ஆகிவிட்டேனா?’ என மனது குமுறியது.
எழில் இப்படி தன்னை பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்க அதற்குள் இளாவின் மூலம் அகத்தியனிடம் பேச முயற்சிகள் எடுத்துக்கொண்டு இருந்தார் வடிவழகி.
கணவர் இறப்பு விஷயம் அதை எப்போது வேண்டுமானாலும் விசாரித்து கொள்ளலாம். ஷக்தி சொல்லிவிட்டால் அது உண்மை ஆகிவிடுமா?
ஆனால் இது அப்படி அல்ல என நினைத்தார். மகனை சிக்க வைக்கும் வலை என எண்ணினார்.
“இன்னைக்குள்ள முன்ஜாமீன் கிடைக்கனும் இளா. நம்ம லாயர்ட்ட பேசி உடனே அதுக்கு ஏற்பாடு பண்ண சொல்லு…” என்றார்.
“அத்தை கமிஷனர் லைன்ல வந்துட்டார்…” தனது செல்போனை வடிவழகியிடம் தந்தான் இளவேந்தன்.
அதை வாங்கி அவர் அழைப்பை ஏற்கும் முன் எழில் அவர்களை பார்த்திருந்தவன் அருகே வந்தான்.
“என்னடா இளா?…” அப்போது தான் என்ன நடக்கிறது என கவனத்திற்கே வந்தான் எழில்.
அவனால் வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. என்ன நடக்குமோ என்பதை கூட நினைக்க தோன்றாமல் மூளை மரத்த உணர்வு.
“எழில், நீ கொஞ்சம் நேரம் அமைதியா இருடா. ப்ளீஸ். ரிலாக்ஸா இரேன். நாங்க பார்த்துக்கறோம்…” என இளவேந்தன் சொல்ல,
“அப்ப நான் எதுக்குமே லாயக்கில்லைன்னு நீயும் நினைக்கிறியா?…” என இளாவின் சட்டையை பிடித்து கேட்டான் எழில்.
“எழில், அப்படியெல்லாம் இல்லை. என்ன இது?…” இளா அவனை சமாதானம் செய்ய பார்க்க,
“இளா, இவனை உள்ள போக சொல்லு. என் கண் முன்னாடி நிக்க வேண்டாம். இவனும் கோபப்பட்டு என்னையும் எதையும் யோசிக்க விடாம பன்றான்…” வடிவழகி அதட்டி குரல் உயர்த்தி சொல்லவும் நடுங்கி போனான் எழில்.
“எழில்…” ஆறுதலாய் வந்த இளவேந்தன் கையை தட்டிவிட்டவன் வேகமாய் வீட்டிற்குள்ளேயே இருக்கும் பார் அறைக்குள் சென்று மறைந்தான்.
“எவ்வளவு தைரியம்? என் முன்னாடியே அந்த ரூம்க்கு போறான் பாரு?…” என வடிவழகி கொதிக்க,
“அத்தை இப்போதைக்கு அவனை விடுங்க. நாம மத்த வேலையை பார்ப்போம்…” என்றவன் மீண்டும் கமிஷனருக்கு அழைக்க அவரும் எடுத்துவிட்டார்.
“உங்களுக்கு நானே கால் பண்ணனும்னு நினைச்சேன் மேடம்…” என்றார் அவர்.
“அதனால என்ன ஸார், இருக்கட்டும்…” என்ற வடிவழகி,
“ஷக்தி ஷேஷாவோட அங்க வந்ததை லைவ் நியூஸ்ல பார்த்தேன்…” என சொல்ல கமிஷ்னருக்கும் புரிந்தது அவர் எதை கேட்க வருகிறார் என்று.
“மேடம், இது விஷயமா நாங்களும் உங்களை பார்க்க வரலாம்ன்னு தான்…”
“எழில் அரஸ்ட் ஆகற மாதிரி இருக்குமா?…” வடிவழகி நேரடியாக கேட்டார்.
கமிஷனர் பக்கம் மௌனம். அவர் எப்படி ஆமாம் என சொல்வார்? அவரால் சொல்ல முடியவில்லை. அதுவே உணர்த்திவிட்டது அதுதான் உண்மை என.
“புரியுது. நீங்க எனக்கு ஒரு விஷயம் பண்ணனுமே?…”
“கண்டிப்பா மேடம். நான் கடமைப்பட்டிருக்கேன்…”
“நீங்க இன்னும் விசாரணை முடியலைன்னு இழுத்தடிக்கனும். இன்னும் ஒரு நாள் மட்டும். அதுக்குள்ள இன்னைக்கோ, இல்லை நாளைக்கோ நாங்க முன்ஜாமீன் வாங்கிருவோம். அதுக்கப்பறம் என்ன பண்ணலாம்ன்னு நான் பார்த்துக்கறேன்…” என்றவர்,
“உங்களுக்கும் தெரியும் ஷக்திக்கு எங்க குடும்பத்து மேல எத்தனை பகைன்னு. அவ எங்க எல்லாரையும் இதுல சிக்க வைக்கனும்னு பார்க்கறா. இத்தனை நாள் இல்லாம இப்போ எப்படி அங்க சிலை பதுக்கி வச்சிருந்திருக்காங்க? யோசிக்கனும்…”
இன்னுமே வடிவழகி இது ஷேஷாவின் வேலை, ஷக்திக்காக என நினைத்தார். அகத்தியன் அரசியலில் சில தில்லுமுல்லு வேலைகள் செய்கிறார் என தெரியும். ஆனால் இத்தனை தூரம் சென்றிருப்பார் என வடிவழகி நினைக்கவில்லை.
“அதுக்காக தான் சொல்றேன். முன்ஜாமீன் எடுக்கற வரை, உங்க என்கொயரியை தள்ளி வைக்கனும்…” என,
“அவ்வளவு தானே? செஞ்சிடலாம் மேடம்…” என சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார்.
“இளா, உன் அப்பாவுக்கு போனை போடு. எங்க இருக்கார்?…”
“எனக்கும் தெரியலை அத்தை. எப்போ வீட்டுல இருந்து கிளம்பி போனார்னும் தெரியலை. இன்னும் போன் கூட செய்யலை…” என்றவன் தங்கள் வக்கீலுக்கு அழைத்தான்.
அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் அகத்தியன் அழைத்துவிட்டான் இளவேந்தனை.
“அப்பா எங்க இருக்கீங்க? இங்க எவ்வளவு பெரிய பிரச்சனை போய்ட்டிருக்கு?…” என ஆரம்பிக்க,
இனி தன்னால் எல்லாம் நினைத்தபடி நடக்கும் என நினைத்தார். இப்போதைக்கு இந்த வழக்கில் இருந்து வெளிவர வேண்டும். அது ஒன்றே குறிக்கோள்.
“வக்கீல்ட்ட முன்ஜாமீன் கேட்டு பேசினதா சொன்னார்…”
“உன்னை ஏன் எங்களால தொடர்புகொள்ள முடியலை? சொல்லிட்டு போயிருக்கனுமா இல்லையா?…”
“நான் ஒரு இடத்துல இருக்கேன்க்கா. நீங்க கவலைப்படாதீங்க. முதலமைச்சரே நம்ம பக்கம். முன் ஜாமீனுக்கான ஏற்பாடுகள் போய்ட்டிருக்கு. ஆனா…”
“சொல்லு…”
“முதல்ல இதுல இருந்து அந்த குட்டியை ஆஃப் பண்ணனும்…”
“என்ன சொல்ற?…”
“அவக்கிட்ட நீங்க தான் பேசனும். இப்படி கேஸ் குடுத்தா நம்ம மேல தப்பே இல்லைன்னாலும் அரஸ்ட் பண்ணி தான் விசாரிப்பாங்க. அது நம்ம குடும்பத்துக்கு தானே அவமானம்…”