கமிஷனர் ஆபீஸ் வாசலில் ஷேஷா, ஷக்திக்காக காத்திருந்த மீடியா மக்கள் அவர்கள் இருவரும் வந்ததுமே மீண்டும் சூழ்ந்துகொண்டு கேள்விகளை சகட்டுமேனிக்கு வீசிக்கொண்டு இருந்தார்கள்.
எதற்கும் பதில் சொல்லாமல் ஷக்தியையும் ஒன்றும் சொல்லவிடாமல் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றான் ஷேஷா.
ஒருவர் மாற்றி ஒருவர் தாங்கள் கேட்கும் கேள்விகளை முடிக்கும் முன் அடுத்த கேள்வி என தெளிவில்லாமல் குரல்கள் ஒன்றோடு ஒன்று மோத அத்தனையும் உடைந்த கண்ணாடி சிதறல்களாக சிதறி போனது.
“ஸார் பதில் சொல்லுங்க ஸார்…” என அவனின் அமைதியில் பொறுமையிழந்து சத்தம் எழுப்பவும் ஆரம்பிக்க,
“ஷ், இத்தனை கூச்சல்ல நான் பதில் சொன்னாலும் உங்களுக்கு கேட்க போறதில்லை…” என்றான்.
அதுவும் அவர்கள் எழுப்பிய சத்தத்தில் சரியாக கேட்காமல் போக ஷேஷாவின் அருகில் முன்னடியில் இருந்தவர்களுக்கு ஓரளவு புரிந்தது.
“எல்லாரும் கொஞ்சநேரம் சைலண்டா இருங்கப்பா. அவர் பேசறதே கேட்கலை…” என பத்திரிக்கை நபர் ஒருவர் கை தூக்கி உரக்க சத்தம் போடவும் தான் கொஞ்சம் கொஞ்சமாக முணுமுணுப்பு அடங்கியது.
“குட், இப்போ நீங்க கேள்வி கேட்டாலும், அதுக்கு நான் பதில் சொன்னாலும் தெளிவா கேட்கும். கேளுங்க…” என்றான் ஷேஷா.
“ஸாரி ஸார். நாங்க ஒரு ஈகர்ல தான் இப்படி நடந்துக்கிட்டோம்…”
“நோ இஷூஸ்…” என்ற ஷேஷா ஷக்தியை பார்த்து தலையசைத்தான்.
“உங்க பேக்டரில நடந்திருக்கிற இந்த சம்பவத்தை பத்தி என்ன நினைக்கறீங்க?…” ஷேஷா, ஷக்தி இருவரிடமும் கேட்க,
“இப்போ தான் டிபார்ட்மென்ட்ல அதுக்கான என்கொயரி போய்ட்டிருக்குது. இன்னும் இந்த கேஸ் பிகினிங் ஸ்டேஜ் தான்…” ஷேஷா சொல்லவும்,
“மேடம் நீங்க சொல்லுங்க. இந்த பேக்டரி லாஸ்ட் வீக் தான் உங்களுக்கு திருப்பி கிடைச்சதுன்னு ஷேஷா ஸார் நேத்து மீடியால சொன்னார். ஒருவேளை நீங்க திருப்பி வாங்கினதால வந்த காழ்ப்புணர்ச்சி கூட காரணமா இருக்குமோ?…”
“தெரியலை. கம்ப்ளைண்ட் குடுத்திருக்கோம். விசாரிக்க வேண்டியது டிப்பார்ட்மென்ட் வேலை. எந்த கன்க்லூஷனுக்கும் என்னால வர முடியலை…” ஷக்தி சொல்லிய பதிலில்,
“இது உங்க அப்பா உங்களுக்கு கொடுத்த சொத்து. அதை அஞ்சு வருஷம் கழிச்சு மீட்டிருக்கேன்னு நேத்து சொன்னாங்க. அப்போ இந்த சொத்தை நழுவ விட்டதுக்காகவும், உங்களையும் பழிவாங்கும் நடவடிக்கையாவும் இருக்கும்னு உங்களுக்கு தோணலையா?…”
“ஏன், உங்களுக்கு தோணுதா?…” என்றாள் ஷக்தி.
“மேடம் நாங்க எங்களோட யூகத்தை தான் கேட்டோம். நீங்க எங்களையே கேட்கறீங்களே?…” என அந்த நிருபர் சிரிக்க,
“எனக்கு தெரியலை. தெரியாததை இப்படி இருக்குமோன்னு நான் எப்படி சொல்ல? அதான் உங்களை கேட்டேன்…” என்றாள்.
அடுத்தடுத்த கேள்விகளுக்கும் ஷக்தியின் பதில்கள் எல்லாம் நிருபர்களையே கலங்கடித்தது.
வந்துகொண்டிருந்த கேள்விகள் எல்லாம் அப்படியே திசைமாறி மணிவாசகம், ஜெகதாம்பாள் மரணத்தில் வந்து நின்றது.
“உங்கப்பாவோட இறப்பில் மர்மம் இருக்கறதா நாங்க சந்தேகப்படறோம்…” என்றதும் அதுவரை தைரியமாக பதில் சொல்லிக்கொண்டிருந்த ஷக்தி உடைய துவங்கினாள்.
கண்களில் கண்ணீர் கரைபுரண்டு நிற்க முயன்று அதனை அடக்கியது அப்படியே கேமராவில் பதிவாகியது.
“எனக்குமே அந்த சந்தேகம் இருக்கு. நிச்சயம் சந்தேகம் தான்…” என்றாள் தடதடக்கும் இதயத்துடன்.
அந்த நாளை மறக்க முடியுமா அவளால்? நடு ராத்திரியில் தூக்கி வீசப்பட்ட காரில் இருந்து ஜெகதாம்பாள் உயிருக்கு போராடும் குரலில் பேசியதும் கேட்டதுமே தானும் தனது காரில் கிளம்பியதும் ஞாபகம் வந்தது.
அங்கே அந்த நடு இரவில் தான் மட்டுமே இருக்க ஆள் அரவமற்ற சாலையில் இருந்து தாயை தூக்கி செல்ல கூட முடியாமல் போராடி அவள் அழுதுகொண்டே இழுத்து சென்று காரில் ஏற்றியதும், மருத்துவமனைக்கு வந்ததும் என மறக்கவும் முடியுமா?
ஆம்புலஸ் ஏன் வரவில்லை? அழைப்பிற்கு ஏன் பதிலளிக்கவில்லை? எப்படி தந்தையை மட்டும் தூக்கி சென்றனர். அப்போது தயை அந்த ஆம்புலன்ஸ் கவனிக்கவில்லையா? இல்லை கண்டுகொள்ளவில்லையா?
காரினுள் பலத்த காயங்களுடன் ரத்தமும் அதிகமாய் சென்றிருக்க எப்படி ஓட்டுனரும் இன்றி தாயை மட்டும் தனித்து விட்டு தந்தையை தூக்கி சென்றார்கள்.
அன்றைக்கிருந்த சூழ்நிலையில் இதை யோசிக்கவும் இல்லை. அதன் பின்னான சூழ்நிலையும் இந்தளவிற்கு அவளுக்கு சந்தேகத்தை கிளப்பவும் இல்லை.
தன்னுடைய வாழ்வாதாரமே போராட்டத்தில் இருக்க தாய், தந்தையின் நினைவுகள் மட்டுமே அவளிடத்தில்.
ஆனால் ஷேஷா சொல்லியதில் இருந்து புரட்டிப்பார்த்த நினைவுகள் சொல்லியது மொத்தமும் முகத்திலறையும் உண்மைகள்.
ஷக்தியால் இப்போதும் சொல்லமுடியாவிட்டால் வேறு எப்போது சொல்வது? அவள் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பு.
காவலர்கள் கூட அதிர்ந்து போய் பார்க்க கமிஷனர் இதனை கண்டு உடனே ஏசியை அனுப்பி வைத்தார்.
இப்படி நடக்கும் என எதிர்பார்த்தோ என்னவோ அதற்குள் ஷக்தி தனக்கு தோன்றியதை எல்லாம் சொல்லிவிட்டாள்.
“மேடம் நீங்க சொல்றதை விளக்கமா சொல்ல முடியுமா?…”
“நான் என் அம்மா போன் பண்ணினதும் தான் அந்த இடத்துக்கே போனேன். ஆக்ஸிடன்ட் நடந்ததை பத்தி வேற யாரும் எனக்கு இன்பார்ம் பண்ணலை. அதுவரைக்கும் அங்க எந்த ஆம்புலன்ஸும் வரலை. கால் பண்ணாலும் ரெஸ்பான்ஸ் இல்லை. அம்மாவை ஏத்திட்டு நானே ட்ரைவ் பண்ணிட்டு வானம் ஹாஸ்பிட்டல் வந்தேன்….”
இதனை சொல்லும் பொழுதே ஷேஷாவை திரும்பி பார்க்க அவன் பேசு என்பதை போல தலையசைத்தான்.
“ஸார் அப்போ நீங்க அங்க இருந்தீங்களா?…” என ஷேஷாவிடம் கேள்வி திரும்ப,
“நான் அந்த நேரத்தில் இந்தியாலையே இல்லை…” என்றான் ஷேஷா.
“நீங்க இருந்திருந்தா…” என்று அவனிடம் கேட்க விடாமல் ஷக்தி தன் பக்கம் திருப்பினாள் அவர்களை.
“இதை தான் செய்யனும்னு நினைக்கிறவங்க யார் இருந்தாலும் செஞ்சிருப்பாங்க. என்னுடைய சந்தேகத்தை பதிவு பண்ணனும்னு நினைச்சேன். பண்ணிட்டேன். ஆனா இனி என்னோட அப்பாவும், அம்மாவும் திரும்பி வர போறதில்லை…” என்றாள்.
“மணிவாசகம் எத்தனை முக்கியம்ன்னு நாட்டு மக்களுக்கு தெரியும் மேடம். நிச்சயம் இதுக்கு ஒரு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்…” என்றனர் நிருபர்கள்.
“இந்த சந்தேகம் இன்னைக்கு தான் வந்ததா உங்களுக்கு? அன்னைக்கே ஏன் கேட்கலை நீங்க?…” என்றதும் அத்தனை பேரும் மௌனம் சாதிக்க ஏசி வந்துவிட்டார்.
“ஸார் நீங்க கிளம்புங்க…” என ஷேஷாவிடம் சொல்ல,
“ஸார் இதுவரைக்கும் எங்களோட எந்த கேள்விக்கும் நீங்க பதில் சொல்லலை? இந்த சிலை கடத்தல் இப்போ தான் நடந்த மாதிரி சொல்லிட்டிருக்கீங்க? எத்தனை நாளா நடக்குது? இதுக்கு பின்னால யார் இருக்கா?…”
ஷேஷாவின் புன்னகையில் மனதிற்குள் இருக்கும் சஞ்சலம் கரைவதை போல இருந்தாலும் இப்போது தான் சொல்லிய விஷயத்தால் நிச்சயம் பெரிய பிரச்சனை வரும் என்று தோன்றியது.
——————————————————–
ஷக்தியின் பேச்சை பார்த்துக்கொண்டிருந்த எழில் தன் கையில் கிடைத்த அலங்காரத்திற்கு வைத்திருந்த கனத்த ப்ளவர் வாஸால் டிவியை நோக்கி வீசி எறிய அது அதிர்ந்து சுக்குநூறாய் நொறுங்கி கீழே விழுந்தது.
அந்த சத்தத்தில் உடன் இருந்த அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பினார்கள். யாராலும் எழிலை நெருங்க முடியவில்லை.
“என்ன பேச்சு பேசறா பார்த்தீங்களாம்மா? இவ அம்மா செத்ததுக்கு நாம காரணமா? இவ அம்மாவோட சேர்த்து நம்ம அப்பாவோட சாவையும் கேள்விக்குறியாக்கிட்டா…” என கொந்தளித்தான்.
“யாருக்கு யார் அப்பா? எல்லாம் அந்த மனுஷன் பண்ணின வேலை. அப்பாவாம் அப்பா. அசிங்கமா இருக்கு. இவ அப்பான்னு சொல்லும் போது…” என நிதானமிழந்து கத்தினான்.
“என்னங்க, அமைதியா இருங்க..” என்ற ராஜியின் கெஞ்சலில்,
“நீ வாயை மூடு. உனக்கு என்ன தெரியும்? இத்தனை வருஷ வேதனை. என் அப்பாவை மாதிரி ரெண்டு தார வாழ்க்கை வாழ கூடாதுன்னு வைராக்கியமா ஒழுக்கமா வாழ்ந்துட்டு இருக்கேன். உனக்கென்ன மதிப்பான, ஒழுக்கமான அப்பா. ஆனா எனக்கு அப்படியா?…” என்று எரிந்துவிழுந்தான்.
சிலை கடத்தல் பற்றி நியூஸ் வரவுமே இளவேந்தன் வந்துவிட்டான் இங்கே. அவனும் இந்த நிகழ்வை கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
திடீரென எழில் ஆக்ரோஷப்பட்டு டிவியை உடைத்ததோடு இல்லாமல் ராஜியிடம் அகத்தியனை உயர்வாய் பேச மனது நெருப்பாய் எரிந்தது.
அவன் அறிந்திருந்தானே. ஷக்தியின் விஷயத்திற்கு பின்னர் தந்தையை பற்றி அவன் அறிந்துகொண்டவன் அதிர்ந்துதான் போனான்.
எந்த மகனும் தந்தையை பற்றி அறிந்துகொள்ள கூடாத பக்கம். அசிங்கமான பக்கம். இத்தனை வருடம் எப்படி எல்லாம் தங்களை ஏமாற்றி இருக்கிறார் இவர் என எண்ணிய நாள் அது.
அதை எண்ணி அருவருப்புடன் முகம் சுளித்துக்கொண்டவன் எழிலை பரிதாபமாய் பார்த்தான்.