மணிவாசகம் ஒரு சாதாரண குடும்பத்தின் மகனாக பிறந்திருந்தாலும் அரசியல் மேல் அத்தனை தீவிர ஈடுபாடு சிறுவயதில் இருந்தே.
அவரின் தந்தையை போலவே தானும் அரசியலில் ஆர்வத்துடன் இருக்க ஆவுடையப்பனின் கட்சியில் இணைந்தவரின் உற்சாகமும், பங்களிப்பும் சிறிது சிறிதாக மணிவாசகத்தை மேலே கொண்டு வந்தது.
ஆவுடையப்பன் குடும்பத்தில் ஒருவர் என்னும் அளவில் அவர் மனதில் உயர்ந்துவிட்டார் மணிவாசகம். அது மணிவாசகத்தின் விசுவாசத்திற்கும் உழைப்பிற்குமான வெகுமானம்.
அந்த வெகுமானத்தின் பலன் ஆவுடையப்பனின் அரசியல் வாரிசு என மணிவாசகத்திற்கு தனது பெண்ணையும் தந்து வாரிசாக தனது கட்சியையும் ஒப்படைக்கும் அளவிற்கு இருந்தது.
இதை மணிவாசகமும் எதிர்பார்க்கவில்லை. ஆவுடையப்பன் குடும்பமும் எதிர்பார்க்கவில்லை.
வடிவழகியிடம் கேட்க அவர் பெரிதாய் மறுத்துவிடவில்லை. தங்களிடம் வேலை செய்பவர் என நினைத்திருக்க கணவனாக தந்தை தேர்ந்தெடுத்திருகிறார் என்றால் நிச்சயம் காரணம் இருக்கும் என எண்ணி சம்மதித்தார்.
ஆனால் அந்த வேலை செய்தவர் என்ற எண்ணம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது ஒரு ஓரத்தில்.
இதில் ஆவுடையப்பனுமே மணிவாசகம் மறுத்துவிடமாட்டார் என எண்ணி தங்கள் வீட்டினரின் சம்மதத்தை பெற்ற பின்னரே மணிவாசகம் வீட்டில் பேச இருந்தார்.
இதில் முழுமூச்சாய் மனதளவில் மறுத்தது என்னவோ அகத்தியன். ஆனால் மனதை திறந்து வெளியே சொல்லவில்லை.
ஆவுடையப்பனை பொறுத்தவரை மகன் அந்தளவிற்கு திறமைசாலியும் இல்லை. நேர்மையாக இருந்துவிடவும் அவனால் முடியாது என நினைத்தார்.
எடுப்பார் கைப்பிள்ளை. யாரின் தூண்டுதலுமே அகத்தியனை சுலபமாக வழிமாற்றிவிடும். அது கட்சிக்கும் கெட்ட பெயர் என எண்ணினார்.
கட்டி காத்த கட்சியின் பெயருக்கு களங்கம் வந்து சேர்ந்தால் தன்னுடைய இத்தனை வருட நேர்மையான அரசியல் வாழ்க்கைக்கு அர்த்தமின்றி போகும் என மகனை தனக்கு பின்னால் தன்னிடத்தில் அமர வைக்க அஞ்சினார்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி திறமை, நேர்மை, மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை என மணிவாசகத்தின் குணங்கள் தன்னை ஒத்து இருக்க மனதார அவரை ஏற்றுக்கொள்ள நினைத்தார்.
மணிவாசகம் தனது குடும்பத்திற்குள் வந்துவிட்டால் சொத்திற்கும், கட்சிக்கும் பாதுகாப்பு. மகனின் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு என நினைத்தார்.
அதன் பின்னர் தன்னுடைய குடும்பத்தை, அரசியலை மணிவாசகம் வழிநடத்துவார் என இளைப்பாற நினைத்தார்.
இதில் மணிவாசகம் என்னும் மனிதருக்கும் ஆசைகள் இருக்குமென மறந்துவிட்டிருந்தார் ஆவுடையப்பன்.
மணிவாசகம் தாய் அம்சவல்லி மட்டும் இருக்க வீடு தேடி வந்த ஆவுடையப்பன் அவரிடம் சம்பந்தமும் பேசி தட்டு மாத்திக்கொண்டிருக்க உள்ளே நுழைந்த மணிவாசகம் எதற்கோ தங்களை அழைக்க வந்திருக்கிறார் தலைவர் என்றே நினைத்தார்.
“வாங்க ஐயா, என்ன இவ்வளவு தூரம்?…” என வந்தவரின் பார்வையில் அவர் குடும்பத்துடனும், கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுடனும் வந்திருப்பது ஆச்சர்யமூட்டியது.
“எல்லாம் நல்ல விஷயம் தான் மணி. உனக்கும், என் பொண்ணுக்கும் சம்பந்தம் பேசி முடிக்கலாம்ன்னு வந்திருக்கோம் குடும்பத்தோட…”
தனது காதில் விழுந்தது சரியா என்னும் விதமாய் தலையை குலுக்கிக்கொண்டவருக்கு நம்பமுடியாத அதிசயமாய் இருந்தது.
கட்சி கட்சி என்றே சுற்றி திரிந்து இன்று ஒரு நல்ல பதவியில், அந்த தொகுதியின் மாவட்ட செயலாளராக இருந்தவருக்கு இது மிகப்பெரிய அங்கீகாரம்.
அதிலும் ஆவுடையப்பன் குடும்பத்தின் ஒரு அங்கமாக நானா? என மணிவாசகம் மனதில் நம்பிக்கையின் வாசல் திறக்க மறுத்தது.
ஆனால் கண்முன்னே நடப்பதை நம்பித்தானே ஆகவேண்டும். மணிவாசகத்திற்கு அது சந்தோஷத்தை தருகிறதா என்றெல்லாம் பிரித்து சொல்ல முடியவில்லை.
ஆவுடையப்பன் உறவில் தான் இருக்கவிருக்கிறோம் என்பதே அவருக்கு பெரும் உவகையாக இருந்தது.
மனதிற்குள் திருமணம் பற்றிய எந்த எண்ணங்களும் இல்லாது இருந்தவருக்கு இப்போதும் கூட ஆசைகள் தோன்றவில்லை.
திருமணம் என்பது வாழ்வில் ஒரு அங்கம். அவ்வளவு தான் அவரளவில் அதற்கான வரையறை.
எப்படியும் திருமணம், அது யாராக இருந்தாலும் சரி என்று இருந்தவருக்கு ஆவுடையப்பன் தேடி வந்து தன் மகளை தருவது பெரும் பெருமிதமாக எண்ணினார்.
பெரிய அளவில் திருமணமும் நடந்தேறியது. வீட்டோடு மாப்பிள்ளை என்பதை மணிவாசகம் பெரிதாக நினைக்கவில்லை. ஆவுடையப்பான் சொன்னால் சரி என்று இருந்தார்.
மணிவாசகத்தின் தாயாரையும் கூட ஆவுடையப்பன் மதிப்புடன் தான் தன் வீட்டில் நடத்தினார்.
வடிவழகி, மணிவாசகம் இருவரது வாழ்க்கையில் ஒட்டுதல் இல்லை என்றாலும் கடமைக்கு வாழ்ந்தார்கள்.
வடிவழகி பெரிதாய் மணிவாசகத்தை விரும்பவில்லை. ஆனால் தன் கணவன் என்னும் கடமை அவரிடம் பதிந்திருந்தது.
ஆவுடையப்பன் நினைத்தபடி மணிவாசகத்தை தனது அடுத்த வாரிசாக நியமித்ததோடு, அதை உலகுக்கும் பறைசாற்றினார்.
அகத்தியனுக்கு உள்ளுக்குள் பற்றி எரிந்தாலும் வெளிக்காட்டாமல் தானும் மகிழ்ந்ததாக காட்டிக்கொண்டார்.
பொறுப்பு வந்த மகிழ்ச்சியில் தங்களின் அந்தரங்க வாழ்க்கையின் வெறுமையை ஆற்றிக்கொண்டார் மணிவாசகம்.
“என்ன மணி? உன் முகமே வாட்டமா இருக்கே?…” என அவ்வப்போது ஆறுதலாய், அக்கறையாய் கேட்கும் ஆவுடையப்பனின் முகத்திற்காகவே தன்னை முயன்று சிரித்த முகமாக காட்டிக்கொள்வார்.
ஆனாலும் ஆவுடையப்பனுக்கு நாட்கள் செல்ல செல்ல வடிவழகியின் அலட்சியமும், கணவன் மீதான பற்றற்ற தன்மையும் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது.
மகளை அழைத்து கேட்கவும் முடியாமல் மணிவாசகத்திற்காக வருந்தினார். அவரால் ஒரு எல்லைக்கு மேல் நுழைய முடியவில்லை அவர்கள் வாழ்க்கையில்.
எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருந்தது ஜெகதாம்பாள் மணிவாசகத்தின் வாழ்வில் வரும் வரை.
அதுவரை இப்படித்தான் இருக்குமோ திருமணம் என்றால் என எண்ணிக்கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். அதுவும் கூட அகத்தியனால்.
மூத்தவன் எழில் பிறந்து ஏழாம் வருடத்தில் அகத்தியனுக்குமே திருமணம் ஆகியிருக்க மகள் ராஜிக்கு ஒரு வயது.
அனைவருமே ஒரே வீட்டில் தான் இருந்தனர் கூட்டு குடும்பமாக. எத்தனை இருந்தாலும் அந்த வீட்டில் மகனை விட மணிவாசகத்திற்கே செல்வாக்கு கூடிக்கொண்டே சென்றது.
அவரின் பொறுமையும், ஆளுமையும் என செயல்பாடுகள் அனைத்தும் ஆவுடயைப்பனை போலவே இருக்க தானாக ஒரு மரியாதை அவரின் மேல்.
வடிவழகி பாசம் காட்டியிருந்தால் அவரின் கைக்குள் அடங்கி இருந்திருப்பாரோ என்னவோ கடமை, அதற்கு மேல் அன்பான பேச்சுக்கள் கூட அவரிடத்தில் இல்லை.
வெளியே ஆயிரம் வேலைகள் இருந்தாலும் இளைப்பாற ஒரு மடியை தேடியது மனது.
மணிவாசகம் தாயின் உடல்நிலையும் மோசமாக பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டவர் ஜெகதாம்பாள்.
வானம் அறக்கட்டளையின் மூலம் அங்கே வளர்ந்த ஜெகதாம்பாள் ஆவுடையப்பன் வீட்டிற்கு மணிவாசகம் தாயை பார்த்துக்கொள்ள வந்து சேர்ந்தவர்.
கனிவும், கருணையும், பயந்த சுபாவமுமாக அங்கே வந்தவர் விழுந்தது அகத்தியனின் வஞ்சக விழிகளில்.
வீட்டில் எந்த நேரமும் ஆட்கள் இருந்துகொண்டே இருக்க தனது நல்ல பெயரையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும், அதே நேரம் ஜெகதாம்பாளும் வேண்டும்.
அகத்தியனின் ஒழுங்கில்லா புத்தி புல் மேய ஆரம்பித்து பலவருடத்திற்கு மேல் ஆகியிருந்தது. அதை யாரின் கண்களுக்கும் சிக்காமல் சாதுர்யத்தில் மறைத்து வந்தான்.
சாது, எடுப்பார் கைப்பிள்ளை, சொந்தமாக சிந்தனை கிடையாது என எண்ணியிருந்தவரின் குரூர குணத்தை யாருமே அறியாமல் போயிருந்தது தான் பரிதாபம்.
ஜெகதாம்பாளிடம் அவ்வப்போது உதவி, பேச்சு கொடுப்பது, பிள்ளைய பார்த்துக்கொள்வது என நெருங்க முயன்றவரின் எண்ணத்தை புரிந்துகொண்ட ஜெகதாவும் அதில் இருந்து மீள முடியாமல் சிக்கி தவிக்க ஆரம்பித்தார்.
யார் நம்புவார்கள் அகத்தியன் இப்படி என கூறினால்? அங்கிருக்கவே பயந்து மீண்டும் அறக்கட்டளைக்கு செல்வதென முடிவு செய்தவள் இறுதியாக வந்தது மணிவாசகத்திடம்.
தன் தாயை பார்ப்பதற்காக வழக்கமாக இரவு உறங்கும் முன் வந்து பார்த்து செல்வார். அப்படி அன்று வந்தவரிடம்,
“ஸார் என்னை அனுப்பிடுங்க. என்னால இங்க இருக்க முடியாது…” என சொல்லும் போதே அவரின் பயந்த முகமும், எதையோ சகித்துக்கொள்ளமுடியாமல் கலங்கிய பாவமும் தெரிய மணிவாசகத்தின் புருவங்கள் முடிச்சிட்டன.
“என்னம்மா? ஏன் இங்க வேலை செய்ய முடியலயா? கஷ்டமா இருக்கா?…” என்றார் அனுசரணையாக.
ஜெகதாம்பாள் இங்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி இருக்க அவரை கவனித்துக்கொண்டு தான் இருந்தார் மணிவாசகமும்.
திருமண வாழ்வு இயந்திரத்தனமாய் இருக்க அதன் தாத்பரியங்களை ருசிக்காதவரின் மனதில் ஜெகதா மெல்லிய தடத்தை பதித்திருந்தார்.
தாயிடத்தில் கனிவும், அக்கறையும் கொண்டு இருக்க இதில் விழுந்த ஆண்மகனது மனது வழக்கம் போல தடம் புரண்டது.
தவறென்று தெரியும். அதனால் காட்டிக்கொள்ளவில்லை. தன்னை மாற்றிக்கொள்ள தான் முயன்றார் மணிவாசகம்.
இப்போது ஜெகதா வந்து போகிறேன் என சொல்லவுமே, அவர் சொல்லிய விதமும் மணிவாசகத்தின் மனதில் எதுவோ சரியில்லை என உணர்த்தியது.
எப்போதும் சிரித்த முகமும், அதிராத பேச்சும் என வேறு எங்கும் வளைய வராமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பவரின் இந்த கலங்கிய தோற்றம் மணிவாசகத்தை அசைத்தது.
“என்ன பிரச்சனைன்னு சொல்லும்மா…” என்றார் அவர்.
“இல்ல ஸார், நான் திரும்ப ட்ரஸ்ட் ஹாஸ்பிட்டலுக்கே போறேன். இங்க வேண்டாம்…” சொல்லும் பொழுதே ஜெகதாவின் கண்ணீர் கண்ணை தாண்டி கொட்டிவிட அதுவரைக்கும் இருக்கையில் அமர்ந்திருந்தவர் எழுந்துவிட்டார்.
“அந்த பொண்ணு போகட்டும்ப்பா. எனக்கு ஒரு ஆம்பளை நர்ஸை போடு. நான் சமாளிச்சுக்குவேன்…”
உறங்கிவிட்டார் என நினைத்த தாய் திடீரென்று பேசவுமே மணிவாசகம் கண்கள் இடுங்கியது.
இதற்கென்ன அர்த்தம்? இங்கே யார் அப்படி? ஒரு சதவீதம் கூட அகத்தியன் இப்படி என மணிவாசகம் நினைக்கவே இல்லை.
“இங்க வேலை செய்யற யாராவதாம்மா?…” அப்போதும் சிந்தனை இப்படித்தான் இருந்தது அவருக்கு.
அப்போதும் சந்தேகம். ஜெகதா வேறு எங்கும் சென்று நிற்பதோ அனாவசியமாக யாரிடமும் பேசுவதோ கூட வைத்துக்கொள்ள மாட்டார்.
அப்படி இருக்க அதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் வெளியே தன்னுடைய வேலைக்கு என சென்று வரும்பொழுது யாரேனும் இங்கிருப்பவர்கள் ஜெகதாவிடம் அப்படி நடந்துகொண்டிருப்பார்களோ என நினைத்தார்.
ஜெகதா சொல்லியதும், தாயின் பேச்சின் பொருளும் அந்த அர்த்தத்தை தான் காண்பித்தது.
பற்களை கடித்துக்கொண்டு தன்னுடைய கோபத்தை அடக்கியபடி யார் என விசாரித்தார்.
“அந்த பொண்ணு சொல்லமாட்டாப்பா. யாரும் நம்பவும் மாட்டாங்க…” என்றவர் கண்ணீருடன் சொல்ல,
“என்கிட்டே சொல்லுங்கம்மா. நான் என்னனு விசாரிக்கிறேன்…” என மணிவாசகம் கேட்கவும் ஜெகதாவை பார்த்தவர் மகனிடம் அங்கு நடந்த அநியாயங்களை அடுக்கினார்.
“இதை ஏன்ம்மா முதல்லையே எங்கக்கிட்ட நீங்க சொல்லலை?…” என கொதித்து போனார் மணிவாசகம்.
“உனக்கே அந்த பொண்ணு சொல்லவும் யாரோ வேலை செய்யறவங்கன்னு தானே நினைச்ச? எப்படிப்பா?…” என மகனின் கையை பிடிக்க முடியாமல் அசைவற்று வார்த்தைகளை மட்டும் வலிக்க வெளியேற்றிக்கொண்டு இருந்தார் மணிவாசகத்தின் தாய் அம்சவல்லி.
கூடவே தன்னை அகத்தியன் மிரட்டியதையும் சேர்த்தே சொன்னார். ஜெகதாவை கொன்றுவிட்டு பழியை மணிவாசகத்தின் மேல் போட்டுவிடுவதாக மிரட்ட ஜெகதாவும், அம்சவல்லியும் வாயை மூடிக்கொள்ள முதல்நாள் ஜெகதாவிடம் எல்லை மீற முயன்ற அகத்தியனின் அட்டூழியத்தில் இங்கிருக்க கூடாதென முடிவுக்கு வந்தார் ஜெகதாம்பாள்.
“இதுக்கு நான் ஒரு முடிவு கட்டுறேன்…” என எழுந்துகொண்டவர் ஜெகதாவிடம் வந்து,
“உனக்கொரு நல்ல வாழ்க்கையை நான் ஏற்பாடு பன்றேன்ம்மா. இங்க உனக்கு எந்த பிரச்சனையும் வராது…” என்றார்.
“இல்லைங்க ஸார். நான் போய்டறேன். இங்க இருக்க பயமா இருக்கு. இதுவே நான் இருந்த இடம் எனக்கு பாதுகாப்பா இருக்கும்…” என சொல்ல மனிவாசகத்திற்கும் தெரியுமே வானம் குழுமத்தின் பெருமைகள்.
வம்சாவழியாக அவர்களின் சேவைகளும், கடமைகளும் எத்தனை எத்தனை என எண்ணிலடங்காதது.
மக்களுக்கு என அரசியலில் இருந்து தாங்கள் கூட செயல்படுத்த முடியாததை யாரின் எதிர்ப்பார்ப்பும் இன்றி சுலபமாக நடத்திக்கொண்டு இருப்பவர்கள் வானம் குழுமத்தினர்.
அதற்காகவே அங்கிருந்து வேலைக்கு என ஒரு பெண்ணை அனுப்பும்படி கேட்டிருந்தார் மணிவாசகம்.
இப்போது அங்கு வளர்ந்த பெண்ணுக்கொரு பிரச்சனை என்றால் நிச்சயம் பதில் சொல்லவேண்டிய இடத்தில் தங்களை நிறுத்துவார்கள் அவர்கள்.