அவர்களை பொறுத்தவரை யார் எவரென்று எல்லாம் பாகுபாடு, பாராபட்சம் இல்லை.
சிவகங்காதரன். தவறென்றால் சிவன் தான். தன் நெற்றிக்கண்ணின் தணலில் சுட்டு பொசுக்கிவிடுபவர். இந்த விஷயத்தை தெரிந்தால் என்ன நினைப்பார்?
அதையும் விட ஆவுடையப்பன்? நினைக்கவே கலக்கமாக இருந்தது மணிவாசகத்திற்கு.
“ஒரு ஒரு வாரம் பொறுத்துக்கம்மா. நான் சொல்றேன்ல. கேளு…” என்றவர் ஜெகதாவின் கையை பிடித்து சத்தியம் வழங்கினார்.
“உன்னோட மானத்துக்கு எந்த களங்கமும் வராம உனக்கு நான் பாதுகாப்பா இருப்பேன்…” என சொல்ல,
“பார்த்தீங்களாக்கா? பொண்டாட்டி நீங்க இருக்க மச்சான் பன்ற வேலையை? இதுக்குத்தான் டெய்லி இங்கயே சுத்தி சுத்தி வராரு போல?…” என இகழ்ச்சியாய் அகத்தியன் பேசவும் அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்தார்கள் மணிவாசகமும், ஜெகதாம்பாளும்.
ஆவுடையப்பன் முதற்கொண்டு வீட்டின் அத்தனைபேரையும் சத்தமின்றி அழைத்து வந்துவிட்டான் அகத்தியன்.
வடிவழகி இவர்களை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் நகர்ந்துவிட அம்சவல்லி ஐயோ என கதறியதையும், தான் சொல்ல வருவதை காதுகொடுத்து கேட்காமல் செல்பவர்களை இறைஞ்சுதலுடன் அழைக்க ஜெகதாவின் அழுகை கூடியது.
“ரெண்டுபேரும் அழாதீங்க. இப்ப என்ன நடந்திருச்சு? அமைதியா இருங்க…” என்ற மணிவாசகத்தை கவனித்தார் ஆவுடையப்பன்.
“மணி, இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம்ப்பா. மேல வா…” என்றவர்,
“நீயும் தான்ம்மா…” என ஜெகதாவையும் அழைத்து சொல்லி சென்றுவிட்டார்.
எல்லோருமே அகத்தியனின் மனைவி குழந்தை, எழில் உட்பட அனைவரும் அந்த அறையில் குழுமி இருக்க மணிவாசகம் கிஞ்சித்தும் அச்சப்படவில்லை.
பார்வை அகத்தியனையே கூறு போட்டுக்கொண்டு இருந்தது. மனைவியாய் இதனை உணரவேண்டியவருக்கு எந்த பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால் மணிவாசகத்தின் இந்த பார்வையை கொண்டு ஓரளவு யூகித்துவிட்டார் ஆவுடையப்பன்.
மனது அதிர்ந்தது. தன் மகனா? என மணிவாசகத்தை உண்மையா என்பதை போல பார்க்க அவரும் ஆமோதிப்பாய் தலையசைத்து ஜெகதாவை பரிதாபத்துடன் பார்த்தார்.
இத்தனை பிரச்சனையிலும் அகத்தியன் அவ்வப்போது ஜெகதாவை பார்த்தான். அதில் எங்கே அடித்து துவம்சம் செய்துவிடுவோமோ என பயந்து கைகளை கட்டிக்கொண்டு நின்றார் மணிவாசகம்.
இனி ஜெகதா இங்கிருந்தால் தன்னுடைய ஆசை நிறைவேறாது என பிரச்சனையை பெரிதாக்கி அனுப்ப முயன்றான்.
மணிவாசகம் நிழலில் இந்த வீட்டில் இருக்கும் வரை எதுவும் நடக்காது. அதுவும் மணிவாசகத்தையும் ஒன்றும் செய்ய முடியாது.
காரணம் மணிவாசகம் தங்கள் கட்சியின் மொத்த பொறுப்பையும் எடுத்ததோடு இப்போது அறநிலையத்துறை அமைச்சர் வேறு.
ஆவுடையப்பன் தன் உடல்நிலை குறித்து முன்னேற்பாடாக தயாரித்துவிட்ட உயில்கள் வேறு மணிவாசகத்தை எதுவும் செய்யவிடாமல் செய்திருந்தது.
ஜெகதா வேண்டும், அந்த அழகு வேண்டும். அப்போதே கெட்டு சீரழிந்துதான் இருந்தான் அகத்தியன்.
ஒழுக்கம் என்றால் என்ன? என விலை கேட்பவனிடத்தில் அறிவுரை கூட வேலைக்காகாது.
மணிவாசகத்தின் முறைப்பில் சற்று அடங்கினாலும் ஜெகதாவின் இந்த கண்ணீர் முகத்திலும் வக்கிரத்துடன் தான் படிந்தது அகத்தியனின் கண்கள். அதை பார்த்த ஆவுடையப்பன்,
“நீ அமைதியா இரு அகத்தியன்…” என அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் அதட்டியவரின் குரலே இன்னும் ஒருவார்த்தை நீ பேச கூடாது என்பதாக இருந்தது.
அகத்தியனின் மனைவியை பார்க்க பரிதாபமாய் இருந்தது. என்ன நடக்கிறது என நம்பமுடியாமல் கையில் குழந்தையுடன் பார்த்துக்கொண்டு நின்றார்.
“வடிவு, நீ என்னம்மா நினைக்கிற?…” என கேட்க,
“எனக்கு இந்த கல்யாணத்தை பண்ணி வச்சதே நீங்க தான். இவர் நல்லவர்ன்னு தானே முடிச்சு வச்சீங்க? அப்போ நீங்களே இதுக்கு ஒரு முடிவை சொல்லுங்க. என்னமோ எல்லாம் என்னை கேட்டு நடக்கற மாதிரி?…”
வடிவழகியின் இந்த கூற்றை ஆவுடையப்பனால் ஏற்கவே முடியவில்லை. என்ன பெண் இவள்? கொஞ்சமும் பதட்டம் இல்லை. கண்ணீர் இல்லை. கணவன் மேல் இப்படி ஒரு புகார் என்னும் ஆக்ரோஷம் இல்லை.
மனது விட்டு போனது ஆவுடையப்பனுக்கு. மணிவாசகம் அதையும் வலியுடன் பார்த்துக்கொண்டு நிற்க அவருக்காக தனது முடிவை எடுத்துவிட்டார் ஆவுடையப்பன்.
இனி தன்னுடைய மகள் மணிவாசகத்தை எப்படி நடத்துவாள் என தெரிந்துபோனது.
தெரிந்தே அவரை அந்த நரகத்தில் தள்ள அந்த மனிதருக்கு மனம் வரவில்லை. தான் இழைத்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்யவே நினைத்தார்.
இந்த நிமிடம் அகத்தியனை கூப்பிட்டு கண்டிக்க முடியும். ஆனால் தன் கண்முன்னால் தலையாட்டிவிட்டு மீண்டும் ஜெகதாவை பாழாக்க முயன்றால்?
தங்கள் முன்னிலையிலேயே மகன் ஜெகதாவை பார்த்த அந்த பார்வை? மனதிற்குள் தகப்பனாக மரித்து போனார் ஆவுடையப்பன்.
அகத்தியன் இந்த ஏமாற்றம் தாளாமல் தன் குடும்பத்துடன் ஆத்திரம் மிக வெளியேறிவிட,
“தப்பு பன்றீங்கப்பா. என் வாழ்க்கையை இப்படி பாழாக்கறீங்க?…” என்றார் வடிவழகி ஆவேசமாய்.
“நீ எப்போம்மா நல்லா வாழ்ந்த?…” அர்த்தம் பொதிந்த பார்வையுடன் மகளை பார்த்து கேட்க அதன் பொருள் உணர்ந்தவர் மௌனமாகி வெளியே சென்றார்.
செல்லும் முன்னர் கணவனையும், ஜெகதாவையும் முறைத்துக்கொண்டு செல்ல மணிவாசகத்திடம் அசைவில்லை.
‘இவ்வளவு தானா இவள் எதிர்ப்பு? தனக்கென யோசிக்கவில்லையா? தன்னை யோசிக்கவில்லையா?’ என வெறுமையுடன் இருந்தார்.
தானுமே நிலை தடுமாறி ஏதோ ஒரு வேகத்தில் இன்னொரு பெண்ணின் மேல் ஆசை கொண்டவன் தான்.
ஆனால் அதை தனக்குள்ளேயே திருத்தி இப்போது வரை உண்மையாக தானே இருக்கிறேன் என மருகிக்கொண்டு இருந்தார்.
“மணி…” என்றவரின் தழுதழுத்த குரலில் அவரின் கையை பிடித்துக்கொண்டார் ஆவுடையப்பன்.
“வேண்டாம்ங்கய்யா. நான் இந்த பொண்ணை பாதுகாப்பேன். நீங்க கவலைப்படாதீங்க. ஆனா இது தீர்வில்லை. தவறு…”
“இல்லப்பா, செஞ்ச தப்பை இப்போ தான் சரி பன்றேன். இருட்டு மட்டுமே வாழ்க்கை இல்லை மணி. வெளிச்சத்திலையும் அரவணைப்பு இல்லைன்னா வாழ்க்கை சிறக்காது. உன் வாழ்க்கையை அவசரப்பட்டு என்னோட சுயலாபத்துக்காக பாழாகிட்டேன்னு நினைச்சு மருகாத நாள் இல்லை…”
“நான் சந்தோஷமா தான் இருக்கேன் ஐயா…” என்றவரின் கையை பிடித்த ஆவுடையப்பன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்ததுமே பதறி போனார் மணிவாசகம்.
“நீங்களே உடைஞ்சுட்டா நாங்க என்ன பண்ணுவோம்?…” என கேட்க,
“இங்க வாம்மா…” என ஜெகதாவை அழைத்தவர்,
“உனக்கு சம்மதமாம்மா?…” என்றார்.
பதில் சொல்லமுடியாமல் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் ஜெகதா விழிக்க,
“மணிவாசகம் என்னோட உயிர்ன்னு சொன்னா நம்புவியா? அவனுக்கு என்னால முடிஞ்ச நல்லது. உன்னை குடுக்கறது தான். உன்னை பத்தியும் விசாரிச்சிருந்தேன் இங்க வேலைக்கு வரப்போ. உனக்கு எல்லாமுமா அவன் இருப்பான்ம்மா…”
ஆவுடையப்பன் பேசி இருவரையும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். அதோடு நில்லாமல் அந்த நொடியே சிவகங்காதரனுக்கு அழைத்து விஷயத்தை தெரிவித்தார்.
அதுதான் சரி என நினைக்க சற்று நேரத்தில் அம்சவல்லியிடமும் பேசிவிட்டு அந்த இரவு பொழுதிலேயே பூஜை அறையில் வேலையாட்கள் பார்க்க மஞ்சள் மஞ்சள் சரடில் மஞ்சள் கிழங்கை கட்டி வைத்த மாங்கல்யத்தை எடுத்து தர மணிவாசகம், ஜெகதாம்பாள் திருமணம் நடைபெற்றது.
வடிவழகி வெளிவரமாட்டேன் என அடம்பிடித்து உள்ளேயே மகனுடன் இருந்துகொண்டார்.
திருமணத்தை முடித்ததோடு இல்லாமல் அவர்களை வேறு இல்லத்திற்கு குடி போக சொல்லிவிட்டார்.
இங்கிருந்தால் வாழ்க்கை நரகம். வடிவழகி, அகத்தியன் வாழ விடமாட்டார்கள் இவர்களை என மணிவாசகத்தை தாய், மனைவி சகிதம் அனுப்பிவைத்தார்.
“உங்களை விட்டு என்னன்னு இருப்பேன் நான்? இது தண்டனையோன்னு தோணுதுய்யா…” என கலங்கி போனார் மணிவாசகம்.
“உன்னை பத்தி நீயே நான் இப்படின்னு சொன்னாலும் நம்ப மாட்டேன் மணி. என்னோட மனசாட்சியா உன்னை பார்க்கறேன். நீயும் வாழனும். பொண்டாட்டி இல்லாம வாழறது கூட சுலபம். இருந்தும் இல்லாம வாழறது நரகம். உன்னை நரகத்துல தள்ளிட்டேன்…”
அவரின் அந்த வருத்தம் தாங்காமல் மறுப்பு சொல்லாமல் கிளம்பிவிட்டார் மணிவாசகம்.
மணிவாசகம் சென்றதோடு அகத்தியனை தனியே அழைத்த ஆவுடையப்பன் தனியாக சென்றுவிடு என கட்டளையிட பதில் பேச முடியாமல் வேறு இடம் கிளம்பிவிட்டான் அவனும்.
இதை அறிந்த அரசியல் வட்டாரங்களும், தொழில்துறை ஆட்களும், பத்திரிக்கைகளும் இவர்கள் குடும்ப விஷயத்தை அலச அதற்கும் ஆவுடையப்பனே முற்றுப்புள்ளி வைத்தார்.
“நாங்கள் சேர்ந்து எடுத்த முடிவு தான். என் மகளே ஒப்புக்கொண்டு அவள் செய்துவைத்த திருமணம். எங்களுக்கே பாதிப்பில்லை. உங்களுக்கு ஏன்? இது புதிதா என்ன? வேறு வேலையை பார்த்தால் நன்றாக இருக்கும்….” என பதிலடி கொடுத்துவிட அது வடிவழகியின் கோபத்தை இன்னும் ஏற்றியது.
வடிவழகி சம்மதத்துடன் தான் இந்த திருமணம் என்று கையெழுத்தும் வாங்கி இருந்தார் அவர் மகளிடம். அவர்களை தொந்தரவு செய்ய கூடாது என்னும் எச்சரிக்கையுடன்.
தனி வீடு சென்று ஒரு வருடத்தில் அம்சவல்லி உடல்நிலை பலகீனத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார். நிறைவுடன் தான் அவரின் சிவபயணம்.
மகனின் வாழ்க்கையில் இப்போதாவது நிம்மதி கிட்டட்டும் என்று வேண்டுதலுடனே சதாசர்வகாலமும் பிராத்தனையில் இருந்தவருக்கு ஜெகதாவின் வரவு நிம்மதியை தந்தது.
துக்கம் அனுஷ்ட்டிக்க கூட வடிவழகி வரவில்லை. கேட்பவர்களுக்கு இப்போதுதான் குழந்தை பிறந்த உடம்பு. அலைய முடியாது என்று சொல்லி சமாளித்தார்கள்.
எழிலின் தங்கை சுடர்கொடியை பெற்றிருந்தார் வடிவழகி. மணிவாசகம் வீட்டை விட்டு சென்று ஓரிரு மாதங்களுக்கு பின்னர் தான் குழந்தையை சுமப்பதையே அறிந்தார் அவர்.
வெறுப்பில் கலைக்க என நினைக்க ஆவுடையப்பன் சம்மதிக்கவில்லை. கூடவே அதற்கு சாத்தியமில்லை என மருத்துவமனையில் சொல்லிவிட கடனே என சுமந்தார். அகத்தியனுக்கும் அதே நேரம் ஆண்குழந்தை இளவேந்தன் பிறந்திருந்தான்.
ஆவுடையப்பன் உடல்நிலை குற்ற குற்ற அகத்தியனின் வரவும் ஆதிக்கமும் அங்கே அதிமாகியது. குழந்தைகள் கூட அகத்தியனின் வழி தான் நடந்தனர்.
ராஜியை தவிர்த்து குழந்தைகள் எழில், சுடர், இளா மூவர் மனதில் மணிவாசகம், ஜெகதா, ஷக்தி மூவரின் மேலும் சிறுக சிறுக நஞ்சை விதைத்துக்கொண்டே வளர்த்தார்கள்.
இவர்களின் நஞ்சு ஷக்தியை, ஜெகதாவை தனியே காணும் நேரமெல்லாம் அவர்கள் மேல் பாய ஷக்தி முதலில் இந்த பேச்சுக்களில் ஒடுங்கியவள் ஒருகட்டத்தில் எதிர்த்து நிற்க ஆரம்பித்தாள்.
மணிவாசகத்தின் மகளாய் ஊரறிய உரிமையாய், நிமிர்வாய், திமிராய் வலம் வந்தாள் ஷக்தி.
அதுவே மற்றவர்களின் கண்களை அந்த உரிமை உணர்வு உறுத்த ஆரம்பிக்க, அகத்தியனின் கண்ணில் அவளின் பேரழகு பதிந்து போனது.