வானம் மருத்துவமனை. நவீனமயமாக்கப்பட்ட சாதனங்கள், மருத்துவ வளர்ச்சிக்கான உபகரணங்கள் என அந்த புது கட்டிடத்தினுள் அதனதனிடத்தில் வைக்கப்படிருக்க மறுநாள் திறப்புவிழா.
ஏற்கனவே பெரிய மருத்துவமனை. இப்போது இன்னும் புது பொலிவுடன் மக்களுக்கு சிரமமின்றி சிகிச்சை பெற்று செல்ல என பெரிதாய் கட்டப்பட்டு பெரிய அளவில் திறக்க இருந்தது.
மக்களுக்கான மருத்துவமனை. விழாவை ஆரம்பித்து சிறப்பிக்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர் தான் திறந்து வைப்பதாகவும் இருந்தது.
அத்தனையையும் பார்வையிட்டு முடித்தவன் தன்னுடைய வாகனத்தில் கிளம்பி மாளிகை வந்து சேர்ந்தான்.
உறவினர்கள் எல்லாம் தள்ளி வைத்து தன்னுடைய பாதுகாப்பையும் பலப்படுத்திவிட்டே இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்திருந்தார் தந்தை சிவகங்காதரன்.
‘தன்னம்பிக்கையுடன் உன்னை மட்டும் நம்பு. நம்பியவர்களை கை விடாதே.’ என்னும் விதமாய் வாழ்ந்து மறைந்தவர்.
உயிரை கையில் பிடித்துக்கொண்டு மகனின் இந்த வானம் குழுமத்தின் அரியணை ஏற்புக்காக தவித்து இருந்தவர்.
தன் ஆசை நிறைவேறியதும் மகனுக்கு கற்றுக்கொள்ளவேண்டிய அத்தனையையும் கற்பித்து முடித்த திருப்தியுடன் மண்ணுலகை விட்டு சிவபதவியில் அவ்வுலகை ஆள பயணம் மேற்கொண்டார்.
பரம்பரை பரம்பரையாய் ஆளும் வர்க்கத்தினர். பிறந்ததிலிருந்து தந்தையின் பாசம் எந்தளவிற்கு இருந்ததோ படிப்பினை அதனையும் விட அதிகமாய் இருந்தது.
இதற்காகவே பிறந்து இதற்கெனவே வளர்க்கப்படுகிறோமோ என்று கூட ஓரிரு முறை எண்ணியிருக்கிறான் ஷேஷா.
அவனறியாமல் அவன் மனதிற்குள் விதையாய் விழுந்துவிட்டது தந்தையின் சிந்தனைகள்.
சிவகங்காதரனை போல எதிலும் சளைத்தவனில்லை என்பதை போல அவனின் வளர்ச்சியும் இருந்தது.
அந்த குடும்பத்தினரின் ஒட்டுமொத்த பண்புகளும் ஷேஷாவிடம் இருக்க சிவகங்காதரனின் வளர்ப்பு பெருமிதமாய் உவகை கொள்ளும் வகையே.
உறவுகள் இருந்தாலும் அவர்களிடம் ஷேஷாவின் எல்லை கோடு என்பது சிவகங்காதரனை காட்டிலும் கண்ணாடியாய் இருந்தது.
சுற்றி இருக்கும் விசுவாசிகள் கொண்ட கோட்டை. வம்சாவழியாய் அந்த குடும்பத்திற்கு சேவகம் செய்பவர்கள்.
அடுத்தடுத்த தலைமுறை பிள்ளைகளும் அதற்கு தலை வணங்கி பொறுப்பேற்று கொண்டார்கள்.
இன்று தந்தையின் ஆசையில் அடுத்த படிக்கு சென்றான் ஷேஷா. ஆளப்பிறந்தவன், தன்னுடைய சாம்ராஜ்யத்தை திறன்பட ஆண்டு கொண்டிருந்தான்.
ஆதிஷேஷன். பரமசிவன் கழுத்தில் இருந்த போதுமட்டுமல்ல, அதன் பின்னருமே அத்தனைக்கும் சேர்த்து ஆதிசிவனாய் இருந்தான்.
வீடு வந்தவனுக்கு மறுநாளைய நிகழுரையை பவன் சொல்லிக்கொண்டிருந்தான். கவனமாக கேட்டுக்கொண்டவன்,
“செக்யூரிட்டி எல்லாம் டைட்டா இருக்கனும் பவன். காம்ப்ளிகேஷன், கம்ப்ளைண்ட் எதுவும் ஆக கூடாது…”
“எஸ் பாஸ். எல்லாமே பக்கா…”
“நாளைக்கு மும்பைல புது ப்லிம் பூஜையும், கூடவே பர்ஸ்ட் டே சூட்…”
“அங்க நீங்க பூஜையில மட்டும் கலந்துக்கறீங்க. ஷூட்க்கு அடுத்து அந்த ப்லிம் ரிலீஸ் வரைக்கும் நம்ம மேனேஜர் பார்த்துப்பார். அங்கயும் ப்ரோக்ராம் பக்கா பாஸ்…”
“மேனேஜர்க்கு ஒரு ஷேடோ அரேன்ச் பண்ணிரு பவன்…” என சொல்லி அறைக்கு சென்றுவிட்டான்.
காரணமின்றி சொல்லமாட்டான் என்பதால் அதற்குரிய ஏற்பாட்டையும் உடனே செய்துவிட்டான் பவன்.
ஷேஷாவிற்கு தொழில்கள் ஏராளம் இருந்தாலும் அதனை பார்த்துக்கொண்டு தங்களின் புரடக்ஷன் கம்பெனியின் வேலைகளையும் சலிப்பின்றி செய்துவந்தான்.
சிவகங்காதரன் கலைதாகம் கொண்டவரும் கூட. நல்ல படைப்புகளுக்கு முக்கியத்துவம் தருபவர். அதன் மூலம் ஈட்டும் வருமானங்களும் குறைவோ, நிறைவோ அறக்கட்டளைக்கே.
அதனை இன்றும் நடத்தி வருகிறான் ஷேஷா. அவர்களின் தயாரிப்பில் பல்வேறு படங்கள்.
பலதரப்பட்ட மொழிகளிலும் காலூன்றினான். செல்லும் இடமெங்கும் தன்னுடைய இருப்பை அசைக்க முடியாமல் அழுத்தமாய் பதித்தான்.
காலை எழுந்ததும் கிளம்பி வந்துவிட்டான் மருத்துவமனைக்கு. முன்பே பெரியது தான். அதை இன்னும் விஸ்தரப்படுத்தி இருந்தான்.
அத்தனையும் அனைவருக்கும் கிட்டவேண்டும். இந்த பாகுபாடில்லாத முயற்சி அவனின் வெற்றி.
உள்ளே ஏற்பாடுகளை தனது கண்பார்வையில் அளவிட்டுக்கொண்டிருக்க பவன் வந்தான்.
“பாஸ், மணிவாசகம் ஸார் வந்துட்டாங்க…” என சொல்லவுமே தலையசைத்துவிட்டு அவரின் வருகையை எதிர்நோக்கி திரும்பி நின்றான் ஷேஷா.
மணிவாசகம் அவன் மிகவும் மதிக்கும் ஒரு நபர். தன் தந்தையின் நண்பராகவும், தனக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கும் நற்குணமுடையவராகவும் இருப்பவர்.
மணிவாசகம், ஜெகதாம்பாள் திருமணத்தை பற்றி ஓரளவு அறிந்திருந்தான் ஷேஷா.
சிவகங்காதரன் எந்தளவிற்கு மணிவாசகத்தின் மேல் அபிமானமும் நம்பிக்கையும் வைத்திருந்தாரோ அதை நிரூபிக்கும் விதமாய் ட்ரஸ்ட்டில் சிறு பங்களிப்பை ஆற்றிய மணிவாசகத்திற்கு அவரின் மகளாய் ஷக்தி பிறந்த பொழுது தன் எண்ணத்தை செயலாற்றினார்.
மணிவாசகம், ஜெகதாம்பாள் மகள் ஷக்தி பிறந்ததும் அங்கு இருக்கும் ஆதரவற்றோரின் அத்தனை பொறுப்பையும் வழிய வந்து ஏற்றுக்கொண்டவர் மணிவாசகம்.
மிகப்பெரும் தொகையை தந்தவர் மணிவாசகம். இது தொகை சம்பந்தப்பட்டதல்ல. மனம் சம்பந்தப்பட்டது.
ஜெகதாம்பாள் போன்ற ஒரு பெண்ணை எப்படி வாழ வைக்க வேண்டும் என்பதுடன் அவரை போல ஆதரவற்ற பெண்கள், மற்றும் அனைவரின் எதிர்காலத்தையும் கவனிக்கும் பொறுப்பை மனமுவந்து ஏற்றார்.
அதன் சிறு பரிசாக ட்ரஸ்ட் ஷேர் பர்சனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் மணிவாசகம்.
மற்றவர்களுக்கு இது மணிவாசகம் தான் பொறுப்பாளர். யாருமறியாத ரகசியம். ஷேஷா அறிந்த ரகசியம்.
அந்த ஷேர் ஷக்தியின் பெயரில் வாங்கப்பட்டது மட்டுமல்ல. ஷக்திக்காக சிவகங்காதரன் தந்தது.
யாரின் கேள்வியும் அங்கே எடுபடாது. சிவகங்காதரன் முடிவு மட்டுமே. அதனால் அது சுலபமானது.
மனதில் இடம் கொடுத்த மணிவாசகத்திற்கு தன்னால் முடிந்த அங்கீகரிப்பு இந்த அறக்கட்டளையின் ஒரு நிர்வாகியாக அவரையும் நியமித்தது.
சேவை மனப்பான்மை கொண்ட தன்னை போன்றோர்கள் சொற்பமே. அப்படி மணிவாசகத்தை கண்டுகொண்டவருக்கு அந்த இயல்பு சிவகங்காதரனை தொட்டது.
அந்த நட்பின் ஆழத்தை அறிந்தவன் ஷேஷா. இதோ அவரை பார்த்ததுமே முகம் விகசிக்க வரவேற்றான்.
அவரை மரியாதைக்குரிய ஒரு இடத்தில் அவன் வைத்திருக்க கம்பீரமாய் வந்துகொண்டிருந்தவர் ஷேஷாவை நோக்கி கை நீட்டினார்.
“எப்படி இருக்க ஷேஷா?…” என அவனை அணைத்து விடுக்க,
“ஐ’ம் ஓகே…” என்றான் வழக்கமான மிதமான புன்னகையுடன்.
ஷேஷாவிடம் அன்றைய ஏற்பாட்டை பேசிக்கொண்டிருந்தவர் பார்வை பின்னால் செல்ல அவர் வழியே அவனும் பார்த்தான்.
அங்கே ஜெகதாம்பாள் கையை கோர்த்துக்கொண்டு அவரிடம் சிரித்தபடி நடந்து வந்துகொண்டிருந்தாள் ஷக்தி.
காலை நேர மஞ்சள் வெயிலும் அவளின் முகத்தில் பட்டு தெறிக்க, ப்ளாஷ் லைட்டுகளின் வெளிச்சம் வேறு அவளின் கண்ணை கூச செய்தது.
லேசாய் கண் சிமிட்டி அதனை சிரிப்புடனும் வாங்கிக்கொண்டாள். அத்தனை கர்வம், மணிவாசகத்தின் பெண் தான் என்பதில்.
சாதாரணமாய் சந்தோஷமாய் வாழ்ந்த பெண்ணை கொட்டி கொட்டியே தேளாய் மாற்றி இருந்ததில் பெரும் பங்கு அகத்தியன், வடிவழகி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே.
அழ வைத்து அழகு பார்க்க நினைத்தனர். கூனி குறுக வைக்க முயன்றனர். இரண்டாவது திருமணமாக இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட திருமணம்.
ஆனால் அதனை கொச்சைப்படுத்தி சிறு பெண்ணை கழிவிரக்கம் கொள்ள செய்து குளிர் காய முயன்றனர்.
புரியாமல் இருக்கும் வேளையில் சரியாய் தங்கள் வாழ்க்கை துவங்கிய விதத்தை தன் பெண்ணிற்கு புரியும்படி மணிவாசகம் எடுத்துரைத்தார்.
தாயை ஏசி, தந்தையை விமர்சித்து தான் பிறந்ததே அசிங்கம் என்பவர்களுக்காக ஒடுங்கி போவதா என வீறுகொண்டு எழுந்தாள்.
‘தேவையில்லாமல் பேச வேண்டாம்’ என சொல்லி இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எண்ணம் என்று பிறந்ததோ அன்றிலிருந்து வேறு ஷக்தி அவள்.
‘ஆமாம், அதில் உங்களுக்கு என்ன நஷ்டம்?’ என எடுத்தெறிந்து பேச ஆரம்பித்தவளின் மொத்த திமிரும் துவங்கியது அவ்விடம்.
அது அவளை தற்காத்துக்கொள்ள என்றாலும் பார்ப்பவர்களின் பார்வை கூட தன்னில் இப்படித்தான் படியுமோ என தோன்றாமல் இல்லை.
அதனால் நெருங்கிய தோழிகள் என்றும் ஒருவரும் இல்லை. இரண்டாம் திருமணம் என்ன அத்தனை குற்றமா என தோன்ற தனித்தே வளர்ந்தாள்.
பார்ப்பவர்கள் பேசும் முன் பார்வையில் எட்ட நிறுத்தினாள். அது அவளின் மேல் குற்றம் இல்லை என்றாலும் சூழ்நிலை அப்படியே அவளை வாழ வைத்தது.
அதற்கென்றே மணிவாசகத்திடம் தன்னுடைய உரிமையை நிலைநாட்டிக்கொண்டே இருப்பாள் ஷக்தி.
இப்போது ஷக்தியையும், ஜெகதாம்பாளையும் இந்த விழாவில் மணிவாசகத்துடன் பார்க்கும் அவர்களுக்கு எப்படி இருக்கும் என மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.
சிகப்பு கம்பளத்தின் மேல் மிதக்கும் மேகமென நடந்து வருபவளை ஒரு நொடி அசையாமல் பார்த்தவன் தன் பார்வையை மணிவாசகத்திடம் திருப்பினான்.
இத்தனை வருடத்தில் பலமுறை அவளை பத்திரிக்கைகளில், சில விழாக்களில் என கண்டிருக்கிறான். இது தன்னிடத்திற்கு அவள் வந்தது முதல் முறை.
அருகே வந்ததும் இருவரையும் தலையசைத்தான் வரவேற்பாக. வரும் பொழுதே ஷேஷாவின் பார்வையை கண்டுகொண்ட ஷக்தி அந்தளவிற்கு பெரிதாய் அவனை கண்டுகொள்ளவில்லை.
அவனின் தலையசைப்பையும் ஏற்றுக்கொள்ளாததை போல திரும்பிக்கொண்டாள் அவள்.
அதுவரை ஷக்தி ஷேஷாவை அறிந்தவை அத்தனை கிசுகிசுக்கள். அத்தனையும் வேண்டுமென்றே பரப்பப்பட்டவை.
இருந்தும் மறுத்ததில்லை அவன். அதற்கு நேரம் அளிக்கும் அளவிற்கு அது முக்கிய விஷயமும் இல்லை என நினைப்பவன்.
ஆனாலும் ஷக்திக்கு அவனை இங்கே நேராக கண்டதும் மனதில் முதலில் தோன்றியது அதுதான்.
தந்தையின் மிகுந்த அபிமானி. பிடித்தமானவன். இப்படி ஒருவனை பிடிக்கிறதே என நினைத்தாலும் அவருக்காக கேட்டுக்கொள்வாள்.
இன்று இத்தனை அருகில் பார்க்க அவனை மதிக்கவும் இல்லை. இவனும் அப்படித்தானோ என்னவோ என உள்ளுக்குள் ஒரு எண்ணம்.
“உள்ள போ அம்பாள். அம்மாவை கூட்டிட்டு போய் அங்க உட்கார் ஷக்தி…” என இருவருக்கும் சொல்ல அங்கிருந்து சென்று அமர்ந்தார்கள்.
முதலமைச்சர் வரும் நேரம் ஆகிவிட முழு பரபரப்பும் தொற்றிக்கொண்டது அங்கே.
அவரும் படைபலங்களுடன் வந்து இன்முகமாய் கட்டிடத்தை திறந்துவைத்து சிறிது நேரம் இருந்துவிட்டு வாழ்த்துக்களுடன் கிளம்பிவிட்டார்.
அன்றைய நிகழ்வுகள் எல்லாம் நிறைவுடன் முடிய ஜெகதாம்பாள் ஷக்தியை தேடி வந்தார் கணவரிடம்.
“ஷக்தி இங்க வந்தாளா?…” என கேட்க,
“இல்லம்மா, உள்ள தான் இருக்கா பாரு…” என்றார் அவர்.
“இல்லைங்க, உங்களை கூப்பிடனும்னு சொன்னா. நான் என்னோட பழைய ப்ரெண்ட் ஒருத்தரை பார்த்து பேசிட்டு நின்னதுல இவ வந்ததை கவனிக்கலை…” என்றார்.
“இங்க எங்கயும் போக மாட்டா. இங்க என்ன பயம் உனக்கு?…” என்றார் மணிவாசகம்.
“என்னவோ மனசு சரியில்லைங்க. பிறந்தநாள் அதுவுமா இன்னைக்கு கிளம்பும் போது அடி பட்டிருச்சு. உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா…” ஜெகதாம்பாள் பயந்துகொண்டே தான் இருந்தார் மகளை எண்ணி.
ஒருநாள் அகத்தியனின் பார்வையை கண்டுகொண்டார் ஜெகதாம்பாள். அந்த கழுகு கண்களின் வக்கிரம் மகள் மேல் விழுந்திருக்க கடந்த ஒரு மாதமாக உறக்கமில்லை அவருக்கு.
ஒரு மாதம் முன்பு ஒரு பொது நிகழ்ச்சியில் அகத்தியனின் பார்வை மகளிடம் வரவும், படர்வதுமாக இருக்க தாயாய் கண்டுகொண்டார்.
அதில் இருந்து நிம்மதி இல்லை. மகளை தனித்து விடுவதும் இல்லை. மணிவாசகத்திடம் சொல்லவும் அச்சம்.
மனமொத்த தம்பதிகளாக சிறப்புடன் வாழ்ந்தாலும் இன்றளவும் மனதில் நீங்காமல் இருப்பது தன்னால் தான் மணிவாசகம் குடும்பம் சிதறி திசைமாறியது எனும் எண்ணம்.
தன் தவறு ஒன்றுமில்லை என்றாலும் அவர்களின் பேச்சுக்கள் இன்றளவும் கொன்று தீர்க்கும். அந்த நேரமெல்லாம் சஞ்சலத்தில் தான் கடத்துவார் தன் பொழுதுகளை.
எத்தனை வருத்தங்கள் இருந்தாலும் மணிவாசகத்திடம் சொல்லிவிடமாட்டார். தன்னால் எந்த மனதாங்கல்களும் அவரை சேர கூடாது என்பதில் அத்தனை கவனம்.
அதே இயல்பு தான் ஷக்திக்கும். தன்னால் தந்தைக்கு எந்த கஷ்டங்களும் வந்துவிட கூடாது என்பதில்.
ஆனால் ஜெகதாம்பாளை போல எல்லாம் ஷக்தி இருந்ததில்லை. பேச்சுக்கு பேச்சு பதிலுக்கு பதில்.
அந்த இயல்பு தான் காரணமின்றி ஷேஷாவையும் காயப்படுத்தியது. என்னதான் ஷேஷாவின் உயரம் அறிந்தாலும் மகளுக்கு தந்தையை விட வேறு எவரும் உயர்ந்தவரில்லை என்னும் பெருமை.