“காட், என்னவோ ரொம்ப பன்றீங்க? ஒரு போட்டோவுக்கா? எங்கப்பாட்ட கேட்டா இதை விட பெரிய சிலையை எனக்கு வாங்கி தருவாங்க. என்னவோ அதிசயம் மாதிரி?…” அவளின் அலட்சியம் ஷேஷாவை முறைக்க வைத்தது.
இத்தனை சொல்லியும் என்ன பெண் இவள்? தவறையும் ஒப்புக்கொள்ளாமல் பேசுகிறாளே? என தான் பார்த்தான்.
அவனுக்கு ஷக்தியின் அந்த பேச்சு பிடிக்கவில்லை என்பதை விட இவள் இப்படி பேச கூடாது என்று தோன்றியது.
“யார் வேணாலும் எதையும் வாங்கலாம். ஆனா அந்த பொருளுக்கான மதிப்பை குடுக்க தெரியனும். வாங்கற வரைக்கும் இது சிலை. ஆனா இங்க நாங்க கடவுளா வச்சிருக்கோம்…” என்றவன் தன் குரலை நிதானமாய் வெளியிட்டான்.
“உனக்கு சிலையா தெரிஞ்சாலும் ஐ டோன்ட் கேர். உன்னோட ஷூஸ் ரிமூவ் பண்ணு. இங்க நீ இப்படித்தான் இருக்கனும்…”
அவன் நினைக்காமலே அந்த அதிகாரம் பெரும் காரத்துடன் அவன் வார்த்தையில் வந்துவிட ஷக்தி நிதானம் இழந்தாள்.
இவன் என்ன சொல்ல வருகிறான் எனக்கு மதிப்பு தெரியவில்லையா? இல்லை தனக்கு தெரியாமல் தான் இருக்கும் என நினைத்தானா?
ஷக்தியின் மனதிற்குள் வழக்கமாக அவள் வாங்கிக்கொள்ளும் வார்த்தைகள் தான் ஷேஷாவின் வார்த்தைக்கும் அதே வடிவம் கொடுத்தது.
“ஷட் அப் ஷேஷா. எனக்கு நீங்க சொல்லி தர வேண்டாம். எங்கப்பாவோட தயவு இல்லைன்னா இதுக்கு அப்ரூவல் கூட உங்களுக்கு கிடைச்சிருக்காது. ஞாபகம் வச்சுட்டு யார்ட்ட பேசறோம்ன்னு பேசுங்க…” என்று சொல்ல ஷேஷாவின் முகம் மாறியது.
“வாட் யூ மீன் ஷக்தி?…”
“எஸ் ஐ மீன் இட். எங்கப்பா தானே இதுக்கு ஹெல்ப் பண்ணினாங்க? எனக்கு தெரியுமே. இல்லன்னா உங்களால இதை சாதிச்சிருக்க முடியுமா?…” என்றதும்,
“நைஸ் ஒன். நீ இப்படித்தான் நினைப்ப. இல்லைன்னா கடவுளுக்கு பக்கத்துல எப்படி இருக்கனுன்னு கூட தெரிஞ்சிக்காம இருப்பியா? உன்னோட நிலை உன்னோட பேச்சு, நீ யாருன்னு காமிக்குது. நீ இப்ப இவ்வளவு பேசியிருக்க கூடாது…”
ஷேஷா சொல்லிய அர்த்தம் இந்த வயதில் உனக்கு இத்தனை வேண்டாம் என்பதாக இருக்க, ஷக்தியோ வேறாக எடுத்துக்கொண்டாள்.
“வெறும் பணமும், பதவியும் மட்டும் எதுவும் தந்திடாது ஷக்தி. நமக்கான மரியாதையை கூட நம்மளோட நடவடிக்கை தான் தரனும். முதல்ல மரியாதையை கத்துக்கோ…” என்றவன்,
ஷக்தியால் அந்த பேச்சில் இருந்து மீள முடியவில்லை. தன்னை இப்படி சொல்லிவிட்டானே?
“என்னம்மா சொல்லாம வந்துட்ட?…” என்ற ஜெகதாம்பாளை கண்டதும் சிரித்தபடி முகத்தை திருத்தினாள்.
“இந்த பிள்ளையார் அழகா இருந்தார்ம்மா. அதான் போட்டோ எடுக்கலாம்ன்னு வந்தேன்…” எனவும்,
“ஆமா, நான் கவனிக்கவே இல்லையே?…” என்றவர் சுற்றிலும் பார்த்து ஓரமாய் காலனியை கழற்றிவிட்டு சென்று வணங்கிவிட்டு வந்தார்.
அதை பார்த்துக்கொண்டே இருந்த ஷக்தி தாய் கைமூடி நின்று வணங்கியதையும் சேர்த்தே படம் பிடித்துக்கொண்டாள்.
மணிவாசகமும் வந்துவிட கிளம்பும் நேரம் அவர்கள் ஷேஷாவிடம் சொல்ல ஷக்தி திரும்பவில்லை அவன் பக்கம்.
வீட்டிற்கு வந்து மீண்டும் ஷேஷா புராணம். பிடிக்கவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டாள்.
அவளின் நாட்கள் கவலை இல்லாமல், கனமில்லாமல் சுகமாய், நிம்மதியாய் தான் கழிந்துகொண்டு இருந்தது.
மணிவாசகம் தன்னுடைய பொறுப்பையும் மறக்கவில்லை. வடிவழகி பிள்ளைகளுடன் இருக்கும் வீட்டிற்கும் செல்லாமல் இருந்ததில்லை.
அதை அவரின் கடமையாக நினைத்து செல்ல இன்றளவும் ஆவுடையப்பனுக்கு அடுத்த இடம் அவருக்குத்தான் அங்கே இருந்தது.
அவரின் மறைவின் பின்னர் இன்னுமே அதிகமாகியது. அதனால் முழு பொறுப்பையும் மணிவாசகம் ஏற்றுக்கொள்ள வடிவழகியால் மறுக்கமுடியவில்லை.
அவரால் முடிந்தது பிள்ளைகளை கணவரிடம் நெருங்காமல் தம்பியின் பொறுப்பில் விட்டது மட்டுமே.
எழில் வளர்ந்து பெரியவனாகிவிட சின்னதிலிருந்தே வெறுப்பை ஊட்டி தான் வளர்த்திருந்தான் அகத்தியன்.
அது நன்றாகவே வேலை செய்தது. மணிவாசகத்தை தொழில் சம்பந்தமாக எதற்கும் கையெப்பம் வாங்க என மட்டுமே தகப்பன், கார்டியன் என்னும் முறையில் வைத்துக்கொண்டான்.
அதிகப்படியாய் எந்த பேச்சுக்களும் இல்லை. தன்னுடைய திருமணத்தை கூட தானே முடிவு செய்துகொள்ள மணிவாசகம் ஒன்றும் சொல்லமுடியவில்லை.
இன்னும் வருடம் போகட்டும் என சொல்லியும் கேட்கவில்லை. ராஜியை பிடிவாதமாக திருமணம் செய்துகொண்டான்.
தந்தையின் பேச்சிற்கு மறுபேச்சு சொல்லாத பெண். தாயும் உடல்நலக்குறைவால் இருக்க அகத்தியனின் முடிவிற்கு கட்டுப்பட்டாள்.
திருமணம் என படிப்பை நிறுத்தி எதற்கு இந்த அவசரம் என புரியாமல் விரைவில் கல்யாணம், உடனே குழந்தை என ராஜியை தன்னுடைய சுயலாபதிற்காக பயன்படுத்திவிட்டார்.
அடுத்த இலக்கு இளா, சுடர்கொடி திருமணம் தான். இந்த திருமணம் தன்னை எப்போதும் பிடித்து வைக்கும் என நினைத்தான் அகத்தியன். இது எதுவும் எழிலுக்கு தெரியவில்லை.
எழில் உதாசீனம் அறிந்தது தான் என்றாலும் இளாவினது கண்டுகொள்ளாத தன்மையாக இருந்தாலும் அவனின் மீதான ஆசை ஷக்தியை சற்றே இளக வைத்திருந்தது.
ஷக்திக்கு இளாவின் மீது உண்டான தன்னுடைய ஈர்ப்பை அவனிடம் காண்பித்த பொழுது எந்த ஈர்ப்பின் அளவை உணர்ந்துகொண்டாள்.
ஒரே கல்லூரி. நிர்வாகத்துறை படிப்பு தான் படித்தார்கள். அது ஷக்திக்கு இரண்டாம் வருடம்.
அங்கே இளவேந்தன் முதுகலை படிப்பில் இருக்க அவனை அங்கே அவனின் ஆளுமையை கொஞ்சமாய் கவனிக்க ஆரம்பித்தவளின் மனது தடம் புரண்டது.
எழிலை போல, மற்றவர்களை போல தன்னை அவமதித்து பேசுபவன் இல்லை என்பதால் இளவேந்தன் மீது நம்பிக்கை வேறு அவன் பக்கம் கவனம் செலுத்த வைத்தது.
பிடிக்கவில்லை என்றாலும் காட்டிக்கொள்ளாதவன் ஆகிற்றே. அதை உணராமல் போனாள் ஷக்தி.
அவனை சந்திக்கும் தருணங்களை எதிர்பார்த்து இருக்க அவனே ஷக்தியை அழைத்துவிட்டான்.
அவனை படபடக்கும் இதயத்துடன் நெருங்கியவள் தன்னிடம் என்ன பேச போகிறானோ என்னும் ஆர்வத்துடன் பார்த்து நிற்க,
“என்ன என்னையும் உன் அப்பாவை மாதிரி நினைச்சியா?…” என்றதும் முகம் சுருக்கினாள்.
“புரியலையா? நீ உன் அம்மாவை மாதிரி. என்னை ட்ரை பன்றன்னு புரியுது. ஆனா உன்னை கட்டிக்கவெல்லாம் முடியாது…” என்றான் இகழ்ச்சியாக.
அதற்கு மேலும் பேசியவனை கலங்கி போய் பார்த்தவள் அதனை காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு மேல் கீழ் பார்வையை கொடுத்தாள்.
“இதுதான் உன்னோட புத்தி. உன்னோட பேச்சே உன் குடும்பத்து ரத்தம் உனக்கும் இருக்குன்னு காமிச்சிட்டதே? தேங்க் காட். நான் தான் தப்பா சூஸ் பண்ணிட்டேன்…” என்றாள் பதிலடியாக.
“உனக்கு இவ்வளவு பேச்சா? என்னை அப்படி பார்த்துட்டு?…” என இளவேந்தனும் கோபப்பட,
“ஆமா, என்னை பேசும் போது உனக்கு இனிச்சதா? வாங்கிக்கோ. எனக்கு இனி நீயும் தூசி தான்…”
ஷக்தி சொல்லிவிட்டு முறைத்து செல்ல இளவேந்தன் ஆத்திரம் தாளாமல் இன்னும் சத்தமாய் ஜெகதாம்பாளை சொல்லி சொல்லி பேச கையில் இருந்த புத்தகத்தை அவன் மீது விட்டெறிந்தாள்.
இதை கொஞ்சமும் எதிர்பாராதவன் அதிர்ச்சியில் இருக்க விழுந்த புத்தகத்தை கூட எடுக்காது கிளம்பிவிட்டாள்.
வீட்டில் கேட்டும் பதில் இல்லை. அவனின் பேச்சை ஜீரணிக்க முடியவில்லை. அத்தனை கோபம்.
கடைசியில் நீயும் இப்படித்தானா என வெறுத்து போய் இருந்தாள். காதலாவது ஒன்றாவது என கசந்துவிட்டது.
இனி இப்படி ஒரு தவறை செய்ய போவதில்லை என்னும் முடிவிற்கு வந்த பின்னர் தான் தெளிந்தாள்.
அதன் பின்னர் மனது இலகுவாய் உணர ஆரம்பிக்க இளாவும் அவளின் மனதில் சிறு புள்ளியாய் சுருங்கி காணாமல் போனான்.
அவனை கண்டாலும் அந்த அலட்சிய பார்வை தான் அவனுக்கும். அதில் இளாவின் மனது சுணங்கினாலும் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை. போ என்றுவிட்டான்.
இவர்கள் வாழ்க்கை இப்படியே தான் நகரும் என்றிருக்க அகத்தியன் ரூபத்தில் ஆரம்பித்தது மணிவாசகத்தின் உயிருக்கு ஆபத்து.
கோவில் சிலையை கடத்த முயற்சி. முதல் முயற்சியே பிடிபட்டு போக காவல்துறை அகத்தியன் என்றதுமே பின்வாங்கி நின்றனர்.
என்னதான் நேர்மையான அரசியல்வாதியாக இருந்தாலும் தன் மனைவியின் தம்பியை யார் விட்டுக்கொடுப்பார்கள் என நினைத்து தயங்கினார்கள்.
விஷயம் டெல்லி சென்றிருந்த மணிவாசகத்திற்கு தெரிவிக்கப்பட எத்தனை கவனமாக இருந்தும் இப்படி ஏமாற்றி இருக்கிறானே என ஆத்திரம் கொண்டவர் தான் வரும் வரை அகத்தியனை கவனிக்கும்படி சொல்லியிருந்தார்.
அங்கே தவறு செய்தது மணிவாசகம். அந்த நிமிடம் கைது நடவடிக்கையை மேற்கொள்ள சொல்லாமல் தான் வந்து தெரிந்த பின் நடவடிக்கை எடுக்கலாம் என நினைத்துவிட்டார்.
நினைவு தவறி விதி முன் நின்றது. கணவன் மனைவி இருவரையும் சேர்த்தே கொண்டு சென்றது.
உடனடியாக டெல்லி சென்ற வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்ட செய்தி அறிந்த அகத்தியனுக்கு அதற்கு மேல் யோசிக்கமுடியவில்லை.
விஷயம் இன்னும் ரகசியம் காக்கப்பட்டிருந்தது. அத்தனை அதிகமாய் வெளியே தெரியாமல், குடும்பத்தினருக்கும் தெரியாமல் இருக்க அது வசதியாய் போய்விட்டது அகத்தியனுக்கு.
ஷக்திக்கு காய்ச்சல் போல இருக்க அவளை வீட்டில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு காரை எடுக்க சொல்லி கோவிலுக்கு சென்ற ஜெகதாம்பாள் அப்படியே கணவனுக்கு இன்ப அதிர்ச்சி தர விமான நிலையத்திற்கும் சென்றார்.
எப்போதாவது இப்படி செல்பவர் தான். அன்றும் செல்ல இருவருமாக ஷக்திக்கு அதிர்ச்சியை தந்தார்கள் தங்கள் உயிரை இழந்து.