அந்த ஆள் அரவமற்ற பகுதியில் நயவஞ்சகத்துடன் காத்திருந்தான் அகத்தியன்.
எத்தனை வருட பழியுணர்ச்சி. இனியும் தாமதித்தால் தான் கம்பி என்ன போவது உறுதி என தெரிந்துவிட்டது.
முதலில் தன்னை பேண வேண்டும். அதன் பின்பு தான் அக்காவாவது, மச்சானாவது என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.
என்றைக்கு ஜெகதாம்பாள் மணிவாசகத்திடம் உண்மையை சொன்னாரோ அன்றிலிருந்தே அகத்தியனின் வாழ்க்கை மணிவாசகத்தின் பார்வையில் என்று ஆகிவிட்டது.
வீட்டிற்கு தெரிகிறது இல்லை அது வேறு. ஆனால் அதிகாரம் முழுமையும் மணிவாசகத்திடம் இருக்க அவரின் பார்வைக்கு தெரியாதளவிற்கு அடக்கித்தான் வாசித்தான் அகத்தியன்.
மணிவாசகம் எடைபோட்டிருந்த அளவிற்கு அகத்தியன் சாதாரணப்பட்டவனாக இல்லை.
அவரையும் மீறிய செயல்கள் அகத்தியன் செய்துகொண்டு தான் இருந்தான் அவரின் கவனத்திற்கு வந்துவிடாமல் மிக கவனமாக.
ஒழுக்க வேடம் பூண்டது குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக. ஆனால் வேடம் வேடம் மட்டுமே. தன் புள்ளிகளை எதற்கும் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
பிஞ்சிலேயே பழுத்தது என்பதற்கிணங்க அகத்தியன் வளரும் பொழுதே மோசமாய் வளைந்து போனான்.
இப்போது இப்படி இந்த விஷயம் எங்கணம் பிசறியது என்றெல்லாம் யோசிக்கவில்லை அவன்.
தாமதிக்கும் நிமிடங்கள் தன் தலைக்கு தான் ஆபத்து. ஒரு விஷயத்தை கிளறினால் தொட்டு தொட்டு அடுத்தடுத்து வெளிவரும் அபாயம்.
ஏற்கனவே ஆவுடையப்பனின் நேரடி வாரிசாக இருந்தும் அரசியலில் நுழைய முடியவில்லை.
மணிவாசகத்தின் மேல் உள்ள அபிமானமும், அவரின் ஆற்றலும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்க எதிர்த்துக்கொண்டும் கேட்க முடியவில்லை.
கட்சியின் பொறுப்பாளராக வேறு எந்த பதவியும் இன்றி கட்சி பணிகளை மட்டுமே செய்ய முடிந்தது. சூட்சும புத்தி கொண்ட அகத்தியனை மணிவாசகம் லேசில் விட்டுவிட்டார்.
மணிவாசகத்தின் வாகனத்திற்காக காத்துக்கொண்டு இருந்தான் அகத்தியன். தூரத்தில் வந்துகொண்டிருந்தது.
கையில் இருந்த போனில் லொகேஷனை பார்த்துக்கொண்டே இருந்தவன் அடுத்த செயலுக்கு உத்தரவிட அதுவரை சாலையில் விளக்கின்றி மறைந்திருந்த லாரி திடீரென்று உயிர்பெற்று அவர்கள் வந்த கார் மீது மோதியது.
எப்போதும் அதிகமாய் பாதுகாப்பென்று வைத்துக்கொள்ளாத மனிதர். தன்னை அழைக்க வந்த காரில் வராமல் மனைவியுனுடையதில் வந்துவிட்டார்.
எப்போதும் அனைவரும் ஒரே போல இருக்கமாட்டார்களே. விலைபோன ட்ரைவரின் சதி இங்கே அகத்தியனுக்கு சாதகமாய். இத்தனை வருடங்கள் கை நீட்டி வாங்கிய சம்பளத்தில் ரத்தக்கறை படிந்தது.
சந்தோஷமாய் பேசியபடி வந்தவர்களின் ஓலம் சத்தமற்ற நெடுஞ்சாலையில் காற்றில் கலந்துவிட்டது.
கதவையும் திறக்கமுடியாமல் இருவரும் போராட இடித்த லாரி பின்னால் தள்ளி மரத்தில் மோதி நெருக்கிய சமயம் தான் இது திட்டமிடப்பட்டது என்றே உணர்ந்தார் மணிவாசகம்.
“அம்பாள்…” என மனைவியின் கையை பற்றியவர் எப்படியாவது தப்பிக்கவேண்டும் என்ற உந்துதலில் ட்ரைவரை பார்க்க அவனும் மயங்கி இருந்தான்.
“அம்பாள், அம்பாள். இங்க பாரு…” என அழைக்கும் பொழுதே யாரோ வருவது தெரிந்தது.
மருத்துவமனை வாகனம் தான். நிம்மதியுடன் உயிர் பிழைப்போம் என நினைத்திருக்க வந்தவர்கள் மணிவாசகத்தை மட்டுமே தூக்கி சென்றனர்.
அதை உணரும் நிலையில் அவரும் இல்லை. காப்பாற்ற யாரோ வந்துவிட்ட ஆசுவாசம் சுயநினைவை இழக்க செய்ய அதுதான் அவர் கடைசியாக மனைவியை பார்த்த நிமிடம்.
மீண்டும் நினைவு திரும்பும் நேரம் மூச்சு திணற கண்களை திறக்க முயன்றார் மணிவாசகம்.
“உன்னை முன்னாடியே முடிச்சிருக்கனும். இப்ப வந்த புத்தி அப்ப வந்திருந்த இந்நேரம் நான் அமைச்சரா இருந்திருப்பேன். தப்பு பண்ணிட்டேன்…” என சொல்லி அவரின் மூச்சை நிறுத்த அகத்தியனின் குரலில் திடுக்கிட்டார் மணிவாசகம்.
உயிர் பிரியும் நேரம் மெல்ல விழிகளை திறந்து பார்த்தவருக்கு அகத்தியனின் கொடூரமுகம் புலப்பட பார்த்துக்கொண்டே கண்ணை மூடினார்.
முடிந்தது. அகத்தியனின் திட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றது. எழிலுக்கு அழைத்து விவரத்தை சொல்ல அலறிக்கொண்டு கிளம்பினான் எழில்.
“மருமகனே எல்லாம் அவளால. அந்த ஜெகதா தான் போய் தன்னோட கூட்டிட்டு வந்துருக்கா. இல்லைன்னா அரசாங்க வண்டில வந்திருந்தா இப்படி ஆயிருக்குமா?…” என அந்த நேரத்திலும் எழிலை தூண்டிவிட,
“அவ அந்த காருக்குள்ளையே தான் கிடக்கா. என்னோட அக்கா வாழ்க்கையை நாசமக்கினவ. அவளை நான் காப்பாத்துவேனா? ஆனா அவளை நம்பி போய் இப்ப நம்ம எல்லாரையும் விட்டு போய்ட்டாரே என் மச்சான்…” என அழுது ஓலம் போட எழில் அதை நம்பினான்.
“மாமா, இதை அம்மாக்கிட்ட எப்படி சொல்லுவேன்? அம்மாவால தாங்க முடியுமா?…”
“அதான் மருமகனே உங்களுக்கு சொன்னேன். நான் நேரா ஹாஸ்பிட்டல் போறேன். அங்க வந்துருங்க…” என்றவன் வானம் மருத்துவமனைக்கு செல்லாமல் வேறொரு தனியார் மருத்தவமனைக்கு சென்றான்.
தன் எண்ணம் நிறைவேற வேண்டுமென்றால் வானம் எப்படி தன்னிசைக்கு ஆடும்? வாய்ப்பிருக்காதே என நினைத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கே வேலைகள் துரிதமாக்கப்பட்டது.
வானம் மருத்துவமனையில் ஏற்கனவே வேறு விஷயத்திற்கு சிலரை ஏற்பாடு செய்திருந்தான் தான். ஆனாலும் மணிவாசகத்தை அங்கே கொண்டு செல்ல முடியாது.
திட்டங்கள் சறுக்கும் வாய்ப்பிருக்க வேறு மருத்துவமனைக்கு வந்து விபத்தினால் ஏற்பட்ட மாரடைப்பு என சான்றிதழையும் பெற்றுக்கொண்டான் அகத்தியன்.
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு கூட்டம் கூடிவிட மற்ற நடைமுறைகள் எல்லாம் அவசரகதியில் முடித்துக்கொண்டு அமைச்சர் வீட்டிற்கு அதாவது வடிவழகி இல்லத்திற்கு மணிவாசகத்தின் உடல் எடுத்து செல்லப்பட்டது.
அத்தனைக்கும் பணம். உயிருடன் இருந்தவரைக்கும் நெருங்கமுடியாத மனிதரின் உடலை கொண்டு அரசியல் செய்தான் அகத்தியன்.
அரசியல் நாட்டில் மட்டுமா? வீட்டு அரசியலும் கூட. குடும்பத்தினரின் அழுகையில் நடுநாயகமாக மணிவாசகத்தை கிடத்திய அகத்தியன் அடுத்தடுத்து தான் நினைத்ததை செயல்படுத்த ஆரம்பித்தான்.
ஷக்தி அவசரமாக காரை எடுத்துக்கொண்டு வெளியேறிய விஷயம் அங்கிருந்த கூர்க்காவின் மூலம் ஏற்கனவே கேள்விப்பட்ட அகத்தியனின் நரி மூளை நர்த்தனம் ஆட ஆரம்பித்தது.
பொன்னாசை, மண்ணாசை அடைந்துவிட்டதொரு திருப்தி. அந்த வீட்டில் இனி அகத்தியனின் ராஜாங்கம் தான். அடுத்தது அந்த பெண்ணின் மீதான ஆசை.
தன் அக்காவின் குடும்பத்தினரும் தனது கைப்பாவையாக இருக்க நினைத்ததை சாதித்துக்கொள்ளும் திறமை அகத்தியனிடம் இருந்தது.
எழில் மூலம் விஷயமறிந்த வடிவழகியும் மணிவாசகம் இறப்பின் காரணம் ஜெகதாம்பாள் என நினைத்தார்கள்.
அத்தனைபேரையும் அப்படி நினைக்க வைத்து மந்திரவாதியாய் ஆட்டிப்படைத்தான் அகத்தியன்.
இல்லை என்றால் மணிவாசகத்திற்கு பாதுகாப்பாக பின்னால் வந்த காவல்துறையே அகத்தியனின் பேச்சிற்கு கட்டுப்பட்டிருக்குமா?
ஜெகதாம்பாளுக்கு உதவ நினைக்க அங்கேயே அவர்களை விலை பேசினான் அகத்தியன்.
அடுத்த ஆட்சி தன்னுடைய அதிகாரத்தில் தான். வரவிருக்கும் தேர்தலில் தான் தான் என சொல்லி மாற்ற அவர்களும் தங்கள் பல்லை காட்டி ஒப்புதல் தந்து உயிரை எடுக்க காவலாய் இருந்தார்கள்.
அங்கே அதர்மத்தின் சுவடுகள் தர்மத்தை கரும் நிழல்கொண்டு மூடியிருக்க சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையின் வெளிச்சத்தை தேடி ஓடிக்கொண்டிருந்தாள் ஷக்தி.
வீட்டில் இரவு உணவை முடிக்க தாய், தந்தைக்காக காத்திருந்த வேளை தாயின் அலைபேசியில் இருந்து போன்.
வீடியோவில் நிலைகுலைந்து காரின் அடியில் கிடந்த தாயின் உருவம் சரியாக தெரியாமல் போக,
“ம்மா என்னாச்சு?…” என அலறினாள்.
வீட்டில் வேலைக்கு உள்ளவர்கள் அனைவருமே வந்து எட்டி பார்க்க எங்கே என்னவென்று தெரியாமல் தடுமாறி கதறியவள் தாய் அனுப்பிய லொகேஷனை கொண்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் தன்னை பின்தொடரும் அபாயத்தை உணராது.
செல்லும் வழியெல்லாம் வானம் மருத்துவமனைக்கும், ஜி.ஹெச்க்கும் போன் செய்ய மணிவாசகத்தின் மரணத்தினால் உண்டான சலசலப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படாததை போல இருந்தது.
மீண்டும் மீண்டும் வானம் மருத்துவமனைக்கு அழைக்க அதற்குள் அகத்தியன் அங்கே நால்வரை விலைக்கு வாங்கியிருந்தான்.
ஏற்கனவே மணிவாசகம் தான் அங்கே இன்னொரு நிர்வாகி என இருக்க இப்போது அவரின் இறப்பில் அங்கேயும் பரபரப்பு.
ஷேஷா ஊரில் இல்லாத காரணத்தினால் மேனேஜ்மென்ட்டில் இருந்தவர்கள், மற்றும் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் என அங்கே அஞ்சலி செலுத்த கிளம்பி சென்றுவிட இங்கே அகத்தியனின் ஆட்கள் ஷக்தியை அலைகழித்தார்கள்.
தானே தாயை அழைத்துக்கொண்டு செல்லலாமா என நினைக்க அங்கோ அவர் உயிர் பெரும் நிலையில் இல்லை.
அழுகவும் கூட நேரமின்றி தாயை அந்த நசுங்கிய காரில் இருந்து இறக்கியவள் ரோட்டில் இழுத்துக்கொண்டு சென்றாள்.
“வலிக்குது ஷக்திம்மா…” என அரற்றியவரின் தீனமான முணங்கல் மகளை உயிரோடு பிடுங்கியது.
“அப்பா எங்கம்மா?…” என கேட்க பதில் சொல்லும் நிலையில் இல்லை ஜெகதாம்பாள்.
காரை கிளப்பிக்கொண்டு மருத்துவமனைக்கு வர அங்கே ஆட்கள் கூட அவ்வளவாக இருப்பதாக தெரியவில்லை.
உள்ளே செல்லும் பொழுதே அங்கிருந்த நர்ஸ் டாக்டர்ஸ் ஷக்தியை எதிர்பார்த்ததை போல தெரியாதவரிடம் நடந்துகொள்வதை போல பேச உயிர் போனது ஷக்திக்கு.
“முதல்ல ட்ரீட்மென்ட் எடுங்க ப்ளீஸ்…” என கெஞ்சினாள்.
“எங்கப்பா இந்த ட்ரஸ்ட்டோட ஒன் ஆஃப் தி ஷேர் பெர்சன். எங்கம்மாவுக்கு ட்ரீட்மென்ட் குடுக்க முடியாதுன்னு எப்படி சொல்ல முடியுது?…”
“மேடம், எங்களுக்கு புரியுது. ஆனா இங்க எங்களால எதுவும் செய்ய முடியாது. நீங்க சொன்ன மணிவாசகம் ஸார் மாரடைப்பால தவறிட்டார். எங்க மேனேஜ்மென்ட்ல இருந்து ஆபீசர்ஸ் அங்க போய்ட்டாங்க…” என்றதுமே தலை சுழன்றது.
“அப்பா…” அழுதுகொண்டே கீழே மடங்கி விழுந்தவளின் அழுகைக்கு கூட இறங்காமல் நின்றார்கள் அவர்கள்.