எமர்ஜென்சி வார்ட். அங்கே அகத்தியனின் தற்காலிக விசுவாசிகள் ஷக்தியை வார்த்தைகளால் கூறுபோட்டனர்.
“அட்லீஸ்ட் பர்ஸ்ட் எய்ட் குடுங்க. இது ஷேஷாவுக்கு தெரிஞ்சா உங்களுக்கு நல்லதில்லை…” என்று மிரட்டவும் செய்தாள்.
“அதுக்காக தான் நாங்களும் யோசிக்கிறோம் ரூல்ஸ் ரூல்ஸ் தான். யாரா இருந்தாலும். இல்லைன்னா எங்க பாஸ் எங்களை உண்டில்லைன்னு பண்ணிடுவார்…”
“நீங்கலாம் மனுஷங்களா?…” என கொதித்தாள்.
“ஹலோ, பார்க்க வந்திருக்கறது ஓசி ட்ரீட்மென்ட். இதுல பேச்சு வேற?…” என இகழ்ச்சியாக பேச,
“மைன்ட் யூர் வேர்ட்ஸ். யார் ஓசில வந்தா? அப்போ பணம் கட்டினா ட்ரீட்மென்ட் பார்ப்பீங்க தானே?…”
“எஸ், கண்டிப்பா…”
நொடியும் தாமதிக்காது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுத்து அவர்களின் முன்னால் நீட்டியவள்,
“இப்ப இதை வச்சு ஆரம்பிங்க. நான் வீட்டுக்கு போய் பணம் எடுத்துட்டு வரேன்…” என சொல்லவும் அவர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துவிட்டு பின் தலையசைப்புடன் சம்மதித்தனர்.
காரில் இருந்தவரை ஸ்ட்ரேக்சரில் மாற்ற ஜெகதாம்பாள் மகளை பிடித்த கையை விடவில்லை.
“ஷக்தி…” என அழுதவர் தாகத்திற்கும் தவிக்க, மகளின் அந்த நிலை வேதனை அளித்தது.
“ம்மா, நான் வீட்டுக்கு போய்ட்டு உடனே வரேன். ப்ளீஸ்ம்மா…”
“சீக்கிரம் போங்க. இவங்களோட வேற மெடிக்கல் சர்டிபிகேட்ஸ் இருந்தா கொண்டு வாங்க. ட்ரீட்மென்ட் குடுக்க வசதியா இருக்கும்…” எனவும் ஷக்தியும் தாயை அணைத்து விடுவித்து உடனே கிளம்பினாள்.
அங்கே அவளின் கார் வளாகத்தை விட்டு வெளியேற இங்கே ஜெகதாம்பாளின் உயிர் பிரிய துவங்கியது.
காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தவளின் மனதெல்லாம் தகப்பனின் நினைவில் கண்ணீரில் மூழ்கியது.
இனி தன்னால் அங்கே சென்று பார்க்க முடியுமா என்னும் எண்ணம் வேறு அவளை வதைக்க இப்போது தாயை முதலில் காக்க வேண்டும் என வேகமாய் காரை செலுத்தினாள்.
வீட்டில் கூர்க்கா இருப்பதை போல தெரியவில்லை. தான் கிளம்பும் பொழுது இங்கே தானே இருந்தான் என நினைத்துக்கொண்டே காரை வாசலில் விட்டு கேட்டை திறந்து உள்ளே சென்றாள்.
வீடும் இருளில் மூழ்கி இருக்க ஒருவரும் இல்லை அங்கே. பூட்டும் போடப்பட்டு இருந்தது.
பிறந்ததில் இருந்து தான் வாழ்ந்து வந்த வீடு. இத்தனை வருடத்தில் இப்படி இருட்டில் மூழ்கவில்லை.
மனதிற்குள் என்னவோ தவறாய் தோன்ற பயம் நெஞ்சை கவ்வியது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாதவள். இப்போது அடுத்தடுத்து அடி. மரண அடி.
வலித்தது. ஆனால் தொய்ந்து அமரும் நேரமல்லவே. தன்னுடைய உடமைகளில் இருந்து பணம், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் என அனைத்தும் உள்ளிருக்க செய்வதறியாமல் நின்றவளுக்கு அழுகையை தவிர வேறு வழி இல்லை.
இதை நிச்சயம் அந்த குடும்பத்தினர் தான் செய்திருக்க வேண்டும். ஆனால் ஏன் இப்போது என புரியாமல் கேட்டை விட்டு வெளியே வந்தவள் காரை பார்க்க அது அங்கே இல்லை.
“ஐயோ கார்…” என அங்குமிங்கும் ஓடி பார்த்தாள் தெருவில்.
காரிலேயே சாவியை வைத்துவிட்டு வந்திருக்க யாரேனும் எடுத்து சென்றிருப்பார்களோ என நினைத்து அவள் தேட முன்னே வந்தான் எழில்.
“நீ இன்னும் கிளம்பலை? இங்க என்ன பன்ற?…” என கேட்டவனை அதிர்ந்து பார்த்தாள். பார்த்ததும் அழுகை வர,
“அம்மாவுக்கு ஆக்ஸிடென்ட். அப்பா, அப்பா…” என பேசமுடியாமல் கதறி அழ,
அவனின் பேச்சில் துக்கமோ, பரிதாபமோ இல்லை. மாறாக வெறுப்பும், வன்மமுமே இருந்தது.
“அதான் அம்மாவும், மகளுமா சேர்ந்து அப்பாவை கொன்னுட்டீங்களே? உயிரோடயாவது இருந்தாரேன்னு நினைச்சேன். ஆனா நீயும், உன் அம்மாவும் அவர் உயிரை பறிச்சுட்டீங்களே?…”
“இல்ல, இல்லண்ணா…”
“ச்சே, வாயை மூடு. அசிங்கத்துக்கு பிறந்துட்டு என்னை அண்ணான்னு உறவு கொண்டாடின தொலைச்சிடுவேன். என்ன அப்பா போனதும் அப்படியே எங்கக்கிட்ட ஒட்டிக்கலாம்ன்னு பார்க்கிறியா? இப்படியே போய்டு…”
“எங்க போவேன்? எங்க போக சொல்றீங்க? சரி அண்ணான்னு கூப்பிடலை. போய்டறோம். ஆனா என்னை வீட்டுக்குள்ள போக விடுங்க. அங்க அம்மா உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. அவங்க மெடிக்கல் டாக்குமென்ட், என்னோட கார்ட்ஸ் எடுத்துட்டு போய்டறேன். ப்ளீஸ் ப்ளீஸ் உங்களை கெஞ்சி கேட்கறேன்…” என அவனின் காலை பிடிக்க எட்டி உதைத்தான் எழில்.
“என்னை தொட கூட அருகதை இல்லை உனக்கு. பக்கத்துல வந்த ஒரே அறை. சாவடிச்சுடுவேன். எங்கையாவது போய் தொலைன்னு தான் விட்டுவைக்கறேன். இனி எங்கப்பாவோட ஒரு பைசா கூட உனக்கு இல்லை. இந்த உரிமை கொண்டாடிட்டு வந்த?…”
“வேண்டாம், உங்க காசு பணம் எதுவும் வேண்டாம். ஆனா அம்மாவை மட்டும் காப்பாத்தி குடுங்க. ப்ளீஸ். நாங்க போய்டறோம்…”
“அழு, நல்லா அழு. இப்படித்தான எங்கம்மாவும், நாங்களும் தவிச்சிருப்போம். நல்லா இத்தனை வருஷம் ஏகபோகமா தான வாழ்ந்த?…” என சொல்லும் பொழுதே வடிவழகியிடம் இருந்து போன் வந்தது எழிலுக்கு.
“நான் நான் பேசறேன். அவங்க சொன்னா கேட்பீங்க தானே? நான் பேசறேன். ஒரே ஒருதடவை. எங்கம்மாவை காப்பாத்தனும். நாங்க போய்டறோம். கண்டிப்பா அங்க வரமாட்டோம்…” என்று கதறி துடிக்க இரக்கமற்று வேடிக்கை பார்த்தான் எழில்.
“எங்கம்மாக்கிட்ட மன்னிப்பு கேட்பியா நீ? எத்தனை எகத்தாளம் பண்ணின?….” என அவள் சூழ்நிலையை பயன்படுத்தினான்.
“கேட்கறேன், கேட்கறேன்…” என அழவும் போனை நீட்டினான்.
“ம்மா நான் ஷக்தி பேசறேன். எங்கம்மா, அம்மாவை காப்பாத்தனும். ப்ளீஸ். இவங்கட்ட சொல்லுங்க. உதவி பண்ணுங்க. எனக்கு அம்மா மட்டும் தான் இருக்காங்க இப்போ. இனி இங்க நாங்க வரவே மாட்டோம். எங்கையாவது போய்டறோம். ப்ளீஸ் ம்மா…”
“என்கிட்டே பேச கூட உனக்கு தகுதி இல்லை. உங்கம்மா என்னோட உரிமையை பறிச்சா. நீ என் பிள்ளைங்களுக்கு சமமா வளர்ந்து அவங்களை அசிங்கப்படுத்தின. உங்களுக்கு மன்னிப்பா. நீ இருந்தா என்ன? இல்லைன்னா என்ன?…” என சொல்லி போனை வைத்துவிட்டார்.
பெண்ணுக்கு பெண்ணே இங்கே இறங்கவில்லை. கொஞ்சமும் ஈரம் இன்றி பேசி வைத்துவிட அடுத்து செய்வதறியாது ஷக்தி ஸ்தம்பித்து போனாள்.
கையில் பத்து பைசா இல்லை. இங்கிருந்து அந்த மருத்துவமனை தூரம். எப்படி செல்வது? ஜெகதாம்பாள் நினைவிலும், மணிவாசகம் நினைவிலும் துடிதுடித்து நின்றாள் நிர்கதியாக.
“இன்னும் இங்க நின்னு உன் அம்மாவையும் சாகடிக்காம போய் சேரு. இதுக்குத்தான் ஊர் உறவுன்னு நாலு சொந்தங்களோட இருக்கற குடும்பத்துல மரியாதையா வாழனும். அடுத்தவங்க வாழ்க்கையை பறிச்சா இப்படித்தான் நீ நிக்கனும்…”
ஷக்தியை பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் வயது பெண்ணை நடு இரவில் இப்படி விட்டு செல்லும் குற்றவுணர்ச்சி இன்றி அந்த வீட்டிற்கு இரண்டு தடியன்களை காவலுக்கு விட்டுவிட்டு கிளம்பிவிட்டான் எழில்.
“ம்மா, கிளம்பும்மா இங்க இருந்து. முதலாளி வைவாரு…” என அவளை அங்கே நிற்கவே அனுமதிக்கவில்லை அவர்கள்.
உண்ணாமல், அழுது, தொய்ந்து, கரைந்து, அலைந்து அங்கிருந்து அவள் மெதுவாய் எட்டெடுத்து வைத்தாள்.
மனது தீயாய் எரிந்துகொண்டு இருந்தது. தன்னுடைய போன் கூட காரிலேயே விட்டிருக்க நிராதரவான தோற்றம். தாயின் நலனை அறிந்துகொள்ள கூட முடியாத துக்கம்.
எல்லாம் சேர்ந்து ஆத்திரம் கிளற, இதை இப்படியே விட போவதில்லை என்று நினைத்தவள் அங்கிருந்த அந்த காவல்நிலையத்தின் பக்கமாய் நடக்க ஆரம்பித்தாள்.
எந்த வகையில் தாங்கள் ஆதரவில்லாமல் போனோம்? சட்டம் உள்ளதே? அது தங்களை காப்பாற்றும் என நினைத்தாள். அந்த சட்டமும் அகத்தியனின் வசம் என அறியாமல்.
திரட்டிய பலத்துடன் இதனை இன்று விடப்போவதில்லை என நடந்து சென்றுகொண்டிருந்தவள் மேல் ஒரு கார் பட்டும்படாமல் இடிக்க கீழே விழுந்துவிட்டாள் ஷக்தி.
தார் ரோட்டில் விழுந்ததில் கையில் சிராய்ப்பு. மனதை போலவே காயமும் எரிந்தது.
எழுந்து நிற்க முயல அதற்குள் யாரோ வந்து முகத்தில் துணியை அழுத்த மயங்கியது மட்டுமே அவள் அறிவாள்.
கண் திறந்த நேரம் எவ்விடம் என அறியமுடியாத இருட்டில் வியர்த்த தன் முகத்தை கை கொண்டு துடைத்தவள் அமர்ந்த பொழுது தன்னில் கண்ட வித்யாசம்.
“ஐயோ…” அலறினாள் ஷக்தி.
“யாரு, இங்க யார் இருக்கா?…” என கேட்டுக்கொண்டே கண்ணுக்கு தட்டுப்பட்ட மிக மெல்லிய வெளிச்சத்தில் கை கொண்டு துழாவியபடி தன்னையும் மறைத்துக்கொண்டு துணி ஏதேனும் கிடைக்குமா என தேடி பரிதவித்தவள் நெஞ்சுக்குழி வற்றியது.
இல்லை, எதுவும் நடக்கவில்லை. ஆனால் உடையின்றி தான். கூசி போனாள் ஷக்தி.
யார் எவர் என தெரியாமல் அவள் பாடுபட சட்டென அறை முழுவதும் வெளிச்சம்.
தன்னை குறுக்கிக்கொண்டு வேகமாய் ஓடி அந்த மறைவின் பின்னால் ஒளிந்துகொள்ள உள்ளே வந்தவனை கண்டு உயிர் ஒடுங்கியது.
அகத்தியனை பற்றி ஓரளவு அறிவாள். அவனால் தான் தாய், தகப்பன் திருமணம். அகத்தியனின் பார்வையும் பிடிக்காமல் அவனையும் பிடிக்காமல் காணும் இடமெல்லாம் எரித்து தான் பார்ப்பாள்.
ஆனால் இன்று மகள் வயதிருக்கும் தன்னை இப்படி ஒரு கோலத்தில் நிற்க வைத்தது இவனா என நம்பமுடியாமல் மூளை மறுத்தது.