“உங்கம்மா செத்து ரொம்ப நேரமாச்சு குட்டி. நீ அழுது, அடம்பிடிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்கப்பன் இருந்ததனால இத்தனை நாள் நீ தப்பிச்ச. இல்லன்னா என்னைக்கோ உன்னை என்கிட்டே கொண்டு வந்திருப்பேனே?…” என்றவனின் அசிங்கமான பேச்சில் குறுகி போய் இருந்தாள் ஷக்தி.
தாயும் விட்டு சென்றுவிட்டாரா? தனக்கு யாருமில்லையா இங்கே? யாருமே இல்லையா? விக்கித்து போனாள்.
வீட்டு பெரியவரின் முன்னால் நடந்த திருமணத்தையே கொச்சைப்படுத்தி பேசியவர்கள்.
தன்னிடமே உன் தாய் தாலி கட்டாமல் வாழ்கிறாள் என அறியாத வயதில் தன்னிடம் ஏதேதோ பொய் சொல்லியவர்கள்.
அவர்களை சேர்ந்தவன் இப்படி இல்லாமல் வேறு எப்படி இருப்பான்? அகத்தியன் தான் அத்தனைக்கும் ஆரம்பப்புள்ளி.
‘உன் அம்மா வாழ்ந்த வாழ்கையை நீ என்னுடன் வாழ் ஊருக்கு தெரியாமல்’ என்னும் மனித மிருகத்தை கொன்றாலும் தவறில்லை என எண்ணியவள் அவன் முன்னால் போகமுடியாத துர்பாக்கிய நிலை.
ஷக்தியின் கெஞ்சல்களுக்கு எல்லாம் செவி சாய்ப்பவனா அகத்தியன்? நேரம் கடக்க தானும் இங்கிருக்க முடியாது, தன்னை தேடுவார்கள் என்று கிளம்பவேண்டிய அவசரத்தில் ஷக்தியின் கையை பிடித்து வெளியே இழுக்க பார்த்தான்.
“ச்சீ, என் பொண்ணும் நீயும் ஒண்ணா? இதுக்கே உன்னை என்ன பன்றேன் பாரு. கண்ணு முழிக்கட்டும்ன்னு காத்திருந்தா பேசிட்டே இருக்க?…” என பலம்கொண்ட மட்டும் இழுக்க இழுத்த கையை கெட்டியாய் பிடித்தாள் ஷக்தி.
“உன்னை விட்டா தானடா?…” என அகத்தியனின் கையை தான் பிடித்து இழுத்தவள் இழுத்த வேகத்தில் சுவற்றில் மோதவிட்டு கீழே தள்ளினாள்.
நெற்றியில் ரத்தம் வெளியேற ஆரம்பிக்க மறைவில் இருந்துகொண்டே அங்கிருந்த சிறு சிறு பொருட்களை வீசி எரிந்துகொண்டு அவனை பேச,
“ஷக்தி…” என்ற சத்தத்தின் இப்போதும் சர்வமும் ஒடுங்கியது அவளுக்கு.
இளவேந்தன். அவன் முன்னில் தான் இப்படி ஒரு கோலத்தில். உயிர் வாழவே வெறுத்த நேரம்.
தாயும் இல்லை, தகப்பனும் இல்லை. எதற்கு இனி தானும் என எண்ணமே தோன்றிவிட்டது அந்த நொடி.
“எத்தனை பேருடா இருக்கீங்க? இப்படி ஓட ஓட விரட்டறீங்களே? நீங்கலாம் மனுஷங்களா? எங்கையாவது போய்டறேன்னு தான் கெஞ்சினேன். அசிங்கம், அசிங்கம்ன்னு சொல்லி இப்ப நீங்க மட்டும் என்ன பன்றீங்க?…”
ஷக்தியின் கதறல் இளவேந்தனை புரட்டியது. அவள் சொல்லியது நூறு சதவீதம் உண்மை.
கீழே கிடந்த அகத்தியனை பார்த்து ஓடி வந்தவனை கண்டு ஷக்தி பயந்தாள். இனி போராட தன்னுடலில் தெம்பில்லையே.
“வராதடா. வராத. இப்ப என்ன நானும் செத்துடறேன். போதுமா? நிம்மதியா இருங்க….” என வெறி கொண்டு கத்த,
“உன்னை ஒன்னும் பண்ணலை. நீ ஏன் பயப்படற? வெளில வா. இங்க நடந்த எதையும் நான் யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன். சத்தியம். வெளில வா ஷக்தி…”
“வான்னா, எப்படி வருவேன்? என்னால முடியலை. இருட்டை தவிர இப்ப என்னை பாதுகாக்க வேற எதுவும் இல்லை…” என்றவளின் கதறலில் இளவேந்தன் அகத்தியனை அருவருப்பாய் பார்த்தான்.
மணிவாசகத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொருவராய் வர ஆரம்பித்திருந்தார்கள்.
வந்தவர்கள் அகத்தியனை விசாரிக்க, தந்தைக்கு அழைப்பும் செல்லாமல் தேடி வந்தவன் இங்கே ஷக்தியுடன் இப்படி ஒரு கோலத்தில் தந்தையை எதிர்பார்க்கவில்லை.
முதல் அதிர்ச்சி. தந்தை பற்றிய பிம்பம் உடைந்த அதிர்ச்சி. தன் வீட்டில் இப்படி ஒரு பெண் இருக்க இவரால் எப்படி தரம் தாழ்ந்து நடக்க முடிந்தது என அதிர்ச்சியுடன் இருந்தான்.
“இளா, இவளை கட்டி வைடா. விடாதடா…” அகத்தியன் அனத்தினான்.
“வாயை மூடுங்க, இல்லை இப்படியே விட்டுட்டு போய்டுவேன்….” என கத்தியவன் உடைகளை தேடி எடுத்து வந்து அவள் பக்கம் விட்டெறிந்தான்.
அவனிடம் இதை எதிர்பார்க்கவில்லை ஷக்தி. இதோ தன் கடைசி நொடிகள் என மூச்சை அடக்கி மரணத்தை வேண்டி இருந்தவளுக்கு ஆபத்தில் உதவியவனை கண்டு அழுகை தான் வந்தது.
“நீ வெளில வா. இங்க இருக்க வேண்டாம் நீ. முதல்ல கிளம்பு…” என சொல்லிக்கொண்டிருக்க பித்து பிடித்தவள் போல உடை மாற்றி வந்தவள் முகமே காண சகிக்கவில்லை.
“ஷக்தி, இங்க இருந்தா உன்னை சும்மா விடமாட்டாங்க. போய்டு. எங்கையாவது போய்டு. இன்னொருதடவை என்னால உன்னை காப்பாத்த முடியாது…”என சொல்ல கண்ணீர் மட்டுமே அவளிடம்.
“எங்க போனாலும் இவளை விடமாட்டேன். எத்தனை வருஷ ஆசை. இவளை விட்டுடுவேனா?…” என அகத்தியன் கத்திக்கொண்டிருக்க ஷக்தியின் உடல் தூக்கி போட்டது.
எப்படி ரயில்நிலையத்திற்கு வந்தாள் என்றும் கூட அவளுக்கு பிடிபடவில்லை. இன்னும் இரண்டு மூன்றுமணி நேரத்தில் விடிந்துவிடும்.
ஆனால் அஸ்தமித்துவிட்ட தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு பயணப்படவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் அவள்.
இறந்த தாயை கூட சென்று பார்க்கமுடியாமல் யாரோ துரத்த எங்கும் நிற்காமல் ஓடிக்கொண்டு இருந்தாள்.
வந்து சேர்ந்த இடம் மும்பை. முதல்முறை கூட்டமாய் வித்அவுட்டில் ஒரு பயணம். பாத்ரூம் அருகே அந்த நாற்றத்தில் அமர்ந்து வந்தவளுக்கு கடைகோடி மக்களின் நிலைமையை கண்கூடாக கண்ட நிமிடம்.
மனதில் ஒரு பயம் மட்டும் நிரந்தரமாய் அப்பிக்கொண்டது. இனி எந்த அடையாளமும் வேண்டாம். யாரும் வேண்டாம். எதையும் கேட்கவும் வேண்டாம்.
கால்கள் போன தூரத்தில் அவளுடன் பயணம் செய்தவர்கள் வழியே அவளும் உடன் சென்றாள்.
காசும் இன்றி தன்னிடம் எப்போது யார் கேட்பார்களோ என பயந்து பயந்து தன்னை இன்னும் தொடர்கிறார்களோ என பாதி வழியில் இறங்கி நடந்தே அந்த பகுதிக்கு வந்து சேர்ந்தாள்.
கொட்டும் மழையில் நனைந்து ஏற்கனவே காய்ச்சலில் இருந்தவள் மேலும் சுருள அந்த வீட்டின் மாடிப்படியில் மழைக்கு ஒதுங்கினாள்.
அங்கிருந்து ஆரம்பித்தது அவளின் மும்பை வாழ்க்கை. அடைக்கலம் தந்த அந்த பாட்டியே தனது பேத்தியென அறிமுகம் செய்து தன்னுடன் வைத்துக்கொள்ள நக்ஷத்ரவாக தன்னை மாற்றிக்கொண்டவள் அப்படியே வாழவும் ஆரம்பித்தாள்.
———————————————–
மணிவாசகத்தின் மரண செய்தி அறிந்த ஷேஷா உடனே கிளம்ப அங்கிருந்து ஆயத்தமானான்.
அந்த செய்தியும் அவனுக்கு உடனடியாக சேரவில்லை. ஆறுமணி நேரம் கழித்தே விஷயம் சென்று சேர்ந்திருக்க அதற்குள் இங்கே ஒரு குடும்பமே நிலைகுலைந்து போயிருந்தது.
அவனை உடனடி தொடர்புகொள்ள முடியாமல் அடுத்தடுத்த பொறுப்பில் இருந்தவர்கள் கவனம் மணிவாசகத்திடம் இருக்க இங்கே ஜெகதாம்பாள், ஷக்தி இரண்டாம்பட்சமானார்கள்.
முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் அங்கே சென்றிருக்க இங்கே அகத்தியனின் கைகூலிகள் ஜெகதாவை பற்றிய விஷயத்தை மிக தாமதமாகவே அவர்களுக்கு தெரிவித்தார்கள்.
“என்ன காரியம் பண்ணிருக்கீங்க நீங்க? ஏன் அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியாதா? ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க வேண்டியது தானே?…” என மேனேஜ்மென்ட் தரப்பில் இருந்து சிவியார் வார்னிங் கொடுக்கப்பட்டு இருந்தது.
“டாக்டர் அவங்க வரும் போதே ஆல்மோஸ்ட் லாஸ்ட் செகெண்ட்ஸ் கௌண்டிங்க்ல தான் இருந்தாங்க…”
“ஷட் அப் மேன். அட்லீஸ்ட் ஷக்தியை இங்கயே இருக்க சொல்லியிருக்கலாம் தானே?…” என கேட்க யாரிடமும் பதில் இல்லை.
இரண்டு டாக்டர்ஸ், மூன்று செவிலியர்கள். அந்த நேரத்தில் அங்கே நைட் ஷிப்ட் அவர்களின் நேரம். அது தான் அகத்தியனுக்கான நேரம்.
பெரிதாய் பயமில்லை அவர்களுக்கு. அதிகபட்சம் வேலை போகும் என்றளவில் நினைக்க ஷேஷா அத்தனை இலகுவில் அனுமதிப்பானா?
அதுவும் மணிவாசகம் சம்பந்தப்பட்ட விஷயம். உயிர் போன விஷயம். எளிதானவையா?
“ஷக்தி எங்க?…” அவன் வந்ததும் கேட்டது இதை தான்.
ஷேஷா வரும் முன்னே மணிவாசகம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது. அதனால் அங்கே செல்ல கூட இல்லை அவன்.
வந்தது நேராக மருத்துவமனைக்கு. இன்னும் ஜெகதாவின் உடல் அங்கே தான் இருந்தது.
“மேடம் எங்க இருக்காங்கன்னு தெரியலை. இங்க கொண்டு வந்து சேர்த்ததும் திரும்ப வரலைன்னு சொல்றாங்க…”
எல்லோருமே ஷேஷாவின் இந்த ரௌத்திர முகத்தில் மிரண்டு போய் இருந்தனர். அமைதியாய் சில நொடிகள் கூட இல்லை.
பவன் வந்ததுமே அவனின் விசாரணையில் உண்மை புலப்பட்டுவிட ஷேஷா அதிகமாய் நேரம் எடுத்துக்கொள்ளவில்லை.
“இந்த அஞ்சு பேரையும் மெடிக்கல் கவுன்சில்ல கம்ப்ளெயின்ட் பண்ணுங்க ப்ராப்பர் ட்ரீட்மென்ட் குடுக்கலை. இதையும் கேஸ் பைல் பண்ணுங்க. ஆல்மோஸ்ட் இதுவும் கூட மர்டர் அட்டெம்ப்ட் தான்…”
“ஸாரி ஸார். தெரியாம ஒரு அலட்சியத்துல…” என்றவர்களின் எந்த விளக்கத்துக்கும் அவன் செவி சாய்க்கவில்லை.
“இனி இவங்க எங்கயும் வேலை பார்க்க கூடாது. இங்க பிரபஷனல் டிகிரியை கேன்சல் பண்ண ஏற்பாடு பண்ணனும். ப்ரசீட் பண்ணுங்க…” என்றவன்,
“அவுட்…” என அவர்களை விரட்டினான்.
அதன் பின்னர் அங்கிருந்த அத்தனைபேருக்கும் கூடுதல் கண்காணிப்பு, கூடுதல் கவனிப்பு.
ஷக்தியை முதலில் தேட ஆரம்பித்தவனுக்கு எந்த நூலும் கிடைக்கவில்லை. சரி தானே வெளி வரட்டும் என நினைத்த நேரம் அவளின் உறவென சொல்லிக்கொண்டு அறக்கட்டளைக்கு அகத்தியன் நுழைய ஷேஷா சம்மதிக்கவில்லை.
“இங்க வரலாம்ன்னா ஷக்திக்கு அண்ணன்ற முறைல எழிலுக்கு உரிமை இருக்கு. அதுவும் ஷக்தி வரும் வரைக்கும் மட்டும் தான்…” என சொல்லிவிட்டான்.
எழில் பொறுப்பேற்க வெறும் பொம்மையாய் அவனை அந்த இடத்திற்கு அனுமதித்த ஷேஷா,
“பணம் பதவின்னா வேண்டாம்ன்னு ஒதுக்கின உறவை கூட சேர்த்துப்பீங்க போல? அந்த பொண்ணு வேண்டாம். ஆனா அவளுக்கு எழுதி வச்ச சொத்து வேணும். குட்…” என சொல்லி செல்ல எழில் கொதித்து போனான்.
“விடுங்க மருமகனே, அவ வர போறதில்லை. இவனுக்கு ஒரு முடிவை கட்டிட்டு இனி இந்த ட்ரஸ்ட் நம்ம கைவசம். நான் பார்த்துக்கறேன்…” அகத்தியனின் அடுத்த குறி அந்த அறக்கட்டளையானது.
அந்த வருடத்தில் மணிவாசகத்தின் பெயரில் அவரின் இறப்பை கொண்டு அந்த நாற்காலியை தான் அடைந்துவிட்டான் அகத்தியன்.
நடக்காத ஒன்று அறக்கட்டளை ஆசை மட்டுமே. அந்த கனவும் வெறும் கனவாவே இருக்க இன்றளவும் அகத்தியனின் திட்டம் நிறைவேறவில்லை.
———————————————————-
கனமான நினைவுகள் கனவுகளை போலவெல்லாம் இல்லாமல் இன்றும் அந்த வலியை வலிக்க தட்டிவிட்டே சென்றது.
ஷேஷாவின் கைகளுக்குள் இருந்த ஷக்தியின் மனதின் ரணம் இன்னும் மட்டுப்படாதிருக்க வடிவழகியிடம் இருந்து அழைப்பு.
மகனை, அகத்தியனை காப்பாற்ற நினைத்து ஷேஷாவிற்கு அழைக்க அந்த அழைப்பு அகத்தியனின் அநியாயங்களுக்கான சாவியாய் இருந்தது.