“அப்பா உள்ள ரூம்ல இருக்கார். பிரஷர் இருக்குது. அதான் மாத்திரை போட்டு நைட்ல படுக்க சொல்லிட்டோம். நீங்க வரவும் எழுப்பறோம்ன்னு…” என சொல்ல சுடர்விழி சென்று எழுப்பி வந்தாள்.
கீழிருந்த அறையிலிருந்து வெளியே வந்த அகத்தியன் ஷேஷாவை தாண்டி நின்ற ஷக்தியை தான் பார்த்தான்.
அந்த பார்வையை கண்டு ஷேஷா இளவேந்தனை கண்டிப்புடன் பார்த்ததும் தான் இளாவும் கவனித்தான்.
“அப்பா…” என அதட்டவும் அகத்தியன் உறக்கத்திலிருந்து விழிப்பதை போல மகன் பக்கம் திரும்பினான்.
எழில் எதுவும் பேசவில்லை. ஷக்தி, ஷேஷா இருவரையும் பார்க்க விரும்பவில்லை.
அவன் அமர்ந்திருந்த விதம் அதனை காட்டியது. ராஜியும், சுடர்கொடியும் ஓரிடத்தில் சேர்ந்து இருந்தார்கள்.
கிழக்கு வெளுக்க ஆரம்பிப்பதன் அறிகுறியாய் வெளியே கருமேகம் கலைய ஆரம்பித்தது.
அதுவரை வெளியே நின்றிருந்த பவன் வந்து ஷேஷாவின் காதில் என்னவோ சொல்லிவிட்டு அவனை பார்க்க தலையை அசைத்தவன் கண்ணில் சமிஞ்சை செய்ய பவன் மீண்டும் மொபைலை எடுத்து வெளியே சென்றான்.
அவர்களாக பேசட்டும் என ஷேஷா தானாக கேட்கவில்லை. அதே நேரம் அங்கிருந்து கிளம்பவும் இல்லை.
“நானே பேசறேன்…” என வடிவழகி முன்வந்தார்.
“இங்க பாருங்க ஷேஷா உங்களுக்கு இப்ப குடும்பம் இருக்கிற சூழ்நிலை எல்லாம் தெரிஞ்சிருக்கும். முதல்ல இருந்தே இங்க நாங்க, அந்த குடும்பம்…”
“ஆமா, செஞ்சிருப்பான். பிராட். அவன் காசுக்காக செஞ்சிருக்கலாம். அவன் அப்படி ஆள் தான்…” என சொல்ல தலையை ஆட்டியபடி பார் என்னும் விதமாய் எழிலிடம் சுட்டிக்காண்பித்தான் ஷேஷா.
“மாமா என்ன சொல்றீங்க?…” எழில் அகத்தியனிடம் கேட்க,
“மருமகனே…” என்றதற்கு மேல் எந்த வார்த்தைகளும் இல்லை.
இப்படி சிக்கிக்கொண்டோமே என அகத்தியன் விழிக்க இளவேந்தனுக்கு எழிலை பார்க்கவே அச்சமாக இருந்தது.
உண்மை தெரியும் பொழுது எங்கணம் அதை எல்லாம் அவன் தாங்குவான் என உள்ளுக்குள் வலித்தது.
“சொல்லுங்க அகத்தியன், அப்போ அவர் தான் செஞ்சிருப்பாரா? அப்போ நீங்களே அவர் மேல கம்ப்ளைண்ட் செய்யலாமே?….” என கேட்க அகத்தியன் மாட்டிக்கொண்ட பார்வை பார்த்தான்.
“இல்லை, அவன் எங்க இருக்கான்னு தெரியலை. கண்டுபிடிக்கனும். அதுக்கு தான் அவகாசம் வேணும்னு கேட்கறேன். அந்த நாயை எங்க இருந்தாலும் இழுத்துட்டு வருவேன்…”
“வஜ்ரவேலை பிடிச்சா சிலை யார் கடத்தியதுன்னு உண்மை வந்திரும் இல்லையா? …”
“ஆமா, நிச்சயமா…”
“அப்போ அந்த சிரமம் வேண்டாம். வஜ்ரவேலை நானே பிடிச்சு போலீஸ்ல ஹேண்டோவர் பண்ணிடறேன்….”
“இல்ல, இல்ல. வேணாம், வேணாம்….” என வேகமாய் மறுத்து ஓடி வர,
“உங்களுக்கு யாருன்னு தெரிஞ்சா போதுமே? ஏன் இந்த பதட்டம்? தேடற வேலை கூட உங்களுக்கு இல்லை அகத்தியன்…” என சொல்லி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனின் பார்வை அனைவரையும் சுட்டியது.
அதுவரை ஷேஷா, அகத்தியன் இருவரது சம்பாஷணையில் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருந்த எழில் குடும்பத்தினருக்கு அகத்தியனின் இந்த பதட்டத்தில் அதிர்ச்சி.
ஏன் இத்தனை பதட்டம்? யார் சிலையை பதுக்கியது என அறிந்துவிட்டால் விடுதலையான உணர்வு தானே? அதற்கு ஏன் பதறவேண்டும் என இளாவை தவிர ஒட்டுமொத்த குடும்பத்தினரின் மனதும் இதைத்தான் நினைத்தது.
“எழில், எதுவும் செய்யலைன்னு நீங்க சொன்னீங்க. செஞ்சவன் யாரா இருக்கும்ன்னு உங்க மாமா சொல்லியாச்சு. தென் ஆக்ஷன். ஐ’ம் ரைட்?…” ஷேஷா எழிலின் பக்கம் பந்தை நகர்த்தினான்.
“மாமா, என்ன ஆச்சு?…” எழில் கேட்க அவனுக்கு என்ன பதிலை தருவானாம் அகத்தியன்?
“பேசுங்க அகத்தியன். உங்க மருமகன் கேள்விக்கு பதில் சொல்லுங்க…” என ஷேஷா சொல்ல,
“இங்க என்ன நடக்குது?…” வடிவழகி அனைவரையும் பார்த்து கேட்டவர்,
“ஏன் தம்பி வேண்டாம்ன்னு சொல்ற?…” அகத்தியனுக்கு அடுத்த கேள்வி தன் குடும்பத்தினரில் முக்கியமானவரிடம் இருந்து.
“பதில் சொல்லுங்கப்பா அவரும் கேட்கார். அத்தையும் கேட்காங்க. என்ன அமைதியா நிக்கறீங்க?…” மகள் ராஜி அகத்தியனின் அருகே வந்து கையை பிடித்துகொண்டாள்.
“இத்தனைபேர் கேட்டு உங்ககிட்ட பதில் இல்லையா அகத்தியன்?…” ஷேஷா மீண்டும் பேச,
“டேய் நீ ஒன்னும் எங்களுக்கு உதவ வேண்டாம். எந்திச்சு போடா. முதல்ல வீட்டை விட்டு வெளிய போடா…” என அகத்தியன் அத்தனைபேரையும் விட்டுவிட்டு ஷேஷாவிடம் எகிறிக்கொண்டு வர ஷேஷாவிற்கு முன் வந்து நின்றான் பவன்.
“தள்ளி நின்னு பேசுங்க ஸார்…” பவன் ஆளுயரத்திற்கு நிற்க அவனின் தோள் வரைக்கு மட்டும் இருந்த அகத்தியனுக்கு உள்ளுக்குள் நடுக்கம்.
பவனின் தோற்றம் முன்பே பயம் கொடுக்கும். ஒருவரை வீழ்த்த தேவையான அத்தனை பயிற்சிகளையும் கற்று தேர்ந்தவன்.
அவனை எதிர்த்துக்கொண்டு சண்டையா போட முடியும் இந்த வயதில் என பின்வாங்கியவனுக்கு ஷேஷாவிடம் பேச முயற்சி செய்திருக்க கூடாதென காலம் கடந்து நினைத்தான் அகத்தியன்.
இப்போது அவன் ஒரு முடிவோடு வந்திருப்பது தெரிந்தாலும் மறுபக்கம் வஜ்ரவேல் பற்றி பேசியது நெஞ்சை கவ்வியது.
அப்போது எல்லாமே கறந்திருப்பானே? ஆதாரத்துடன் தான் இவன் இறங்கியிருக்கிறான். எந்தளவில் அவனிடம் சிக்கியுள்ளதோ என பயத்துடன் அவனை பார்த்தான்.
“தள்ளி நின்னு பேசுங்க. பக்கத்துல வர கூடாது…” என்ற பவன் ஷக்திக்கு ஒரு நாற்காலியை எடுத்து போட அவள் பார்வை கொண்டு மறுத்து இன்னுமே நின்றாள்.
ஆனாலும் அவளருகே எடுத்து வைத்ததை வைத்தபடி பாதுகாப்பாக பவன் நின்றுகொள்ள ஷக்தியை பார்க்க பார்க்க உள்ளுக்குள் எரிந்தது வடிவழகி, எழில், சுடர் மூவருக்கும்.
“ம்மா…” என உறக்கத்தில் இருந்து எழுந்த எழிலின் மகள் அவளை தேடி வர அவர்களுக்கும் எழில் மகள் அபிநயாவிற்கும் நடுவில் அமர்ந்திருந்த ஷேஷாவின் விழிகள் பளிச்சிட்டது.
“ஹாய்…” என்றான் அபிநயாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவனாக.
கண்ணை கசக்கிக்கொண்டு உறக்கத்தில் இருந்து எழுந்து வந்த பெண் ஷேஷாவின் அழைப்பில் அவனை திரும்பி பார்த்தும் புன்னகைத்தாள்.
அவளின் பள்ளிக்கு ஓரிருமுறை அவன் சென்றிருக்க ஷேஷாவை நன்றாக, அதுவும் நன்முறையில் அடையாளம் தெரிந்திருந்தது.
“கமான்…” ஷேஷா அழைத்ததும் அவனருகே சென்றாள் அபிநயா.
“சிட்…” தனக்கருகே இருக்கையை காண்பித்தான் அவன்.
“அபி இங்க வா…” என எழில் அழைக்க தந்தையின் அழைப்பில் எழுந்துகொள்ள பார்த்தவள்,
“அப்பா கூப்பிடறாங்க…” எனவும்,
“நோ, உன்கூட பேசனும் நான். சிட்…” என சொல்லி அகத்தியனை பார்க்க தன் அதுவரை இல்லாதவிதத்தில் அகத்தியனின் கண்கள் பயத்தில் விரிந்தது.
இந்த காட்சியை பார்த்ததும் இளவேந்தன் நெஞ்சுக்கூடே காலியான உணர்வு. பார்வை ஷக்தியை தொட அவளும் உணர்ச்சியற்று அப்பெண்ணை பார்த்து நின்றாள்.
“சொல்லுங்க அகத்தியன். இப்போ சொல்லுவீங்க இல்லையா?…” என ஷேஷாவின் வார்த்தைகளின் பின்னால் இருந்த விஷயத்தை புரியாதளவிற்கு அகத்தியன் குழந்தை இல்லையே.
“ஷேஷா என் பேத்தி…”
“எஸ், உங்க பேத்தி தான்…” இறுக்கத்துடன் வந்தது அவனின் குரல்.
“சொல்லுங்க அகத்தியன், நேரம் போய்ட்டே இருக்கு….” ஷேஷா கேட்க அகத்தியனுக்கு தொண்டை வற்றியது.
அதுவரை இருந்த உடல்மொழியே மாறிவிட்டது அகத்தியனிடத்தில். ஷேஷா எதுவும் செய்யமாட்டான். ஆனால் விடவும் மாட்டான்.
தன் பேத்தி அவனருகே இருக்க இருக்க ராஜநாகத்தின் பிடியில் அபிநயா இருப்பதை போலவே தோன்றியது.
“சொல்லுங்க அகத்தியன்…” என்ற ஷேஷாவின் அழுத்தத்தில்,
“ஷேஷா, எனக்கு வேற எதுவும் தெரிய வேண்டாம்….” என்றாள் ஷக்தி.
ஷக்தியின் இந்த பேச்சில் அகத்தியன் கொஞ்சமேனும் ஆசுவாசம் கொண்டுவிட்டான். அதற்குள்,
“எனக்கு தெரியவேண்டியது என்னோட அப்பா எப்படி இறந்தார்? அதை மட்டும் சொல்ல சொல்லுங்க….” என்றாள் கைகளை கட்டிக்கொண்டு நேரடியாக அகத்தியனை பார்த்து.