ஷக்தி சொல்லியதை கேட்டு அதிர்வுடன் அத்தனைபேரும் அகத்தியனை பார்க்க அவன் பயத்துடன் ஒவ்வொருவரையும் பார்த்தான்.
“ஏய் என்ன பேசற?…” வடிவழகி கோபமாய் ஷக்தியிடம் கேட்க,
“ஷ் மூச், இங்க எனக்கு என்ன தெரியனுமோ அதை தெரிஞ்சிக்க வந்திருக்கேன். உங்க யாரோடையும் எனக்கு பேச்சில்லை. என்னை கேள்வி கேட்கிற எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை…”
ஷக்தியின் பேச்சின் பின்னால் இருக்கும் நியாயம் உணராமல் எழில் கோபமாய் பேச வர ராஜி தடுத்தாள் அவனை.
“நீங்க அமைதியா இருங்க…” என அவனின் கையை பிடித்தாள்.
“இவக்கிட்ட உதவின்னு நின்னா இவ நினைச்சதை பேசுவாளா? அதான் நாம எந்த தப்பும் பண்ணலையே? அரெஸ்ட் பண்ணினா பண்ணட்டும். நான் ப்ரூவ் பண்ணிப்பேன். கிளம்ப சொல்லு இவங்களை…”
கோபத்துடன் எழில் சொல்ல அகத்தியன் இன்னும் நம்பிக்கையுடன் பேசும் மருமகனை நினைத்து இப்போது கலக்கத்துடன் நின்றான் நிமிர்ந்து பார்க்கமுடியாமல்.
“நீங்க பேசனும் அகத்தியன். இது நீங்க பதில் சொல்லவேண்டிய நேரம்….”
“ஷேஷா தப்பு தான். நிறைய தப்பு தான். தெரிஞ்சு தான் பண்ணினேன். ஆனா விட்டுடுப்பா…” குரல் இறங்கியது அகத்தியனுக்கு.
“எத்தனையோ ஆதாரத்தை காமிக்கலாம், போட்டோஸ், வீடியோஸ். நேர்ல பார்த்த சாட்சிகள்…” இதை சொல்லும் பொழுது இளவேந்தனை சுட்டியது ஷேஷாவின் விழிகள்.
“அது எனக்கு தேவை இல்லை. என்னோட தேவை நீங்க உங்க வாயால நடந்த எல்லாத்தையும் உங்க குடும்பம், இந்த மொத்த குடும்பமும் கேட்கும்படி சொல்லனும்…”
சுட்டுவிரலை சுற்றிக்காட்டி சுழற்றி ஷேஷா சொல்ல அகத்தியன் இதயத்துடிப்பு அடங்கி துடிக்க முயன்றது.
“ஷேஷா…”
“எனக்கு எல்லாமே தெரியும். ஆனா நீங்க சொல்லனும். இங்க இப்போ சொல்லனும்…” என்றவன்,
“இன்னும் ஏன் உங்களுக்கு இந்த மரியாதை தெரியுமா? உங்க வயசுக்கோ, பதவிக்கோ இல்லை. இது எனக்கான மதிப்பு. என் வார்த்தைகளோட மதிப்பு தான் என்னோட மதிப்பை தீர்மானிக்கும். தட்ஸ் இட்…” என்றான்.
ஒவ்வொன்றும் எழிலையும், வடிவழகியையும் பொசுக்கியது. அவன் தங்களுக்கு அந்த மதிப்பில்லை என மறைமுகமாக சுட்டிக்காண்பித்ததை இப்படி உணர்த்திவிட்டான் என புரிந்துபோனது.
ஆனால் அகத்தியனின் மௌனமும், அவரின் பதட்டமும், ஏன் என புரியாமல் குழம்பி நின்றார்கள்.
“அபிநயா, நல்ல பேர். உங்களோட ட்ரெஸ் கலர் கூட நல்லா இருக்கே…” ஷேஷா அடுத்து சொல்லவுமே,
“நான் சொல்றேன், எல்லாமே கோர்ட்ல நானே சொல்லி சரண்டர் ஆகிடறேன். ஆனா இது மட்டும் வேண்டாம்…”
தன் வீட்டு பெண்களையும், பேத்தியையும் நிமிர்ந்து பார்க்கமுடியாமல் கூனி குறுக ஆரம்பித்த அந்த அகத்தியனை இமைக்காது பார்த்தாள் ஷக்தி.
கெஞ்சல், இதைவிட அன்று கதறினேனே? இளகாமல் எத்தனை பேச்சுக்கள்? எத்தனை வலிகள்?
“நோ, சொல்லனும். சொல்லியே ஆகனும். சொல்லு. இங்கயே நீ சொல்லு. உன் வீட்டு பெண்கள் கேட்கட்டும்…” இப்போது ஷக்தி ஆவேசத்துடன் கத்த அவளை கண்டு மிரண்டு நின்றான் அகத்தியன்.
“சொல்லுங்க அகத்தியன், மணிவாசகம் ஸார் கல்யாணம் எப்படி நடந்ததுன்றதுல ஆரம்பிச்சு ஒண்ணொண்ணா சொல்லுங்க பார்ப்போம். என்னோட கலெக்ஷன்ல எதுவும் விட்டுடுச்சான்னு செக் பண்ணனும்…”
ஷேஷாவின் பேச்சும், ஷக்தியின் ஆவேசமும், பாதுகாப்பிற்கு நின்ற பவனும் அகத்தியனை பயமுறுத்தினார்கள்.
அதுவும் அபிநயா. தன் பேத்தியின் முன்னால் எப்படி சொல்லமுடியும் என கூசி நின்றான்.
“பவன் டைம் வேஸ்ட்…” என்ற ஷேஷா அபிநயாவை பார்க்க,
“இல்ல, இல்ல. சொல்லிடறேன். தப்பு எல்லாமே நான் தான் பண்ணினேன். சிலை கடத்தினது, அந்த மணிவாசகத்தை கொன்னது, இந்த குட்…”
“அகத்தியன்…” என்ற ஷேஷாவின் கர்ஜனையில்,
“ஷக்தி, ஷக்தியை, ஷக்தியை, ஷக்தியை…” என அதற்கு மேல் சொல்லமுடியாமல் உடன்பிறந்த சகோதரியை, மகளை, மருமகளை, பேத்தியை என கண்ணீர் வழிய மாறி மாறி பார்த்தவனுக்கு சொல்லமுடியவில்லை.
“பவன்…” என அழைத்த ஷேஷா அவனை வெளியே இருக்குமாறு கண்ணசைக்க,
“வேண்டாம் சொல்றேன். எல்லாமே எல்லாமே சொல்லிடறேன் ஷேஷா…” என்ற அகத்தியன் மடங்கி தரையில் அமர்ந்தான்.