“எனக்கு அக்காவுக்கும், மணிவாசகத்துக்கும் கல்யாணம் ஆனது பிடிக்கலை. அடுத்த வாரிசுன்னு என்னை சொல்லாம அவரை வளர்த்துவிட்டது பிடிக்கலை. என்னோட உரிமை எல்லாம் போய்டுச்சுன்னு தோணுச்சு…” என்றவன்,
“நானும் என்னை காட்டிக்க வேண்டாம்னு அமைதியா இருந்தேன். இங்க ஜெகதா வேலைக்கு வரவுமே நான் அவ மேல ஆசைப்பட்டேன்…” என்றதும் இது வடிவழகிக்கு மட்டுமல்ல அத்தனைபேருக்கும் அதிர்ச்சி.
ஜெகதாவையா? ஷக்தியின் தாயின் மேலா? அதுவரை அகத்தியன் மேல் வைத்திருந்த பிம்பத்தில் அவனின் இந்த வார்த்தையால் கீறல் கோடியது.
“நான் எனக்கு இணங்க சொல்ல அவ அதை மணிவாசகத்துக்கிட்ட சொல்லி…” என்று ஷேஷாவை பார்க்க,
“இங்க உங்க பேச்சுக்கு யாரும் ஃபுல்ஸ்டாப் வைக்க மாட்டாங்க. சொல்லுங்க…” என்றான் அவன்.
“அதனால தான் ஜெகதாவையும், மணிவாசகத்தையும் சேர்த்து தப்பா பேசினேன். அதான் அந்த கல்யாணம்…”
“நோ நோ, அகத்தியன். இங்க நீங்க என்ன நினைச்சு அதை செஞ்சீங்க. அதையும் சொல்லுங்க…” என்ற ஷேஷா தன் கைகளை அபிநயாவின் பின்னால் சோபாவின் மேல் போட்டுக்கொண்டு பார்த்தான்.
“என்னை ஒவ்வொருதடவையும் எடுத்து குடுக்க வைக்க வேண்டாம். இதுதான் லாஸ்ட் வார்னிங்…” எனவும் எச்சரிக்கை செய்ய அகத்தியனுக்கு அப்போதே எங்காவது சென்றுவிடமாட்டோமா என இருந்தது.
“வீட்டுல எல்லாருக்கும் தெரிஞ்சா நிச்சயம் ஜெகதாவை வெளியே அனுப்பிடுவாங்கன்னு நினைச்சேன். அதுக்காக தான் அப்படி பண்ணேன். ஆனா எங்கப்பா கல்யாணம் செஞ்சு வச்சுட்டார்…”
“மணிவாசகம் வீட்டை விட்டு வெளில போகவும் இந்த குடும்பத்தை முதல்ல என் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்தேன். பிள்ளைங்க எல்லாம என் பேச்சை மட்டும் கேட்டு, பெத்தவரை வெறுக்கனும்னு…” எனும் பொழுதே எழில் அவரை வெறுப்புடன் பார்த்தான்.
தான் அதற்கு செய்தவற்றை எல்லாம் சொல்ல எழிலும், சுடரும் அகத்தியனை அசையாமல் பார்த்தார்கள்.
நிஜமான அன்புடன் எதுவுமே இல்லையா? அப்போ அத்தனைக்கும் பின்னால் வெறுப்பு தன் தந்தையின் மேல் உள்ள வெறுப்பா? என தோன்றியது.
ராஜி தவிப்புடன் பார்த்தாள் தன் தந்தையை. அவரிடம் இப்படி ஒரு முகமா என கண்ணீருடன் பார்த்தாள்.
“இங்க என்னோட பிடி ஸ்ட்ராங் ஆகனும்னா இங்க என் பொண்ணை வாழ வைக்கனும். அதுக்கு தான் எழிலை தூண்டிவிட்டு ராஜி எழில் கல்யாணத்தை செஞ்சேன்…”
“அதுவரைக்கும் சின்ன சின்ன தவறு செஞ்சிட்டிருந்த எனக்கு சிலை மாத்தறது பத்தி ஒரு டீலிங் வந்துச்சு. மணிவாசகமும் ஊர்ல இல்லை. நான் ஏற்பாடு பண்ணினேன். முதல் தடவை. அதனால் பிரச்சனை ஆகி போலீஸ் வரை போய்டுச்சு…”
ஷக்திக்கு இதயத்துடிப்பு ஏறி இறங்கியது. இதோ அவள் தேடிய கேள்விக்கான விடை.
“என்ன பண்ணுனீங்க?…” என்ற ஷேஷாவின் அருகிலிருந்த அபியின் முகத்தை பார்த்தவர் தனது உடனடி திட்டத்தை விவரித்து,
“ஆக்ஸிடென்ட் பண்ணி அவரை மட்டும் எங்க ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டோம். உயிர் போகலை. அதான் தலையணையை வச்சு…”
“அப்பா…” ஷக்திக்கு மூச்சுவிடவே சிரமமாய் இருந்தது.
என்னவெல்லாம் நினைத்து தவித்தாரோ? நேர்மையாக இருந்ததற்கு இதுதான் பரிசா? துணை இருந்த காவலர்கள் வேறு. நினைக்க நினைக்க கொதித்தது.
“அகத்தியா…” வடிவழகியின் அதிர்ச்சியில் சிலையாய் இருந்த எழில் தன்னை மீட்டவன் தாய் தடுமாறுவதை கவனித்து பிடித்து நிறுத்தினான்.
“அம்மா, உட்காருங்க…” என்றவனை கூட காணாது கீழே அமர்ந்திருந்த தன் தம்பியை அதிர்ச்சி விலகாமல் பார்த்தார்.
“நீயெல்லாம் மனுஷனா? உன்னை போய் நல்லவன்னு நினைச்சோமே? எங்கப்பாவையும் எங்கக்கிட்ட இருந்து பிரிச்சு அவரை கொலையும் செஞ்சிருக்கியே?…” என சுடர்கொடி அகத்தியனின் மேல் கைக்கு கிடைத்ததை வீசி எறிந்தாள்.
எதற்கும் அசைவில்லை அகத்தியனிடம். எல்லாம் முடிந்தது. இனி தன் குடும்பத்தில் தனக்கு இடமில்லை என புரிந்துபோனது.
“சுடர் பிள்ளை அழுது பாரு…” என ராஜி சொல்ல அழுதுகொண்டே தன் குழந்தையை தூக்க சென்றாள் சுடர்கொடி.
மனதிற்குள் அகத்தியனின் மீதான கோபம் ஒருபக்கம் இருந்தாலும் இளவேந்தனின் பேச்சு பயத்தை விதைத்தது அவளுள்.
தன்னை எப்படி நினைத்துவிட்டான்? அவனின் பேச்சில் அவன் மனதில் தனக்கிருக்கும் இடத்தை புரிந்துகொண்டாள் வலியுடன். என்ன வாழ்க்கை தன்னது என நெஞ்சை அடைத்தது.
குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டவளுக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்தது.
இங்கே அகத்தியன் அடுத்து சொல்ல ஆரம்பிக்கும் முன் அவனின் பேச்சை தடைசெய்த ஷேஷா,
ஐந்துநிமிடம் கழித்தே சுடர்கொடி குழந்தையுடன் வந்து ராஜியின் அருகே நின்றுகொண்டாள்.
இரண்டு பேத்திகள். இருவரின் மேலும் உயிரையே வைத்திருந்த அகத்தியன் அடுத்து தான் சொல்லவிருப்பதை எண்ணி குறுகிப்போய் அமர்ந்திருந்தான்.
“ஷக்தி சிட்…” என ஷேஷா ஷக்தியை தனக்கருகே கை நீட்டி அழைத்து அமர வைத்துக்கொண்டான்.
அவளாலும் நிற்க முடியவில்லை. கால்கள் வலுவிழந்ததை போல தொய்வுடன் நின்றவளுக்கு ஷேஷா அழைக்க மறுக்கமுடியவில்லை.
“வந்துட்டாங்க, நீங்க சொல்லுங்க…” அலட்டாமல் கதை கேட்பதை போல பேச சொல்ல இளவேந்தன் வேதனையுடன் பார்த்தான்.
“ஜெகதாவை நாங்க கூட்டிட்டு வரலை. எப்படியும் போகட்டும்ன்னு அப்படியே உயிர் போனாலும் பரவாயில்லைன்னு தான் விட்டுட்டு வந்தோம். அன்னைக்கு ட்யூட்டிக்கு வந்திருந்தவங்களும் எனக்கு உடந்தை. ஹாஸ்பிட்டல்ல ஆள் ஏற்பாடு பண்ணி ட்ரீட்மென்ட் லேட் பண்ண வச்சு…”
“ஆக்ஸிடென்ட் பண்ண வச்சதும் நீங்க, அதுக்கு காரணம் ஜெகதாம்பாள்ன்னு பேசி இவங்களை எல்லாம் நம்ப வச்சதும் நீங்க. ஜெகதாம்பாள் டெத் கூட உங்களோட கணக்கு தானே?…” ஷேஷா சொல்ல அன்றைய நாள் ஷக்திக்கு இன்று போல தோன்றியது.
“ஆமா, இதை பயன்படுத்தி தான் அந்த வீடு, சொத்து எல்லாம் நம்மளோட உரிமைன்னு எடுத்துக்க நினைச்சோம்…”
எழிலுக்கு அன்று நடந்தவை நன்றாக ஞாபகம் இருந்தது. பெற்றவரே இல்லை, இந்த சொத்தும் அவர்களுக்காக விடாதே என தன்னை மிருகமாய் மாற்றியிருந்தாரே.
இத்தனைக்கு பின்னும் இப்படி ஒரு குரூர திட்டமா என தன் மடமையை எண்ணி குமைந்துகொண்டு இருந்தான்.
“ஹ்ம்ம், அடுத்து…” ஷேஷா கேட்க,
“அவரோட இறப்பை வச்சு அந்த வருஷம் நடந்த எலெக்ஷன்ல நான் நின்னேன். அந்த பதவியை வாங்கிட்டேன். அதை வச்சு கோவில் நிலங்களை அபகரிக்க, சிலைகளை கடத்த எல்லாத்துக்கும் ஷக்தியோட சொத்தை பயன்படுத்திக்கிட்டேன்…”
“ஓகே, ஷக்தி ஏன் மும்பை போனா? அந்த டாபிக் வரவே இல்லையே நீங்க?…” ஷேஷா விடவில்லை.
விழிகள் பளபளக்க எரிமலை சீற்றத்தை உள்ளடக்கி அழுத்தமான பார்வையில் கனல் தெறிக்க பார்த்துக்கொண்டு இருந்தான் ஷேஷா.
ஷக்திக்கு தனக்கு தேவையானவை கிடைத்துவிட்டதே. தன்னை பெற்றவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனால் அதை செய்தவர்கள் இப்படி இன்னும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்களே?
கல்லாய் சமைந்து இருந்தாள் ஷக்தி. ஷேஷாவின் கேள்விக்கு அகத்தியன் என்ன பதில் சொல்வான் என அவனை உறுத்து விழித்தபடி.
“நான் எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டேனே? இதுக்கே என் குடும்பத்துல எனக்கு இடமில்லாம போய்டுச்சு. நான் நானே எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டு சரணடஞ்சிடறேன். விட்டுடுப்பா. உன் கால்ல விழறேன்…” என கெஞ்சினான் கையெடுத்து கும்பிட்டு.
அகத்தியன் ஷேஷாவின் காலை பிடிக்க போக யாரும் அகத்தியனை தடுக்கவில்லை.
அகத்தியன் வாயாலேயே கேள்விப்பட்ட விஷயத்தில் இருந்து வெளிவர முடியாமல் இருந்தார்கள்.
இப்போது காலை பிடித்து கெஞ்சும் அளவிற்கு சொல்லமுடியாத விஷயம், அதுவும் ஷக்தியை பற்றி. வலிகளின் அளவு கூடிக்கொண்டே சென்றது.
ஆனால் இதை எல்லாம் ஓரளவு இளவேந்தன் எதிர்பார்த்திருந்தானே? என்னவோ செய்கிறார் இவர் என.
அப்படி என்ன இவருக்கு பிள்ளைகளிடமும் மறைத்து இப்படி நாட்டிற்கு புறம்பான ஒரு செய்கை. நாளைப்பின் இவை தானே தங்களின் அடையாளம்.
வடிவழகி மொத்தமாய் சாய்ந்துவிட்ட உணர்வு. தன் தகப்பன், கணவன் இருவரின் நேர்மையில் ஒரு பெருமிதம் இருந்தது.
அதை சொல்லி தங்கள் குடும்பம் அப்படியான பழி சொல்லுக்கு ஆளாகிவிட கூடாது என தானே ஷேஷாவிடம் பேச்சுவார்த்தைக்கு நின்றது.
இப்படி தங்களின் நிம்மதிக்கு மட்டுமல்ல, இனி வரும் சந்ததிகளுக்குமான எப்பேர்பெற்ற பெயரை வாங்கி தந்துவிட்டான் அகத்தியன்? ஆறவில்லை.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஷேஷாவிடம் பேச. எத்தனை முறை ஷக்தியை இகழ்ச்சியாக பேசியிருக்கிறோம்?
இப்போது அவளிடம் உதவிக்கும் நின்றதில்லாமல் இப்படி அவள் முன்னே தங்களின் மானமும் போய்விட்டதே என கூனிப்போய் நின்றார் வடிவழகி.