அதை கேட்டு இளவேந்தன் மட்டுமல்ல, மொத்த குடும்பமும் அதிர்ந்து அவனை கேள்வியாய் பார்க்க தலைகுனிந்து நின்றான் இளவேந்தன்.
“இளா என்னடா இது? என்ன சொல்றாங்க?…” என எழில் அவனை கேட்டான் தாயை விட்டு அவனிடம் வந்து.
“என்ன இளா, எங்கக்கிட்ட எதையாவது மறைக்கிறியா?…” ராஜியும் கேட்க இளவேந்தனால் பேச முடியவில்லை.
“என்னை இப்படி கொண்டுவந்து நிறுத்தீட்டீங்க இல்ல?…” என தகப்பனை பார்த்து கேட்டான் அவன்.
“பாருங்க நான் சொல்ல போறதை நல்லா பார்த்து ரசிங்க. நீங்க செஞ்சதை தான சொல்ல போறேன்…” என்று கத்தினான் இளா.
“ஐயோ ஐயோ…” என தலையில் அடித்துக்கொண்ட அகத்தியன்,
“தப்பு பண்ணிட்டேன். பொண்ணாசை ஷக்தி மேல உள்ள ஆசை, என்னை அப்படி செய்ய வச்சிடுச்சு…” என்றதுமே அத்தனைபேருக்கும் மூச்சு நின்றது.
அகத்தியன் தான் செய்த அந்த மன்னிக்கமுடியாத குற்றத்தை சொல்ல அத்தனைபேரும் காதை மூடினார்கள் கேட்க முடியாமல்.
“பெண்ணாசை ஷக்தி மேல மட்டுமா அகத்தியன்?…” ஷேஷா அகத்தியனின் வாயால் அதனை கேட்டும் தன்னை கட்டுக்குள் வைத்திருந்தான்.
அத்தனை ஆவேசம், கோபம் எல்லாம் இருந்தும் அவனின் நிதானம் அவனை வேறெதுவும் செய்யவிடாமல் நிறுத்தியது.
ஷக்தி அகத்தியன் சொல்ல சொல்ல ஒவ்வொருநொடியும் மரித்து போனாள் அன்றைய நாளின் நினைவில்.
வீட்டின் பெண்கள் அவரின் பேச்சில், செய்த செய்கையில் நின்ற இடத்தில் இருந்து இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றார்கள்.
“நீங்க போகலாம் அபிநயா. அம்மா உங்களை தேடுவாங்க…” என எழிலின் பெண்ணை எழுந்து செல்ல சொல்லவும் ஓடி வந்த மகளை அணைத்துக்கொண்ட ராஜி தன் புடவை முந்தானையால் மகளை போர்த்திக்கொண்டாள்.
“என்னால இங்க நிக்க முடியல. என் பொண்ணையும் கூட இப்படி பார்த்திருப்பாங்க தானே? இனி என் முகத்திலையே முழிக்க கூடாது இவங்க. என்னை பெத்தவர் என்னைக்கோ செத்துட்டார்…” என அழுதுகொண்டே மகளுடன் ஓடிவிட்டாள் ராஜி.
“ராஜி, அம்மாடி…” என தடுமாறி எழுந்த அகத்தியன் சுடரை பார்த்து அருகில் வர அவளின் கண்கள் அருவருப்பை உமிழ்ந்தது.
“எனக்கு ஷக்தியை பிடிக்காது தான். ஆனா அதுக்காக இப்படி. உண்மையை சொல்லுங்க எங்களை, என் பொண்ணை…”
“ஐயோ சுடர், அம்மாடி மாமா அப்படி இல்லப்பா…” என்று குழந்தையை வாங்க வந்தான்.
“இனி உங்க நிழல் கூட எங்க மேல பட கூடாது. என் புண்ணியம் உங்க மகன் உங்களை மாதிரி இல்லை. இருந்திருந்தா விஷம் வச்சு கொன்னிருப்பேன். உறவு முக்கியம் தான். ஆனா ஒழுக்கமும் முக்கியம்…” என்றவள்,
“ம்மா, இப்படி ஒரு தம்பி பேச்சை கேட்டதுக்கு நீங்க உங்க புருஷனை இழந்தது தான் மிச்சம். அதுக்கு பலியா எங்களை இந்த மனுஷன் கிட்ட வளர விட்டீங்க பாருங்க? எத்தனை தடவை மடில உக்கார்ந்திருப்பேன். அப்பா ஸ்தானம்ன்னு பாசமாய் அணைச்சிருப்பேன்…”
“ம்மா, எனக்கு அருவருப்பா இருக்கே. உடம்பெல்லாம் எரியுது. எல்லாம் உன்னால. உன்னை மாதிரியே என்னையும் வளர்த்து. இப்ப என் பொண்ணு. எத்தனை நாள் இந்த பச்சை குழந்தையை பார்த்துக்க சொல்லி விட்டுட்டு போயிருக்கேன்….”
“என் குழந்தை, என் பொண்ணு…” என தன் மகளை நெஞ்சோடு இறுக்கி அணைத்தாள் சுடர்கொடி.
“சுடர், சுடர் என்னம்மா…” என இளவேந்தன் அவளை நிதானத்திற்கு கொண்டுவர முயன்றான்.
எழிலுக்கு சுடர்கொடியின் கதறலும், தவிப்பும் புரிந்தது. தானும் ஒரு பெண்ணை அல்லவா பெற்றிருக்கிறோம்?
அன்றைய நாள் தான் செய்த தவறின் உச்சம் ஷக்தியை எங்கு கொண்டு நிறுத்தியிருக்கிறது என நினைக்கும் பொழுது தகப்பனாய், ஆண்மகனாய் நொறுங்கி போனான்.
ஆனால் சுடர்கொடிக்கு நினைவுகள் எல்லாம் அகத்தியனின் பார்வை தங்கள் மேல் எப்படி இருந்திருக்கும் என்று அங்கேயே நின்றது.
தாயையும், பெண்ணையும் ஒரே பார்வையில் பார்த்து அவர்களை கொன்று, சீரழிக்கும் வரை சென்றிருக்கும் மனிதன் மேல் நம்பிக்கை இல்லை அவளுக்கு.
இவ்வளவு நடந்தும் தாய் கீழே மயங்கி விழுந்தும் சுடர் நிதானமாகவில்லை. மகளை பார்க்க, தன்னை பார்க்க, அபிநயா வரவும் அவளை பிடித்துக்கொள்ள என அவளின் செயல்பாடுகள் மாறியிருந்தது.
அந்த அதிர்வில் இருந்து அவளால் வெளியே வரமுடியவில்லை. தந்தையினது திட்டமிடப்பட்ட பிரிவு, மரணம். அதையும் தாண்டிய ஏமாற்றம்.
எல்லாவற்றுக்கும் மேல் அகத்தியனின் மறுபக்கம் பெரிதாய் அச்சமூட்டியிருக்க மூளை அவ்விடத்திலேயே ஸ்தம்பித்து போயிருந்தது.
இத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஷேஷா அகத்தியனின் அருகே வந்தான்.
“இன்னும் நீங்க உயிரோட இருக்க காரணம் என்னன்னு புரியலை இல்லையா? இப்போ புரியாது. ஆனா இனி புரியும்….” என்றான் ஷேஷா அகத்தியனிடம்.
ஏற்கனவே மகளின் பாராமுகத்திலும் மருமகளின் பேச்சில் பாதி உயிர் போய்விட்ட நிலை. எழில் அடித்ததும் அடங்கிவிட்டான் அகத்தியன்.
அவனின் ஆணவம், பேராசை, பெண்ணாசை, என எல்லாம் எல்லாமே தனது குடும்பத்தினரின் முன்னால் சுக்குநூறானது.
“வெளிய போக சொல்லுங்க இந்தாளை. இல்லை, இல்லை போலீஸ்ல பிடிச்சு குடுங்க…” ராஜியின் பேச்சில் அங்கேயே ஓரமாய் அமர்ந்துகொண்டான் அகத்தியன்.
வேரோடு பிடுங்கிவிட்ட மரம் போல விழுந்துகிடந்த அகத்தியனின் எண்ணமெல்லாம் குடும்பத்தினரை பற்றி மட்டுமே இருந்தது.
அதே நேரத்தில் உலக தொலைக்காட்சிகள் முழுவதும் வஜ்ரவேல் வாக்குமூலம் வலம் வந்தது.
அகத்தியனின் மறைமுக வேலைகள் எல்லாம் வெட்டவெளிச்சத்திற்கு வந்தது. அதன் ஆதாரங்கள் எல்லாம் காட்டப்பட்டு அத்தனையும் வைரல் ஆகியிருந்தது இணையதளத்தில்.
நாடு முழுவதும் இதில் கொதித்து போக எதிர்கட்சிகள் எல்லாம் இது தான் வாய்ப்பு என்று அகத்தியனையும், அவனின் கட்சியையும் சேர்த்தே குற்றம் சாட்டி பேச ஆரம்பித்தார்கள்.
நீதிபதி உடனடியாக ஜாமீனை ரத்து செய்து அகத்தியனின் மேல் நேரடியாக ஆக்ஷன் காவல்துறைக்கு எடுக்கும்படி உத்தரவிட்டது.
ஒவ்வொரு செய்தி தொலைகாட்சியிலும் நால்வர் குழு அமர்ந்து அகத்தியனின் குற்றத்தை விலாவரியாக பகுத்தாய்வு செய்தார்கள்.
எத்தனை பெண்களை அகத்தியன் பாழாக்கி இருக்கிறானோ அதற்கும் ஆதாரம் இருக்க மாதர்சங்கம் ஒருபக்கம் கிளம்பி அகத்தியனை கைது செய்ய கூறி கொடிபிடிக்க ஆரம்பித்தது.
மதியத்திற்குள் காட்டுத்தீயாய் விஷயம் பரவி மக்கள் மத்தியில் நிலைமை கை மீற ஆரம்பித்தது.
ஆளும் கட்சியினர் உடனே ஒரு அறிக்கை விடுத்தார்கள். தங்களுக்கும் அகத்தியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவர்களுடன் இனி எந்த கூட்டணியும் இல்லை என்றும் உடனடி அறிக்கை விடுத்தார்கள்.
கைது செய்யப்பட்டது அகத்தியன் மட்டுமல்லாது எழிலும் சேர்ந்தே. அகத்தியன் கதறினார்.
தனது மருமகனுக்கும் இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என. ஆனாலும் எதை சொல்வதாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டனர்.
எழில் அகத்தியனை நிமிர்ந்தும் பார்த்தான் இல்லை. மகள் நிலையோ கண்ணில் காணமுடியாததாக இருந்தது. கண்ணீர் விட்டு கதறினான் அகத்தியன்.
கைது செய்து அழைத்து செல்லும் முன்னே எதிர்கட்சி ஆட்களும், மக்களோடு மக்களாக சூழ்ந்துகொள்ள வெளியே அழைத்து வரப்பட்ட அகத்தியனை காவலர்கள் கட்டுப்பாட்டை மீறி நெருங்கிவிட்டார்கள்.
நெருங்கியவர்கள் நொடி பொழுதில் அகத்தியனை தாக்க ஆரம்பிக்க நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.
அகத்தியனின் ஆடைகளை கிழித்து சட்டை, வேஷ்டி இன்றி வெறும் ட்ராயருடன் வெட்டவெளியில் பத்திரிகை வெளிச்சத்தின் முன்னர் காண்பித்துவிட அவர்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அகத்தியன் போராடினான்.
நிர்வாணம் பெண்ணுக்கு மட்டுமா? அகத்தியனின் அந்த போராட்டத்தை இங்கே தொலைக்காட்சி திரையில் பார்த்துக்கொண்டிருந்த ஷேஷாவிற்கு போதவில்லை.
இதை ஷேஷா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு நிம்மதி. நிறைவு.