“இல்லை ஷேஷா. பேச கூடிய தகுதியை நான் இழந்துட்டேன். மன்னிச்சிடுங்க. ஷக்திக்கும் சேர்த்து. என்னால இப்போவும் உறவா ஏத்துக்க முடியலை. ஆனா அன்னைக்கு நான் பண்ணினது பெரும் பாவம்….”
“அதை மறுக்க முடியாது. இந்த கேஸ்ல நீங்க என் மேல தவறில்லைன்னு சொன்னதால இன்னைக்கு நான் வெளில என் குடும்பத்தோட இருக்கேன். நிறைய தப்பு பண்ணிட்டேன்…” என்றான் எழில்.
ஷேஷா எழுந்து எழிலின் முன்னால் வந்து நின்றான். அவனுக்கு இன்னுமே எழிலின் மேல் கோபம் குறையவில்லை.
“என்னால கேட்காம இருக்க முடியாது. அன்னைக்கு ஷக்தி இடத்துல அபிநயா இருந்திருந்தா?…” ஷேஷா கேட்டதும் ஏற்கனவே அந்த நினைவில் இருந்த எழிலுக்கு உள்ளம் கசிந்தது.
“கடவுளே?…” என்றான் தன்னைபோல அந்த கனத்தை தாங்க இயலாமல்.
“எந்த கடவுளை கூப்பிடறீங்க? உங்க மாமா தான் அத்தனை கடவுளையும் நாடு கடத்திட்டாரே?…” என்றதும் இளவேந்தன், எழில் இருவருமே தலை தாழ்ந்தனர்.
“முதல்ல உங்களுக்குள்ள இருக்கற மனசாட்சின்ற கடவுளை வெளி கொண்டுவாங்க. அகத்தியன் மாதிரியான மிருங்கங்களுக்கு வேலை இருக்காது…” என்ற ஷேஷா,
“ஷக்தி…” என்று அழைத்தான்.
“ஷேஷா எனக்கு நிறைய வேலை இருக்கு. அன்வான்ட்டட் பெர்சன்ஸ்க்கு எல்லாம் டைம் வேஸ்ட் பண்ண முடியாது. பேசி அனுப்புங்க….” என்றாள் பார்க்க முடியாதென மறுத்து.
“ஷக்தி முடிவு தான்…” என்று ஷேஷாவும் சொல்லிவிட,
“நான் ஷக்திட்ட பேசலாமா?…” என்றாள் இளா.
“சூர்…” என ஷேஷா சொல்லவும் அவளின் மேஜை அருகே சென்றான்.
“ஷேஷா…” என்றாள் பல்லை கடித்து.
“ஷக்தி, உனக்கு என்னோட பேச பிடிக்காதுன்னு தெரியும். ஆனா ஒரு விஷயம் சொல்லனும்னு தோணுச்சு. தாத்தா ஆரம்பிச்ச அந்த கட்சி இப்போ அடுத்து யாருன்ற கேள்வியோட நிக்குது….”
“எனக்கோ, எழிலுக்கோ அதை எடுத்து கொண்டு போக விருப்பம் இல்லை. இதுக்கு சரியான ஆள் நீயா மட்டும் தான் இருக்க முடியும். யோசிச்சு பதில் சொல்லு…” என இளவேந்தன் சொல்லி நகர்ந்ததும்,
“ஷேஷா, எனக்கு எந்த உரிமையும், உறவும் வேண்டாம். எப்பவும் நான் வெறும் ஷக்தி. இப்போ ஷக்தி ஆதிஷேஷன். இதை தாண்டி எந்த பதவியும் வேண்டாம். யாரும் இதை பேச வரவும் வேண்டாம்…” என்றவள்,
“அந்த பதவியில இருந்தும் எங்கப்பாவால என்ன சாதிக்க முடிஞ்சது? அவர் உயிரை இழந்தது மட்டும் தான் மிச்சம். வேண்டாம். எதுவும் வேண்டாம்…” என்றாள் உடைந்த குரலில்.
அவளின் பேச்சில் எழில் இன்னுமே பூமிக்குள் புதைந்தான். எத்தனை வேதனை அவளின் குரலில்.
“இளா விட்டுடுங்க. ஷக்தி சொன்னது சரி. அவ பதவில இருந்துதான் செய்யனும்னு இல்லை. இங்க இருந்து எங்களுக்கான கடமையை நாங்க செய்வோம்…” ஷேஷா சொல்ல,
“இல்லை கட்சி…”
“நீங்க எடுத்து நடத்துங்க. நல்லது செய்ய மனசு இருந்தா போதும். எல்லாருக்கும் அந்த கடவுள் அத்தனை உறுப்புக்களையும் ஒண்ணா தான் படைச்சிருக்கான். உருவம் தான் வேறு. உணர்வுகள் ஒன்னு தானே?…”
“புரியுது ஷேஷா, காலம் கடந்து புரியுது…” இளவேந்தன் குரல் இறங்கி போய் ஒலித்தது.
“புரிஞ்சாலே போதும், அது எப்போன்றது முக்கியமில்லை. மிஸ்டர் ஆவுடையப்பன் ஆரம்பிச்சு, மணிவாசகம் ஸார் செய்திட்டு வந்த தன்னலமில்லா கடமை. எடுத்து செய்ங்க. பலனை எதிர்பார்க்காதீங்க. தானா வரும்…”
“ஹ்ம்ம், தேங்க்ஸ்…” என்றான் இளவேந்தன்.
“உங்க மேலையும் கோபம் தான். ஆனா நீங்க செஞ்ச ஒரு நல்லது உங்களை காப்பாத்தியிருக்கு. நல்லதுக்கு இருக்கிற வலிமை வேற எதுக்கும் இல்லை. கிளம்புங்க…” என்று சொல்ல எழில் தலையசைத்து கிளம்பிவிட்டான்.
இளவேந்தன் ஷக்தியை பார்த்துவிட்டு ஷேஷாவிடம் மீண்டும் நன்றியை சொல்லி கிளம்பி சென்றான்.
ஷேஷா ஷக்தியை பார்க்க அவளின் கோபம் முகத்தில் இன்னும் மிச்சமிருந்தது. இப்போது பேசினால் இன்னும் கோபப்படுவாள் என ஷேஷாவும் வெளியே சென்றான்.
“எங்க கிளம்பீட்டீங்க?…” என ஷக்தி நிறுத்த,
“டென் மினிட்ஸ். ரவுண்ட்ஸ்…” என சொல்லி சென்றான்.
ஷக்திக்கு அந்த தனிமை அப்போது தேவையாக இருந்தது. அத்தனையும் ஒதுக்கி வைத்துவிட்டு மேஜையில் தலைசாய்ந்தாள்.
வாழ்க்கை எங்கெங்கே சென்று எங்கு வந்து நின்றிருக்கிறது. அங்கே தவறிழைத்த அத்தனை பேரும் ஆண்கள்.
ஒழுக்கமற்று பார்க்கும் பெண்களை எல்லாம் தனக்கென பறிமுதல் செய்ய முயலும் பெண்ணாசை குணம் கொண்ட அகத்தியன்.
அதிகாரமாய் இது என் வாழ்க்கை, என்னால் இப்பெண்ணை கவனிக்க, பாதுகாக்க முடியும் என சொல்லாமல் அன்பிற்கு கட்டுப்பட்டு இரு பெண்களை மணந்தது மணிவாசகம்.
மகனை கண்டிக்க முடியாமல், மருமகளுக்கு நியாயம் செய்ய முடியாமல், தன் தவறுக்கு பிராயச்சித்தம் என எடுத்த ஆவுடையப்பன் முடிவு எங்கணம் சரியானதோ?
அப்படி ஒரு முடிவெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளியதும் ஆண். முடிவெடுத்ததும் ஆண். அதற்கு உடன் பட்டதும் ஒரு ஆண். ஆனால் பாவமும், பரிதவிப்பும், பழி சுமத்தலும் பெண்ணிற்கு.
அத்தனை பிரச்சனைகளும் ஓய்ந்ததை போன்ற தோற்றம். மனதெல்லாம் இலகுவாகிவிட்டது.
தங்கள் குடியிருந்த வீட்டை சுத்தம் செய்து அங்கே வீட்டை பார்த்துக்கொள்ள என வேலைக்கு அமர்த்தபட்டார்கள். நினைத்தால் அங்கே சென்று ஓரிரு மணி நேரம் இருந்துவிட்டு வருவாள் ஷக்தி.
ஷக்தியின் வாழ்க்கை சூழலே மாறி போனது. காரணம் ஷேஷா. ஷேஷாவின் மனைவியாய் முழுதாய் தன்னை அவனில் சேர்ப்பித்துகொண்டாள் ஷக்தி.
——————————————————
மும்பை மாநகரம். அந்த கடற்கரை காற்றும் இயற்கையின் சீற்றமும் ஷக்தியை அமைதிபடுத்த முயன்றுகொண்டு இருந்தது.
“ஷக்தி, டின்னர் ரெடி. கமான்…” ஷேஷா அழைக்கவும் திரும்பி அவனை பார்த்து புன்னகைத்தாள்.
மும்பைக்கு வந்திருந்தனர் இருவரும். ஷேஷா தயாரித்த படத்தின் வெளியீடு மறுநாள்.
ஷக்திக்கு ஒரு மாற்றமாக இருக்கட்டும் என அழைத்து வந்திருந்தான். அன்று காலை தான் வந்து இறங்கி இருந்தனர்.
ஷக்தியை மும்பையில் சந்தித்தபோது ஷேஷா அழைத்து வந்த அதே கடற்கரை. இப்போது இரவு விளக்குகளால் மின்னிக்கொண்டிருக்க அதன் வெளிச்சம் ஷக்தியின் முகத்திலும் சந்தோஷத்தை அள்ளி இறைத்திருந்தது.
“வான்னு சொன்னேன். இன்னும் அங்கயே நின்னிட்டிருக்க?…” என அருகே வந்தான்.
“நத்திங், இங்க நிக்க பிடிச்சது…”
“அப்போ டைனிங் இங்கயே போட்டிருக்கலாம்…”
“ம்ஹூம், இருக்கட்டும்…” என சொல்லி அவனின் கை கோர்த்து நின்றவள் சுற்றிலும் பார்த்தாள்.
மும்பை மாநகரமே வண்ண வண்ணமாய் ஒளிவெள்ளத்தில் பளீரிடும் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு இருந்தது.
“கலர்ஃபுல் இல்லையா ஷேஷா?…” என்றாள் ஷக்தி.
“எஸ்…”
“லைஃப் சில நேரம் எப்படியெல்லாம் மாறுது பார்த்தீங்களா? இங்க வந்தப்போ அவ்வளவு தான் இனி என் வாழ்க்கைன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா நீங்க வந்தீங்க…”
“வந்து? கூப்பிட்டதும் நீயும் வந்த?…” என்றான் சிறு புன்னகையுடன்.
“அப்போ இருந்த சூழ்நிலை. அந்த இருட்டுக்குள்ள இருந்து வெளி வர வேண்டாம்ன்ற சூழ்நிலை…”
“உண்மையா நீ இங்க சந்தோஷமா நிம்மதியா இருந்திருந்தா கூட விட்டிருந்திருப்பேன். ஆனா நான் உன்னை பார்த்தபோது உன்னோட அந்த முகம். என்னவோ என்னால என்னை கன்ட்ரோல் பண்ணிக்க முடியலை. ஏன்னு இப்போ புரியுது…”
“எப்படி இந்த அன்கண்டிஷனல் லவ்?…” என்றாள் இன்னும் ஆச்சர்யமாய்.
“இது லவ்ன்னு நீ ஃபீல் பன்றியா ஷக்தி?…” தன் விரல் கொண்டு அவளின் நெற்றியின் மச்சத்தை நீவினான் ஷேஷா.
“ஹ்ம்ம், நிச்சயமா. இருட்டுலையே தொலைஞ்சி போய்டுவென்ற என்னை மாத்தி வெளிச்சத்துக்கு கொண்டு வந்து இன்னைக்கு இதோ இந்த மாதிரி கலர்ஃபுல் லைஃப். அன்னைக்கு நீங்க இல்லைன்னா ஷேஷா…” என்று அவன் தோளில் சாய்ந்து நின்றாள்.
அவள் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறாள் என புரிந்துகொண்டான் அவன். மும்பையை விட்டு சென்னைக்கு சென்ற பின்னர் இதுதான் முதல் முறை வருகிறாள்.
அன்றய நினைவுகள் அலை மோத வந்ததில் இருந்து பழைய நிகழ்வுகள் அவளை புரட்டிக்கொண்டு இருந்தன. இப்போது இன்னும் அவள் பேசவும் தடுமாறி இருக்க,
“ஷக்தி பிறக்கும் போதே எல்லோரோட லைஃபும் கலர்ஃபுல்லா இருக்கறதில்லை. ஆனா ஒவ்வொருத்தருக்குள்ளயும் ஏதோ ஒன்னு இருக்கு. நம்மால மாத்த முடியும்ன்ற நம்பிக்கை போதும். இன்னொருத்தர் வந்து தான் அதுக்கு வர்ணம் தீட்டனும்னு இல்லை…” என்றான்.
“நீங்க எப்பவுமே இப்படித்தானா?…” என்றாள் லேசாய் அவனை மிரட்டும் புன்னகையுடன்.
“எஸ், பர்ஸ்ட் டின்னர். திரும்பவும் வந்து இங்கே எவ்வளோ நேரம் வேணுமோ நின்னுடு. ஓகே…” என்று ஷக்தியுடன் இணைந்து நடந்து சென்றான் ஆதிஷேஷன்.
அதுவரை தீற்றாத வர்ணங்கள் கொண்டு ஓவியமாய் அவளை உருமாற்றி தன்னையும் ஷக்தியினுள் உருவேற்றிக்கொண்டான் ஆதிஷேஷன். வானம் குழுமத்தின் வான்மகன்.