மறுநாள் திருமணம். அந்த அறையில் தனியே சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நக்ஷத்ரா.
அன்று காலை தான் சென்னை வந்து சேர்ந்திருந்தாள் அவள். கிளம்பவே முடியாது என்றிருந்தவளை கிளப்பி கொண்டுவந்துவிட்டான்.
தனி விமானத்தில் அதிகாலை கிளம்பி வந்து சேர்ந்துவிட்டார்கள். வந்ததும் அவனின் வீட்டிற்கு தான் நேராக சென்றனர்.
“நீ இங்க ரெஸ்ட் எடு ஷக்தி. நாளைக்கு மீட் பண்ணுவோம். இன்னைக்கு நிறைய வேலை…” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.
சென்றதில் இருந்து உணவில்லை, உறங்கவில்லை. உடல் அசதியில் அழுத்தியது. கண்கள் எரிந்தது.
ஆனாலும் உறங்கவில்லை. அந்த மண்ணை மிதித்ததில் இருந்து கொஞ்சமும் அமைதியின்றி ஒரு அசாத்திய நிலை.
ஜன்னல்கள் அனைத்தையும் இழுத்து மூடிக்கொண்டவள் யாரையும் அறைக்குள் அனுமதிக்கவில்லை.
அவளுக்கான உடைகள், அணிகலன்கள், அத்தியாவசிய பொருட்கள் என வாங்கி குவித்திருந்தான் ஆதிஷேஷன். வந்ததுமே அதையும் காண்பித்தான்.
ஒரு பக்கத்தை நிறைத்திருந்த வாக்கிங் வாட்ரோப் நிறைய அவளின் ரசனைக்கேற்ப உடைகள். அவன் காண்பித்ததும் கசந்த முறுவல் தான் அவளின் முகத்தில்.
இவை அனைத்தையும் வேண்டாம் என்று தானே உதறித்தள்ளியது. வெறுமையான பார்வையுடன் முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.
“உனக்கு பிடிச்ச ட்ரெஸ் எடுத்து போட்டுக்கோ. நாளைக்கு கல்யாணத்துக்கு கிளம்பும் போது உன் ட்ரெஸ் நானே எடுத்துட்டு வருவேன்…” என ஷேஷா சொல்லவும் அவனிடம் திரும்பினாள்.
“எனக்கு இங்க இருக்கற எதுவும் பிடிக்கலை. எதை போட?…”
“பிடிக்கலைன்னாலும் இனி நீ போடலாம். போக போக பிடிக்கும்…”
“இது என்னை கட்டாயப்படுத்தற மாதிரி இருக்கே ஷேஷா. தப்பு. என்னை நீங்க ரொம்ப டம்ப் பண்ண பார்க்கறீங்க…” குரலில் அப்பட்டமான பிடித்தமின்மை.
“எனக்கு எப்பவும் ஒரே முடிவுதான் ஷக்தி. எடுத்த முடிவு மாத்திக்கற பழக்கம் எனக்கில்லை…” என்றான் அவளிடத்தில் அழுத்தம் கூட்டியே.
அவள் அறிந்தது தானே. அவனை அங்கிருப்பவர் அனைவரும் அறிந்திருந்தார்கள் தான்.
ஆதிஷேஷன் எந்த சூழ்நிலையிலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டான் என்று.
வாக்கு கொடுத்தாலும் சரி, வாய்விட்டு சொல்லாமல் இருந்தாலும் சரி. மனதில் இறுதி முடிவெடுத்துவிட்டால் அதை உறுதியாக செய்துவிடுவான் என்று.
எத்தனைமுறை தன் தந்தையே தன்னிடத்தில் பெருமையாய் சொல்லியிருந்தார். அதை சொல்லிய தருணங்களையும், பெருமையாய் பேசும் பொழுதுகளையும் இப்போது நினைத்தவளுக்கு கண்ணை கரித்தது.
அவனின் அந்த குணமே இப்போது இவளின் கண்ணீருக்கு கூட மனமிறங்க மறுக்கிறதே?
“உனக்கு இப்போ புரிஞ்சிருக்கும் ஷக்தி. நாளைக்கு காலையில கல்யாணம். நானே வந்து உன்னை எழுப்பறேன். அதுவரைக்கும் முடிஞ்சா தூங்கு…” என சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டான்.
வந்தவனுக்கும் நிம்மதியில்லை. அன்று தன் முன்னே உடலை குறுக்கி துணி கொண்டு மூடி அவள் பரிதவித்த அந்த நிமிடங்கள். இமையை மூடி நிதானத்தில் நின்றான்.
அதன் பின்னும் அவளை அப்படியே விட்டுவைக்க முடியுமா? அவனிடம் அவளின் பிடிவாதம் செல்லுபடியாகவில்லை.
முயன்றாள் தான். சென்னை வர சொல்லி வற்புறுத்தினால் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுப்பேன் என்று.
முடிந்தால் செய்துபார் என்றுதான் இருந்தான் அவன். அவள் செய்துகொள்ளகூடியவளும் அல்ல.
அந்தளவிற்கு அவளை அனுமதிக்க போவதும் இல்லை என நினைத்து அவளின் பேச்சை கேட்டும் கேட்காததை போல இருந்துகொண்டான்.
வெளியே வந்தவன் மாடி ஹாலில் இருந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் ஒவ்வொருவரையாக தனது வட்டத்திற்குள் கொண்டுவந்தான்.
இவனா, அவனா என ஷக்தி சம்பந்தப்பட்டவர்கள் அத்தனைபேரையும் மனக்கண்ணில் வரிசையில் நிறுத்தி பார்த்தான்.
ஒவ்வொருவரையும் நிறுத்தி நிதானமாக ஆராய்ந்தபடி இருந்தவனுக்கு லேசாய் எங்கோ இடறியது.
வெறும் பணம் மட்டுமென்றால் உறுதியாக சொல்லமுடியும். ஆனாலும் வெளிப்படையாக எதுவும் நடக்கவில்லையே.
பணத்தை தாண்டி அவள் தன்னை காக்க நினைத்ததை யோசித்தவன் முகம் இறுகியது.
“பவன்…” என சத்தமாக அழைக்க மாடிப்படியின் இறுதியில் நின்றபடி கிருஷிடம் பேசிக்கொண்டிருந்த பவனோ வேகமாய் மாடிக்கு வந்தான்.
“எஸ் பாஸ்…” என்று வரவும்,
“நான் சொல்றவங்களை பத்தின சில டீடெய்ல்ஸ் வேணுமே?…”
“பண்ணிடலாம் பாஸ்…”
“ரொம்ப கான்பிடன்ஷியல். இதுவரைக்கும் நாம வாட்ச் பண்ணின மாதிரி இருக்க கூடாது. ஓகே…”
“எஸ் பாஸ்…” என்று சொல்லவும் தன்னுடைய சந்தேகத்தில் இருப்பவர்களை எல்லாம் சொல்ல பவன் புருவம் உயர்த்தினான்.
“வாட்?…” என்ற ஷேஷாவின் ஆட்சேபனையான பார்வையில்,
“நத்திங் பாஸ்…”
“டூ இட்…” என்று முடித்துக்கொண்டான்.
பவனுக்கு ஆச்சர்யம், எதற்கு இத்தனை பேரையும் என்று யோசித்தபடி கீழே வந்தான்.
பவனை அனுப்பியவனுக்கு மனதிற்குள் சிந்தனை வளையங்கள் கூடிக்கொண்டே சென்றது.
ஷக்தியின் சொத்துக்கள் இப்போது எல்லாம் யார் பராமரிக்கிறார்கள் என்று ஏற்கனவே அறிந்திருந்தான்.
அவளை காணவில்லை என்ற பொழுதிலேயே தனக்கு எதற்கு இது என்பதை போல இருந்துகொண்டான்.
மேலும் அவள் வெளிநாடு எங்கேனும் சென்றிருக்கலாம் என்றும் கூட ஒரு எண்ணம் ஓரத்தில் இருந்தது.
ஆனால் அவளின் சொத்துக்களை உறவுகள் எல்லாம் வந்து அவற்றில் உரிமையாக பொருப்பேற்றுவிட அவர்களை எங்கே நிறுத்த வேண்டுமோ அந்த எல்லையிலையே நிறுத்திவிட்டான்.
அதற்கு மேல் வேறு என்ன செய்ய முடியும்? எந்த உரிமையில் அவர்களை மறுக்க முடியும் என்று ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஒரு நல்ல அபிப்ராயம் இல்லாமல் போனது அவர்கள் மேல்.
பெரும்பான்மையான உரிமை ஷேஷாவிடம் இருக்க அவனை மீறி அதில் எந்த தில்லுமுல்லையும் அவர்களால் செய்ய இயலவில்லை.
இப்போது மற்ற அத்தனை வேலைகளையும் ஒதுக்கிவைத்தவனின் முழு கவனமும் ஷக்தியிடம்.
“என் பொண்ணு ஷக்தி தான் என்ன பெத்த அம்மாப்பா. அவள் அளவுக்கு கூட அவ அம்மாவுக்கு விவரம் பத்தாது. பாவம்…” என்று தன்னிடம் சொல்லிய அந்த குரலின் பின்னால் இருந்த சோகம் ஏன் என்று இப்போது புரிந்துகொள்ள முடிந்தது அவனுக்கு.
“ஸார்…” என அங்கே வீட்டின் மேற்பார்வையில் இருக்கும் பெண் வந்து நிற்க கண்ணை திறந்து பார்த்தவன்,
“எஸ்…” என்றான்.
“மேடம் ரூம் திறக்கலை. சாப்பாடு கொண்டுபோக முடியலை…” என்று சொல்லவும் நேரத்தை பார்க்க பதினொன்று. ஒரு பெருமூச்சுடன் எழுந்தான்.
“ஓகே, ஒரு அரைமணி நேரம் கழிச்சு கொண்டுவாங்க…” என்று சொல்லிவிட்டு மீண்டும் நக்ஷத்ராவின் அறைக்கு சென்று கதவை தட்டினான்.
அவள் திறக்கவில்லை. சத்தமும் இல்லாமல் போக மயங்கி விழுந்திருப்பாளோ என தோன்றியது.
“நக்ஷத்ரா நான் ஷேஷா…” என்று மீண்டும் தட்டவும் ஐந்து நிமிடம் கழித்தே கதவு திறக்கப்பட உள்ளே நுழைந்தான்.
ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்டு திரைகள் எடுத்துவிடப்பட்டு அறையே இருளில் மூழ்கி இருக்க காற்றும் இல்லாமல், ஏசியும் போடப்படாமல் உள்ளே அப்படி புழுக்கம்.
வெயில் காலத்தில் இப்படி காற்று கூட புக முடியாதளவிற்கு இப்படி அடைத்துவிட்டிருக்க வெளிச்சமும் இல்லை.
உள்ளே சென்றவனுக்கு ஒரு நிமிடம் தாண்டமுடியவில்லை. அப்படி ஒரு புழுக்கம்.
“ஷக்தி என்ன இது?…” கேட்டுக்கொண்டே விளக்கை போட்டுவிட்டவன் ஏசியை ஆன் செய்துவிட்டு அவளை தேட அறையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த குட்டி இருக்கையில் தன்னை சுருக்கி அமைந்திருந்தாள்.
உடை எல்லாம் வியர்வையில் நனைந்து போயிருந்தது. பார்த்தவனுக்கு உட்சபட்ச கோபம் சுரந்தது.
“என்ன பண்ணிட்டு இருக்க ஷக்தி? இப்போ என்ன ஆகிடுச்சுன்னு இப்படி பன்ற?…” அவளை கை பிடித்து எழுப்பி நிறுத்தினான்.
“என்னால என்ன பண்ண முடியுமோ அதை பன்றேன். அதுல உங்களுக்கு என்ன நஷ்டம்?…” என அவள் பதிலுக்கு பேச பிடித்திருந்த கையின் வலிமை கூடியது.
“ஆர் யூ மேட்? எஸ் நீ ஒரு…” என்றவன் அவளின் பார்வையில் வார்த்தைகளை நிறுத்திக்கொள்ள,
“இப்படியே வச்சிருந்தா நான் அப்படிதான் ஆகிடுவேன். அதை உங்களுக்கு புரிய வைக்கனுமே?…” என்று சொன்னவளை அப்படியே விட்டவன் வேகமாய் ஜன்னல் திரைகளை எல்லாம் ஒதுக்கி அறையில் வெளிச்சம் பரவ விட்டான்.
வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த வீட்டின் பரந்துவிரிந்த தோட்டமும் சுற்றிலும் பாதுகாப்பிற்கென ஆட்களும் நிறைந்து இருந்தார்கள்.
“இத்தனை பேர் உன்னை சுத்தி இருக்கும் போது யார் என்ன பண்ணிட முடியும்? இத்தனை பயம் ஏன்னு தான் கேட்கறேன்?…” என கேட்டவனுக்கு வாயை திறக்காமல் மௌனம் சாதித்தாள்.
அவனிடத்தில் எதையும் சொல்ல விரும்பவில்லை நக்ஷத்ரா. அவன் அத்தனை முறையும் ஷக்தி ஷக்தி அழைத்தும் அந்த அழைப்பு ஆட்டம் காண செய்தாலும் ‘நான் நக்ஷத்ரா’ என்றே தன்னை உருவேற்றிக்கொண்டாள்.
ஷேஷாவால் அவளை அப்படியே விட்டுவிட முடியவில்லை. அவளை அந்த வெறுமையான முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ ஒரு ஓரத்தில் விட்டுப்பிடித்தால் என்ன என்று தோன்ற அவனுக்கெதிராய் அவனின் மனதே அடம் பண்ணியது விட முடியாதென்று.
‘இதென்ன இப்படி ஆகிவிட்டேன் நான்?’ என தன்னை குறித்த ஆச்சர்யம் வேறு அவனை அலைகழித்தது.
அவன் முழுதாய் தன்னை நம்பினான். எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஷக்தியை தன்னால் பாதுகாக்க முடியும் என்று.
கதவு லேசாய் தட்டப்பட அவளையே பார்த்திருந்தவன் சென்று கதவை திறக்க வீல்ட்ரேயில் உணவுகள் வைக்கப்பட்டு அதனை தள்ளிக்கொண்டு வந்திருந்தாள் பணிப்பெண்ணொருத்தி.
அவளை உள்ளே விடாமல் ட்ரேயை மட்டும் தன் பக்கம் நகர்த்திக்கொண்டவன் தலையசைப்பில் அவளை செல்லுமாறு பணித்துவிட்டு அதை தானே உருட்டிக்கொண்டு வந்தான்.