“இளவேந்தன்…” என உதடுகள் முணுமுணுக்க கடுமையான பார்வையுடன் கண்களுக்கு குளிர்கண்ணாடியை போட்டபடி வேக எட்டுக்களுடன் செல்பவனை பார்த்தவள் அப்படியே துவண்டு போய் கண்ணை மூடினாள்.
ஷேஷா மீண்டும் வரும் வரை அவள் அப்படியே இருக்க வந்தவனும் அவள் இருந்த கோலத்தை பார்த்து பதறிவிட்டான்.
“ஷக்தி என்னாச்சு? தலைசுத்துதா?…” என்று அவளின் கன்னம் தட்டி எழுப்ப,
“ஹ்ம்ம், இல்லை…” என்றவள் எழுந்து சீட்டில் அமர்ந்துகொண்டாள்.
பார்வை எதிரே இருந்த அந்த வாகனத்திலேயே இருக்க வெறித்த பார்வையை கண்டவனின் மனதிற்குள் சுணக்கம்.
“அவங்களை பார்த்தியா ஷக்தி?…”
“ஹ்ம்ம்…” என தலையை மட்டும் ஆட்டிவைக்க,
“அதான் இப்படி கீழே உட்கார்ந்தியா?…”
“ப்ளீஸ், இங்க இருந்து போகலாம். போவோமே?…” என்றாள் அவள் இறைஞ்சுதலாக.
“ஓகே, ரிலாக்ஸ்…” என்றவன் பவனை அழைத்ததும் மீண்டும் கார் இல்லம் நோக்கி சென்றது.
ஆதிஷேஷனின் மனதோ ட்ரஸ்ட்டில் வைத்து எழில் பேசியதிலேயே தான் சுழன்றது.
“என்ன ஷேஷா கொஞ்ச நாளா சென்னைலயே இருப்பிடம் இல்லை போல? காத்து மும்பை பக்கமே இருக்குதே?..” என்று நக்கலாக கேட்க அவனுடன் இளவேந்தனும் சேர்ந்து நின்று சிரித்தான்.
“அஃப்கோர்ஸ், பார்க்க தானே போறீங்க? அதுவும் நீங்க இவ்வளோ கேட்டதுக்கு அப்பறமும்?…” என சிரித்தவனின் சிரிப்பில் என்ன இருந்ததென்று கண்டுகொள்ளமுடியவில்லை அவர்களால்.
“என்ன சொல்றீங்க ஷேஷா?…” என எழில் கேட்க இப்போது அவன் குரலில் சற்று அச்சம் வந்திருந்தது.
“ஓஹ் இன்னும் புரியலையா? லெட்ஸ் ஸீ…” என்றவனை புரியாத பார்வை பார்த்தவன்,
“ஓகே, அதை அப்போ பார்த்துக்கலாம். இந்த மந்த் வந்திருக்கிற டொனேஷன்ஸ் பத்தி பேச ஒரு மீட்டிங் வைக்கனும்…” என இளவேந்தன் பேச்சை மாற்றினான்.
“அதை பேச நீங்க யார் மிஸ்டர்? ஷேர் பெர்ஸனா?…” என்ற ஷேஷாவின் கேள்வியில் முகம் கன்றியது இளவேந்தனுக்கு.
“அவனுக்கும் எல்லா ரைட்ஸும் இருக்கு ஷேஷா. நீங்க இப்படி பேசறத என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது…” என கொதித்தான் எழில்.
“யார் யாரோ இங்க என்ன நடக்கனும்னு டிஸைட் பன்றதை பார்த்துட்டு என்னாலையும் சும்மா இருக்க முடியாது எழிலரசன்…” என்றவனின் கடுமையில் இளவேந்தன் எழிலை கை பிடித்து அமைதிப்படுத்தினான்.
“ஓகே நான் கேட்கறேன், மீட்டிங் வைக்கனும். எப்போ பண்ணலாம்?…” என்று எழில் கேட்க,
“எனக்கு நாளைக்கு மேரேஜ். அதனால வெடிங் முடியவும் அரேஞ்ச் பண்ணிட்டு உங்களுக்கு அதாவது இந்த ட்ரஸ்ட் ஷேர் பெர்ஸனோட கார்டியன்ற உங்களுக்கு நான் இன்பார்ம் பன்றேன்…”
எழிலரசனின் இடத்தை தெளிவாக திட்டவட்டமாக ஷேஷா கூற எழிலரசன் கொந்தளித்தான்.
“என்ன பேசறீங்க ஷேஷா? கார்டியன்னு சொல்றீங்க? யாருக்கு யார் கார்டியன்?…”
இப்போது நிச்சயம் அகத்தியன் தன் திருமண விஷயத்தை பற்றி தோண்ட ஆரம்பித்திருப்பான் என்று தெளிவாய் தெரியும்.
தேடட்டும் என்றுதானே சொல்லிவிட்டே வந்தது. தேடி தேடி ஓயட்டும் என்று நினைத்துக்கொண்டவன் இதழ்கள் வளைந்தன.
வீட்டிற்கு வந்தவளை இறக்கிவிட்டவன் மீண்டும் கிளம்பிவிட அதை எல்லாம் கவனிக்காமல் உள்ளே வந்து தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறையில் முடங்கிக்கொண்டாள் நக்ஷத்ரா.
——————————————————-
அங்கே அகத்தியன் தலையை பிய்த்துக்கொள்ளாத குறை தான். எங்கே எப்படி இதை கோட்டைவிட்டோம் என்று யோசித்து யோசித்து தனது ஆத்திரத்தின் அளவை கூட்டிக்கொண்டே சென்றான்.
“எப்படி மருமகனே இதை நாம கவனிக்காம விட்டோம்? எப்படி விட்டோம்?…” என்று ஓரிடத்தில் அமர முடியாமல் அங்குமிங்குமாய் தவித்து போனார்.
“எனக்குமே ஷாக் தான் மாமா. திடீர்ன்னு நாளைக்குன்னு சொல்றான். யார் என்னன்னு கூட தெரியலை. ரொம்ப ரகசியமா வச்சிருக்கான்…” என எழில் சொல்ல அந்த மொட்டைமாடி பார் வசதியுடன் கூடிய இடமாக அவர்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருந்தது.
“இதை நடக்கவிட கூடாதே? கொலை ஒன்னோட போனா நிம்மதின்னு பார்த்தா இப்ப குடும்பமா தூக்கனும் போல? ஒத்து போடான்னா அசரமாட்டேன்னு கண்ணுல விரலை விட்டு ஆட்டறானே?…”
“என்ன செய்யலாம் மாமா?…”
“அதான் மருமகனே நானும் யோசிக்கறேன். இப்ப இவனை முடிச்சுட்டா நாம ஆட்சியை வச்சு அந்த ட்ரஸ்ட் மொத்தத்தையும் நம்ம கைக்குள்ள கொண்டு வந்திரலாம்ன்னு நினைச்சா இந்த நேரத்துல பார்த்து இவன் கல்யாணம் பண்ணனும்னு ஆரம்பிச்சிருக்கானே?…”
“எனக்கும் அதுதான் யோசனை. இத்தனை வருஷம் அப்படி எதுவும் இல்லாம தனியா இருந்தவன் ஏன் திடீர்ன்னு கல்யாணம் செய்யறான்? அதுவும் யாருன்னு கூட எங்கயும் கசியவிடலை…”
“அதுதான் மருமகனே இடிக்குது எனக்கும்? ச்சை இப்ப இவன் குடும்பம், வாரிசுன்னு ஆகிட்டா இன்னும் சிக்கல். இவனை நெருங்கவும் முடியலை. தொடவும் முடியலை…” என்று தலையை உலுக்கிக்கொண்டான் அகத்தியன்.
“நானும் முடிஞ்சளவுக்கு விசாரிச்சு பார்த்துட்டேன். அவன் வீட்டை கூட நோட்டம் விட முடியலை. அரசியல்ல பவரோட இருந்து என்ன புண்ணியம்? அவன்ல நமக்கு மேல இருக்கான்…” என்று எழில் நொந்துகொண்டான்.
“சும்மா இருங்க மருமகனே, எரியிற நெருப்புல எண்ணையை ஊத்திட்டு…” என அகத்தியனின் முகம் அத்தனை எரிச்சலை சுமந்திருந்தது.
“இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் மாமா…” என்றவன் ஷேஷா பேசியதை ஒன்றுவிடாமல் சொல்ல இப்போது ஆடிப்போனான் அகத்தியன்.
“ஷக்தி பத்தி எதுக்கு இன்னைக்கு இந்த பேச்சு வந்துச்சு?…” என கொலைவெறியுடன் எழிலை பார்த்த அகத்தியன்,
“நீங்க ஏன் அவளோட பேரை அங்க எடுத்தீங்க?…” என்றான் ஆவேசத்துடன்.
“பேசனும்னு நினைச்சு பேசலை மாமா. ட்ரஸ்ட் உரிமைன்னு பேசவும் ஒரு வேகத்துல சொல்லிட்டேன். ஆனா அவன் பார்வையே சரியில்லை. இத்தனை நாளும் கூட அது வேற. ஆனா இப்போ இன்னைக்கு பார்த்தது…” என எழில் யோசனையுடன் சொல்ல,
“என்ன சொல்ல வரீங்க?…” என்றன அகத்தியன் கூர்மையுடன்.
“ஷக்தியை பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்குமோ? ஐ மீன் அவ எங்க இருக்கான்ற விவரம்…” என்றதுமே அகத்தியனின் கண்கள் பளபளத்தன.
“இல்லை மருமகனே, அந்த குட்டி அவன் கைக்கு கிடைக்கவே கூடாது…” என்றவரின் முகத்தில் வந்துபோன உணர்வை எழில் வித்தியாசமாக பார்த்தான்.
“மாமா…” என எழில் அழைக்க உடனே சுதாரித்தான் அகத்தியன்.
“அதான் மாப்பிள்ளை, அது சின்னப்பிள்ளை தானே? அதான் குட்டின்னேன். அவ பேர கூட என் வாயால சொல்லமாட்டேன்…” என்றதும் வெறுப்புடன் ஷக்தியை பற்றி நினைத்துக்கொண்டான் எழில்.
“ஆனா அவளை பத்தி தெரிஞ்சிருந்தா இத்தனை நேரம் அவன் சும்மா இருந்திருக்க மாட்டானே மருமகனே? அத்தனை மதிப்பு வச்சிருந்தானே அந்த மனுஷன் மேல? வாரிசு கைக்கு கிடைச்சதும் அந்த இடத்துல உட்காரவச்சு பார்க்கனும்னு தானே நினைப்பான்?…”
தன்னை மீறி தன் ஆட்களை மீறி ஷக்தியை ஷேஷா நெருங்கிவிட முடியாதென்று திண்ணக்கத்துடன் இருந்தார்.
“இப்போ நமக்கு அவன் யாரை கல்யாணம் பன்றான்னும் தெரியனும். அந்த பொண்ணை எங்க வச்சிருக்கான்னும் தெரியனும். முடிஞ்சா அவளை கண்டுபிடிச்சு தூக்குங்க…” என அகத்தியன் சொல்ல,
“அதுதான் மாமா யோசனை. ஏன் இத்தனை ரகசியமா செய்யனும்னு தோணுது? அதுவும் எங்க நடக்குதுன்னு கூட தெரியலை. அவன் இண்டஸ்ட்ரில கூட ஒருத்தருக்கும் இன்விடேஷனோ, யாரையும் இன்வைட்டோ கூட பண்ணலை….” என்றான் எழில் குழப்பமாக.
“சரி விடுங்க, கத்தரிக்காய் முத்தினா கடை சந்துக்கு வந்துதான ஆகனும். குடும்பமா முடிக்கனும்னா அதையும் செய்வோம்…” என சொல்லிய அகத்தியன் தள்ளாட்டத்துடன் எழுந்து செல்ல எழில் அங்கேயே தான் அமர்ந்திருந்தான்.
ஷேஷாவின் பார்வை, பேச்சு என்றுமே தங்களிடம் மதிப்பாய் இருந்ததில்லை. ‘நீயெல்லாம் எனக்கொரு ஆளா?’ என்பதை போல தான் கீழாக பார்ப்பான்.
அதையும் தாண்டி இன்று ஏனோ அந்த பார்வையிலும், பேச்சிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றியது எழிலுக்கு.
“ஷேஷா ஷேஷா என்னடா சொல்ல வர?…” என தலையை பிடித்துக்கொண்டான் எழில்.