அவனுக்கு பதில் சொல்லாமல் கீழே இறங்கி படுக்கையின் ஓரத்தில் அவள் சுருண்டுகொள்ள ஷேஷாவும் ஒன்றும் சொல்லாமல் படுத்துவிட்டான்.
ஆனால் கிஞ்சித்தும் உறக்கம் என்பது இருவருக்கும் இல்லாமல் போனது அந்த நடுநிசியில்.
இவன் தன்னை நெருங்குவானோ என்னும் பதற்றத்தில் நக்ஷத்ராவும், இவள் எப்போது இயல்பாக மாறுவாள் என்று ஷேஷாவும் அருகில் இருப்பவரை பற்றிய சிந்தனை ஆட்கொள்ள விழித்தே கழித்தார்கள்.
விடிந்த பொழுது ஷேஷா கண்திறக்க மனைவியானவள் அருகே இல்லை. அந்த அறையிலும் இல்லாமல் போக எழுந்தவன் அவளை தேட ஆரம்பித்தான்.
அயர்ந்து உறங்கியதென்னவோ அரைமணி நேரம். அதற்குள் எங்கே சென்றாள் என்று வெளியே வர மாடியின் லாபியில் இருந்த தோட்டத்தில் அமர்ந்திருந்தாள்.
“தேங்க் காட்…” என்றான் அவளை பார்த்ததும்.
“மார்னிங்…” என்று நக்ஷத்ரா சொல்ல,
“குட் மார்னிங். என்ன குட் மிஸ் ஆகிடுச்சு?…” என கேட்டபடி அவள் எதிரே அமர்ந்தான்.
“குட் எல்லாம் என்னை விட்டு எப்பவோ போய்டுச்சு. இப்போ இங்க எப்படின்னு தான் தெரியலை…” பூடகமாக அவள் சொல்லவும் ஷேஷாவிற்கும் லேசாய் இதழ் நெளிந்தது.
“முதல்ல பாஸிட்டிவ் தாட்ஸ் நிறைய வச்சுக்கோ ஷக்தி. குட் தானாவே நம்மளை தேடி வரும்…” என சொல்லவும் முகத்தை சுண்டிவைத்தாள்.
“ஆமா, நேத்து காலையில இருந்து அவர் இங்க தான் இருக்காரா?…”
“எவர் ஷக்தி?…” என்றான் யாரை கேட்கிறாள் என புரியாமல்.
“காலையில வெடிங் அப்போ இருந்தாரே. என் பேர் சொல்லி கூட கூப்பிட்டு நான் வார்ன் பண்ணி….” என்றதும் ஷேஷாவிற்கு ஞாபகம் வந்தது.
“ஓஹ், அவர் நம்ம லீகல் அட்வைசர்…” என ஷேஷா சொன்னதுமே நக்ஷத்ராவிற்கு பொறிதட்டியது.
“யு மீன்…” என்றவளின் கேள்வியை அவள் ஆரம்பிக்கும் முன்பே அதை முடித்துவைத்தான் ஆமாம் என ஒப்புக்கொண்டு.
“எஸ்…” ஷேஷா அலட்டிக்கொள்ளாமல் சொல்லவும் அவனை முறைக்கவும் முடியாமல், திட்டவும் முடியாமல் ஒருமாதிரி பதட்டமான மனநிலைக்கு வந்துவிட்டவள் சாய்ந்து தொய்வாய் அமர்ந்தாள்.
காலை தூக்கி வைத்து ஒருபக்கமாய் மடங்கி அமர்ந்துகொண்டவளின் உடல் லேசாய் உதறியது.
“நான் இங்க தான் இருக்கேன்னு தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சிருக்கும்…” என்று தன்னைப்போல அவளின் இதழ்கள் முணுமுணுக்க அவன் உன்னிப்பாய் அதை கேட்டான்.
“ஷக்தி நீ இப்போ ஆதிஷேஷன் வொய்ப். லிசன்…” என்றவனை ஏறிட்டும் பார்க்காமல் படக்கென்று எழுந்தவள் அறைக்குள் சென்றுவிட அவளுக்கு எப்படி அவளை சரி செய்வது என பார்த்தபடியே இருந்தான் ஷேஷா.
இரண்டு நிமிடம் பொருத்து தானும் அறைக்குள் செல்ல அவள் குளிக்க சென்றிருப்பது தெரிந்தது.
அன்று அறக்கட்டளைக்கு முக்கியமான ஒருவர் வருவதாக இருக்க தான் இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
நேரம் தாழ்த்தாமல் கிளம்ப நினைத்தபடி அவளுக்காக காத்திருக்க அவள் இன்னும் வராமல் உள்ளேயே இருந்தாள்.
நேரம் செல்ல செல்ல பொறுமை இழந்தவன் தானே சென்று கதவை தட்ட உடனே வந்து திறந்தவள்,
“என்னாச்சு?…”என்றாள் இலகுவாக.
“எனக்கு டைம் ஆச்சு ஷக்தி. ட்ரஸ்ட்ல இன்னைக்கு முக்கியமான வேலை. முடிச்சுட்டு நான் நம்ம பைனான்ஸ் ஆபீஸ் போகனும்…”
“ஓகே…” என சொல்லி வெளியே வந்துவிட்டாள்.
“இவ்வளவு நேரம் என்ன பண்ண உள்ள?…” தெரிந்துகொள்ள அவன் கேட்க,
“வெளில வர தோணலை. அதான் உள்ள இருந்தேன்…”
“இதென்ன பதில் ஷக்தி?…” என்றவன்,
“உனக்கு போர் அடிச்சா நீ கிளம்பி நம்ம ஆபீஸ், இல்லை ட்ரஸ்ட் எதுக்காவது வா. ஏதாவது ஒரு போஸ்ட்டிங் பொறுப்பெடுத்துக்கோ…” என்றதுமே முகம் வெளிறியது.
“நோ, ஐ கான்ட்…” என்று சொல்லி அவனை தாண்டி சென்றவள் மீண்டும் அந்த லாபியில் சென்று அமர்ந்துகொண்டாள்.
எத்தனைநாள் தான் இப்படியே இருக்க முடியும்? பைத்தியம் பிடிப்பதை போல இருந்தது அவளுக்கு.
ஐந்து வருடங்களாக ஓடி ஓடி உழைத்தவள் ஒரே இடத்தில் முடங்கி இருப்பது கால் ஒடிந்ததை போன்ற உணர்வை தந்தது.
குளித்து கிளம்பி வந்தவன் அவள் அமர்ந்திருப்பதை கண்டு காலை உணவை அங்கே கொண்டுவர சொல்லிவிட்டான்.
முகத்தில் கடுமை விரவி இருக்க அவனிடம் பேச வாய் திறக்கவில்லை. ஏதேனும் பேசினால் தன்னை அறக்கட்டளை வர சொல்வானே என பயந்து மௌனியாய் இருந்தாள்.
ஷேஷாவும் விட்டுப்பிடிக்கும் எண்ணத்தில் ஒன்றும் கேட்கவில்லை. இருவருக்கும் தனிப்பட்ட பேச்சுக்களோ, ட்ரஸ்ட் சம்பந்தமான பேச்சுக்களோ எதுவும் இல்லை.
பொதுவாக தன்னை, தன்னுடைய வேலை சம்பந்தமான பேச்சுக்களுடன் நிறுத்திக்கொண்டவனை இயலாமையுடன் பார்த்தாள்.
“ஓகே ஷக்தி, சாப்பிட்டு ரெஸ்ட் எடு. நான் கிளம்பறேன். எதுவும்ன்னா எனக்கு கால் பண்ணு…” என அவளுக்கு ஒரு புது மொபைலையும் தந்தவன் கிளம்பிவிட்டான்.
அதை கையில் எடுக்காமல் பார்த்தபடி இருந்தவளுக்கு அடுத்து என்ன செய்யவிருகிறான் என்று குழப்பாக இருந்தது.
தான் கையெப்பமிட்டு கொடுத்திருந்த வெற்று தாள்கள் செய்ய போகும் விபரீதம் நிச்சயம் பெரிதென்பது மட்டும் விளங்கியது.
ஏற்கனவே நிம்மதியிழந்து இருந்திருந்தவள் இப்போது இன்னும் பாதிக்கப்பட்டாள்.
எதுவும் வேண்டாம் என்றாலும் விடாமல் செய்கிறானே என்னும் கோபமும் அவன் மேல் பெருகியது.
இருந்தும் என்ன செய்யமுடியும்? அவளை சூழ்ந்துகொண்ட அந்த கழிவிரக்கத்தில் அங்கேயே அமர்ந்திருந்தாள் மதிய உணவு வரை.
அவள் அப்படி நகராமல் இருப்பதை பற்றி வீட்டில் இருக்கும் கேர்டேக்கர் கிருஷிற்கு அழைத்து சொல்ல அது பவன் மூலம் ஷேஷாவை அடைந்தது.
செய்யவேண்டிய வேலைகள் ஏராளம் இருந்தாலும் அதற்கு முன் கவனிக்கவேண்டிய விஷயம் ஷக்தியின் உரிமை மீட்பு.
ஷக்தியை பெற்றவர் இருந்தவரை வாயை மூடிக்கொண்டு அவர் செய்வதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்தவர்கள் அவரின் மறைவில் தங்களின் திட்டங்களை நிறைவேற்ற என்னவென்று கேட்கமுடியாத இடத்தில் இருந்தவன் ஷேஷா.
ஆனால் இப்போது உரிமையாய் கேட்கலாமே? முன்பே யாரோவாக இருந்த பொழுதே ட்ரஸ்ட்டில் அவர்கள் கைவரிசையை காட்ட நினைத்ததில் கொஞ்சமும் அசைந்துகொடுக்காமல் அதற்கு தடுப்பாய் நின்றவன். இப்போது விடுவானா?
“பவன் எல்லா டாக்குமெண்டும் செக் பண்ணியாச்சா?…”
“எஸ் பாஸ். எல்லாமே பக்கா…”
“ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணனும். எல்லாமே லீகலா இருக்கனும். ஒரு சின்ன லூப் ஹோல் கூட அவங்களுக்கு சாதகமா அமைஞ்சிட கூடாது…”
“வாய்ப்பே இல்லை பாஸ். அவங்க எல்லாத்தையும் சரண்டர் பண்ணிதான் ஆகனும். நம்ம ட்ரஸ்ட்ல கூட ஷக்தி மேம் வர வரைக்கும் அந்த பொறுப்பை பார்த்துக்கற கார்டியனா தான் இருந்தாங்களே தவிர மொத்த உரிமையும் இல்லையே…”
“ஆனாலும் அவ்வளவு சுலபமா ஒத்துக்கமாட்டாங்க பவன்…”
“நம்ம இல்லையா பாஸ். எதுவும் பண்ண முடியாதளவுக்கு நீங்க சொன்ன எல்லாமே ரெடி பண்ணியாச்சு. அதனால அவங்க தப்பிக்க முடியாது. அப்படி நினைச்சா மொத்த அரசியல் வாழ்க்கையும் ஆட்டம் தான்…”
பவன் இதை சொல்லவும் ஷேஷாவின் முகத்தில் அப்படி ஒரு இறுக்கமும், கோபமும்.
ஷக்தியின் இந்த நிலை, இரவு உறக்கம் இழந்து பயந்து விழிப்பவளின் பரிதவிப்பு என இன்னுமே ஷேஷாவை தீவிரப்படுத்தி இருந்தது.
யார் யார் யார் என்ற யோசனை. சந்தேகத்தில் அகத்தியன், இளவேந்தன் என்று ஆரம்பித்து அவர்கள் வட்டத்தில் உள்ளவர்களை எல்லாம் கொண்டு வந்திருந்தான்.
முதல் இரண்டு இடத்தில் இருந்தது அகத்தியனும், இளவேந்தனும். எழில் தொழில், பணம், சொத்து என்று போனாலும் அதையும் தாண்டி அவளின் அந்த பயமும், பாதுகாப்பின்மையும் எழிலால் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான்.
எல்லாம் நினைத்தவன் தான் நினைத்ததை செய்தும் முடித்திருந்தான். எந்த ஓட்டையின் வழியும் அவர்கள் வெளியேறவோ, வேறு திட்டம் தீட்டவோ நினைக்க முடியாதளவிற்கு கட்டத்தை நகர்த்தி இருந்தான் ஷேஷா.
சம்பந்தப்பட்டவர்களுக்கு ஷக்தியின் மூலமாக கோர்ட் நோட்டீஸ் போய் சேர்ந்திருக்க அத்தனைபேரின் நிம்மதியும் ஆட்டம் கண்டது.
அதிலும் ஷக்தி எப்படி திடீரென்று என்ற எண்ணமும் பயமும் வேறு. எதுவும் வேண்டாம் என்று உதறி ஓடி போனவள் இப்படி அனைத்திலும் தன் உரிமையை கேட்டு கோர்ட் மூலம் செய்திருந்தது பேரதிர்ச்சி.
“அந்த குட்டி இப்ப ஷேஷாக்கிட்டையா?…”
ஷேஷா கொடுத்திருந்த நெருக்கடிகளை ஒருபக்கம் விட்டுவிட்டு அகத்தியனின் மூளை அத்தனையையும் தாண்டி பெண்ணாசையில் குறுக்காய் ஓட நினைத்தது.