அதிகாலை இருள் முற்றிலும் விலகாத நேரத்தில் அங்கு வந்து இறங்கியதுமே அந்த பிரமாண்ட வீட்டின் சூழலே பிடித்தமில்லாமல் போக அது அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
“குட்டிம்மா…” மனோகரனின் ஒற்றை அழைப்பில்,
“உள்ள போகலாம்ப்பா…” என்றாள் மகள் உடனே.
“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை இவளுக்கு…” என தாய் வாசுகி முணுமுணுத்தாலும் மனோகாரனின் காதை அது எட்டவிடவில்லை.
“உள்ள வாங்க மனோகர் ஸார்…” நவநீதன் என்ற அந்த நபரின் அழைப்பில் மனோகர் பேக்கை எடுத்துக்கொண்டே,
“நீங்க முதல்ல போய் ரெஸ்ட் எடுத்துட்டு குளிச்சிட்டு வாங்க. சாப்பிடும் போது பேசாலாம்ன்னு சொல்லிருக்கார் ஸார்…” என்றவன் அந்த வீட்டின் முக்கிய பொறுப்பில் வகிப்பவன்.
அது முன்னாள் நிதியமைச்சர் சிங்காரத்தின் பங்களா. அவரின் பி.ஏ எனப்படும் நவநீதன் மனோகரின் குடும்பத்தை வரவேற்றிருந்தான்.
அனைவரும் அந்த பங்களாவின் அருகில் இருந்த கெஸ்ட்ஹவுசின் முன்னால் வரவும் கதவை நவநீதன் திறந்துவிட வாசுகி தன் மகளுடன் உள்ளே சென்றுவிட்டார்.
“அய்யா எழுந்ததும் நானே உங்களை வந்து கூப்பிடறேன்….”
“ஓகே…”
“அய்யா கூட உங்களுக்கு வீட்டுக்குள்ள தான் ரூம் அரேஞ்ச் பண்ண சொன்னார். அப்பறம் உங்களுக்கு பிடிக்காதாமே? நீங்க இங்க தான் இருக்க பிரியப்படுவீங்கன்னு அதையும் சொன்னார். அவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கறார் உங்களை…”
நவநீதன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு மீறிய புகழாரத்தை பின்னிக்கொண்டு வர மனோகரனுக்கு அது அதிகப்படி என புரிந்தாலும் அமைதியாக இருந்தார்.
“ரெண்டு நாள் சேர்த்து லீவுங்களா ஸார்?…”
“அதெல்லாம் இல்லை நவநீதன்….” மனோகரன் கத்தரித்தே பேச,
“அப்பா ட்ரைவ் பண்ணிட்டு வந்தது டயர்டா இருக்கும். வந்து கொஞ்ச நேரம் தூங்குங்க…” என்ற மகளின் அழைப்பில் பெருமூச்சுடன் உள்ளே சென்றுவிட்டார்.
நவநீதன் இன்னும் செல்லாமல் அந்த கெஸ்ட்ஹவுஸ் வாசலிலேயே நிற்க அதனை பார்த்தவள்,
“எக்ஸ் மினிஸ்டர் வீட்டுல கெஸ்ட்ஹவுஸ்க்கு கூட வாட்ச்மேன் உண்டுன்னு இன்னைக்கு தான் தெரியும் எனக்கு. எனிவே டோர் பத்திரம் அங்கிள். யாரும் கழட்டிட்டு போய்டாம பார்த்துக்கோங்க. ஸ்லீப் வெல்…” என்று சொல்லி படாரென கதவை அடைத்துவிட்டு செல்ல நவநீதன் பல்லை கடித்தான்.
“இவளுக்கு நான் அங்கிளா? இந்த குட்டிச்சாத்தானுக்கு வந்த வாழ்வை பாரு….” என சத்தம் வராமல் ஒரு பொருமல்.
என்றைக்காவது உதவுமே என வழிந்து, குழைந்து பேசி மனோகரின் நட்பை உருவாக்கி ஒரு அபிமானத்தை பெற்றுவிட நினைக்க அது முடியவில்லை.
“என்ன இருந்தாலும் தலைவர் மூளையே மூளை. சின்ன மீனை போட்டு விலாங்குமீனை புடிக்கிறாரு. அதுவும் தன் வீட்டு மீனில்லை…” சிங்காரத்தை சில்லாகித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் நவநீதன்.
கதவை அடைத்துவிட்டு வந்து அந்த மூங்கில் இருக்கையில் தன் இரு கைகளையும் லேசாய் முறுக்கியபடி அமர்ந்தாள் பிரனித்தா.
“கை வலிக்குதாம்மா?…” மனோகரன் கேட்க,
“அதெல்லாம் இல்லைப்பா….” என சட்டென தோளை குலுக்கி சிரிக்க,
“ம்க்கும், இவ என்னைக்கு சொல்லிருக்கா? இருங்க வரேன்…” என்ற வாசுகி தன் பேக்கில் இருந்த தைலத்தை எடுத்து மகளின் கைகளில் பரபரவென தேய்த்துவிட்டார்.
“சரி உள்ள போய் தூங்கு. உன் மாமா எப்ப கூப்பிடுவாரோ? நாம போகனும்…” வாசுகி சலிப்புடன் சொல்ல,
“சிங் இன் த ரெய்ன்…” என சிரித்தபடி தாய், தகப்பனின் கன்னத்தை பற்றி கிள்ளிவிட்டு அருகிருந்த அறைக்கு சென்று படுத்துவிட்டாள்.
உண்மைக்கும் உறக்கம் அப்படி கண்களை சுழற்றியது. மனதிற்குள் அத்தனை யோசனைகள், கேள்விகள், தயக்கங்கள் இருந்தும் அதை நினைத்து குழம்பி உறக்கத்தை தொலைக்க மனதில்லை.
வருவது வரட்டும், பார்த்துவிடுவோம் என்று நினைத்தவள் அவனின் முகத்தை மனக்கண்ணில் கொண்டுவந்தாள்.
“இரிட்டேட்டிங் இடியட்…” அவனின் கோபமான குரல் காதில் ஒலிக்க,
“உன் தலையெழுத்து இப்படியா போகனும் மிஸ்டர்.வொய்ட்? அன்னைக்கு இரிட்டேட்டானது இப்ப இனிக்குதாமா?…” என அவன் நினைவு வந்து மோதிய விழிகளுக்குள் கேலியாய் அவனிடம் கேட்டாலும் அவனின் அந்த பதவி.
சட்டென எழுந்து அமர்ந்துவிட்டாள். எரிச்சலும், விருப்பமின்மையும் உடனே வந்து சேர்ந்துகொண்டது.
தலையை கோதிக்கொண்டவள் தன் நீண்ட கூந்தலை சுருட்டி கொண்டையாய் முடிந்துகொள்ள வெளியே பேச்சுக்குரல்.
“என்ன வாசுகி, நான் எடுத்த முடிவு தப்புன்னா நினைக்கிற?…” என்றார் மனோகரன்.
“தெரியலைங்க. நன்றிக்கடனுக்கு என்னவேனா செய்யலாமா? அதுவும் நமக்கு இருக்கறது ஒரே பொண்ணு…” வாசுகியின் குரலில் அப்பட்டமான பயமும், கவலையும்.
“விசாரிக்காம செய்யலை வாசுகி. அதுவும் இன்னைக்கு நம்ம பொண்ணு போய் பேசறேன்னு சொல்லியிருக்காளே? பேசிட்டு வந்தும் அவளுக்கு இஷ்டம் இல்லைன்னா கண்டிப்பா வேண்டாம். என்னை மாமா என்னவேணா நினைக்கட்டும். பிரச்சனை இல்லை…”
மனோகரன் உறுதியாக மனைவியிடம் சொல்ல வாசுகிக்கு இது அப்படி நடக்காமல் போகும் என்று நம்பிக்கை இல்லை.
சிங்காரம் சுலபமாக எதிலும் இறங்குபவரில்லை. சொந்தங்களிடம் கூட ஆதாயம் இருந்தால் தான் அவரின் எல்லைக்குள்ளேயே அனுமதிப்பார்.
அதே நேரம் மற்றவர்கள் தன்னை குறித்து பெருமையாக பேசவேண்டுமென்றால் எதையும் செய்ய தயங்குபவரில்லை.
இந்த திருமண பேச்சு வெறும் பேச்சுவார்த்தையாக தங்களுக்குள்ளேயே மட்டும் இருந்திருந்தால் இத்தனை தூரம் கவலைப்பட்டிருக்கமாட்டார்.
கிட்டத்தட்ட சொந்தத்தின் கடைக்கோடி வரை தெரிந்திருந்தது மகளுக்கு வந்திருந்த வரனை பற்றி.
கேட்காத ஆட்கள் இல்லை. அத்தனை பேச்சுக்கள், பெருமையாகவும், பொறாமையை மறைத்துக்கொண்ட போலி பெருந்தன்மையுடனும்.
“அரசியலே வேண்டாம்ன்னு தான் அங்க இருந்து வேற வேலை பார்த்துட்டு பாண்டிச்சேரி வந்த. இப்ப பாரு, மகளுக்கு அரசியல் சம்பந்தம். யோகக்காரன். உனக்கு எங்கையோ மச்சமய்யா…” என புல்லாங்கிதம் அடைந்ததை போல மனதின் புழுக்கத்தை கூட அப்படி வெளிப்படுத்தியிருந்தனர்.
அதிலும் சிங்காரத்தின் சாமர்த்தியத்தில் தீயை வைத்தால் என்ன என வாசுகி நினைக்காத நாளில்லை.
முதலில் மெதுவாய் இந்த பேச்சை ஆரம்பித்தவர் மனோகரன் யோசித்ததில் சொந்தத்தில் ஓரிருவரையும் சேர்த்து அழைத்துக்கொண்டு வந்து பேச விஷயம் விவரமாக வெளியே பரவியது மற்றவர்களிடம்.
முதலில் மிரண்டுதான் போனார் வாசுகி. இப்படி எல்லோருக்கும் தெரிவதை போலவா வரன் அமைவதை பற்றி சொல்லவேண்டும்.
அதிலும் மாப்பிள்ளைக்கு அத்தனை பிடித்தம் என்பதை போல அவர் பேசியிருக்க அந்த பேச்சின் தொனி சிலரின் வாய்வார்த்தை மூலம் சில வேளைகளில் வேறு விதமாக எதிரொலித்தது.
கூடவே அவரின் பேச்சுக்களில் எல்லாம் முடிவாகிவிட்டது என்பதை போலொரு தோற்றத்தை தந்துவிட்டார் சிங்காரம்.
மகளிடம் சொல்லும் முன்பே அவளாக தெரிந்து கேட்க மனோகரனுக்கு அத்தனை சங்கடம்.
“அப்பா என்னப்பா செய்யட்டும்? நீ என்ன சொல்ற?…” என மனோகரன் கேட்க,
“எனக்கு தெரியலைப்பா. எதுவானாலும் நீங்க தானே எனக்கு சொல்லுவீங்க. உங்க விருப்பம்…” என்று கூறினாலும் மகளின் முகத்தில் தெளிவில்லாததை அப்போதே வாசுகி உணர்ந்திருந்தார்.
மனோகாரனுக்கு இருபக்கமும் தளை. நன்றிக்கடன் என்றொரு சங்கிலி ஒருபுறம் இழுக்க, மகளின் தன் மீதான நம்பிக்கையும், அன்பும் என்று தடுமாறியவர் வெகுவாக யோசிக்க மனது திருமணம் சரி என்ற முடிவில் தான் நின்றது.
“பொண்ணை பார்த்து பேசனுமாம். நேர்ல பேசி அவளோட சம்மதம் தெரிஞ்சுக்க நினைக்கிறார் மாப்பிள்ளை பையன்…” என சிங்காரம் சொல்லவுமே மனோகரனுக்கு நன்மதிப்பை தந்திருந்தது மருமகன் மீது.
“எல்லாரும் கிளம்பி சென்னைக்கு வாங்க. வெளில வச்சு பேச வந்தாலோ, இல்லை அவரே அங்க வந்து பார்க்க வந்தாலோ தேவையில்லாத பேச்சு தான். நாம அதுக்கு இடம் குடுக்க வேண்டாம் மனோகரா…” என்று நல்லபிள்ளை போல சொல்ல,
“எல்லாருக்கும் பத்திரிகை வச்சு சொல்லாத குறையா எல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” வாசுகி பொருமி தள்ளிவிட்டார்.
“விடு வாசுகி, மாப்பிள்ளை பையனை விசாரிச்சாச்சு. நல்லவிதமா சொல்றாங்க. மாமா கொண்டுவந்த சம்பந்தமா இருந்தாலும் அதுல நல்லது இருக்க போய் தான் நான் ஒப்புக்கிட்டேன்…” மனோகரன் மனைவியை சமாதானம் செய்து வைத்தார்.
இறுதியாக மாப்பிள்ளையை பார்க்க தன் மகளை சிங்காரத்தின் மகன் பத்ரி அழைத்துக்கொண்டு செல்வதென முடிவாகியது.
அதுவும் சிங்காரத்தின் முடிவு தான். இதோ கிளம்பி வந்த பின்பும் வாசுகிக்கு மனதில் சஞ்சலம்.
“உங்க மாமாவை நம்பி இறங்க முடியாதே. மண் குதிரையை நம்பி ஆத்துல இருங்கற மாதிரி தான்…” புலம்பிக்கொண்டே தான் இருந்தார் வாசுகி.
அவர் உறங்கவே இல்லை. ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டே இருக்க பிரனித்தா படுக்கையில் கண்ணை மூடியபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்.
எதிர்பார்ப்பு எதுவுமில்லை. தன்னை சந்திக்க அவன் நினைத்தது எதற்கோ? ஆனால் தன்னுடைய கேள்விகளான சிலவற்றை கேட்கவேண்டுமே.
நல்லதிலும் நல்லது, சொந்தபந்தம் என்று யாரையும் அழைக்காமல் தனியாக சந்திக்க செல்வதும் சரி என்றே தோன்றியது.
ஒருபக்கம் மனதிற்குள் சிறு கற்பனை. அவன் தன் இல்லம் வந்து, அவனை காபியும், கையுமாக அலங்காரத்துடன் பார்க்க தான் நிற்க என அப்படி ஒரு நிகழ்வு மனக்கண்ணில் தோன்றவும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“என்னை பிடிச்சு கேட்டானா? நம்பவே முடியலை…” மீண்டும் அவன் மீதான யூகங்களை தொடர்ந்தாள்.
எதுவுவோ ஒன்று, நடப்பவை நல்லவையாக இருக்கும் பட்சத்தில் தன் பெற்றோர்கள் நிம்மதியாய் இருந்தால் அதுவே போதும் என்று நினைத்துக்கொண்டாள்.
இப்படி பெற்றோர்களும், அவளுமாக யோசித்தே நேரம் கடக்க நன்றாக விடிந்திருந்தது.
பாண்டிச்சேரியில் இருந்து காரை தான் ஓட்டி வந்திருக்க இப்போது கைகள் உளைச்சல் கொடுத்தது.
“அப்பா ட்ரைவ் பன்றேன்ப்பா…” என்று மனோகரன் கேட்டும்,
“கொஞ்ச தூரம்ப்பா, நான் ஒருமணி நேரம். நீங்க ஒருமணி நேரம். டீல்?…” என பேசி பேசியே மனோகரனுக்கு ஓய்வு கொடுத்து தானே வந்துவிட்டாள்.
எப்போதும் அதிர்ந்து பேசாமல் என்னப்பா, குட்டிம்மா என எப்போதும் கனிந்தே பேசும் தந்தையின் மீது அலாதி பிரியம்.
அடம் பிடிக்கவே அவசியமற்று அவளின் ஆசைகளை தன் சக்திக்குட்பட்டு நிறைவேற்றுபவர்.
“பிரனி குட்டி…” என்ற தலைகோதலில் விழிகள் மலர்த்தியவள்,