“ரொம்ப நாள் கழிச்சி கார் எடுத்திருக்கடா. அதான் அப்பா கேட்டேன்…” என்றவர்,
“சரி எழுந்து குளிச்சிட்டு வா. ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம்…” என்று சொல்லவும் எழுந்து குளித்துவிட்டு வர வெளியே பேச்சு குரல்கள்.
அறையின் கதவை திறக்கவுமே அங்கிருந்தவன் ஆர்ப்பாட்டத்துடன் வந்து வந்து அணைத்துக்கொண்டான் பிரனித்தாவை.
“ப்ரூ குட்டி…” என்றவனின் கைப்பிடியில் நின்றவாறே,
“ஹாய் அத்தை…” என்றாள் சிங்காரத்தின் மனைவி மணிமேகலையை பார்த்து.
“வாடா, ஹர்ஷினி கல்யாணத்துல பார்த்தது. ஒரு கல்யாணத்துல அடுத்த கல்யாணம் அமைஞ்சிடுச்சு பாரேன்…” என்று புன்னகை முகமாக அவர் சொல்ல சிரித்தவள் அருகிலிருந்தவனை பார்த்தாள்.
“பத்ரிண்ணா அங்க எப்போ போகனும்?…” என கேட்க,
“இப்ப சாப்பிட்டு அப்படியே கிளம்ப வேண்டியது தான். அங்க பதினொன்றரைக்கு நமக்கு அப்பாயிண்மென்ட்…” என்றவன்,
முகத்தின் புன்னகை மட்டும் குறையவில்லை. சிங்காரம் எப்படியோ, ஆனால் அவர் மனைவி, மக்கள் என்று எப்போதும் தங்கள் மீது அன்பை பொழிபவர்கள்.
மேகலையை போல் அவர் மகன் பத்ரி. அவனுக்கு அமைந்த மனைவி நேகாவும் அப்படியே.
சிங்காரத்தின் மகள் ஹர்ஷினியிடம் மேகலையின் குணமிருந்தாலும் அவ்வப்போது சிங்காரத்தின் ஏற்ற இறக்க குணங்கள் எட்டி பார்க்கும். பெரிதுபடுத்த தான் பிரனித்தாவிற்கு நேரமிருந்ததில்லை.
ஹர்ஷினியின் திருமணத்தில் சிங்காரத்தின் பார்வையில் விழுந்தது இப்போது இத்தனை தூரம் வந்து நிற்கிறது.
பெருமூச்சுடன் கொண்டுவந்திருந்த சுடிதாரை அணிந்தவள் தலைமுடியை உலர்த்திக்கொண்டே வெளியே வந்தாள்.
“ம்மா…” என்ற சத்தத்தில் வாசுகிக்கு இன்னும் கவலையானது.
பொறுப்பான மகள். எல்லாமே தானே செய்துகொள்ளும் பெண் தான். ஆனால் தாய் தான் இருந்தால் எல்லாவற்றிற்கும் மகளுக்கு தான் மட்டுமே வேண்டும்.
“தலையை கூடவா பின்ன நான் வரனும்?…” என்று எப்போதும் முனுமுனுக்கும் பாட்டை எதிர்பார்த்து பிரனித்தா தாயின் முகத்தை பார்க்க,
“உட்காருடா…” என்றார் வாசுகி.
“ப்ச், இப்ப என்னம்மா? இப்பவேவா என்னை கட்டி குடுக்க போறீங்க? இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே அழுகையா?…” சலித்துக்கொண்டே அமர்ந்தவள்,
“ஒருவேளை அப்ப பிடிச்சது இப்ப பிடிக்காம கூட போகலாம் தானே? யார் கண்டா? காலத்துக்கும் நீங்க தான் எனக்கு தலைசீவி விடனும்னு இருக்கோ என்னவோ?…” என்ற துடுக்கான பேச்சில் நறுக்கென்று கொட்டு வைத்தார் வாசுகி.
“நல்லதாவே பேசமாட்டியா நீ? அங்க போய் எதாச்சும் வாயை திறந்தன்னு கேள்விப்பட்டேன்…” என்று கண்களை உருட்டி மிரட்டினார்.
அவருக்கு வேண்டும், வேண்டாம் என்ற விளிம்பு நிலை. மகளின் திருமணத்தை என்னென்னவோ நினைத்திருக்க இப்படி யாரோ முடிவு செய்து எதற்கோ இந்த பேச்சுக்கள் பரவி எதுவோ பிடித்து தள்ளுவதை போலிருந்தது.
மனதிற்குள் அத்தனை கலக்கம். வெளியே காண்பித்துக்கொள்ளவில்லை. சற்றுமுன் வந்து பேசி சென்ற பத்ரியின் பேச்சில் தான் மனது சமன் பட்டிருந்தது.
“நீங்க தாராளமா நம்பி குடுக்கலாம் அத்தை. என்னை விட நல்லவர். என்ன ஒன்னு ஏமாத்த நினைச்சாலோ, இல்லை தப்பா எதாச்சும் பண்ணினாலோ தான் கோபப்படுவார். ஒளிச்சு மறைச்சு சொல்லலை. அதுல கொஞ்சம் கடுமை தான் அவர்…” என்றிருந்தான்.
“பிடிச்சு கேட்டிருக்கார். நல்லபடியா பார்த்துப்பார் வாசுகி…” என மேகலையும் சொல்லியிருந்தார்.
சிங்காரத்தின் திருகுதாளம் தெரிந்திருக்கவில்லை அங்கே யாருக்கும். பிடித்து கேட்டிருப்பதாக மற்றவர்கள் நினைத்திருந்தனர்.
மெல்லிய பிடித்தம். பெண்ணானவளை அவனுக்கு பிடித்திருந்தது தான். மறுக்க எதுவுமில்லை. ஆனால் கேட்டிருந்தது?
என்னவோ இப்போதே பந்தலிட்டு மகளை மணமேடைக்கு அனுப்பிவதை போல பரபரப்பு ஒருபுறம் இருந்தாலும் மீண்டும் ஒரு அலசல் உள்ளுக்குள்.
எடுத்த முடிவு சரியாகுமா? சரிதானா? நன்றி என்ற உணர்விற்காக மகளை தள்ளிவிடுவதை போலிருக்குமோ? இப்படி நாளும் யோசிக்க லேசாய் வியர்த்திருந்தது அவருக்கு.
“ஸார் அய்யா சாப்பிட வெய்ட்டிங்…” மீண்டும் நவநீதன்.
“இந்தாளை…” பிரனித்தா பல்லை கடிக்க,
“உன் மொபைல் எடுத்துக்கோ. கிளம்பு…” என்று வெளியே வந்தவர்கள் அதன் கதவை அடைத்துவிட்டு பங்களாவை நோக்கி சென்றனர்.
வாசலுக்கே நேகா வந்துவிட்டாள். அத்தனை மகிழ்ச்சி மீண்டும் பிரனித்தாவை பார்ப்பதில்.
நினைத்த நேரமெல்லாம் நேரில் சென்று பார்க்க ஆசை தான். ஆனால் அதற்கு சிங்காரத்திடம் அனுமதி வாங்கவேண்டியதிருக்கும்.
பெரும் தொழிலதிபரின் மகள். சிங்காரம் அமைச்சராக இருந்த நேரம் பத்ரி, நேகா திருமணம் நடந்திருந்தது.
இப்போது அமைச்சர் இல்லை, வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம். அவரை மீறுபவரில்லை.
மனைவி பிள்ளைகள் என்று எல்லோரையும் கைக்குள் வைத்திருப்பவர் ஒன்று மறுத்தால் அது இல்லவே இல்லை.
வீட்டிற்குள் நுழையும் பொழுதே பக்கவாட்டில் இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார் சிங்காரம்.
அருகே மணிமேகலையும், பத்ரியும் இருக்க மணிமேகலை அவருக்கு பரிமாறிக்கொண்டு இருந்தார்.
“வா மனோகரா, வாங்கம்மா…” என சிரிப்புடன் அவர் தலையசைத்து அழைக்க பிரனித்தா அதனை கவனிக்காததை போலவே வந்து அமர்ந்தாள் நேகாவுடன் பேசிக்கொண்டு.
சட்டென முகம் கடுத்துவிட்டாலும் காட்டிக்கொள்ளவில்லை சிங்காரம். காரியமாக வேண்டுமே?
“என்னம்மா நல்லா தூங்கினியா?…” என பேச்சு கொடுக்க,
“ஹ்ம்ம்…” அவ்வளவு தான் அவளிடமிருந்து பதில்.
“சரி சாப்பிட்டு இப்பவே புறப்பட்டா தான் சரியா இருக்கும்…” என அனைவருக்கும் பரிமாற சொல்லியவர் மகனிடம் எப்படி கிளம்பவேண்டும் என்றும் கூறிக்கொண்டு இருந்தார்.
கிளம்பும் நேரம் பிரனித்தாவை அழைத்த சிங்காரம் அவளை தனியே அழைத்து வந்தார்.
“சின்ன பொண்ணு, அங்க அவர்கிட்ட மரியாதை இல்லாம துடுக்கா பேசிடாத. அப்பறம் உன் அப்பனை தான் என்ன பொண்ணு வளர்த்திருக்காங்கன்னு நினைப்பான். சம்மதமான்னு கேட்டா சரின்னு சொல்லிட்டு வா. புரியுதா?…” என்றவர் அவள் மேலும் பேசும் முன் நகர்ந்துவிட்டார்.
அது அவள் அந்த கட்சி அலுவலகத்தில் நுழையும் வரையிலுமே நீடித்தது. பத்ரியும் வரிசையாக போனில் பேசியபடி வர அவன் கவனிக்கவில்லை.
“ஸார் வந்திட்டே இருக்கார். உங்களை வெய்ட் பண்ண சொன்னார்…” என அங்கிருந்த பணியாள் ஒருவர் பவ்யமாக அழைத்து வந்து ஒரு அறையில் விட்டுவிட்டு செல்ல அதனை சுற்றிலும் பார்த்துக்கொண்டே நின்றாள் பிரனித்தா.
“என்னடா ஒரே ஆராய்ச்சியா இருக்கு?…” பத்ரி கேட்க,
“சும்மா பார்த்தேன்…” என்றவள் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
மிகப்பெரிய அறை. மீட்டிங் ஹால் அது. அவனின் இருக்கை தனித்து இருக்க அதிலும் ஒரு பார்வை.
அறையின் அருகே மிகப்பெரிய கண்ணாடி இருந்தது. மறுபக்கம் இருக்கும் அறையை அது காண்பிக்க அங்கே பார்வை பதிந்தது.
“இதுதான் அந்த வட்ட செயலாளர் வண்டுமுருகன் ரூமா?…” என கேட்டதும் பத்ரிக்கு புரையேறிவிட்டது.
அவனுக்குமட்டுமல்ல காதில் ப்ளூடூத்துடன் வேக நடையிட்டு உள்ளே வந்துகொண்டிருந்தவனுக்கும் சேர்த்தே தான்.
சுதாரித்துக்கொண்டவன் மீசைக்கடியில் இதழோரம் மெல்லிய சிரிப்பும் தோன்ற அதனை கான்பிக்காதவண்ணம் உள்ளே வர அவனின் வரவை பார்த்தவள் பார்த்தபடி இருந்தாள்.
நடையிலேயே அத்தனை ஆளுமையும், நிமிர்வும் அவன் காண்பித்திருக்க அந்த சுழல் நாற்காலியில் வந்து அமர்ந்திருந்தவன் அவள் இருந்த பக்கம் திரும்பவில்லை.
இன்னுமே அவனை தான் பிரனித்தா ஆழ்ந்த பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“ப்ரூ, என்னாச்சு?…”
“ஒரு ரெஸ்பெக்ட் இல்லை. இவர் தானே வர சொன்னார். இப்ப நம்மளை பார்க்காம…” என அவள் சிடுசிடுத்தவள்,
“ஆனா சரியான ஹீரோ மெட்டீரியல். இந்த பேரும், பொஷிஷனும் தான்…” இவள் இங்கே சுணங்கி போய் பேச அவன் முகத்தில் மின்னி மறைந்த சிறு புருவ சுளிவு அதையும் அவன் கேட்டுக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
“ப்ரூ பேசாம இரு. அவருக்கு கேட்க போகுது…” பத்ரி அதட்டினான்.
“மிஸ்டர் வண்டுமுருகனுக்கு இங்க பேசறது அங்க கேட்குதாக்கும்? என்ன சூப்பர் பவரா? நீ சும்மா இருண்ணா…” என்றவள் லேசாய் தலையை சிலுப்ப பின்னிருந்த முல்லை சரம் முன்னே வந்து விழுந்தது.
“சத்தியமா இந்தம்மா என்ன நினைச்சு வச்சுவிட்டாங்களோ? இந்த ஸ்மல் தான் என்னை கொஞ்சம் ரிலாக்ஸா வச்சிருக்கு…” என்றவளுக்கு அந்த வாசமே தலைவலியை வரவழைக்கவிருந்தது அவனால்.
மேலும் பத்து நிமிடம் கடந்ததும் தான் அவன் எழுந்து கொள்ள இங்கே பத்ரிக்கு வந்த போனில்,
“உன்கிட்ட தனியா பேசனுமாம். நீ பேசிட்டு இரு. நான் வெளில வெய்ட் பன்றேன்…” என்று வெளியேற,
“அண்ணா டேய்…” என்றாள் அதுவரை இல்லாத பதட்டத்துடன்.
பத்ரி வெளியேறிய இரண்டாம் நொடி கதவு திறக்கப்பட அவன் உள் நுழைந்தான். தற்போதைய நிதித்துறை அமைச்சர் ஆவுடையப்பன் ரங்கசாமி.
உள்ளே வந்தவன் அந்த நீண்ட மேஜையின் முன்னிருந்து இறுதிக்கு வரும் வரையிலும் அவள் மீதான பார்வையை அகற்றவில்லை.
‘பிடித்து பார்த்தேனாம். ஹாங், நிஜம் தான். பார்க்க பிடிக்குதே. நெருங்கினா இன்னும் பிடிக்குமோ?’
தன் மனதிற்குள் சுழலும் அந்த கேள்விகளில் அவளை விழிகளால் சிறை செய்திருக்க பிரனித்தா மூச்சுவிட மறந்து அந்த பாவனையை கவனித்தாள்.
முதல் மூன்று முறை சந்திப்பிலும் நிச்சயம் அவனிடத்தில் இந்த மாற்றத்தை பார்க்கவில்லை.
இப்போது இந்த நொடி அவன் பார்வையில் என்னவோ இருந்ததை கவனித்தாள் பிரனித்தா.
தன்னிருக்கைக்கு வந்துவிட்டவன் அதில் அமர்ந்து அவளை அமர சொல்ல அப்போது தான் தானும் எழுந்துவிட்டதை உணர்ந்து அமர்ந்தாள்.
“ஹாய் மோகினி…” என்றவன் அமர்த்தலான விளிப்பில் அவள் புருவங்கள் உயர்ந்தது.
“ஹாய்…” என தானும் சொல்ல அதற்கு தலையசைத்தவன் பாவனையை இன்னதென்று பிரிக்க முடியவில்லை.
அடுத்து என்ன கேட்பதென்று அவனுக்கு புலப்படாமல் மேஜை மீது பேனாவை கொண்டு லேசாய் தட்டிகொண்டே அவளை பார்ப்பதும் யோசிப்பதுமாக இருந்தான்.
சட்டென கேட்டுவிட நினைத்தாலும் அவள் முகத்தின் உணர்வு கலவையில் மனதை சற்று நிதானப்படுத்தினான்.
திருமணம் சம்பந்தமான கேள்விகள் அவனிடத்திலும் இருந்தாலும் அதன் பதில்களை அறிந்திருந்தாலும் தன்னை மீறி என்ன நடந்துவிடும் என்றொரு நம்பிக்கை.
மேலும் தன்னை பற்றி சிங்காரத்திற்கு தெரிந்தும் இந்த முடிவு எப்படி சாத்தியமானது என்று யோசிக்காமல் இல்லை.
ஆவுடையப்பன் அமைதியாக அமர்ந்திருக்க அதனை பார்த்தவள் மனதிற்குள் அந்த விழிகளின் பாஷைகள் மொழியில்லா மௌன பாஷையாகவே புலப்பட அந்த வார்த்தைகளுக்கு உருவங்களை தேடினாள் பிரனித்தா.