சிங்காரத்தின் முகத்தில் அத்தனை வஞ்சகம். வெற்றிக்களிப்பில் முகம் மின்னிக்கொண்டிருந்தது.
எப்போதடா வேலை முடியும் என்பதை போல காத்திருந்தவருக்கு எதிர்பார்த்த அந்த தகவல் அலைபேசி அழைப்பில் வந்து சேர்ந்தது.
“என்னடா வந்துட்டாங்களா?…”
“ஆமா மச்சான். இப்பத்தான்…”
“சரி, சரி அவங்களை ரொம்ப நேரம் அங்க வச்சிருக்க வேண்டாம். நீ நான் சொன்ன இடத்துக்கு நாளைக்கு காலையில அழைச்சுட்டு போயிரு. நான் சொல்ற வரைக்கும் அவங்க இங்க ஊருக்கு வர கூடாது. கஸ்டடில இருக்கறதும் தெரிய கூடாது…”
“நீங்க மூளைக்காரர் மச்சான். சரியா ப்ளான் பன்றீங்க…” என சிரித்தார் வெங்கடேசன்.
“அதிருக்கட்டும். என்னை தூக்கி பிடிக்கேன்னு அங்க அவங்களை கோட்டை விட்டுடாத…”
“செல் போன் எல்லாம் என்கிட்டே இருக்கு. இப்போதைக்கு கிடைக்காது. நான் பார்த்துக்கறேன். நீங்க ஏன் கவலைப்படறீங்க?…”
“பார்த்துக்கனும். பார்த்து தான் ஆகனும். சும்மா இல்லை சுளையா பத்து லட்சம் வாங்கியிருக்க….” என்றார் மிரட்டல் குரலில்.
“மச்சான்…”
“இங்க பாரு என் சொந்தத்தையோ, என்னோட அடிபொடிகளையோ கூட நம்பாம உன்னை பிடிச்சதுக்கு காரணம் எனக்கு ஆகவேண்டிய காரியம் ரொம்ப பெருசு…”
“சந்தேகப்படற மாதிரி ஏன்டா மூஞ்சியை வச்சுக்கிட்டு பேசற? வந்தா சாதாரணமா பதில் சொல்லு. அடேய் உன்னை வச்சு என் காரியம் நடக்குமான்னே சந்தேகமா இருக்கு. எதாச்சும் சொதப்புச்சு முதல் காவு நீ தான் பார்த்துக்கோ…”
“மச்சான்…”
“என்ன மச்சான், நெஞ்சுல அந்த பயத்தை வச்சுக்கிட்டு நடந்துக்கோ. புள்ளைகுட்டி குடும்பம்ன்னு எல்லாம் இருக்கு. இருக்கற இடம் தெரியாம அழிச்சிருவேன் ஜாக்கிரதை…” என்றவர்,
“இப்ப போனை வச்சு தொலை. நானா கூப்பிடாம எனக்கு ட்ரை பண்ண கூடாது…”
“மச்சான்…”
“ச்சை, உன் வாயால எத்தனை தடவை தான் என்னை மச்சான்னு கூப்பிடுவ? என் நேர கிரகம்டா நீயெல்லாம் என்னை சொந்தம்ன்னு உரிமை உணக்கையா பேசறது. நாராசமா இருக்கு காதுக்கு…” சிங்காரம் எரிந்து விழுந்தார்.
வெங்கடேசன் பதிலே பேசாமல் மூச்சுவிடும் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.
“என்னடா, என்ன சத்தத்தை காணும்?…” என்ற சிங்காரம்,
“இப்படியே கம்முன்னு இருக்கனும். கேட்கறதுக்கு மட்டும் தான் பதில் சொல்லனும். புரியுதா?…”
“ஹ்ம்ம்…”
“வச்சு தொலை…” என்று அழைப்பை துண்டித்துவிட்டார்.
எரிச்சலான எரிச்சல் வெங்கடேசனை வைத்து தன் மீதும் எந்தவித சந்தேகமும் எழுந்துவிடாதபடிக்கு வேலையை முடிப்பதற்குள்.
“இவனுங்ககிட்ட எல்லாம் இதுதான் கரெக்ட்…” என சொல்லிக்கொண்டவர் இலகுவாய் சாய்ந்து அமர்ந்து சட்டை பட்டன்களை கழற்றிவிட்டுவிட்டு காற்று வாங்கிக்கொண்டு இருந்தார்.
நேரத்தை பார்க்க மாலை நேரம் தான். இப்போது அழைப்போமா? இல்லை இரவா? என யோசித்தவர்,
“முதல்ல நல்லா ஒரு டீயை குடிச்சுட்டு பிரஷா கூப்பிடுவோம்…” என இன்டர்காம் எடுத்து டீ கொண்டுவரும் படி சொல்ல சிறிது நேரத்தில் மணிமேகலை வந்தார்.
“உன்னை யார் டீ எடுத்துட்டு வர சொன்னா?…” என கேட்டு,
“வச்சிட்டு போ…” என்றார்.
“சரிங்க…” என்ற மணிமேகலையும் வைத்துவிட்டு நகர அவரை யோசனையுடன் பார்த்தவர்,
“ஆமா ஆவுடையப்பனுக்கு போன் பண்ணி அந்த அசோகனை விசாரிச்சியா?…” என கேட்டு நிறுத்தினார்.
“நேத்து நீங்க சொல்லவும் போன் பண்ணி நான் பத்ரி ரெண்டுபேரும் பேசினோம். இன்னைக்கு காலையில கூட பேசினோம். இன்னும் உடம்பு சரியாகலை போல?…” மணிமேகலை சொல்ல,
“ஏய் ச்சீ, போன்னா போயேன்…” என்று கத்தினார் சிங்காரம்.
பட்டென்று மணிமேகலை அந்த அறையை விட்டு வெளியே வந்துவிடவும் சிங்காரத்திற்கு குறைந்திருந்த அழுத்தம் ஏறிவிட்டது.
“இங்க கல்யாணமே இனி கஷ்டம் தான். இதுல பேசறா பேச்சு சம்பந்தகாரங்களாம்…” என கடுப்பாகியபடி டீயை எடுத்து ஒரே மூச்சாக குடித்துவிட்டு இங்குமங்கும் நடந்துகொண்டு இருந்தார்.
அதன் பின்னர் இனியும் தாமதிக்க வேண்டாம் என்று ஆவுடையப்பனுக்கு அழைப்பு விடுக்க தொடர்பு கிடைக்கவில்லை.
அடுத்தடுத்து விடாமல் அழைக்க அவன் ஏற்கவே இல்லை. அதுவே சிங்காரத்தை இன்னும் வன்மத்திற்குள்ளாக்கியது.
“என்னையாடா துச்சமா நினைச்சு என் போனை அட்டன் பண்ண மாட்டேன்ற? உன்னை அவளுக்காக கதற விடறேன் பாரு….” என்றபடி மீண்டும் முயற்சிக்க முனைந்து பின் அவனின் உதவியாளனுக்கு அழைத்தான்.
“சொல்லுங்க ஸார்…” புருஷோத்தமன் அழைப்பை ஏற்றதும் தான் நிம்மதியாகியது சிங்காரத்திற்கு.
ஏறகனவே பாதகம் செய்துவிட்டாகிற்று. இப்போது ஆவுடையப்பன் எடுக்காமல் இருக்க தன் செயலை கண்டுகொண்டிருப்பானோ என்னும் பதட்டம் வேறு வந்து சேர்ந்தது.
கூடவே அலட்சியமும். எப்படியும் எங்கிருக்கிறார்கள் என கண்டுபிடிக்க முடியாது.
அவர்களுக்கு அழைத்து பார்த்திருந்தால் ஒருவேளை சந்தேகம் கொண்டு தன்னிடம் கேட்டிருக்க கூடும். என்னதான் செய்துவிடுவான் என்று பார்க்கலாம் என துணிந்துவிட்டார்.
இவ்வளவு நேரம் தன்னிடம் எதுவும் கேட்காமல் அசோகனின் அருகிலேயே இருக்கிறான் என தகவலை அறிந்து வெற்றி புன்னகை.
அவருக்கு அசோகனின் உடல்நிலை குறித்தெல்லாம் கவலை இல்லை. ஆவுடையப்பனை முடக்க இது ஒரு வகையில் தனக்கு உதவியாகஇருந்ததே என நினைத்துகொண்டார்.
“ஸார், சொல்லுங்க ஸார்…” புருஷோத்தமன் மீண்டும் அழைக்க,
“ஆங், என்னப்பா உங்க மினிஸ்டர் போன் பண்ணினா கூட எடுக்கமாட்டேன்றார்?…” என தெனாவெட்டாக சிங்காரம் கேட்க,
“ஸார் எல்லா அப்பாயின்மென்டையும் கேன்சல் பண்ணிட்டார் ஸார். எந்த காலும் அட்டன் பண்ணலை. பெரிய ஸார் கூடவே தான் இருக்கார்…”
“அப்படியா? சொந்தக்கானாக போறேன் எனக்குமா இந்த கெடுபிடி?…” என்ற சிங்காரம்,
“ஆமா, உங்க பெரிய ஸார் நிலைமை எப்படி இருக்காம்?…” என்றார்.
“நான் உள்ள போகலை. வெளில தான் இருக்கேன். டாக்டர்ஸ் வந்து பார்த்துட்டு போயிட்டு தான் இருக்காங்க. பரவாயில்லை போல?…” என்றான் அவன்.
“ஹ்ம்ம், அப்ப மினிஸ்டர்கிட்ட பேச முடியாதா? கல்யாண விஷயமா கூடவா?…” என்றதும்,
“இருங்க ஸார், நான் ஸார்கிட்ட கேட்டுட்டு நானே கூப்பிடறேன்…” என்ற புருஷோத்தமன் சிறிது நேரத்தில் அழைக்க அதில் ஆவுடையப்பனின் குரல்.
“சொல்லுங்க சிங்காரம், என்ன விஷயம்?…” என்றான் அமைதியாக.
“பெரிய விஷயம் தான் ஆவுடையப்பா. இல்லாமலா கூப்பிடுவேன்?…” எள்ளல் குரலில்.
“சிங்காரம், கல்யாண விஷயமா பேசனும்னு சொன்னதா?…”
“ஆமா, கல்யாண விஷயம் தான். நடக்கனுமா வேண்டாமான்னு நீ தான் பதில் சொல்லனும் ஆவுடையப்பா?…” இன்னும் ஒரு அகம்பாவ சிரிப்பு.
“உங்க பேச்சு சரியில்லையே. வெய்ட் பண்ணுங்க…” என்றவன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
உடனே சிங்காரத்திற்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. என்ன செய்ய போகிறான் இப்படி அழைப்பை துண்டித்துவிட்டு என வேக வேகமாய் அவர் யோசிக்க மீண்டும் அழைப்பு.
அதுவும் வீடியோ கால். எடுக்கவா வேண்டாமா என அத்தனை யோசனை யோசிக்க புருஷோத்தமன் எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு.
“என்ன சிங்காரம் கால் பண்ணினா எடுக்கலை. என்னவோ பண்ணிட்டீங்க. ஆனா பண்ணின பின்னாடி என்ன பயம்?…” ஆவுடையப்பன் இளக்காரமாக கேட்க,
“பயமா? எனக்கா? இது என் பாதுகாப்புக்கு. நீ எமகாதகன். உன்கிட்ட…” என்றவர் வாயை மூடிக்கொள்ள,
“என்னை தெரிஞ்சும் எதையும் செஞ்சிருக்க கூடாது. ஓகே, எந்த வில்லங்கமும் நான் பண்ணலை. இந்த பேச்சு உங்களுக்காக, எனக்காக மட்டும். வீடியோ கால் வாங்க…” என்றான் அவன்.
மீண்டும் அழைப்பு வர யோசித்துக்கொண்டே எடுத்தாலும் ஒருபக்கம் தைரியம் தான் சிங்காரத்திற்கு.