“பொண்ணு வேணும்னா, அதுவும் உயிரோட வேணும்னா நான் சொல்றதை செய்யனும் ஆவுடையப்பா…” என்ற பேச்சில் ‘உயிரோடு’ என்ற வார்த்தையில் ஆவுடையப்பனின் சர்வாங்கமும் ஆடியதென்னவோ உண்மை.
“அவ உங்க வீட்டு பொண்ணு. இப்படி பேச உனக்கு வெக்கமாயில்லையா?…” அடக்கப்பட்ட சீற்றத்துடன் அவன் கேட்க,
“எனக்கு முதல்ல நான் தான் முக்கியம். அதுக்கப்பறம் தான் யாரும். என்னை என்ன ப்ரோக்கர்ன்னா நினைச்ச? உன்னால முடிஞ்சா அவங்களை கண்டுபிடிச்சுக்கோ. ஆனா கண்டுபிடிக்கும் போது அவ இருக்கனுமே?…” என்றவரின் சிரிப்பில் எரிமலை குழம்பாய் இருந்தான் ஆவுடையப்பன்.
“சிங்காரம்…”
“என்னடா? பொடிப்பய நீ. என்கிட்டையே படம் காமிக்கிற?…” என்று கால் மேல் காலிட்டு அமர்ந்தார் சிங்காரம்.
“உன் வயசு என் அனுபவம்டா. நானும் சொன்னா புரிஞ்சுப்ப, அரசியல்ல இருக்கோம். கொஞ்சம் பகைச்சுக்காம பலனை எடுப்போம்ன்னு பார்த்தா ரொம்ப துள்ளுற?…”
“என்னை என்னன்னு நினைச்ச நீ? உனக்கு கல்யாணமானா என்ன ஆகலைன்னா என்ன? ஆனா என் பணத்துல நீ கை வச்சிருக்க கூடாது. தப்பு பண்ணிட்ட ஆவுடையப்பா. நான் என்ன பன்னேன்றதை தோண்டினதோட நின்னிருக்கனும். என் பணத்தை தூக்கியிருக்க கூடாது…”
“அது அரசாங்கத்துக்கு சொந்தமான பணம் சிங்காரம். நீ உழைச்சு சம்பாதிச்சது இல்லை…” ஆவுடையப்பனின் முகத்தில் கடுமை.
“அதுல உழைப்பில்லையா? யார் சொன்னா உழைப்பில்லைன்னு. ஒருத்தனுக்கும் சந்தேகம் வாராம அதை எப்படி நவட்டனும்னு நாளும் பொழுதுமா யோசிச்சு நான் உழைச்சு எடுத்த காச நீ நோகாம எடுத்ததோட என்னையே கம்பி எண்ண வைக்க பார்க்கறியே?…”
சிங்காரம் சொல்லவும் ஆவுடையப்பன் விழிகள் இரண்டும் சிவந்தது. அவன் பல்லை கடிக்க,
“என்ன நான் எப்படி கண்டு பிடிச்சேன்னு யோசிக்கிறியா? அடுத்து நீ என்ன பண்ணுவன்னு தெரியும்டா எனக்கு. சட்டம், சாம்பார்ன்னு நீ அதை தான் புடிச்சு தொங்குவ….” என்றார் சிங்காரம்.
“என்னவேணா முயற்சி பண்ணு. கேஸ் போடுவியா போடு. அரஸ்ட் பண்ண வைப்பியா வச்சுக்கோ. அதை எல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன். ஆனா பணம் என் கைக்கு வரனும். வந்தே தீரனும் ஆவுடையப்பா…” என்றவர்,
“இங்க பாரு, நீ அவளை கல்யாணம் பண்ணு, பண்ணாம போ. ஆனா எனக்கு என் பணம் வந்தாகனும். பணத்தை குடுத்துட்டு நீ பொண்ணை காப்பாத்திக்கோ. அதுக்கப்பறம் என்ன பண்ணாலும் நான் சமாளிச்சுப்பேன். எங்கடா, எங்கடா என் பணம்?…”
பல்லை கடித்துக்கொண்டு சிங்காரம் பேச பேச ஆவுடையப்பன் முகத்தில் தீவிரம்.
“மேலும் மேலும் தப்பு பன்றீங்க சிங்காரம். கல்யாணம் என்னோட தனிப்பட்ட விஷயம். அதுல உங்க அரசியலை கலக்காதீங்க…”
“என் அரசியலுக்காக தான் இந்த கல்யாணமே ஆவுடையப்பா…” என்ற சிங்காரம்,
“உன்னை எந்தப்பக்கம் மடக்கறதுன்னு யோசிச்சப்ப தான் நீயா என் வீட்டு கல்யாணத்துல கலந்துக்கிட்ட. உன் பார்வை அவ மேல விழுந்துச்சு. என்னடா உன்னை வளைக்க வாய்ப்பு கிடைக்கும்ன்னு இருந்த எனக்கு அதை விட வேற என்ன வேணும்?…”
“அதான் அசோகன்கிட்ட பேசி உன்னை இதுக்குள்ள கொண்டுவந்தேன். நீயும் தெரிஞ்சே சிக்கின. இப்ப முதலமைச்சர் வரை இன்விடேஷன் குடுத்தாச்சு. பிரிண்ட் பண்ணினதில பாதி இன்விடேஷன் முக்கியமானவங்களுக்கு குடுத்தாச்சு. இப்ப கல்யாணம் நின்னு போனா எவ்வளோ அசிங்கம் உனக்கு?…”
“இல்லனா என்ன பண்ணுவ சிங்காரம்? என்ன மிரட்டறியா?…” ஆவுடையப்பன் கொந்தளிக்க,
“இதைவிட இதுக்கும் மேல செய்வேன். உன்னை நாறடிப்பேன். உன் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்குவேன். அதை காரணம் காட்டி கல்யாண பொண்ணை வச்சே கல்யாணத்தை நிறுத்த வைப்பேன். மனோகரனை கடத்தி வச்சு நீ கடத்திட்டதா சொல்லி மீடியா முன்னாடி பேச வைப்பேன்…”
“பிரனித்தா இதை நம்ப மாட்டா…”
“மனோகரன் நம்புவானே? அப்பன் நம்பினா பொண்ணும் நம்புவா. ஏனா அப்படித்தான் அவனை நான் வச்சிருக்கேன். என் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது அங்க. இப்ப கூட நான் கடத்தி கொண்டுபோய் வச்சிருக்கறது தெரியாம பலியாடுங்க மூணும் நான் சொல்ற இடத்துக்கு போயிருக்குதுங்க…”
“இதுதான் சிங்காரம் உன் புத்தி. நம்பினவங்களை கழுத்தறுக்கறது. இந்த விஷயம் மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா..”
“சொல்லிக்கோ. மூணு பேரையும் கழுத்தறுத்து போட்டுட்டு அதையும் நீ பண்ணினன்னு திருப்ப எவ்வளோ நேரமாகும்? நீ பண்ணலைன்னு நிரூபிக்க எடுக்கற அந்த நாட்களுக்குள்ள நீயும் பண்ணிருப்பன்னு சந்தேகத்தை என்னால கொண்டுவர முடியுமே?….” சிங்காரத்தின் முகத்தில் அப்பட்டமான பழிவெறி.
“நீ எதுவும் பண்ணலைன்னு நீ ப்ரூவ் பண்ணிருவ. ஆனா உன் பேர் போனது போனது தான். நூறு பேத்துல ஒரு பத்திருபது பேர் உன்னை சொல்லுவான்ல நீ செஞ்சிருப்பன்னு. அதுக்கு முன்ன நியூஸ், பேப்பர், டிவின்னு உன்னை பக்கம் பக்கமா கிழிச்சிருப்பானுங்க…”
“அரசியல்ல இதெல்லாம் சகஜம் தான். ஆனா கிளீன் சிலேட்ல ஒரு கறை விழுந்தாலும் விழுந்தது தானே? என்னை மாதிரின்னா ஆமான்னு போக வேண்டியது தான். ஆனா நீ அப்படி இல்லயே. அதுக்கு முன்னாடியே உன்னை எப்படி சுத்தவிடனும்னு எல்லாம் பிசிறில்லாம பிளான் போட்டுட்டேன்…”
“சிங்காரம்…”
“சொல்லு ஆவுடையப்பா? எப்ப என் பணத்தை என்கிட்டே ஒப்படைப்ப? நிச்சயம் உன் கஸ்டடிலையும் இருக்காது. எங்கையோ வச்சிருக்க. அது தான் தெரியலை…”
சிங்காரம் பேச பேச ஆவுடையப்பனிடம் மௌனம் தான். சிங்காரத்தையே வெறித்த பார்வையுடன் இருக்க,
“சரி, நான் பணத்தை ஒப்படைச்சா எப்போ மனோகரன் ஃபேமிலியை என்கிட்டே ஒப்படைப்ப? இந்த கல்யாணம் எனக்கு ரொம்ப முக்கியம். பிடிக்குதுன்றது தாண்டி இப்ப என் மான பிரச்சனை….”
“அதுதான் டா வேணும் எனக்கும். தெரியுமே, ஆனா அதையும் நான் தான் முடிவு பண்ணுவேன். அவ்வளோ சீக்கிரம் உன் கண்ணுல காட்டிருவேனா?…” என்ற சிங்காரம்,
“என்னை அலையவிட்டேல. செய்யறேன். எனக்கு பணம். அதுக்கப்பறம் தான் அவ உனக்கு. கல்யாணம் பண்ணுவியா பண்ணிக்கோ….”
“சிங்காரம் ரொம்ப துணிச்சலோ? மனோகரன் பேமிலிக்கு இது பின்னால தெரிய வந்தா?…” ஆவுடையப்பன் கேட்க,
“நீ எவ்வளோ வேணா சொல்லிக்கோ. மனோகரன் நம்ப மாட்டான். ஏனா என் காலுக்கு கீழ கிடக்கற நாய் அவன். அதுவுமில்லாம நீ சொல்றதை கேட்டு என்னை என்ன செஞ்சிட முடியும் அவனால?…” என்ற சிங்காரம்,
“நீ ரொம்ப பேசறியே? கல்யாணம் நின்னா உனக்கும் எவ்வளோ அசிங்கம்? அதையும் யோசிச்சு பேசு. இதை எல்லாம் நீ யோசிக்க கூட கூடாது…” என்று சொல்லவும் தலையாட்டினான் ஆவுடையப்பன்.
“ஹ்ம்ம், இது தான்டா இதுதான் வேணும். உன் மூஞ்சி தொங்கி போய் அவ எங்க இருக்கான்னு நீ சோகமா இருக்க பாரேன். இது தான் வேணும். அவளை அவ்வளோ புடிக்குது, ஹ்ம்ம்…” என்று சொல்லியும் அவனிடம் மயான அமைதி.
“நாளைக்கு இதே நேரம் போன் பண்ணுவேன். அதுவரை மனோகரன் குடும்பத்து கழுத்துல கத்தி தான். எதாச்சும் சொதப்பின என்னவும் பண்ணிக்கோன்னு மூணுபேரையும் கடல்ல கரைக்க சொல்லிருவேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட்டார் சிங்காரம்.
“பய இந்நேரம் நான் கடல்ல கரைக்க சொல்லிருவேன்னு சொன்னதை புடிச்சுக்கிட்டு அந்த பக்கம் தேட ஆரம்பிச்சிருப்பான். சிங்காரமா கொக்கா?…” என சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டார் சிங்காரம்.
அழைப்பு முடிந்தும் ஐந்து நிமிடம் அப்படியே தான் இருந்தான் ஆவுடையப்பன். கையிலிருந்த போனை முன்னிருந்த டீப்பாயில் வீசியவன் பெருமூச்சொன்றை வெளியிட்டு,
“லால்…” என கையை நீட்டவும் அவனுக்கு குளிர்ந்த நீரில் நனைக்கப்பட்ட சிறிய முகம் துடைக்கும் டவல் தரப்பட்டது.
“ஏசி ஜாஸ்தி பண்ணுங்க…” என்று சொல்லியவன் முகம் துடைத்து கை கால்கள் என்று அந்த ஈர டவலால் துடைத்துவிட்டு பின்னால் சாய்ந்தமர்ந்து கால் மேல் காலிட்டான்.
“ஊஃப், இங்க எவ்வளோ வெயில் ஜாஸ்தி? இவன்கிட்ட பேச எல்லாம் ஏசி ஆஃப் பண்ணி வியர்க்கற வரைக்கும் ஃபேஸ் ரியாக்ஷன் மாத்தாம இருந்து, அப்பப்பா…” என்றான் இரு கைகளையும் மேல் நோக்கி தூக்கி நெட்டி முறித்து.
“ஸார் ஜூஸ்…” என லால் நீட்ட,
“ஹ்ம்ம், அவங்களுக்கும் குடு…” என சொல்லிவிட்டு ஜூஸை குடித்து முடித்தான்.
இன்னும் எதிரில் இருந்த நால்வர்கள் கையிலும் தரப்பட்ட பழச்சாறு அப்படியே இருந்தது. அவர்கள் முகம் ரத்தபசையின்றி வெளுத்திருந்தது.
“என்ன ஐஸ் பத்தலையா? குடிங்க. அப்படியே வச்சிருக்கீங்க?…” என்றான் அவர்களிடம்.
சற்றுமுன் தாங்கள் பார்த்ததும், கேட்டதும் உண்மை தானா என்னும் பிரம்மையில் மனோகரன், வாசுகி, பிரனித்தா. இவர்களை அழைத்து வந்திருந்த வெங்கடேசன்.