“இப்ப நமக்கு பாதுகாப்பு முக்கியம்டா பிரனி. இங்கருந்து நாம போராடி வெளில போனாலும் அடுத்து என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு. அதுக்கு இந்த கல்யாணம் எவ்வளவோ மேல்…” மனோகரன் சொல்ல விழிகள் கசிந்துகொண்டே இருந்தது பிரனித்தாவிற்கு.
“இன்னொன்னும் நீ புரிஞ்சுக்கனும் பிரனிமா, இப்பவும் அந்த தம்பி உன்னை பிடிச்சு தான் கேட்கறாங்க. மாறியிருக்கறது சூழ்நிலை மட்டும் தான். நீயே யோசி, முதல்ல கல்யாணம்ன்னு அழுத்தி சொன்னவர், நீ மறுத்ததும் யோசிச்சு சொல்லுன்னு கிளம்பிட்டார் பார்…”
வாசுகி முடிந்தளவு மகளை நேர்மறை சிந்தனையில் இதனை பார்க்க வலியுறுத்தியபடி இருந்தார்.
அதற்குள் மனோகரன் கதவை திறக்கவும் ஆவுடையப்பனும் உள்ளே நுழைந்தான்.
“என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?…” என்று அவன் கேட்க,
“எங்களுக்கு சம்மதம்…” என்றார் மனோகரன்.
“ஆனா என் பொண்ணு எங்களுக்கு ரொம்ப முக்கியம். இந்த பிரச்சனை எல்லாத்தையும் மீறி நாங்க பொண்ணை தரோம்ன்னா அதுக்கு ஒரே காரணம்…” வாசுகி சொல்ல,
“நான் பார்த்துப்பேன். என்னை மீறி பிரனித்தாவுக்கு எதுவும் நடக்காது. உங்களுக்கும்…” ஆவுடையப்பன் வாக்களிக்க,
“இனிமே எங்களுக்கு என்ன ஆனா என்ன? எங்க காலம் முடிஞ்சது. அதை பத்தி கவலை இல்லை. ஆனா என் பொண்ணை போராட விட்டுட்டு போறோம்ன்ற வருத்தத்தை எங்களுக்கு தரமாட்டீங்கன்னு நினைக்கறோம்…” மனோகரன் சொல்ல,
“ஏன் இவ்வளோ யோசிக்கறீங்க? உங்க பொண்ணு வாழறதை பார்க்க வேண்டாமா?…” என்றவன்,
“எனக்கும் தான் தாய், தகப்பன்னு யாருமில்லை. அவளுக்காச்சும் நீங்க இருக்கனும்னு நினைக்கறேன்…” என்றான்.
“சரிங்க தம்பி…” என்ற மனோகரன் முகத்தில் கொஞ்சம் தெளிவு மீண்டிருந்தது.
“நாளைக்கு மார்னிங் கல்யாணம். நீங்க கலந்துக்க வந்த திருக்கல்யாணத்திலையே எங்க கல்யாணத்தை நடத்திடலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்…” என்று அவன் சொல்லவும்,
“நாளைக்கேவா?…” பிரனித்தா சொல்ல,
“ஏன்? ஏற்கனவே சொன்னேனே….” என அவள் பக்கம் திரும்பினான் ஆவுடையப்பன்.
“பிரனிம்மா…” வாசுகி மகளை அதட்ட,
“நாளைக்கே வேண்டாம். குறிச்ச தேதில கூட நடக்கட்டும். ப்ளீஸ். இது ஒன்னாச்சும்…” அவள் கெஞ்சல் குரலில் கேட்க தலையசைத்து மறுத்தான் அவன்.
“முடியாது. கல்யாணம் நாளைக்கு மார்னிங் நடக்கனும்…”
“அதுதான் ஏன்? நான் தான் சரின்னு சொல்லிட்டேனே?…”
“இப்ப மாதிரி இன்னொருதடவை என்னால உங்களை சேவ் பண்ண முடியுமான்னு தெரியலை…” உண்மையாக ஆவுடையப்பன் இதனை சொல்ல,
“எங்களை எங்க கொண்டு போறாங்க, கொண்டுட்டு தான் போறாங்கன்னு கண்டுபிடிச்சு எங்க கூடவே வந்த உங்களால இதுக்கப்பறமும் அதுவும் இருபது நாளுக்கு பாதுகாப்பு குடுக்க முடியாதா?…”
“இருபது நாள். முடியாது. அதுவும் சூழ்நிலை நமக்கு சாதகமா எப்பவும் இருக்காது…” பிடிவாதமாய் மறுத்தான்.
“ஏன் இப்படி செய்யறீங்க? திடீர்ன்னு கல்யாணம். இதையும் யாரும் பேசமாட்டாங்களா? உங்க ஈகோவுக்கு நான் பலியா?…” என கட்டிடம் அதிரும் அளவிற்கு இரைந்தாள் பிரனித்தா.
அவனின் பார்வையில் மாற்றமில்லை. பேசு, கேட்டுக்கொள்கிறேன் என்பதை போல தான் நின்றான்.
“பிரனிம்மா…” மனோகரன் மகளின் கையை பிடிக்கவும்,
“எனக்கு….. எனக்கு….. இது…” என்று கேவிக்கொண்டே பேசியவளால் முழுதாய் முடிக்க முடியவில்லை.
“இப்பவும் எனக்கு தேவை உன்னோட விருப்பம் தான். வேண்டாமா? சொல்லு. இப்ப சொல்லு…” என்றான்.
கேட்டுவிட்டான் தான். ஆனால் சற்றுமுன் கோபமாய் பேசியவளுக்கு அதற்கு பதில் தர முடியாமல் வார்த்தைகள் கனத்தது.
“வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா இப்ப உடனே…” என்னும் பொழுதே வார்த்தைகள் தேய்ந்து குரல் உள்ளே அடங்கிவிட்டது.
ஆவுடையப்பன் நின்றிருந்த விதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவனுக்கு அவளின் தெளிவான பதில் தேவையிருந்தது.
“கொஞ்சம் யோசிங்க…” என்றாள் மீண்டும்.
“நாளைக்கு கல்யாணம். சம்மதமா? இல்லையா? நான் உன்னை வற்புறுத்தலை. எனக்கு அடுத்து வரும் சூழ்நிலையை எப்படி சமாளிக்கன்னு தெரியும். ஆனா…”
“அதான் சொல்றேன். உங்களால முடியுமே? ஏன் இப்படி பிடிவாதம் பன்றீங்க?…” என்றவளின் பிடிவாதம் கூட அவனின் அழுத்தத்தை கூட்டியது.
சிங்காரம் சொல்லியவை இன்னும் காதுக்குள் ரீங்காரம் அடித்துக்கொண்டிருந்தது.
‘கிறுக்கன், நினைத்தது நடக்கவில்லை என்றால் என்னவேண்டுமானாலும் செய்வான். அதற்குள் அவர்களை தன் சிறகிற்குள் கொண்டுவந்தால் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.’
வெளியே அழுத்தமாய், அதிகாரமாய் அவன் தோற்றம் பார்த்தவர்களுக்கு பயமளித்தாலும் உள்ளே ‘கடலில் கரைத்துவிடுவேன்’ என்னும் வார்த்தையின் பொருளில் அவனின் மனது விண்டுகொண்டிருந்தது.
எப்படி வேண்டுமானாலும் நயமாய் பேசி, காலில் விழுந்து அதற்கும் கீழிறங்கி என அவனின் வேலையாகவேண்டுமென்றால் என்னவும் செய்யக்கூடிய சிங்காரத்தை நினைத்து எதையும் தள்ளிவைத்து மெத்தனமாய் இருக்க முடியாது.
எதுவும் தன்னால் முடியாததா என்னும் அகம்பாவம் தான் சிங்காரத்தின் இந்த சறுக்கல்.
தன்னால் முடியுமாக இருந்தாலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது தான் இந்த சூழ்நிலைக்கு சரியாக இருக்கும் என நினைத்தவனால் பின்வாங்க முடியவில்லை.
‘ஒன்று திருமணம். இல்லையா?’ என யோசித்தவனுக்கு அந்த இல்லையாவிற்கு அடுத்த பதில் வேண்டியிருக்கவில்லை.
“சம்மதம்…” ஒப்புக்கொண்டாள் பிரனித்தா.
“தட்ஸ் குட். குட் குட்…” என்று தலையசைத்து சொல்லியவனின் முகத்தில் மெல்லிய ஆசுவாசம்.
அண்ணார்ந்து பார்த்து ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொண்டவன் சிகையை கோதி தன்னை சமன் படுத்தினான்.
அவனை நிமிர்ந்தும் பாராமல் இன்னும் வெளிப்படையான நடுக்கத்துடன் கலங்கி போய் நின்றவளை பார்க்க மனது உருகியது.
“ஓகே, ரெஸ்ட் எடுங்க. இங்க எந்த பயமும் இல்லை. யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. நான் இன்னும் கொஞ்சம் நேரத்துல நாளைக்கு கல்யாணத்துக்கு பொண்ணுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் அனுப்பி வைக்கறேன்…” என்றான் வாசுகியை பார்த்து.
“சரிங்க…” என அவர் சொல்லவும்,
“சாப்பிடுங்க. சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க…” என்றவன் நேரத்தை எல்லாம் சொல்லிவிட்டு வெளியேறினான்.
ஆவுடையப்பன் கிளம்பியதும் அவ்விடம் அமைதி சூழ பிரனித்தா யாரிடமும் பேசாமல் சுருண்டுகொண்டாள்.
இரவு உணவு வந்தது. பெற்றோரும் சாப்பிடாமல் இருந்தனர். அதற்காக கொஞ்சம் உண்டுவிட்டு படுத்துக்கொண்டாள்.
அதிகாலை லால் வந்து கதவை தட்டவும் தயாராக இருந்தவர்கள் வெளியே வந்தனர்.
இரவு சுத்தமாய் உறங்கவில்லை யாரும். வாசுகி தான் மகளிடம் அத்தனை பேசிக்கொண்டு இருந்தார்.
நேரமானதும் எழுப்பிவிட்டு கிளம்பவைத்து சாதாரணமாகவே கிளப்பி இருந்தார் அவர்.
வெளியே ஆவுடையப்பன் தயாராக இருந்தான். அதுவரை கட்சி வேஷ்டியில் தான் அவனை பார்த்திருந்திருக்க அன்று பட்டு வேஷ்டியில் புதிதாய் தெரிந்தான் அவள் கண்களுக்கு.
நிச்சயத்தின் பொழுதும் வெள்ளை வேஷ்டி சட்டை தான். ஆனால் கரை இல்லாமல் மினிஸ்டர் வொய்ட் வேஷ்டியில் இருந்தவன் இன்று பட்டு வேஷ்டியில்.
வந்தவன் பார்வை அவளை பாதாதிகேசம் முதல் அளவிட அவனின் விழிகளை சந்தித்தவள் கண்களில் அக்னி கனப்பு.
ஒரு உண்மை அவளுக்கு தெளிவாய் தெரிந்தது. தன்னிடம் முதன்முறை சம்மதம் வேண்டியதில் இருந்து, இந்த திடீர் திருமணம் வரை ஒவ்வொன்றிலும் உன் விருப்பம் உன் விருப்பம் என்று கேட்டு கேட்டே தன் பக்கத்திற்கு அவன் பந்தை நகர்த்தி அவனுக்கு சாதகமான பதிலை பெற்றிருக்கிறான் என்று.
அதுவே அவன் மீதான கோபத்தை இழுத்து பிடிக்க துணை நின்றது. பிடித்துவிட்டால் போதுமா? எது செய்தாலும் மனதிற்கு தகுமா? என கேள்வியை முன்னிறுத்தி அவனை எதிர்கொண்டாள்.
உள்ளுக்குள் பனியொன்று உருக, உருகும் விழி வழி அவளை கவனித்திருந்தவன் மனதின் தேடலை முகத்தில் தெரியப்படுத்தவில்லை.
குறித்த நேரத்தில் திருமணம் நடந்தேற ஆவுடையப்பன் முகத்தில் வந்தமர்ந்த உணர்வின் பெயர் உயிரை தின்னும் நேசமா? விளங்க முடியாத ஒரு பாவனை அவன் முகத்தில்.
திருமணம் முடிந்து அவர்களின் பயணம் ஆவுடையப்பனின் இருப்பிடம் நோக்கி நகர்ந்தது. செய்திகள் காட்டுத்தீயாய் பரவியது.
‘நிதியமைச்சர் ஆவுடையப்பன் திருப்பதியில் திடீர் திருமணம். நிச்சயிக்கப்பட்ட பெண்ணையே மணந்தார். சித்தப்பா அசோகனின் உடல்நிலை காரணமாக அவசரமாய் நடந்தேறியது என தகவல் வெளியாகியிருகிறது’
இப்படி செய்திகளிலும், ஊடகங்களிலும் மணமக்கள் ஜோடியாய் நிற்கும் புகைப்படம்.
அதில் பெட்ரோல் ஊற்றாமலே எரிந்துகொண்டிருந்தார் சிங்காரம்.