“அதான் வாசல் வரைக்கும் வந்துட்டியே? உள்ள வந்து பாரேன்…” என அழைத்து சென்றான்.
மனோகரனும் வாசுகியும் பயத்துடன் தான் உள்ளே சென்றார்கள். திருமணம் முடிந்து செய்திகள் வெளியானது வரை தெரிந்திருந்தாலும் மொபலை ஆன் செய்யவில்லை.
சிங்காரத்திடமிருந்து நிச்சயம் போன் வரும். வந்திருக்கும். ஆனால் பேச பிடிக்கவில்லை. அதனைகொண்டே போனை அணைத்தே வைத்திருந்தார்கள்.
“உள்ள வாங்க அத்தை. ஏன் நின்னுட்டீங்க?…” ஆவுடையப்பன் கேட்கவும் திடுக்கிட்டு திரும்பினார்கள்.
“சித்தப்பா மாடில தான் இருக்காங்க. வாங்க…” என்று பிரனித்தாவின் கையை பிடித்து அழைத்து சென்றான்.
“எனக்கு நடக்க தெரியும்…” அவள் தன் கைகளை உருவிக்கொள்ள பார்க்க,
“எனக்கும் தெரியுமே. ஆனா வா…” என விடாமல் பிடித்துக்கொண்டு மேலே செல்ல பின்னால் வரும் தாய், தகப்பனின் பார்வைக்காக அமைதியாக சென்றாள்.
அங்கே வெளியே புருஷோத்தமன் நின்றிருந்தான். ஆவுடையப்பனை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் சிரித்தவன்,
“வாழ்த்துக்கள் ஸார், வாழ்த்துக்கள் மேம்…” என்று சொல்ல தலையசைத்தவன்,
“சித்தப்பா என்ன பன்றாங்க?…” என்றான் ஆவுடையப்பன்.
“கொஞ்சம் முன்னாடி தான் தூங்கி எழுந்தார். உள்ள ரெஸ்ட்ல இருக்கார்…” என்னும் பொழுதே கதவை திறந்துகொண்டு அவன் சென்றான்.
அந்த அறையில் இருந்த கட்டிலில் உடல் நலிந்து மெலிந்து போய் படுத்திருந்தார் அசோகன்.
முன்பை விட உடலில் அத்தனை மெலிவு. உற்சாகமாக, திடகாத்திரமாக இருந்தவரின் உடல்நிலை இப்படி மோசமாகியிருந்ததை பார்த்ததும் கவலையானது.
“ராஜா, அய்யா…” என மகனை பார்த்ததும் பளிச்சென்று சிரித்தவர்,
“வாம்மா, வாங்க சம்பந்தி….” என அவர்களையும் வரவேற்றார்.
“கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது. இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு…” என அசோகன் சொல்ல,
“உங்ககிட்ட சொல்லாம கிளம்பிட்டேன் சித்தப்பா. நீங்க இல்லாம…” என சொல்லும் பொழுதே ஆவுடையப்பன் குரல் தழுதழுத்தது.
“நான் இல்லாம எங்க போக போறேன்? உன்னோட ஒவ்வொரு நல்லதிலயும் இருந்தேன். இனியும் இருப்பேன். இதுக்கு போய் கலங்குவியாக்கும்?…” என மகனின் கன்னத்தை பிடித்து சிரித்தவர்,
“வந்து உக்காரும்மா. ஏன் நின்னுட்டே இருக்க?…” என பிரனித்தாவை அருகே அழைக்க ஆவுடையப்பன் சற்று நகர்ந்து இடம் தர அவளும் அமர்ந்துகொண்டாள்.
“திடீர்ன்னு முடிவெடுக்க வேண்டிய அவசியமா போச்சு சித்தப்பா…”
“அடேய் எதுக்கு இவ்வளோ விளக்கம்? காரணமில்லாம நீ எதையும் செய்யமாட்ட. இதுவும் காரணத்தோடன்னு புரியுது. விடுப்பா…” என்றார்.
“எல்லாம் நல்லபடியா நடந்துச்சா, அதுதான் நமக்கு வேணும். என்ன சம்பந்தி நான் சொல்றது சரிதானே?…” என மனோகரனிடம் அசோகன் கேட்க,
அசோகனின் உடலுக்கு என்னவாகிற்று என்று இன்னும் தெரியவில்லை. எப்போதிருந்து இப்படி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்றும் தெரியாமல் பார்த்தனர்.
“ராஜா குடிக்க ஏதாவது சொல்லுப்பா எல்லாருக்கும்…” லேசாய் இருமிக்கொண்டே அவர் கூறவும் இண்டர்காமை எடுத்து உத்தரவிட்டுவிட்டு இவர்களிடம் திரும்பினான்.
“அன்னைக்கு பார்க்கும் போது கூட நல்லா இருந்தீங்களே? என்னாச்சு அண்ணே? எப்ப இருந்து முடியலை?…” வாசுகி கேட்க,
“இப்ப ரெண்டுமூணு நாளா தான். காய்ச்சல் தான் வேற ஒண்ணுமில்லை…” என்றார் சிரித்துக்கொண்டே.
“ஒன்னுமில்லையா? சித்தப்பா…” என ஆவுடையப்பன் மிரட்ட,
“இவன் வேற….” என சலித்துக்கொண்டவர்,
“கொஞ்சம் பிபி, சுகர் அதிகமாகிருச்சு. கூடவே இந்த காய்ச்சல் இருமலும் வந்து பிடிச்சிக்கிச்சு. என்ன பன்றது? விரட்டினா போகவா செய்யும்? அதெல்லாம் சரியாகிடும். நீங்க கவலைப்படாதீங்க…” என்றார்.
“ஹ்ம்ம், காய்ச்சல் அதான் அப்படி தெரியுது. சீக்கிரம் சரியாகிடுவேன். பழையபடி வந்திருவேன்…” என்றவருக்கு இன்னும் வியர்க்க ஆவுடையப்பன் அவரின் முகத்தை துடைத்துவிட்டு தலையை கைகளால் வாரிவிட்டான்.
“இருக்கட்டும் ய்யா…” என புன்னகைத்த அசோகன்,
“என்ன புது பொண்ணு. கல்யாணம் இவ்வளோ சீக்கிரம் நடந்திருச்சேன்னு வருத்தமா?…” என கேட்க நிமிர்ந்து பார்த்தவள்,
“ஹ்ம்ம், இல்லை. அதெல்லாம் இல்லை…”
“மாமான்னு சொல்லுப்பா…” என கனிவுடன் அவர் சொல்ல,
“ஹ்ம்ம், சரிங்க மாமா…” என்றாள் உடனே.
“அதானே? முகமெல்லாம் வாடி இருக்கேன்னு நான் என்னவோன்னு நினைச்சுட்டேன். ஊர் போய்ட்டு வந்த அசதி போல?…” என்றார்.
குடிக்க அவர்களுக்கு சூடாக டீயும், சிற்றுண்டியும் வந்தது. மதியம் யாரும் சரியாக உண்ணாததால் பசி வேறு இப்போது.
கொண்டுவந்து வைத்துவிட்டு பணியாள் செல்லவும் ஆவுடையப்பனே எடுத்து தந்தான். பசிக்கு அமிர்தமாகவும் இருந்தது அந்த டிபன்.
“நாங்களே எடுத்துக்கறோமே? இருக்கட்டும்…” என வாசுகி சொல்ல,
“இதுல என்ன இருக்கு அத்தை?…” என்றவன் எடுத்து தர,
“நான் குடுக்கறேன். நீங்க இருங்க…” என பிரனித்தா சிறிய தட்டில் வைத்து டீயுடன் அவர்களுக்கு நீட்ட வாசுகிக்கு நிம்மதியாக இருந்தது.
உடனே சூழ்நிலையை புரிந்துகொண்டு மகள் நடந்துகொண்டதில் நிம்மதியானார்.
“இந்த சிங்காரம் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை சம்பந்தி. உங்களுக்கு ரொம்ப சிரமமா போச்சுல…” என்று அசோகன் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லவும் மனோகரனின் முகம் சுண்டி போனது.
இந்தமட்டும் கடத்தி வைத்து தப்பி வந்திருக்கிறோம். இதுவே வேறு ஏதாவது விபரீதமாய் செய்திருந்தால்? நினைக்கவே நடுங்கியது அவருக்கு.