“அதான், அந்த நேம் ப்யூட்டி சிங்காரம். பேர் மட்டும் தான் அலங்காரம்…”
“ஹேய் இதென்ன பேரு?…” என சிரித்தவன்,
“ம்ஹூம். இந்த நம்பரை ப்ளாக் பன்றதா? அதையும் செய்யமாட்டேன். கூட இருக்கறவங்க என்ன செய்யறாங்கன்னு கவனிக்கறோமோ இல்லையோ, இந்தமாதிரி ஆட்களை கண்காணிப்புலையே வச்சிருக்கனும்…”
“அப்போ உங்களுக்குன்னு ஒரு டைம்?…”
“அதான் நீ என்னோட இருக்கியே. அந்த டைம்…” என்றவனின் கையில் இருந்த மொபைலை அவள் அழுத்தமாக பார்க்க,
“மூவி பார்க்கறப்போ இடையில சின்னதா ஒரு ப்ரேக் எடுக்கிறோம் இல்லையா? அது மாதிரி இது…” என்றவன்,
“நான் ப்ரஷப் பண்ணிட்டு வரேன். உட்கார்…” என்று குளியலறை நோக்கி நகர்ந்தான்.
மீண்டும் சிங்காரம் அழைத்துக்கொண்டே இருக்க அதனை கடுப்புடன் பார்த்து நின்றவள் தோளை தட்டினான் ஆவுடையப்பன்.
“அவர் கால் பண்ணிட்டே இருக்கட்டும். நீ ஏன் டெண்ஷனாகற? நான் அட்டன் பண்ணாததுக்கு அவர் தான் டென்ஷனாகனும்…”
“ப்ச், சிங்குக்கு அந்த டென்ஷன் பத்தாதேன்னு ஒரு டென்ஷன் தான். வேற ஒண்ணுமில்லை. அந்தாளை மதிக்கவே வேண்டாம்…” என்றதும் இன்னுமே சிரித்தான் ஆவுடையப்பன்.
“இதை கேட்க தான் வந்தீங்களா மறுபடியும்?…”
“ம்ஹூம், டவல் எடுக்கனும். அதான்…” என்று சொல்லிவிட்டு அவன் அதற்குள் சென்று நுழைந்துகொள்ளவும் தனியே இருந்தவளை அந்த அறை உண்மையில் லேசாக மிரள வைத்தது என்னவோ நிச்சயம்.
குளிர்ந்து ஜில்லென்று இருந்தாலும் மனதிற்குள் அதனை அனுபவிக்க முடியாமல் ஒரு முள் நெருடிக்கொண்டே இருந்தது.
மெதுவாக நகர்ந்து பால்கனி பக்கம் வந்து நிற்க கீழே தொண்டர்களில் கூட்டம் நிறைந்திருந்தது.
‘இவங்களுக்கு இப்ப இங்க என்ன வேலை? வீட்டுக்கு போகாம?’ என நினைத்துக்கொண்டே அவர்களை பார்க்க அதில் ஓரிருவர் பிரனித்தாவை பார்த்துவிட்டு வாழ்க கோஷம் எழுப்பவும் பதறி உள்ளே வந்துவிட்டாள்.
“விட்டா கழுத்துல துண்டை போட்டு மாலையோட மேடையேத்தி நிப்பாட்டிருவானுங்க போல? யம்மாடி…” என ஊஃப் என்று காற்றை இழுத்து வெளியிட்டவள் இடுப்பில் கைவைத்து நிற்க,
“இன்னும் நின்னுட்டேவா இருக்க? வேற எதாச்சும் வேணுமா?…” என வந்தவன் சத்தத்தில் திரும்பியவள்,
“பால்கனி போனேன். என்னை பார்த்ததும் வாழ்க சொல்றாங்க. இவங்கலாம் எப்பவும் இப்படித்தானா?…” என்றாள்.
“இப்படித்தான்னா? என்ன கேட்க வர மோகினி?…”
“ப்ச், அதென்ன பார்த்தாலே கோஷம் போடறது? அப்படி போடனும்னு இருக்கா என்ன? அதுவும் இன்னைக்கு தான் பார்க்கற என்னையும்…” என அவள் கேட்டதும் புன்னகைத்தவன்,
“இது ஒரு விஷயமா? இங்க அன்புல, ஆர்வத்துல, அடுத்தகட்டம் எப்படியும் போயிருவோம்ன்ற நம்பிக்கைல இப்படி நிறைய பேர் இருப்பாங்க. இன்னும் ஆதாயத்துக்கும் கூட இந்த கூட்டத்துல இருக்காங்க…”
“ஓஹ், இது அரசியல் இல்லையா? தலையை சுத்தி மூக்கை தொடும் இந்த பதில் வேண்டாம். நான் அதை தெரிஞ்சுக்க வேண்டாம்…” என்றவள் குரலில் ஏகத்திற்கும் கசப்பு.
“பட் வேற வழியில்லைம்மா. நீ தெரிஞ்சுக்கவேண்டிய கட்டாயத்துல இருக்க…” என்றவனை முறைப்பாய் பார்த்தவள் முகத்தில் மீண்டும் கலக்கம்.
“அப்பாம்மா எங்க?…” என்றாள் பேச்சை மாற்ற.
“இதே ஃப்ளோர் தான். தூங்கறாங்க போல. ரெஸ்ட் எடுக்கட்டும். அவங்களுக்கும் எவ்வளோ கஷ்டம்…”
“ஹ்ம்ம், கஷ்டம் தான். என்னால கஷ்டம். நான் அன்னைக்கு உங்களை சந்திக்காம, பேசாம, வாயாடாம இருந்திருந்தா இவ்வளோ தூரம் வந்திருக்காது….” என்றாள் பட்டென்று.
“ஆனா விதின்னு ஒன்னு இருக்கே. இல்லைன்னா நான் கூட அன்னைக்கு அங்க வந்திருக்க வேண்டியதில்லை. மோகினி மந்திரம் இழுத்திருச்சு போல?…” என கண் சிமிட்டினான் ஆவுடையப்பன்.
ஒருஷணம் இமைக்க மறந்து அவன் மீது பார்வையை வீசி நின்றவள் முகத்தை கையிலேந்தினான்.
“இன்னைக்கு இப்படி நடந்ததுல உனக்கு பிடித்தமில்லைன்னு தெரியும். ஆனா இது இப்படித்தான் நடக்கனும்னு இருக்கு. நினைச்சு வருந்தறதை விட சந்தோஷமா இதை கொண்டுபோக பார்ப்போம்…” என இலகுவாக சொல்ல,
“எவ்வளோ கூலா சொல்றீங்க? இதுக்குள்ள இவ்வளோ பெரிய அரசியல் இருக்குன்னு எனக்கு தான் தெரியாது. எங்க குடும்பத்துக்கும். ஆனா உங்களுக்குமா தெரியாது?…”
“தெரியும். ஆனா என்ன செய்ய? என்னால உன்னை தான் கல்யாணம் செஞ்சுக்க முடியும்ன்னு தோணுச்சு. உன்னை பார்த்துக்க முடியும்ன்னும் தோணுச்சு. அதான் இறங்கிட்டேன்…”
“இப்படி சொல்றீங்களே? இப்ப அந்த சிங்கை நீங்க ஜெயிக்க தான வச்சிருக்கீங்க?…”
“வாட்?…”
“ஆமா, அவனுக்கு பயந்து தானே அவசர அவசரமா இந்த கல்யாணம். இதையே கெத்தா கல்யாணத்தை முன்னாடி குறிச்ச தேதில நடத்த நினைச்ச மாதிரி நடத்திருந்தா நீங்க சூப்பர். எங்க அந்தாள் என்ன பண்ணிடுவானோன்னு அவசர அவசரமா ஒரு கல்யாணம். அதுவும் அப்போ நாங்க இருந்த அதிர்ச்சி…” என்றவள்,
“யோசிச்சு பாருங்க. நானும், என் அப்பாம்மாவும் உண்மை தெரிஞ்சு எவ்வளோ பயந்திருப்போம். கொஞ்சமும் கேப் விடாம உடனே அந்த பயத்தை தெளிய விடாமல் நீங்க கல்யாணத்தை நடத்தி முடிச்சிட்டீங்க…” பிரனித்தா முடிக்கும் முன்,
“பயம்? எஸ், ஒத்துக்கறேன்…” என்றவனை அவள் விழிவிரித்து பார்க்க,
“உன் மேல பயம். அந்த நிமிஷம் உண்மை தெரியவும் உனக்கு இது வேண்டவே வேண்டாம்ன்ற எண்ணம் வந்திருச்சு. விட்டா நீ மொத்தமா போய்ட்டா? அது செகென்ட் ரீசன்…”
“நான் வேண்டாம்ன்னு நினைக்கறேன்னு தெரிஞ்சும்…”
“ஆமா, தெரிஞ்சும் தான் மோகினி. என்னை இங்க கட்சி ஆபீஸ்ல வந்து நீ மீட் பன்றப்போ என்ன சொன்னேன்? உன்கிட்ட நான் ஏற்கனவே சொன்னது தான். யோசிச்சு பதில் சொல்லனும். சொல்லிட்டா பின்வாங்க முடியாதுன்னு சொன்னேன்ல…” ஆவுடையப்பன் ஞாபகப்படுத்தினான்.
“அதுக்காக? ஏன் இவ்வளோ பேசறீங்க, சமாளிக்கவோ, சமாதானம் பண்ணவோ முடியாதாமா உங்களுக்கு?…”
பிரனித்தாவிற்கு அத்தனை ஆற்றாமை. தன் மனம் தெரிந்தும் அவன் நினைத்ததை நடத்திக்கொண்டதில்.
“ஓகே, இப்போ என்ன? திரும்ப முதல்ல இருந்தா?…” என்றதும் கண்ணீர் பொங்கிவிட அதனை அவனுக்கு காட்டாமல் திரும்பிக்கொண்டாள்.
“இவ்வளோ எமோஷனல் வேண்டாம். நான் இதை இவ்வளோ சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணினதே பெருசு. இந்த பொறுமை எல்லாம் உன் விஷயத்துல மட்டும் தான். இல்லன்னா இந்நேரம் அந்த சிங்காரத்தை…” என பல்லை கடித்து வார்த்தைகளை அடக்கினான் ஆவுடையப்பன்.
அச்சு அசலாய் ஒரு அரசியல்வாதியின் வார்ப்பாய் அவன் தோரணையும், பேச்சும் இருந்தது.
அவனருகே நின்றிருந்தவள் தன் கன்னத்தை பற்றியிருந்த ஆவுடையப்பனின் விரல்களில் இருந்து விடுபட முயல அதன் அழுத்தம் இன்னும் கூடியது.