“கன்னம் வலிக்குது…” என்றாள் அவன் கையை பிடித்து இழுக்க முயன்று.
ஒரு நொடி பார்வை அவள் மீது இளக்கத்துடன் இனிமையை கூட்டி படர்ந்து விரல்களில் மென்மையை கொண்டு வந்தான்.
“இறுக்கமா பிடிச்சுட்டேனா?…” என்றவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் நின்றவளுக்கு பதட்டம் கூட வேகமாய் அவனிடமிருந்து விலகி கட்டிலில் சென்று கண்ணை மூடி படுத்துவிட்டாள்.
அந்த நிமிடத்தை எதிர்கொள்ளமுடியாத மனதின் பலவீனம் அவளை நிலைகுலைய செய்திருந்தது.
ஆவுடையப்பனின் தோரணை, ஆளுமை வெளியில் எப்படியும் இருக்கட்டும். இதுவரை தன்னிடம் கட்டிய மென்மையை எப்போதும் கடைபிடிப்பான் என குருட்டான்போக்கில் நம்பியிருந்தாள்.
சிலரின் சுபாவங்கள் எங்கும், எவ்விடமும் மாறாது என்பதை அவன் திருமணத்தை நடத்திக்கொண்டதிலும், சற்றுமுன் கன்னத்தை பிடித்திருந்ததிலும் உணர்ந்துகொண்டாள்.
இப்போது தனிமை மட்டுமே தேவையாக இருக்க விழிகளை மலர்த்தவே அஞ்சினாள்.
“மோகினி, என்னாச்சு?…”
“ரெஸ்ட் எடுக்க சொன்னீங்க தானே? அதான். ஏன் வேண்டாமா?…” அவளின் சுபாவம் அது. கேட்டும் விட்டாள் துடுக்காக.
“ஓகே, தனியா இருந்துப்ப தானே?…”
“ஹ்ம்ம், ஓகே…” இப்போதைக்கு தன்னை சமன் செய்ய அந்த தனிமை தேவையாக இருந்தது.
முதலில் தன்னை இந்த சூழலுக்குள் சரியாக பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவு கொண்டிருந்தாள்.
அப்படி இல்லை என்றால் வாழ்க்கையின் வண்டி சக்கரத்தின் அச்சாணி அந்த பொருந்தா தன்மையில் எகிறி எங்கோ தெறித்து விழத்தான் செய்யும்.
ஆழ்ந்த மூச்செடுத்தவள் உறங்க ஆரம்பிக்க அருகில் நின்றிருந்தவன் தொந்தரவு செய்யாமல் விலகி சென்று அமர்ந்துகொண்டான் மொபைலுடன்.
மனைவியை அங்கே தனியே விட்டு வெளியே செல்ல அத்தனை யோசனையாக இருந்தது.
வீராப்பாய் சொல்லிவிட்டாலும் அவள் கண்களில் கவிழ்ந்திருந்த மிரட்சியை கண்டுகொண்டிருந்தான்.
‘பயம்ன்னு வாயை திறக்காளா பாரேன்’ என சிரித்து தலையசைத்துக்கொண்டவன் பார்வை அவளிடமே இருந்தது.
நான்குமணி நேரம் கடந்திருக்கும் அவள் விழிக்கையில். அறையில் அவனில்லை. எழுந்துகொண்டவள் முகத்தை கழுவிவிட்டு வந்திருக்க மனமும் தெளிவாகி இருந்தது.
வாழ்க்கை ஆரம்பித்தாகிற்று. அடுத்தகட்டத்தில் வந்து நின்று நடந்துவிட்டதை ஏன் எதற்கு என குற்றம் சாட்டி இன்னும் நோகடித்து கொண்டு நிம்மதியிழக்க அவள் விரும்பவில்லை.
அதே நேரம் எல்லாம் சரியாகிவிட்டதா என்றால் நிச்சயம் அதுவுமில்லை. இனிதான் சிங்காரத்தின் அதிகப்படி கோபத்தையும், அதன் விளைவுகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
நினைக்கையில் அத்தனை திடுக்கிடல் இதயத்தினுள். இதில் தாய், தகப்பன் இருவரையும் தனித்து விடவும் அச்சம்.
தண்ணீரை குடித்துவிட்டு நின்றிருந்தவளின் மனதில் சஞ்சலங்கள் ஓரமாய் ஒதுங்கி சென்றது.
“சரி நீ சாப்பிட்டு தூங்கு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. வரேன்…” என்றான்.
“வரேன்னா? எங்கன்னு சொல்லலை?…”
“வெளில இல்லைம்மா. இங்க பக்கத்து ரூம்ல தான் இருப்பேன்…” என்று நகர,
“அம்மாப்பா…”
“அவங்களுக்கு ரூம்க்கே டின்னர் போயிருச்சு. நான் பேசிட்டேன். இந்நேரம் தூங்கிருப்பாங்க. நீ தூங்கறன்னதும் நாளைக்கு மார்னிங் பேசறேன்னு சொல்லிட்டாங்க…” என்றான்.
நிற்கவே இல்லை. மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டே அவன் பேச பிரனித்தா அவனோடு சேர்ந்தே நகர்ந்தாள்.
“என் கூட எங்க வர? டின்னர் டைமாகிடுச்சு. எனக்கு பசிக்கலை. உனக்கு என்ன வேணும்னு சொல்லு. இல்லைன்னா கீழ வந்து சாப்பிடறியா?…” என்றான் வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டே.
அவன் சொல்லவும் வேகமாய் அவன் முன்னே வந்து நின்றவளை மூச்சடக்கி பார்த்தான்.
“என் கூட இருக்க பயமா இருக்கா உங்களுக்கு?…” என்றாள் அவனிடம்.
“வாட்? கம் அகைன்?…”
“இல்லை, தனியா என்னோட இருக்க பயமா இருக்கான்னு கேட்டேன். தெளிவா தானே பேசறேன்…” என்றவள் கிண்டலில் இதழ்களுக்குள் அவன் சிரிக்க,
“என்னவோ வீம்புக்கு கட்டிட்டு வந்து எங்கையோ கிடன்னு விட்டுட்டுபோற மாதிரி இருக்கு நீங்க இப்படி போறது…” என வம்பிழுக்க அதில் ஆவுடையப்பனும் இலகுவானான்.
“ஹ்ம்ம். நான் இதுக்கு பதில் சொல்லிடுவேன். ஆனா நீ குதிக்ககூடாது…”
“சொல்லுங்க மினிஸ்டர்…” அவனை போலவே ராகம் பாட,
“ஆமா, சத்தியமா பயம் தான். ஏற்கனவே சொன்னேனே, உன்கிட்ட பயம் இருக்குன்னு. இப்ப இந்த பயம் உன்னை உன் பர்மிஷன் இல்லாம எடுத்துக்குவேனோன்னு தான். அதுவும் எக்கச்சக்க பயம். நிச்சயம் செஞ்சாலும் செஞ்சிருவேன்…” என்றான்.
அவளிடம் மாற்றமில்லை. நின்றவிதம் நின்றபடி அவனெதிரே அவள் நின்றிருக்க அந்த பதட்டமில்லாத சற்றே ‘எங்கே செய்துவிடுவாயா?’ என்று அவளிடம் தொனித்த மெல்லிய அலட்சியத்தையும் அவன் கவனித்தான்.
“உனக்கு ஓகே வா சொல்லு. இங்கயே இருக்கேன்…”
“ஓகே சொல்லலைன்னா?…”
“அதான் சொன்னேனே, பர்மிஷன் இல்லாம…”
“இஸ் இட்?…” என்றவளிடம் அழகிய திமிர்ந்த தோரணை.
“இன்னும் கூடிட்டே போகுதே மோகினி…” என புன்னகைத்து நெருங்கியவன்,
“உரிமை இருக்கு தான். அதை விட ஆசையும் அதிகமா இருக்கு. ஆனா இப்ப வேண்டாம்ன்னு புத்தி அடிச்சுக்குது. அதுவும் என்னடா பண்ணிடுவன்னு நீ நிக்கிற பார்த்தியா?…”
அவளிடையில் கைகொடுத்து தன்னருகே இழுத்து இன்னொரு கையால் அவள் கன்னம் பற்றினான் ஆவுடையப்பன்.
இது அவனின் ஆளுமையை காண்பிக்கவில்லை. அதிகாரத்தை காண்பிக்கவில்லை.
அவன் அவளவன், அவள் அவனவள் என்னும் அங்கீகாரத்தை ஆசையுடன் பிரதிபலித்தது.
“ஹ்ம்ம் மோகினி, ஜஸ்ட் ஒன்…” என்று மொழிந்தவன் மொழி விளங்கும் கன்னத்தில் அழுத்தமான ஈரத்தடம் மீசையின் உராய்வுடன்.
“ஒன்ஸ்மோர் மோகினி…” மீண்டும் மறுகணத்தில், மறுகன்னத்தில் முத்தத்தை பதித்தவன் இதழ்கள் அவளை விட்டு விலகவே இல்லை.
இத்தனை வளைக்குமா ஒரு அணைப்பும், முத்தமும் என இந்த நிகழ்வில் பேச்சற்று நின்றிருந்தாள் பிரனித்தா.
சட்டென்று ஏற்படும் வானிலை மாற்றங்கள், வானவில் தோற்றங்கள் போல வாழ்வியல் ஏற்றங்களும் நம் கைகளுக்குள் இல்லை.