உணவு நேரம் கடந்து வெகுநேரமாகியும் இன்னும் ஒருவரும் அங்கே உண்ணவில்லை.
கோபம், கோபம் யாரையேனும் கழுத்தை பிடித்து நெறித்துவிடும் அளவிற்கு கோபமும், ஆக்ரோஷமும் தலைக்கு ஏறி இருந்தது சிங்காரத்திற்கு.
அவரை பார்க்கவே அச்சமாக இருந்தது மணிமேகலைக்கு. மருமகளை ஒட்டியபடி அவர் நின்றுகொண்டிருந்தார்.
கோபத்தின் காரணம் நன்றாகவே புரிந்தது பத்ரிக்கு. ஆனால் நடந்ததை தான் அவனால் ஏற்க முடியவில்லை.
ஏன்? எதற்காக இந்த அவசர திருமணம்? அதுவும் தங்களை கூட அழைக்காமல், தகவலும் சொல்லாமல்? என்ன நடந்திருக்கும்?
அவனிடம் கேள்விகள் நிறைந்து கிடந்தது. தகப்பனிடம் கேட்டுவிட தான் அவனால் முடியவில்லை.
யாராலும் அந்த சூழ்நிலையை கையாள முடியவில்லை. என்னவோ நடந்துவிட்டிருக்கிறது.
ஆனால் எதுவும் புரியவில்லை. திருமணத்தை ஏற்பாடு செய்தவரையே அழைக்காமல், சொந்தங்களான தங்களுக்கு தெரிவிக்கப்படாமல் திருமணம் நிகழ்ந்துவிட்டது.
பத்ரிக்கு தன்னிடம் கூட சொல்லாமல் எப்படி பிரனித்தா இத்தனை பெரிய முடிவிற்கு வந்தாள் என நம்பமுடியவில்லை.
உறவுமுறையில் முறைப்பெண் தான். ஆனால் வளர்ந்ததென்னவோ அண்ணன் தங்கை போன்ற அன்பின் பிணைப்பில்.
அப்படி இருக்க தன்னிடமும், தோழியை போன்ற தன் மனைவியிடமும் எதுவும் சொல்லாமல் சென்றது நெருடியது.
“அத்தை எவ்வளோ நேரம் இப்படியே இருப்பீங்க? நீங்க சாப்பிடுங்க…” என நேகா சொல்ல மணிமேகலைக்கு மதியத்திலிருந்து வீட்டில் ருத்ரதாண்டவம் புரிந்துகொண்டிருந்த கணவரை மீறி தண்ணீர் கூட இறங்கவில்லை.
“நீங்களாச்சும் சொல்லுங்களேன். அத்தைக்கு சுகர் இருக்கு. சாப்பிடாம இருந்தா இன்னும் முடியாம போயிரும். நம்ம சரி. ஆனா அவங்க வயசுக்கு…” என நேகா பேசிக்கொண்டிருக்க,
“கொஞ்சம் பேசாம இரேன்ம்மா. இதை கேட்டா இன்னும் உண்டில்லைன்னு பண்ணிடுவார்…” என்று மணிமேகலை பதறினார்.
மனதோ என்ன நடந்து இப்படி முடிவுக்கு வந்தனர்? அதிலும் வாசுகி கூட சொல்லவில்லை தன்னிடம் என எதைஎதையோ எண்ணி பயந்து போய் இருந்தார்.
நிச்சயம் இதில் சிங்காரத்தின் கைவரிசை பெரும் பங்கு என அவரால் உணர முடிந்தது.
அதிலும் இப்படி திருமணம் நடந்ததை எண்ணி கொஞ்சமும் பதறாமல் இவ்வளவு கோபம், அதுவும் கொலைவெறி அளவிற்கு அவர் பேசிய வார்த்தைகள்.
“என்னை கழுத்தறுத்துட்டானே? நம்ப வச்சு எவ்வளோ பெரிய சோலியை பார்த்துட்டான். இந்த பகட்டை பாக்காத பரதேசிகளும் அவன் கூட கூட்டு. எல்லாம் போச்சே…” என கொந்தளித்துக்கொண்டு இருந்தார்.
இப்படியான ஏகவசனங்கள் சகட்டுமேனிக்கு அவரின் வாயிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது.
மீண்டும் தனது போனை எடுத்து ஆவுடையப்பனுக்கு அழைத்து அவன் எடுக்கவில்லை என்றதும் மொபைலை தூக்கி எறிந்தார்.
“அப்பா என்னப்பா?…” என பத்ரி அருகே வர,
“என்ன என்னப்பா? என்னடா? பேசாம போயிரு…” என மகனையும் கத்தினார்.
“ப்ச், கொஞ்ச நேரம் பேசாம இருங்க. அவரே கோவத்தை குறைச்சுட்டு பேசட்டும். இல்லைன்னா அவர் ரூம் கதி தான் ஹாலுக்கும்…” நேகா கணவனை எச்சரிக்க தலை வலித்தது.
மதியத்திலிருந்து இது தான் சிங்காரத்திற்கு வேலை. தனது மொபைல், தாய், நேகா என அனைவரின் போனிலிருந்தும் முயற்சித்துக்கொண்டே தான் இருந்தார்.
எதுவும் எடுக்கப்படவில்லை. வாசுகி, மனோகரன் இருவரின் போனுமே அழைப்பு சென்றுகொண்டே தான் இருந்தது.
நேரில் பார்க்க செல்ல வேண்டுமானால் அதற்கும் அனுமதி இல்லை. ஆவுடையப்பன் தர மறுத்தான்.
ஏற்கனவே கொதித்துபோய் இருந்த சிங்காரத்தை அதுவே இன்னுமின்னும் உட்சபட்ச அவமானத்திற்குள்ளாக்கியது.
“எவ்வளோ தைரியம் இப்பவும் அவன் போனை எடுக்கலை. என்ன நினைச்சிட்டு இருக்கான். ராஸ்கல். என்கிட்டையே விளையாடி பார்க்கானா?…” என இன்னும் குறைந்தபாடில்லை.
ஏற்கனவே புருஷோத்தமனுக்கு அழைத்திருக்க அவனும் இப்போது பார்க்கவோ, பேசவோ முடியாது என்று சொல்லியிருந்தான்.
“சொன்னா? சொன்னா போடமாட்டியா? என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? இந்த முட்டாத்தனத்துக்கு தான் இன்னும் அரசியல்ல காப்புள்ளி கூட கத்துக்கலை நீ…” என மகனை போட்டு வாட்டினார்.
பத்ரிக்கு முகமே விழுந்துவிட்டது. சுட்டு போட்டாலும் அவனுக்கு சிங்காரத்தின் குள்ளநரித்தனமோ, அரசியலின் நெளிவு சுளிவோ வரவே இல்லை.
அது மணிமேகலையை கொண்டு குணத்தில் பிறந்துவிட்டதாகவும் இருக்கலாம் என சிங்காரத்திற்கு தினத்திற்கும் ஒருமுறை தோன்றிவிடும்.
“புள்ளைய கூட உருப்படியில்லாமல் உன்ன மாதிரியே பெத்து வளர்த்திருக்க….” என கத்தவில்லை என்றால் அன்று கண்ணடையாது சிங்காரத்திற்கு.
இன்றும் தான் சொன்னதை கேளாமல் இப்படி தனக்கு புத்தி சொல்பவன் மீது பற்றிக்கொண்டு வந்தது சிங்காரத்திற்கு.
அரசியல் தெரியவில்லை என்றாலும் தொழிலில் கெட்டிக்காரன் தான் பத்ரி. சிமின்ட் பேக்டரி வைத்து சிறப்பாகவே நடத்திக்கொண்டிருப்பவன்.
அதனை பாராட்ட சிங்காரத்திற்கு ஒருபோதும் மனம் உகந்து வராது. முறைத்துக்கொண்டு தான் செல்வார்.
இப்போது தன்னை பார்த்துக்கொண்டு நின்ற மகனின் மேல் கொஞ்சமும் இளக்கமில்லை.
விட்டால் கடித்து குதறிவிடும் அளவிற்கு பண வெறியும், ஏமாற்றப்பட்ட அவமானமுமாய் தான் சீற்றத்துடன் இருந்தார்.
“இன்னும் என்னடா பார்வை? போனை போடு…” என உத்தரவிட,
“மணியை பாருங்க ப்பா…” என்றான் தயக்கத்துடன் மகன்.
“எதுவும் இருக்கட்டும். இப்ப போனை போட்டு குடு எனக்கு…” என்றார் அதிகாரமாக.
“ஹ்ம்ம், சரிங்கப்பா…” என்று புருஷோத்தமனுக்கு அழைப்பு விடுக்க எடுத்துவிட்டான் அவன்.
“இங்க பாருங்க ஸார், அவங்களுக்கான ப்ரைவேசில நான் தலையிட முடியாது…” கறாராக அவன் சொல்லியதை போலிருந்தது.
“அப்பத்தான் குடுக்கலை. நைட் சாப்பிட வந்திருப்பாங்க இல்ல. அப்ப குடுக்க வேண்டியது தானே? இல்ல நான் கூப்பிட சொன்னேன்னு சொல்ல வேண்டியது தானே?…” என சிங்காரம் குதிக்க,
“டின்னர் டைம் அவங்க ஃபேமிலிக்கானது. அந்த நேரம் நான் உள்ள போக முடியாது…”
“என்ன? ஃபேமிலியா? டேய் நான் யார் தெரியுமா? நான் இல்லாமலா அவங்க ஃபேமிலி?…” பொறுமை பறந்தது சிங்காரத்திற்கு.
“ஸார் மரியாதை முக்கியம்…”
“சம்பளத்துக்கு வேலை பார்க்கற உனக்கு மரியாதையா? நான் யார் தெரியுமா?…” சிங்காரம் எகிற,
“எல்லாம் தெரியும் ஸார். நான் பார்க்கற வேலைக்கு தான் சம்பளம். அதுவும் உங்ககிட்ட இல்லை. என்னோட ரெஸ்பெக்ட் எனக்கு முக்கியம்…” என்றவன்,
“இனிமே இப்படி அன்-டைம்ல டிஸ்டர்ப் பண்ணாதீங்க. நான் மார்னிங் ஸார்கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு உங்களுக்கு கூப்பிடறேன்…” என்று சொல்லி சிங்காரத்தின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்துவிட்டான்.
“டேய் டேய் டேய் மடப்பயலே…” என்ற சிங்காரத்தின் சத்தம் வீட்டை மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தது.
—————————————————
எத்தனை நிமிடங்கள் அவனின் அணைப்பில் நின்றிருந்தாளோ ஆவுடையப்பன் லேசாய் விலகவும் சுதாரித்தவள்,
“உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை…” என சொல்லிவிட்டு அவனை தாண்டி செல்ல போக,
“ம்ஹூம், இந்நேரம் ரூம் விட்டு போகாத…”
“வெளில எல்லாம் போகலை. எனக்கு தூக்கம் வரலை. இப்படி உட்கார்ந்திருக்கேன். விடுங்க…” என்றாள் இறைஞ்சுதலாக.
“ஓகே…” என சொல்லியவன் உடை மாற்றிவிட்டு வந்து படுத்துவிட்டான் கட்டிலில்.