கட்டிலுக்கும் பிரனித்தா அமர்ந்திருந்த இடத்திற்கும் தூரங்கள் தான். அந்த அறையின் கடைக்கோடியில் இருந்தது நீண்ட இருக்கை.
அதுவே படுக்கையை போலிருந்தது. சென்று அமர்ந்தவள் சற்று நேரம் மட்டுமே இருந்தாள்.
வெளியே கண்ணாடி ஜன்னலின் திரை காற்றிலாட அதன் பின்னிருந்த மரத்தின் அசைவில் எச்சிலை கூட்டி விழுங்கியபடி கணவனை பார்த்தாள்.
உறங்கிவிட்டான் என்பது தெளிவாக தெரிந்தது. உடை மாற்றியிருந்தான் அவன்.
வெள்ளை வேஷ்டி சட்டையிலேயே பார்த்திருந்தவளுக்கு கணவனின் இந்த தோற்றம் புதிதாகவும், பிடித்தும் இருந்தது.
அவனின் வயது இன்னும் குறைந்ததை போலிருந்தது அந்த ஷார்ட்ஸ் & ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டில்.
மீண்டும் காற்றின் சப்தம் வேகமாக அதன் எதிரொலி அறையில் ஊடுருவி அவளை பயமுறுத்தியது.
நினைக்காதே என நினைத்தாலும் தானும், ஆவுடையப்பனும் சொல்லிய, ‘மோகினி, ஆவி, பூத் பங்களா’ எல்லாம் வரிசையாக ஞாபகம் வர அடித்து பிடித்து ஓடி சென்று அவனருகே குப்புற படுத்துக்கொண்டாள்.
ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தியவள் மெல்ல தலையை உயர்த்தி ஆவுடையப்பனை பார்க்க அவனின் இடது கை விரல்கள் அவளின் முகத்தருகே.
தலைகேசம் முகத்தில் விழுந்து அசைந்து அலையாடியபடி இருக்க, அவனின் இந்த நிர்மலமான முகம் அவள் மனதில் இன்னும் ஆழமாய், அழுத்தமாய் பதிந்தது.
பயம் அகன்று மெல்லிய புன்னகை அவள் முகத்தில் மிளிர மெல்ல தன் கைவிரல்களை அவன் பக்கம் நகர்த்தினாள்.
அன்றைக்கு போல இன்றும் தன் விரல்களை பார்த்தவள் அளந்து பார்ப்பதை போல அவனின் விரிந்த கையில் தனது கையையும் விரல் விரித்து அளவு பார்க்க உண்மை தான்.
“எவ்வளோ குட்டியா இருக்கு…” என மெல்ல முணுமுணுத்து சொல்லிய நொடி அவன் விரல்கள் இவளோடு கோர்த்து பிணைந்து கொண்டது.
“அச்சோ…” என திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அவள் முகம் பார்த்து வசீகரிக்கும் புன்னகையுடன் ஆவுடையப்பன்.
“என்ன பன்ற மோகினி?…” என அவன் கிசுகிசுப்பான குரலில் கேட்க,
“என் கை…” என உருவ முயல அவள் விரலோடு சேர்த்து அவளையும் சுருட்டி தன் இரு கைகளுக்குள் கொண்டுவந்துவிட்டான்.
சட்டென்ற நெருக்கம், இப்படி மொத்தமாய் அவனோடு உரசிக்கொண்டு உடலெல்லாம் கூசி சிலிர்த்து வியர்த்து போனது.
இரு கைகளையும் கோர்த்து பிடித்தவன் நெஞ்சோடு அவள் ஒட்டிக்கொண்டிருந்தாள்.
பின்னிருந்து அனைத்திருந்தவன் முகம் அவளின் பின்னங்கழுத்தில் இங்குமங்குமாய் தீண்டாமல் தீண்டி நகர்வதை உணர்ந்தவள் விழிகளை மூடி தன்னை ஸ்திரப்படுத்தினாள்.
“தூங்கலையா?…” என்றவன் வார்த்தைகள் செவிகளில் உராய்ந்து உள்ளே காதுக்குள் சென்றது.
பதில் சொல்ல முடியாமல் அவன் அணைப்பில் நிலைகுலைந்து கொண்டிருந்தாள் பிரனித்தா.
இப்படி விழிப்பான், அணைப்பான் என எதிர்பார்க்கவில்லை. இன்றைக்கு எல்லாமே எதிர்பார்ப்பிற்கு அப்பாற்ப்பட்டே நடந்துகொண்டிருப்பதை கசப்புடன் உணர்ந்தாள்.
நல்ல நிலையில் இவை எல்லாம நிகழ்ந்திருக்கலாமே என மனதின் பேராசை பெருமூச்சாய் அவளிடம் அப்பட்டமாய் வெளிப்பட்டது.
அதன் வெளிப்பாடாக தன் விரல்களோடு கோர்த்திருந்தவன் கரத்தை இன்னும் அழுத்தமாய் பற்றிக்கொண்டாள்.
“எல்லாமே சரியாகிடும். டோன்ட் வொர்ரி மோகினி…” சமாதானமாக சொல்லி அவளிடம் மென்மையாகினான்.
“மனசுக்கு பிடிச்சவங்க செய்யறது வேணா பிடிக்காம போகலாம். பிடித்தம் எப்பவும் மாறாது. நான் செய்யறது உனக்கு அதிருப்தியா இருக்கும். ஆனா நான் உனக்குள்ள எப்பவும் அதே இடத்துல தான் இருப்பேன்…”
“ஓவர் கான்பிடன்ட்…” என்று உதட்டை வளைத்தவள்,
“அப்போ நான் என்ன செஞ்சாலும் என்னை பிடிக்கும்ன்னு சொல்ல வரீங்க? ரைட்?…” என்றவள் கேள்வியில் நிதானமானான்.
“குட்நைட் பிரனித்தா…” என்றவன் பேச்சில் அவள் விழிகள் அவனிடம் தன் ஆற்றாமையை காண்பித்தது.
அசையாத பார்வையோடு அவனும் அதனை எதிர்கொள்ள நெஞ்சை முட்டிய சஞ்சலம் தாளாது அவன் நெஞ்சத்தில் தலைசாய்த்தாள்.
உண்மை தானே? வேண்டாமென்று விலகி சென்றிருந்தாலும் அவனுக்கு தான் கொடுத்த இடம் அவனுக்கானது மட்டுமே தான்.
அதை எவ்விடத்திலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாதளவிற்கு அவளோடு கலந்துவிட்டிருந்தது அவன் நினைவுகள்.
இரவு வணக்கம் சொல்லியவனும் உறங்கவில்லை. அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவள் சிகையை கோதியபடி விழிகளை மட்டும் மூடியிருந்தான் ஆவுடையப்பன்.