ஆனால் அதற்கு இன்னும் கூடுதல் கண்காணிப்பு தேவை. காலை அதற்கான தகவல் வேறு திருப்திகரமாக இல்லை.
சிங்காரம் பணத்தை நெருங்கிவிடுவதை போலிருந்தது. அப்படி நெருங்கவா இத்தனை நாள் காத்திருந்தது?
பணம் சிங்காரத்தின் கைக்கு சென்றுவிட்டால் அதனோடு முடிவடைந்துவிடாதே? இது எப்படி வேண்டுமானாலும் திசைமாற கூடிய அபாயம்.
தன்னையே கூட கூண்டில் ஏற்றிவிடும் சாத்தியமும் இருக்க ஒவ்வொரு நிமிடமும் திக் திக் தான்.
அவனின் தனிப்பட்ட அலைபேசியில் அவன் எதிர்பார்த்த அழைப்பு வந்துவிட்டது.
“எஸ், எல்லாம் ஓகே வா?…”
“பக்கா. நீங்க எதுக்கும் வொர்ரி பண்ண வேண்டாம். நான் இன்பார்ம் பண்ணிட்டேன். இப்ப பணத்தை மாத்தினா பிரச்சனையாகும். அதை எங்கயும் வெளில கொண்டுவர முடியாது. மாத்தவும் முடியாது. ஆனா தேடறவங்களை டைவர்ட் பண்ணலாம்…”
“ஹ்ம்ம், அதை நான் பார்த்துக்கறேன். ஏற்கனவே ஆரம்பிச்சுட்டேன். இருந்தாலும்…” ஆவுடையப்பன் இன்னும் யோசித்துக்கொண்டே பேசினான்.
“இவ்வளோ யோசிக்க எதுவுமில்லை. ரொம்ப கவனமா தான் இருக்காங்க…” என்றது மறுமுனையில் வந்த அந்த குரல்.
“ஹ்ம்ம், சொல்ற. இருந்தாலும் ஓகே…” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
தண்ணீரை குடித்து தன்னை அமைதிப்படுத்தியவன் அங்கேயே அமர்ந்துவிட்டான்.
கண்ணீரில்லை என்றாலும் அவள் விழியில் நீர் திரையிட்டிருந்ததை மனது மீண்டும் எடுத்து கூறியது.
அவளை தேடி செல்லவும் தோன்றாமல் சுழல் நாற்காலியில் பின்னால் சாய்ந்துவிட்டான்.
முதல்நாள் அவளிடம் எத்தனை பேசியிருந்து ஒரு நாள் முடிவிற்குள் அவளை காயப்படுத்தியிருக்க மீண்டும் மீண்டும் அவனுக்கு தான் முன்பு கூறியது தான் ஞாபகம் வந்தது.
“சித்தப்பா அந்த பொண்ணை புடிக்கும் தான். ஆனா எனக்கு செட்டாக மாட்டா. அதோட என்னோட இந்த சொஸைட்டில அவளோட லைவ்லி போய்டும். தெரிஞ்சே கஷ்டப்படுத்த சொல்றீங்களா?…” என்று அசோகனிடம் அத்தனை வாதாடியிருந்தான்.
ஆரம்பமும் மறுப்பு, வாழ்க்கையை ஆரம்பித்த விதமும் கசப்பு, இப்படி தொட்டு தொட்டு ஒவ்வொன்றும் இருவரின் மனநிலையை சோதிப்பதாகவே இருந்தது.
சற்றுமுன் முகத்தில் களையின்றி சென்றவளை முதன் முதலில் சந்தித்த நினைவலையில் கண்களை மூடினான்.
———————————————-
நடுநிசியில் தூறியும், தூறாமலும் காற்றோடு கலந்து மென்சாரலாய் மழை லேசாய் பெய்துகொண்டிருந்தது.
மழையில் கடலலை அருகே நடக்கவே மனதிற்கு இதமாக இருந்தது. வெள்ளை நிற ட்ராக் பேண்ட், டிஷர்ட்டில் மெதுவாக, நிதானமாக ஆழ்ந்த ரசிப்புடன் நடந்துகொண்டிருந்தான் ஆவுடையப்பன்.
பாண்டிச்சேரி கடற்கரையில் அந்த நள்ளிரவு பொழுதில் ஆட்கள் அரவமின்றி தனித்து நடந்துகொண்டிருந்தவன் காதில் கூச்சல் குரல்கள்.
அந்த பௌர்ணமி இரவில் அலைகளில் அத்தனை சீற்றம். அவனுக்கு வெகு தூரத்தில் நான்கைந்துபேர் கடலலையில் புரண்டுகொண்டிருப்பது தெரிந்தது.
சிரிப்பு சத்தமோ என்னும் விதமாக எதுவும் தெரியவில்லை. மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் என இளவயதினர் தான்.
ஏற்கனவே இரு நாட்களாக கடலில் யாரும் குளிக்க வேண்டாம் என காவல்துறையினரும் எச்சரிக்கை வேறு விடுத்திருக்க இந்த நேரத்தில் இது என்ன என அவர்களை நோக்கி சென்றான் ஆவுடையப்பன்.
புதிதாய் அமைச்சராக பதவியேற்றிருந்தவன் இருமாதத்தில் புதுச்சேரிக்கு முக்கிய வேலையாக வந்திருக்க வந்த நேரத்தில் உறக்கம் வராமல் கடற்கரையோரம் நடந்துகொண்டிருந்தவன் விழியில் அவள் அகப்பட்டாள் அந்த கூட்டத்தில்.
சென்ற வேகத்தில் கடல் அலையில் விழுந்து கிடந்தவனை உச்சந்தலையை பிடித்து மணல் பரப்பில் இழுத்து போட்டான் ஆவுடையப்பன்.
இன்னொருவன் அதிர்ச்சியுடன் இதனை பார்த்திருக்க அடுத்த அலை அவனை உள்ளிழுப்பதை போலிருக்க சுதாரிக்க முடியாத நேரத்தில் அவனையும் பிடித்து இழுத்தவன் ஓங்கி அறைந்திருந்தான்.
“யார் ஸார் நீங்க? ஏன் அடிக்கறீங்க?…” என அவனிடம் எகிறிக்கொண்டு வந்த பெண்ணின் மீது கோபமான கோபம்.
“நீங்க யார்? இங்க இந்த நேரம் என்ன பன்றீங்க?…” என்றவன் பார்வையில் அங்கே கிடந்த உற்சாகபான பாட்டில்களும், அருகே இருந்த வெட்டப்பட்டிருந்த கேக்கும் விழுந்தது.
“ப்ரெண்ட்க்கு பர்த்டே ஸார். அதான் சர்ப்ரைஸ்…” என்றாள் இன்னொரு பெண்.
“பார்த்டே பகல்ல கொண்டாடினா ஆகாதா? இந்த ஊர் தான நீங்கலாம்?…” மீண்டும் ஆவுடையப்பனின் ஆவேசமான பேச்சு.
“எஸ் ஸார்…” என்றார்கள் மொத்தமாக.
“இங்க சேஃப் இல்லைன்னு ரெண்டு நாளா வார்னிங் குடுத்திருக்காங்க. அது கூடவா தெரியாது? இந்த இருட்டுல அலை இழுத்துட்டு போனா கூட காப்பாத்த யாருமில்லை. நிதானமா இருந்தாலே தப்பிக்க முடியாது. இதுல குடிச்சிட்டு…” என அவன் பேசி முடிக்கும் முன்,
“இங்க யாரும் குடிக்கலை. இவனுங்களை ப்ராங்க் பண்ண அந்த பாட்டில்ல சாஃப்ட் ட்ரிங்க்ஸ் தான் ஊத்திட்டு வந்தோம். ஏமாத்திட்டோம்ன்னு சும்மா கலாட்டா பண்ணிட்டிருந்தானுங்க. வேற ஒண்ணுமில்லை. வேணும்னா அந்த பாட்டிலை எடுத்து பாருங்க…” என்றவள்,
“அதோட தனியா ஒன்னும் வரலை. எங்க பேரன்ட்ஸ் எல்லாம் இங்க பக்கத்துல தான் வெய்ட் பன்றாங்க. வார்த்தைகளை விடாதீங்க…” என முடித்தாள்.
“ப்ச், ப்ரூ…” தோழி அபிநயா அவளின் கையை பிடித்து நிறுத்த,
“காப்பாத்தனும்ன்ற நினைப்போட வந்ததுக்கு தேங்க்ஸ்…” என பிரனித்தா சொல்ல,
“உன் பேர் என்ன?…” என்று கேட்டான் அவனறியாத உந்துதலில் ஆவுடையப்பன்.
“நாங்க போய்க்கறோம். நீங்க பத்திரம் ஸார். வெளியூர்ன்னு சொன்னீங்க. கடல் ரொம்ப கோவமா இருக்கு…” நக்கலடித்தவளை அழுத்தமாக அவன் பார்க்க அபிநயா தான் அவனை ஓரளவு அனுமானித்தாள்.
“எங்க பார்த்திருக்க போற? சும்மா இருடி பிசாசே…” என்றவள் ஆவுடையப்பனை பார்த்துவிட்டு தனது மொபைல், பேக் என்று எடுத்துக்கொண்டாள்.
உடன் ஆண் நண்பர்கள் இருவரும் தொடர்ந்து வர அவர்களை முறைத்தாள் பிரனித்தா.
“நீங்க எங்கடா வரீங்க? ஒழுங்கா இதை எல்லாம் கிளீன் பண்ணிட்டு கேக்கை எடுத்துக்கிட்டு வாங்க. பர்த்டே வேற இவனுங்களுக்கு…” என கோபத்தை அவர்களிடம் காண்பிக்க,
“ப்ரூ…” என்று அபிநயா அடக்க முயன்றாள்.
“அம்மா அப்பவே சொன்னாங்க. நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லி சர்ப்ரைஸ் குடு. இப்ப வேண்டாம்ன்னு. கேட்டேனா நான்? உன்னால எல்லாம்….” என புலம்பிக்கொண்டே நடக்க மெல்லிய தூறல் வலுக்க துவங்க முன்னே நடந்தவள் நனைந்தபடி தோழர்களை திரும்பி பார்த்தாள்.
என்ன செய்கிறார்கள் என பார்க்க திரும்பியவள் பார்த்ததென்னவோ இன்னும் தன்னை கவனித்துக்கொண்டு நின்ற ஆவுடையப்பனை தான்.
உயிரை ஊடுருவும் பார்வை. தெரிந்து பார்த்தானா, இல்லையா என அவனுக்கே தெரியாமல் மாயையில் இருக்க அவன் பார்வையை கண்டுகொண்டவள் திடுக்கிட்டு நின்று நன்றாக திரும்பி பார்த்தாள். அதை கண்டு,
“போ…” என இதழசைத்து தலையாட்டி அவளிடம் சொல்ல இன்னும் அழுத்தமாய் நின்று பார்த்தவளை கண்டு புன்னகை உதித்தது அக்கணம்.
“மோகினி தான் நீ…” தலையில் ஈரம் சொட்ட நனைந்தும் நனையாத உடையுடன் தன்னை முறைத்து பார்த்தவளை பார்த்துக்கொண்டே தான் இருந்தான் அவனும் அகலாமல்.