“ஹேய் ஞாபகம் வந்திருச்சு…” என அபிநயா குதிக்க திரும்பி முறைத்தாள் பிரனித்தா.
“ப்பா நீங்க காரை எடுங்க…” என மனோகரனை அனுப்பிய அபிநயா பிரனித்தாவிடம்,
“முறைக்காதடி இவர் தமிழ்நாடு ஃபினான்ஸ் மினிஸ்டர் ஆவுடையப்பன்…” என்று கண்டுபிடித்துவிட்ட பெருமிதத்தில் சொல்ல,
“உனக்கு இந்த ஊர் அரசியல்வாதிங்களையே உருப்படியா தெரியாது. இதுல தமிழ்நாட்டு மினிஸ்டர். அதுவும் அர்த்தராத்திரில, பீச்ல ஒத்தையில….” பிரனித்தா நம்பவே இல்லை.
காரில் ஏறி அமர்ந்ததும் அபிநயாவும் அவளுடனே அமர்ந்துகொண்டாள். அன்று அவளோடு பிரனித்தா இல்லத்தில் தங்குவதாக இருந்தது.
நடந்ததை சொல்லிவிட்டு அபிநயா தனது மொபைலை வேக வேகமாய் ஆவுடையப்பன் பற்றிய விவரங்களை தேடி எடுக்க தந்தை, மகள் இருவருக்கும் ஆச்சர்யம்.
“நிஜமாவே நம்ப முடியலை…” பிரனித்தா சொல்ல,
“அவர்கிட்ட போய் வாயாடியிருக்க நீ? என்ன நினைப்பார் நம்மளை?…” அபிநயா சொல்லவும் சுர்ரென்றது பிரனித்தாவிற்கு.
“அவர் என்ன நினைச்சா எனக்கென்ன? யார் அவர் எனக்கு? சும்மா இதுக்கெல்லாம் உக்கார்ந்து யோசிச்சு பேசனுமா?…” படபடவென அபிநயாவை தாளிக்க,
“ப்ச் பிரனிக்குட்டி, அப்படி சொல்ல கூடாதும்மா. கொஞ்சம் நிதானமா பேசு. நீங்க எல்லாம் எங்களோட தான் இங்க வந்தீங்கன்னு அவருக்கும் தெரியாதுல. பேரன்ட்ஸ் நாலேஜ் இல்லாம கேர்லஸா இருப்பீங்களோன்னு ஒரு நல்ல எண்ணத்துல வார்ன் பண்ணிருக்கார். நல்லதை சொன்னா கேட்டுக்கனும்…”
மனோகரன் அவர் கோணத்தில் அதனை எடுத்து சொல்ல புரிந்துகொண்டவள் அமைதியாகி,
“ஹ்ம்ம்…” என்று முணங்கினாள்.
அதன் பின் அபிநயாவின் துள்ளல் தான் அதிகமாக இருந்தது. ‘ஒரு மினிஸ்டரை பார்த்து பேசிருக்கோம்’ என சொல்லி சொல்லி மாய்ந்து போனாள்.
முதல் சந்திப்பு இப்படியாக இருக்க அவன் யாராக இருந்தால் என்ன? பேசி முடித்த பின்னர் அதனை நினைக்காதிருந்தாலும் அபிநயா எப்படியாவது ஞாபகப்படுத்திவிடுவாள்.
“அட பைத்தியமே?…” என அடிக்காத குறையாக தான் இருவருக்கும் சண்டைகள் தொடரும்.
இனி அவனை பார்க்க போவதில்லை என நினைத்திருந்தவளுக்கு இரண்டாம் முறை சந்திப்போ இன்னொரு அர்ச்சனையுடன் தான் ஆரம்பித்தது.
சென்னையில் சிங்காரத்தின் மகளின் திருமணத்திற்கென வந்திருக்க அங்கே தன்னுடன் படித்த தோழிகளுடன் வெளியே கிளம்பிவிட்டாள்.
“வந்த இடத்துல இந்த நேரம் கிளம்பினா உதை வாங்குவ நீ. ஒழுங்கா இரு…” என வாசுகி சத்தம் போட,
“இங்க இருந்து என்னம்மா பண்ண? சங்கீத்னு டான்ஸ் பன்றாங்க. எனக்கு இவங்க ஹை சொஸைட்டி எல்லாம் செட்டாகாது. சொந்தம்ன்னு கல்யாணத்துக்கு வந்தோம். நீங்க அத்தைக்கு துணையா இருங்க. நான் ப்ரெண்ட்ஸ் கூட போய்ட்டு நைட் வந்திருவேன்…”
தாயை கெஞ்சி, கொஞ்சி தாஜா செய்து கிளம்பிவிட்டாள் பிரனித்தா. உடன் அவளின் சொந்தக்கார பெண் அவள் வயதில் இருக்க அவளுடன் கிளம்பிவிட்டாள்.
வந்ததில் இருந்தே எப்போதடா அங்கிருந்து தப்பிப்போம் என்பதை போலிருந்தது இருவருக்கும் அந்த டாம்பீகத்தில்.
பத்ரியின் திருமணத்தில் கூட பரிட்சை நேரம் என முதல் நாள் வந்திறங்கி இருக்க இப்போதோ மூன்று நாட்களுக்கு முன்பே வந்தது எரிச்சலாக இருந்தது.
வீட்டில் சொல்லிவிட்டு வெளியேறி இருக்க இரவு எட்டுமணி வரை அத்தனை சுற்றிவிட்டு வீடு திரும்பும் நேரம் தோழிகள் அனைவரும் விடவில்லை.
“இன்னைக்கு ஒரு நாள். இன்னும் கொஞ்ச நேரம் இரு ப்ரூ…” என்று பேசி, விளையாடி என நேரம் போனதே தெரியாமல் அவளிருக்க மனோகரிடமிருந்து அழைப்பு.
“மணி பத்தாகிடுச்சு. இன்னும் வரலை நீங்க ரெண்டுபேரும். எங்கம்மா இருக்க? வீட்டுக்கு வாங்க…” என அதட்டிவிட்டார் மகளை.
வந்திருப்பவர்கள் சிங்காரத்திற்கு மட்டுமா உறவுகள், தங்களின் சொந்தங்களும் தங்களை தேடும் சொந்தங்களும் வந்திருக்க வந்தவர்கள் அனைவரும் கேட்டது என்னவோ பிரனித்தாவை தான்.
வாசுகியை பிடித்து சத்தம் போட்டார் மனோகரன். ஏன் பெண்ணை அனுப்பினாய் என.
இப்போது இவ்வளவு நேரமாகியும் வராமல் போக கோபம் பொங்கியது. கேட்பவர்களுக்கு பதில் சொல்லமுடியாமல் திணறி போனார்.
இன்னும் இரு நாளில் திருமணம் சிங்காரத்தின் மகளுக்கு. மணிமேகலை, பத்ரியின் வற்புறுத்துதலில் இத்தனை முன்பே வந்தது.
சிங்காரத்தின் வட்டத்தில் இருப்பவர்கள் வந்துவிட்டால் தங்களை கவனிக்க போவதில்லை.
ஆனால் மணிமேகலை வந்துதான் தீரவேண்டும் என்றிருக்க மறுக்காமல் வந்திருக்க இப்படி மகள் கிளம்பி இருந்ததில் அத்தனை டென்ஷன்.
“ஸாரிப்பா, டைம் போனதே தெரியலை. வந்திடறேன். ப்ரென்ட் வீட்டுல தான் இருக்கோம் நாங்க….” என்றவள் குரலை தழைத்துக்கொண்டு சொல்லவும் மனோகரனுக்கு என்னவோபோலானது.
“ஒன்னுமில்லடா. இங்க எல்லாரும் உன்னையே கேட்காங்க. கூட அந்த பொண்ணையும் கூட்டிட்டு போயிருக்க. அதான். சரி நீ வா. பேசிப்போம்…” என்று சொல்லிவிட்டு மகள் எங்கே இருக்கிறாள் என்பதையும் கேட்டுவிட்டு வைத்துவிட்டார்.
“அதெல்லாம் வேண்டாம். இப்ப ஸ்கூட்டியை மட்டும் எடுத்துக்கறேன். நாளைக்கு வந்து தரேன்…” என சொல்லியும்,
“இல்லை இவ்வளோ தூரம் வந்துட்டு இந்நேரம் தனியா போகாத நீ…” என தோழி உடன் வர மற்றவர்களும் கிளம்ப தோழியின் அண்ணனும் தனது பைக்கை எடுத்துக்கொண்டான்.
“வா நானும் பின்னாடி வரேன். திரும்ப ஸ்கூட்டியை எடுத்துட்டு வரலாம்…” என்றதும் இரு வண்டியில் கிளம்பிவிட்டார்கள்.
கிளம்பும் பொழுதே பிரனித்தா மனோகரனுக்கு அழைத்து சொல்லிவிட பார்த்து வரும்படி சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
நெரிசலான சாலையை விட்டுவிட்டு சற்று நகர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைய அடுத்து மெயின்ரோட் வந்து திரும்பும் வீதியில் ஒன்வே போர்ட்.
“ப்ரூ ஒன்வே டி…” பின்னால் அண்ணனின் வாகனத்தில் வந்த தோழி கத்த,
“அன் டைம்ல யார் இதையெல்லாம் பார்க்க போறா? சீக்கிரம் போயிடலாம்…” என சொல்லி ஸ்கூட்டியை செலுத்த அந்த திருப்பத்தில் கார்கள் எதிரே சட்டென வர யோசிக்கவே இல்லை.
தடுமாறி வண்டியை கீழே போட்ட பிரனித்தா முட்டியை ஊன்றி விழுந்து எழுந்தாள்.
நிமிர்ந்து பார்த்தவளுக்கு மூச்சே நின்றது. முன் நின்ற காரில் பாதுகாவலர்கள் இறங்கி நிற்க பின்னால் ஆவுடையப்பன் வந்துகொண்டிருந்தான் வேகமாய்.
பார்த்ததும் அவனும் தன்னை கண்டுகொண்டதை புரிந்துகொண்டவள் அவன் முன்னே விழுந்துக்கிடந்ததில் அசிங்கமாக இருந்தது.
“வாட் ஹேப்பண்ட்?…” என அவன் கேட்க பின்னால் வந்தவர்கள் பிரனித்தாவை தூக்கி நிறுத்தினார்கள்.
“இந்த நேரத்துல இங்க என்ன பன்ற? அதுவும் ஒன்வேல…” ஆவுடையப்பன் முறைக்க,
“ஸாரி ஸார். என் வீட்டுக்கு தான் வந்திருந்தாங்க. திரும்ப அவங்க கிளம்பவும் கூட ட்ராப் பண்ண நாங்க வந்தோம்…” என தோழி விவரத்தை சொல்ல பல்லை கடித்தான் ஆவுடையப்பன்.
“எங்க போறீங்க?…” என்றதும் சிங்காரத்தின் விலாசத்தை பிரனித்தா சொல்ல அவன் புருவம் சுருங்கியது.
“அவர் உனக்கு ரிலேட்டிவா?…” என்ற கேள்விக்கு தலையசைத்தாள்.