பெருமூச்செறிந்தவன் பிரனித்தாவின் தோழிக்கும் அவள் அண்ணனுக்கும் தான் அனுப்புவதாய் சொல்லி அவர்களை கிளம்ப சொல்லிவிட்டு தன் காரில் ஏற சொன்னான் பிரனித்தாவையும், அவள் உறவுக்கார பெண்ணையும்.
“ம்ஹூம், அதெல்லாம் வேண்டாம். வேண்டாம்..” என மிரண்டு பிரனித்தா மறுக்க அவளின் தோழிக்கு விட்டு செல்ல மனமில்லை.
காவலர்கள் சூழ அவன் நின்றிருந்த விதமுமோ என்னவோ அவனுடன் செல்லவே வேண்டாம் என பிரனித்தா மனது அறிவுறுத்தியது.
“மேம் கார்ல ஏறுங்க. இல்லன்னா கேஸாகிடும்…” ஆவுடையப்பன் பின்னே நின்ற பாதுகாவலன் ஒருவன் எச்சரிக்கையாய் சொல்லவும்,
“ப்ரூ வாடி…” என உடனிருந்த பெண் அவர்கள் காட்டிய காரில் ஏறிக்கொண்டாள்.
கனவு போலிருந்தது பிரனித்தா தோழிக்கு. எப்படி இத்தனை சர்வ சாதாரணமாக அமைச்சரான அவன் தன்னுடன் வரும்படி பிரனித்தாவை அழைத்திருப்பான் என யோசித்துக்கொண்டே இருக்க,
“இன்னும் என்ன? கிளம்புங்க…” என அதட்டல் போட்டுவிட்டு பிரனித்தாவை பார்க்க பொம்மை போல காரில் ஏறி அமர்ந்தாள்.
“பின்னாடி உட்காரும்மா…” என்ற ஆவுடையப்பன் மறுபக்கம் ஏறிக்கொள்ள அங்கிருந்தவர்கள் அனைவருக்கு மனதில் எழுந்த வியப்பை விவரிக்க முடியவில்லை.
பல்லை கடித்தபடி அவன் கட்டளைக்கு அவளும் செல்ல பின்னே அமர்ந்ததும் விலாசத்தை சொல்லிவிட்டு முதலுதவி பெட்டியை வாங்கினான்.
“எப்பவும் நீ இப்படித்தானா?…” என கேட்டுக்கொண்டே அவளிடம் ஆவுடையப்பன் தர,
“புரியலை….” என்றாள் அதனை வாங்காமல்.
“கைல நல்லா சிராய்ச்சிருக்கு. மருந்து போடு. வேற எங்கயும் அடி பட்டிருக்கா?…” என கேட்டவனை பார்த்து இல்லை என தலையசைத்து பதில் சொல்ல காயத்திலிருந்து குருதி லேசாய் சொட்டுவதை போலிருந்தது.
“மருந்து போடும்மா…” என்று அவன் அழுத்தி சொல்ல,
“இங்கருந்து வீடு பக்கம் தான். போய் போட்டுக்கறேன். இருக்கட்டும்…” என பிடிவாதமாக மறுக்க,
வெடுக்கென அவனிடமிருந்து வாங்கியவள் பஞ்சை மட்டும் எடுத்து அதன் மேல் வைத்துக்கொண்டாள்.
“உங்க கார்ல என் ப்ளட் படாது. இப்படின்னா நீங்க எங்களை ட்ராப் பன்றோம்ன்னு சொல்லியிருக்கவே கூடாது. நாங்க கேட்டோமா வரோம்ன்னு…” என அவனை போலவே அவளும் மெல்லிய குரலில் சொல்ல முகத்தை திருப்பிக்கொண்டான்.
சிங்காரத்தின் வீடு வரும்வரை அதன் பின்னர் அவளிடம் பேசவில்லை. விசும்பும் சப்தம் மட்டும் அவனின் காதில் விழுந்தது.
“ரொம்ப வலிக்குதா ப்ரூ…” அவளின் உறவு பெண் கேட்க,
“ஹ்ம்ம்…” என்றாள் பிரனித்தா.
அந்த பங்களாவின் வாசலில் காரை நிறுத்தவும் வேகமாய் இறங்க போக ஆவுடையப்பன் கண் அசைவில் அவனின் பாதுகாவலரில் ஒருவர் வந்தார்.
“இவங்க பேரன்ட்ஸ்கிட்ட சொல்லி விட்டுட்டு வாங்க…” என்று அவன் சொல்ல நன்றி சொல்ல திரும்பிய பிரனித்தா,
“வேண்டாம், வேண்டாம். நான் எதாச்சும் சமாளிச்சுப்பேன். நீங்க கிளம்புங்க…” என அவசரமாக சொல்ல சிரிப்பு தான் வந்தது ஆவுடையப்பனுக்கு.
“ம்ஹூம், இவ்வளோ தூரம் கூட்டிட்டு வந்திருக்கேன். சொல்லாம போறது தப்பு…” என்றவன்,
“நீங்க போய் சொல்லுங்க…” என்றான் அதிகாரமாக.
“இதுக்கு பேர் உதவி இல்லை. உங்களுக்கு தேங்க்ஸ் கூட சொல்லமாட்டேன்…” என உறுமிவிட்டு கோபமாய் அவள் செல்வதை பார்த்தவன் கண்களும் சிரித்தது.
பார்வை மெல்ல அந்த வீட்டில் உயர அந்த புன்னகை அப்படியே அடங்கி போனது சிங்காரத்தின் நினைவில்.
‘ம்ஹூம், இது சரிப்படாது. மூவ் ஆன்’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் கார் கண்ணாடியை யாரோ தட்டும் சத்தத்தில் திரும்ப அங்கே சிங்காரம்.
அடுத்த எச்சரிக்கை மணி உள்ளே ஒலிக்க அப்படியே கிளம்பியிருக்க வேண்டுமோ என தன்னை நொந்துகொண்டு கீழே இறங்கினான்.
“நான் எதிர்பார்க்கவே இல்லை தம்பி நீங்க வருவீங்கன்னு. அவசியம் உள்ள வரனும் நீங்க…” என குழைந்து நெளிந்துகொண்டு சிங்காரம் சொல்ல,
“வரவேண்டிய நேரத்துல வந்துட்டா போச்சு. ஆனா இப்ப நேரமில்லை. நான் கிளம்பறேன். இந்த நேரத்துல உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம்…” என ஆவுடையப்பன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே பிரனித்தாவை விட சென்றவன் வந்துவிட்டான்.
“உங்க வீட்டு பொண்ணுன்னு முதல்ல தெரியலை. வழில ஒரு ஆக்ஸிடன்ட். அதான் ட்ராப் பண்ணிட்டு போகலாம்ன்னு வந்தேன். கிளம்பறேன்…” என கத்தரித்ததை போல பேச,
“ரொம்ப சந்தோஷம் தம்பி, அப்படியே என் பொண்ணு கல்யாணத்துக்கும் நீங்க மறுக்காம வந்தீங்கன்னா கண்டிப்பா சந்தோஷப்படுவேன்…” என சிங்காரம் சொல்ல,
“ஹ்ம்ம், பார்க்கலாம்…” என்று காரில் ஏறிக்கொண்டான் ஆவுடையப்பன்.
கார் கிளம்பவும் சிங்காரத்தின் மூளை குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. அவர் நினைத்தது சரி என்றால் நிச்சயம் ஆவுடையப்பன் திருமணத்திற்கு வருவான். பிறகு பார்க்கலாம் என்றிருக்க அவன் வந்தும் விட்டான்.
அரசியல் ஆடுகளத்தில் அங்கே பிரனித்தாவை நடுநாயகமாக நிற்க வைக்க தயாராகிவிட்ட நாள் அது.
சிக்கலிலிருந்து தப்பிக்க சிறு துரும்பை தேடிக்கொண்டிருந்த சிங்காரத்திற்கு பூட்டின் சாவியாக பிரனித்தா கிடைத்துவிட்டாள் திருமண வீட்டில் ஆவுடையப்பனை கவனித்ததில்.
வந்திருந்தவன் இருந்ததோ பத்து நிமிடங்கள் தான். அந்த பத்து நிமிடமும் கவனமாக திருமணத்தில் இருப்பதை போல அவன் நினைத்திருக்க இல்லை.
திருமணம் முடிந்ததும் சொல்லிகொண்டு வெளியே வந்த நேரம் பிரனித்தாவை பார்த்துவிட்டான்.
“இப்ப உனக்கு கை பரவாயில்லையா?…” என்ற கேள்வியில் அவள் கையை மட்டும் காட்ட,
அவள் எதுவும் பேசவில்லை. அத்தனை கோபம் அவன் மீது. இப்படி கோர்த்துவிட்டு போய்விட்டானே என.
மனோகரன் எங்கேயும் மகளை விடவில்லை. அதிலும் விழுந்து அடிபட்டு வந்திருக்க அத்தனை திட்டு.
‘ஒன்வேல போக கூடாதுன்னு தெரியாதா? இப்படியே விழுந்து வைப்ப? கல்யாணத்துக்கு வந்தா அதை மட்டும் தான் பார்க்கனும். அதை விட்டுட்டு’ என வாசுகியும், மனோகரனும் மகளை வாட்டி எடுத்துவிட்டனர்.
இப்படி சந்தித்த பொழுதுகள் எல்லாம் இலகுவாக இல்லை என்றாலும், இனிக்கும்படியும் இல்லை.
முதலிலாவது மனதிற்குள் அவள் மீதான விருப்பம் இருந்ததென்னவோ உண்மை. ஆனால் சிங்காரத்தின் தலையீடு என்றதும் மறுத்துவிட்டான்.
“சொன்னா புரிஞ்சுக்கோங்க சித்தப்பா. ஆதாயமில்லாம அந்தாள் ஆத்துல இறங்கமாட்டார். அதோட அந்த பொண்ணை பத்தி தெரியாது உங்களுக்கு. எனக்கு பிடிச்சா போதுமா? ஒத்துவருதா இல்லையான்னு யோசிக்கனும்ல…”
அவனின் மறுப்பு அசோகனின் பிடிவாதத்தில் எடுபடவில்லை. ஆசைகொண்ட மனம் ஒருபுறம் அவனை இழுத்தது தான் உண்மை.
மனதின் விருப்பம் இந்த விஷயத்தில் மிக பிடிவாதமாய் இருந்தது. எதுவும் தெரியாது அவளை பற்றி.
ஆனால் அறிந்துகொண்டான். மனதிற்குள் அத்தனை தயக்கம். தன்னுடன் பொருந்திவிடுவாளா? அவளால் முடியுமா? வாழ்க்கை முறை இருவருக்கும் வேறு.
ஆனால் நினைத்ததெல்லாம் எங்கே நடந்தது. மனதின் இழுப்பின் வேகத்தில் அவளை தன் வாழ்க்கைக்குள் கொண்டுவந்துவிட்டான்.
அவளின் சூட்டிகையும், படபட பேச்சும், விளையாட்டுத்தனமும் தெரிந்து தானே திருமணத்திற்கு சரி என்றோம் என தன்னை தானே நிந்தித்தபடி அமர்ந்திருக்க கதவு தட்டப்பட்டது.
“எஸ்…” என சொல்லியவன் புருஷோத்தமன் என அசட்டையாக நினைத்திருக்க உள்ளே நுழைந்தது பிரனித்தா.
அங்கிருந்து சென்ற பொழுது கலங்கி சிவந்திருந்த விழிகளில் இப்போது எந்த பாவனையும் இல்லை.
அவனருகே வரும் வரை அவளையே பார்த்திருக்க நெருங்கி வந்து நின்றவள் மெலிதாய் புன்னகைத்தாள்.
“இங்கயே உக்கார்ந்துட்டீங்க? உங்களை மாமா கூப்பிடறாங்க…” என்றதும் தலையசைத்தவன் அவள் முகத்தையே ஆராய்ந்தான்.
“இன்னும் கொஞ்சம் நேரத்துல அத்தை, பத்ரி அண்ணா எல்லாரும் வராங்களாம். நீங்க வாங்க…” என்று மீண்டும் அவள் சொல்ல,
“இங்க வா…” என்று அவள் கையை பிடித்து அருகே அழைக்க அசையாமல் நின்றாள்.
“ப்ச், மோகினி. நான் பேசினதை மனசுல வச்சுக்காதன்னு சொல்லமாட்டேன். கண்டிப்பா ஞாபகம் வச்சுக்கோ. ஆனா தனியா நாம மட்டும் இருக்கும் போது இப்படி இருக்க கூடாது…” என வலியுறுத்த தலையசைத்தாள் அவள்.
அதுவுமே வலித்தது. ‘இவள் என்ன பொம்மையா தான் சொல்லியபடி இருக்க?’ என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டான்.
“கூப்பிடறாங்க. வாங்க…”
“வரேன். போவோம். இரு…” என சொல்லி அவளை நெருங்க பின்னே நகர்ந்தாள். அதில் ஆவுடையப்பன் முகம் விழுந்துவிட,
“இந்த ரூம்ல கேமரா இருக்கும் தானே?…” என பிரனித்தா சொல்லவும் தான் தெளிந்தான்.
“ஹ்ம்ம், இருக்கு…” என நிம்மதியாக கூறியவன்,
“அப்பறம் சொல்ல மறந்துட்டேன். இன்னைக்கு நாம சி.எம்மை மீட் பன்றதா இருக்கும். உன்னோட தான் போகனும். ரெடியாகிக்கோ. டைம் என்னன்னு சொல்றேன்…” என்று சொல்ல திகைப்பாய் பார்த்தாள்.
“என்ன?…”
“ம்ஹூம், ஒண்ணுமில்லை…” பேச வந்ததை பேசாமல் அவள் விழுங்கிக்கொண்ட தருணம் அவளை தான் எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் என புரிந்தது.
“சரியாகிடும். இன்னும் ஒரு பத்திருபது நாள். சரியாகிடும்…” என்றவன் அவள் கை விரல்களை பற்றிக்கொள்ள ஒற்றை விரலால் அவன் விரலோடு கோர்த்துக்கொண்டாள் பிரனித்தா.