அதற்குமேல் அங்கே அறையிலேயே இருக்க முடியாது. காலை உணவிற்கு நேரமும் நெருங்கியிருந்தது.
“வா போகலாம்…” என ஆவுடையப்பன் சொல்லவும் தலையசைத்து முன்னே நடக்க இருவருமாக அசோகனின் அறைக்கு வந்தனர்.
அவளிடத்தில் இந்த மாற்றம் கூட ஆவுடையப்பனை பாதித்தது. அவளிடம் எதில் லயித்து, பிடித்து, விரும்பி மணந்தானோ அதனை தானே உடைக்க ஆரம்பித்துவிட்டதில் உள்ளுக்குள் தவித்து போயிருந்தான்.
மனது நிலைகொள்ளாது அவள் முகத்தை பார்ப்பதும், அங்கிருந்தவர்களிடம் ஏதோ பேசுவதுமாக இருக்க அசோகன் அவனின் தடுமாற்றத்தை கவனித்தார்.
வாசுகியும், மனோகரனும் இருக்க அவர்களை வைத்துக்கொண்டு கேட்க முடியாமல் அசோகனும் அனைவரின் முகத்தை பார்ப்பதும், மகனை பார்ப்பதுமாக இருந்தார்.
“சரிங்க, நீங்க பேசிட்டு இருங்க. வந்திடறோம்…” வாசுகி அதனை புரிந்துகொண்டு சொல்ல,
“இல்ல இரும்மா…” என்றார் அசோகன்.
“இருக்கட்டும் அண்ணே. நேத்து பொண்ணோட பேசவே முடியலை. அவங்களாம் வேற வராங்க. இவ சும்மாருக்க மாட்டா. சொல்லி வைக்கனும்…” என்ற வாசுகி,
“பிரனிம்மா வா…” என்று மகளை அழைத்தார்.
“ம்மா, நான் இப்பத்தான் வந்தேன், மாமாவோட பேசிட்டு…” பிரனித்தா மறுக்கும் முன்,
“அவங்க பேசிட்டு வரட்டும். வா முதல்ல…” என மகளின் கையை பிடித்துக்கொண்டார்.
பிரனித்தா ஆவுடையப்பனின் முகம் பார்க்க அவன் ‘இரு’ என்றும் சொல்லவில்லை. ‘போ’ என்றும் சொல்லவில்லை.
என்னவோ தன் பதிலுக்கு எதிர்பார்த்து தான் என்ன சொல்வேனோ என வேண்டுமென்றே உத்தரவிற்கு நிற்பதை போலிருந்தது பிரனித்தா செய்தது.
வேண்டுமென்று தான் நின்றாள். ‘நீ சொல், போகவா வேண்டாமா?’ என்னும் பார்வையை அவனுக்கு தந்திருக்க சுத்தமாய் நொந்து போனான்.
தான் சொல்லியது என்ன? இவள் புரிந்துகொண்டது என்ன என ஒருபக்கம் கோபம் பொங்கினாலும் அவளுக்காக தான் யோசித்தது அவன் மனதும்.
“விஷயம் இதுதானா?…” என மகனை பார்க்க அவனும் தலையசைத்தான்.
“நீ அம்மாப்பா கூட பேசிட்டு இரும்மா. ராஜா இப்ப வந்திருவான். வரவும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுங்க…” என்றார் அசோகன்.
“சரிங்க மாமா…” என்றவள்,
“அம்மா ரூம்ல இருக்கேன்…” என தகவலும் சொல்லிவிட்டு செல்ல தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் ஆவுடையப்பன்.
அவர்கள் செல்லும் வரை அமைதியாக அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த அசோகன் கதவு சாற்றப்படவும் வெடித்து சிரித்துவிட்டார்.
“சித்தப்பா சிரிக்காதீங்க…” என கடுப்போடு அவன் சொல்ல,
“நீ என்ன பண்ணின? அதை சொல்லு முதல்ல…” கேலியாய் வினவினார் மகனிடம்.
சற்றுமுன் பிரனித்தாவை சத்தம் போட்டதை சொல்லியவன் தன்னை அவளாக அழைக்க வந்த பொழுதில் இருந்ததற்கும், இப்போது செய்ததையும் சொல்ல இன்னுமே சிரித்தார்.
“பொண்ணு உள்ள வரவுமே முகம் வாடி போய் தான் இருந்தா. கேட்டதுக்கு என்னவோ பதில் சொல்லிட்டிருந்தாலும் பார்வை எல்லாம் வாசல் பக்கம். நீ வருவியா இல்லையான்னு பார்த்திருக்கும் போல? கொஞ்ச நேரத்துல உன்னை கூட்டிட்டு வரேன்னு கிளம்பிருச்சு…”
“ஹ்ம்ம், புரிஞ்சது சித்தப்பா. ஆனா இப்ப என்னவோ நான் கீ குடுத்து அவளை ஆட்டி வைக்கிற மாதிரி பர்மிஷன் கேட்டு நிக்கிறதை பாருங்க. இதுக்கு தான் வேண்டாம்ன்னு சொன்னேன். உங்களால…”
“அதுக்கு கல்யாணம் முடிஞ்ச பின்னாடியும் புலம்புவியா ராஜா நீ?…” என கண்டிப்புடன் சொல்லியவர்,
“அந்த பொண்ணுக்கு இதெல்லாம் புதுசு. போதாததுக்கு கல்யாணம் வேற கிட்டத்தட்ட மிரட்டி செஞ்சிருக்க…”
“சரி, அவங்க சரின்னு சொல்லலைன்னா என்ன பண்ணிருப்ப நீ?…” என்று கேட்டதற்கு அசட்டையாக பார்வையை திருப்பிக்கொண்டான்.
“இதுதான், இதை தான் சொல்றேன். எப்படியும் நீ நடத்திருப்ப. இல்லைன்னா உனக்கு தாலி அங்க என்ன ரெடிமேடா கிடைக்குதாக்கும்?…” என்றதும் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.
“விஷயத்தை கேள்விப்பட்டு இங்க இருந்து நீ கிளம்பும் போதே எடுத்த முடிவு தானே இது. என்கிட்டே மறைக்க நினைக்காத…”
“இப்ப என்ன? நான் இல்லைன்னு சொன்னேனா? ஆமா கிளம்பும் போதே மாங்கல்யத்தோட தான் போனேன். ஏன்னா இதுதான் நடக்கும்ன்னு எனக்கு தெரியும்…”
“உனக்கு தெரியும், அவங்களுக்கு. அவங்க பாவம்டா…”
“நான் என்ன கடிச்சா முழுங்கிட்டேன். சித்தப்பா என்ன இது? விட்டா நீங்களே அவளை திருப்பி அனுப்பி வச்சிருவீங்க…” என்று தலையை கோதியபடி அவன் கூற,
“அனுப்பவா உன்னை வளைச்சு இந்த கல்யாணத்துக்கு நாள் குறிச்சேன்? உனக்கு பிடிச்சதை நான் மறுக்கமாட்டேன் ராஜா. ஆனா அதே நேரம் அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் டைம் வேணும். நீ தான்…”
“எக்கச்சக்க பொறுமையில தான் இருக்கேன். அதெல்லாம் உங்களுக்கு புரியாது…” என எழுந்துகொண்டான்.
“சிங்காரமும் வரார் போல…” என அசோகனிடம் சொல்ல,
“ஏன்? வேண்டாம்ன்னு சொல்லவேண்டியது தானே?…”
“ம்ஹூம், வரனும் சித்தப்பா. அப்பத்தான் அவர் கோபம் இன்னும் பெருசாகும். எனக்கு அதுதான் வேணும். என்கிட்டே வாலாட்டினா என்னாகும்ன்னு…”
“ராஜா…”
“வேற என்ன வேணும்னாலும் பண்ணிருந்திருக்கட்டும். பிரனித்தா குடும்பத்தை இப்படி கொண்டுவந்து நிறுத்தினதுக்கு அனுபவிக்க வேண்டாமா? நம்பினவங்களை இப்படித்தான் கத்திமுனையில நிப்பாட்டுவாங்களா?…” என்றான் உட்சகட்ட ஆவேசத்தில்.
“ராஜா அமைதியா இரு. இப்ப நீ சாப்பிட போ. அவங்களும் வெய்ட் பண்ணுவாங்க….”
“ஹ்ம்ம்….”
“மறந்திடாத, அமைதியா இருக்க சொல்றது பிரனித்தா விஷயத்திலையும் கூட தான்…”
“ப்ச், நான் பார்த்துப்பேன்…” என்று வெளியே வந்துவிட்டான்.
மனோகரன் குடும்பத்துடன் பக்கத்து அறையில் கதவு திறந்திருக்க பேச்சுக்குரல் வெளியே வரை கேட்டது.
அங்கே வீட்டை துடைத்துகொண்டிருந்தவர்கள் இருவரை பார்த்து பார்வையால் வெளியேற்றியவன் பல்லை கடித்தபடி கதவை தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.
“சாப்பிடலாம். வாங்க…” என அழைக்க,
“வரோம் தம்பி…” என மனோகரன் எழுந்துகொண்டார்.
வாசுகியும், பிரனித்தாவும் நின்றுகொண்டு இருக்க கைகளை கட்டியபடி தலையை குனிந்துகொண்டு பிரனித்தா நின்றிருந்தாள்.
தவறு செய்துவிட்டு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்ட பாவனையில் முகமெல்லாம் சிடுசிடுப்போடு அவள் நிற்க அதுவரை இருந்த கனத்த மனநிலை மாறி சிரிப்பு வந்தது ஆவுடையப்பனுக்கு.
“என்னாச்சு?…” என்று கேட்க வாசுகியையும், ஆவுடையப்பனையும் பார்த்தவள்,
“சொல்லனுமா? வேண்டாமா?…” என்றாள் தாயிடம்.
“அடியேய்…” வாசுகி பழக்க தோஷத்தில் சட்டென மகளின் கையை கிள்ளிவிட,
“ம்மா…” என துள்ளி விலகினாள் கையை தேய்த்தபடி.
ஆவுடையப்பனுக்கு அதனை கண்டு ஒன்றும் புரியவில்லை. ஒரு நொடி அவர்கள் மூவரையும் பார்த்தவன்,
“சாப்பிட போகலாம்…” என சொல்லிவிட்டு திரும்பிவிட்டான்.
“பிரனி…” என வாசுகி மேலும் பேசும் முன் மீண்டும் திரும்பியவன்,
“இனிமே ஏதாவது பேசனும்ன்னா கதவை அடைச்சிட்டு பேசுங்க…” என சொல்லிவிட்டு முன்னே நடக்க பிரனித்தாவிற்கு தாயின் முகம் கண்டு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.
“மகா மந்திரியார் எப்புடி?…” என கிண்டாலாக வாசகியின் காதில் சொல்லியவள்,
“இப்ப பேச வேண்டியது தானே? என்னை மட்டும் சொன்னீங்க?…” என்றாள்.
“பிரனிம்மா என்ன இது?…” மனோகரன் சத்தம் போட,
“ஓகே ப்பா. பொறுப்பா இருக்கேன்…” என்றாள் மகள்.
இதனை பார்த்து வாசுகிக்கு தான் கலக்கமாக இருந்தது. மகள் இங்கே எப்படி தன் வாழ்க்கையை வாழ போகிறாளோ என்று.
அப்படி அந்தளவிற்கு விளையாட்டாக நடப்பவளில்லை. பேச்சு தான் அதிகமாக இருக்குமே தவிர்த்து சூழ்நிலையை அனுசரித்து போகும் பெண் தான்.
இருந்தாலும் உதறல் தான். மகளை முறைப்பதா, பாவம் பார்ப்பதா ஒன்றும் தெரியவில்லை அவருக்கு.
“இனிமே இந்த ரூம்க்குள்ள கூட ரகசியமா அதான் பேசனும். வாய்ஸ் எப்பவும் டவுன்ல இருக்கனும். மெதுவா சிரிக்கனும். அரக்கபரக்க நடக்க கூடாது. விளையாடறேன்னு டைனிங் டேபிள் மேல உட்கார கூடாது. வீட்டை சுத்தி ஓட கூடாது. இப்படி இன்னும் எவ்வளோ ரூல்ஸ் இருக்கோ?…”
வாசுகியின் கையை பிடித்துக்கொண்டு கிண்டலாக சொல்லிக்கொண்டே கீழே உணவு மேஜை வரை வர அவருக்கு கண்ணீர் தான் வந்தது.
விளையாட்டு பேச்சு தான். ஆனால் இவை எல்லாம் உண்மை தானே? தங்கள் வீட்டை போல சாதாரண வாழ்க்கை இனி அவளுக்கு சாத்தியமில்லை என வாசுகிக்கு மீண்டும் புரிந்தது.