முதலமைச்சரை சந்தித்துவிட்டு வந்ததில் இருந்து பிரனித்தாவின் முகத்தில் பிரமிப்பு அகலவில்லை.
சாதாரண பிரஜ்ஜை தான். ஆனாலும் அவளுள் எழும் அந்த திகைப்பும், வியப்பும், கணவனுக்கு அங்கே கிடைத்த மரியாதையும் என எல்லாம் அவளை ஒருவித மயக்கத்தில் வைத்திருந்தது.
வீடு வந்ததுமே பத்து நிமிடத்தில் ஆவுடையப்பன் கிளம்பிவிட்டான் கட்சி அலுவலகம் நோக்கி.
வந்ததும் முக்கியமான விவரத்தை பகிர அசோகனின் அறைக்கு அழைத்துவிட்டான் குடும்ப உறவுகளை.
“என்ன ராஜா? என்ன விஷயம்?…” என அசோகன் கேட்க,
“முக்கியமான விஷயம் தான் சித்தப்பா. கல்யாணம் வைக்க டிஸைட் பண்ணின தேதில ரிசப்ஷன் வச்சிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்…”
“என்னப்பா? என்ன சொல்ற?…”
“கல்யாணத்தப்போ என்ன ப்ரோக்ராமோ அதுவே தான் ரிசப்ஷன்க்கு. சி.எம் கிட்ட பேசியாச்சு சித்தப்பா. சீப் கெஸ்ட்டா வருவார்…” என்றான் அவன்.
‘இதனை எப்போது பேசினான்? வரும் வழியில் கூட தன்னிடம் சொல்லவில்லை’ என யோசனையுடன் பிரனித்தா பார்த்துக்கொண்டு நிற்க மனோகரனும், வாசுகியும் திகைத்தார்கள்.
இன்னும் வரும் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லவில்லை. சொந்தங்கள் எல்லாம் செய்தியை பார்த்துவிட்டு மாற்றி மாற்றி இதனை கேட்க அழைக்க எந்த அழைப்பையும் ஏற்கவில்லை.
இப்போது வரவேற்பு என சொல்லவேண்டுமோ என்று புரியாமல் பார்த்துக்கொண்டு நிற்க,
“சரி வருமாப்பா? கல்யாணத்துக்கு பத்திரிக்கை குடுத்துட்டு வரவேற்புன்னு போன்ல சொல்றது….”
“எல்லாம் சரியா இருக்கும் சித்தப்பா. நான் பார்த்துக்கறேன்…” என்றான் ஆவுடையப்பன்.
“ஹ்ம்ம், என்னமோ சொல்ற…” அசோகனுக்கு முழு மனதில்லை.
வாசுகி, மனோகரனும் இந்த முடிவில் திருப்தி இன்றி தான் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
அதுவும் அன்று சிங்காரம் வந்து நடந்த பிரச்சனைக்கு பின்பும் வரவேற்பு ஏற்பாடுகள் பற்றி யோசிக்கவே செய்தனர்.
“வரவேற்புனா சிங்காரத்தை கூப்பிடாம இருக்க முடியாது ராஜா…” அசோகன் சொல்ல ஆவுடையப்பன் பிரனித்தாவை பார்த்தான்.
“என்னப்பா? என்ன பார்க்கற? அவன் இன்னைக்கு பேசிட்டு போனதை பத்தி யோசிக்கிறியா?…”
“இல்ல சித்தப்பா. இப்ப வந்திடறேன்…” என சொல்லி பிரனித்தாவை தனியே அழைத்து வந்தான்.
“நீ என்ன நினைக்கிற? சொல்லேன் கேட்போம்….” என்றதும் அவளுக்கு ஆச்சர்யம்.
“என்கிட்டே எல்லாம் ஒபீனியன் கேட்கறீங்க?…” என்றாள் நினைத்ததை மறைக்காமல்.
“நான் கேட்கமாட்டேன்னு நினைச்சியா நீ?…”
“ஹ்ம்ம், முதல்ல இருந்தே எல்லாமே நீங்க தானே முடிவு பன்றீங்க. இதுவும் அப்படித்தான் இருக்கும்ன்னு நினைச்சேன்…”
“அப்படி ஒரு தாட் உனக்கு குடுத்துட்டேன் போல நான். சூழ்நிலை அப்படி ஆகிடுச்சே…”
“இருக்கலாம். ஆனா நாம சி.எம் பார்க்க போறப்போ கூட இதை பத்தி நீங்க பேசலையா? அதான் அப்படி தோணுச்சு…” என்றதும் மென்னகையுடன் அவளின் விரல்களை பற்றிக்கொண்டான்.
“எனக்கு சடனா அந்த நிமிஷம் தோணினது தான். அவர்கிட்ட கேட்டேன். அவரும் ஓகே சொல்லவும் டிஸைட் பண்ணிட்டேன்…”
“என்னவோ நீங்க மட்டும் தனியா கல்யாணம் செஞ்சுக்கிட்ட மாதிரி இருக்கு எனக்கு…” என்றாள் கிண்டலுடன்.
“ஹ்ம்ம்…” என்று பிடித்திருந்த விரல்களில் அழுத்தம் தந்தவன் அந்த அறையை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு,
“தனியா இருந்தா தனியா தான் தோணும்…” என்றான் மெல்லிய குரலில்.
“இதுக்கு உங்க ரூம்லயே பேசிருக்கலாம். எவ்வளோ ரகசியம் உங்க குரல்ல…” என அடக்கமாட்டாமல் அவன் சொல்லிய விதத்தை எண்ணி அப்படி ஒரு சிரிப்பு பிரனித்தாவிற்கு.
“இப்ப ரூம்ல வச்சு கூட சாவகாசமா பேச நேரமில்லை மோகினி. பேசுவோம்…” என்றவன்,
“வரும் போது சொல்லாததுக்கு ரீசன் இதை எப்படி எக்ஸிக்யூட் பன்றதுன்னு நிறைய யோசிச்சிட்டிருந்தேன். அதனால தான். எப்படியும் என்னோட நீ தானே இருக்க போற?…”
“என்னது?…” என அவள் முறைக்க,
“டைமில்லை. நைட் பேசலாம்…” என்றவன்,
“இன்னும் நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலையே?…” என்றான்.
“என்ன சொல்ல? எனக்கு தெரியலை, நான் யோசிக்கவும் இல்லையே?….”
“இப்ப உனக்கு என்ன தோணுது. அதை மட்டும் சொல்லு. ரெண்டாவது யோசிக்கிறது எல்லாம் அப்பறம் பார்த்துப்போம்…” என்று கேட்க,
“சிங் பத்தி எனக்கு தெரியலை…”
“சிங்?…” கேள்வியாய் அவன் புருவம் சுருக்க,
“அதான் சிங்காரம், சிங். சிங் இன் த ரெயின்…”
“ஹேய் மோகினி, என்ன இது?…” ஆவுடையப்பன் என்றான் திகைத்து.
“அது நான் அப்படித்தான் சொல்லுவேன் அவரை. அப்படியே வந்திருச்சு…” என சிரித்தபடி பிரனித்தா சொல்ல,
“ஹ்ம்ம், ஆஸ்ட்ரிச் பத்தி சொல்லும் போதே இதெல்லாம் சாதாரணம்ன்னு நான் கெஸ் பண்ணிருக்கனும்…” என்றவன்,
“நிக் நேம் அவருக்கு மட்டும் தானா? இல்ல அவங்க ஃபேமிலிக்கேவா?…” என கேட்கவும் அவள் திருதிருத்தாள்.
“பட்டப்பேர் வைக்கிறது எல்லாம். ஹ்ம்ம். ஓகே லீவ் இட். இதையும் அப்பறம் பேசுவோம். இப்ப சொல்லு…” என தனது வாட்சை பார்த்துவிட்டு மொபைலை கையில் எடுத்தான்.
ஏதோ அழைப்பு வந்துகொண்டிருந்தது அவனுக்கு. அதனை சைலன்ட்டில் போட்டவன்,
“பிரனித்தா எனக்கு டைமில்லைம்மா, உடனே சொல்லு….” என சொல்ல,
“இல்ல மேகலா அத்தை, பத்ரிண்ணா, நேகாக்கா எல்லாம் வந்தா எனக்கு சந்தோஷமா இருக்கும்…”
“ஓஹ்…” என அவன் தாடையை தடவ,
“அவங்க மேல எந்த தப்பும் இல்லை. அதை நான் உறுதியா சொல்லுவேன். கல்யாணம் இப்படி நடந்திருச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டு தான் போனாங்க. இப்ப ரிசப்ஷனுக்கு…”
“கூப்பிட்டா வருவாங்களா? எனக்கு டவுட் தான். சிங்காரம் அலோவ் பண்ண மாட்டார்ன்னு நினைக்கேன்…” ஆவுடையப்பன் சொல்ல,
“ஹ்ம்ம், மனசுல அது மட்டும் தான் இருக்கா?…” என கேட்டு சிரித்தவன் புன்னகையில் பிரனித்தாவின் முகத்திலும் மெல்லிய சிவப்பு.
“ஓகே, நான் கிளம்பறேன். சித்தப்பாட்ட சொல்லிட்டு போகனும்…” என நகர்ந்தவன் கையை பிடித்துக்கொண்டாள்.
“நீங்க கேட்டதுக்கு சொன்னேன். இப்ப நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எதுவும் என்கிட்ட சொல்லலை…” என்றதும் பெருமூச்சுடன் விட்டத்தை பார்த்துவிட்டு அவளிடம் பார்வையை கொண்டுவந்தவன்,
“இன்வைட் பண்ணுவோம். ஃபேமிலி இன்விடேஷன் மாதிரி இல்லைனாலும் அவரை இன்வைட் பண்ணி தான் ஆகனும். அதுதான் பொலிட்டிக்கல் கர்ட்டர்சி. ஆனா நாம நேர்ல போக முடியாது…” என்றான்.
“அப்ப அதையுமே கூப்பிடனும்ன்னு முடிவு பண்ணிட்டு என்கிட்ட கேட்டிருக்கீங்க?…” என்று அவள் கேட்க,
“நீ என்ன நினைக்கிறன்னு தெரிஞ்சுக்கனுமே மோகினி. நமக்குள்ள இன்னும் எதையும் தெரிஞ்சுக்கற சூழ்நிலை அமையலை. மனசுவிட்டு பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் முன்னாடியும் குறைவு. இப்ப சுத்தம்…”
“நான் காரணமில்லை அதுக்கு…” அவள் சொல்ல,
“நான் தான் காரணம். அக்ரி. போதுமா?…” என்றான் இரு கைகளை தூக்கி காண்பித்து.
“இப்ப நான் கிளம்பறேன். நைட் எப்போ வருவேன்னு தெரியாது. இன்னும் சில வேலைகள் இருக்கு…” என்றான்.
“இன்னொன்னு கேட்கனும். ஆனா இப்ப கேட்க முடியாது போல?…”
“கண்டிப்பா இப்ப முடியாது. வா…” என அவளை அழைத்துக்கொண்டு அசோகன் அறைக்கு வந்தவன்,
“சித்தப்பா சிங்காரத்தை இன்வைட் பண்ணிடலாம். அழைப்பு நேர்ல இல்லை…” என்று சொல்லவும் மனோகரன் திகைத்தார்.
“அதெப்படி இவ்வளோ பண்ணியும் நீங்க கூப்பிடனும்ன்னு சொல்றீங்க?…” என்று வேகத்துடன் கேட்டுவிட்டார் மனோகரன்.
“அமைதியா இருங்க. இப்ப இன்வைட் பன்றது உறவுக்காக இல்லை. அரசியல். இதுக்கப்பறம் நடக்க போறதுக்கு சில விஷயங்களுக்காக இந்த அழைப்பு…” ஆவுடையப்பன் சொல்ல,
“விருப்பம் இல்லைன்னாலும் பரவாயில்லை. இது உறவுக்காக இல்லைன்னு சொல்லிட்டேன் நான். சில விஷயங்கள் நாசூக்கா தான் நடத்தனும். அப்படித்தான் நான் போவேன்…” என்றதும் மனோகரன் முகம் வாடிவிட்டது.
“எல்லாருக்குமே தெரியும் சிங்காரம் மூலமா தான் இந்த சம்பந்தம்ன்னு. அப்படி இருக்கும் போது அவரில்லாம கல்யாணம் நடந்ததே அரசால் புரசலா வேற மாதிரி போய்ட்டிருக்கு. ரிசப்ஷனுக்கும் அவரை இன்வைட் பண்ணலைன்னா இன்னும் தப்பா போயிரும்…” என்றான்.
“அதெப்படி தப்பா போகும்? எங்களுக்கு புரியலை…”
“தப்பா தான் போகும். இது சிங்காரத்துக்கு சாதகமா கூட மாறும். உங்க பொண்ணையும், உங்களையும் கஸ்ட்டடில எடுத்து கல்யாணம் பண்ணினேன்னு கூட பேச்சு வரும். சிங்காரம் உருவாக்க வாய்ப்பிருக்கு. அந்த சான்ஸை நான் குடுக்க போறதில்லை அவருக்கு…” என்றான் உறுதியாக.