எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருக்க? இருவரில் முதலில் துவங்க இருவருமே முன்வரவில்லை.
இவன் என்ன இத்தனை அமைதியாக இருக்கிறான் என்ற பார்வையுடன் பிரனித்தா அவஸ்தையுடன் அமர்ந்திருந்தாள்.
இது மற்றொரு நிகழ்வாக இருந்திருந்தால் அவள் இப்படி தன் இயல்பை தாண்டியிருக்க முடியாது.
ஆனால் தனியே அவனுடன், அதிலும் தன்னை திருமணத்திற்கு கேட்டவன் என்னும் எண்ணமும் சேர்ந்துகொள்ள அவஸ்தை தான் அவளிடம்.
ஆவுடையப்பனின் பார்வை அவளில் விழுந்து மீண்டது. மீண்டும் மீண்டும் மனதிற்குள் கேள்விகள்.
‘நிச்சயம் இவளுடன் என் வாழ்க்கை சுகிக்கும் தானோ? மனதிற்குள் இவள் மீதான தன் தேடலை உணர முடிகிறதே?’ என வியந்து கொண்டு இருந்தான் அவன்.
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன் தன்னையே நிந்தித்துக்கொண்டான். பேச வர சொல்லிவிட்டு அமைதியாய் இருப்பது என்னவோ சரியில்லை.
ஆனால் இந்த அமைதியும், அவளின் அருகாமையும் இதுவரை தராத ஒரு இதத்தை குளிர்விக்கும் பனியாய் அவனிடம் சேர்த்தது.
பேசிவிடலாம் என தானே அவளை நிமிர்ந்து பார்த்தவன் பார்வை அவளின் முகத்தில் நிலையாய் நின்றுவிட்டது.
குளிரூட்டப்பட்ட அந்த அறையிலும் கூட பிரனித்தாவிற்கு அப்படி வியர்த்திருந்தது.
நெற்றியில் ஊற்றெடுத்த வியர்வை துளிகள் கோடாய் கன்னக்கதுப்பில் வந்து நின்று கீழே சிந்திவிட காத்திருக்கும் வெண்மணி முத்தாய் அவனுக்கு காட்சியளித்தது.
பார்த்துக்கொண்டிருந்த நொடியில் அந்த துளியும் கூட அவளின் சொட்டாய் புறங்கையில் பட்டு தெறித்தது.
மீண்டும் பார்வை முகத்திற்கு செல்ல அங்கே கன்னத்தில் மற்றுமொரு வெண்மணி உருள தயாராய்.
வியர்வை பூக்களை துடைத்துவிட தோன்றாமல் ரசிக்கும்படி ஓவியமாய் அவன் விழிகளை கவர்ந்திழுத்தது.
அதுவே அவளின் மனநிலையை பறைசாற்ற அந்த படபடப்பு அவனுக்குள்ளும் லேசாக படர ஆரம்பித்தது.
“மோகினி…” உதடுகளின் உச்சரிப்பில் அவள் நிமிர,
“தண்ணி எடுத்துக்கோ. இவ்வளோ நெர்வஸ் வேண்டாம்…” என்று தண்ணீர் நிரப்பப்பட்டு மூடியிருந்த அந்த கண்ணாடி குவளையை அவள் பக்கம் நகர்த்தினான் அவன்.
“நோ தேங்க்ஸ்…” என மறுத்தவளுக்கு தொண்டை வறண்டிருந்தது.
‘பேசிட்டா சிட்டா பறந்திடலாம். இவன் என்னன்னா பார்த்தே பதிலை வாங்கலாம்ன்னு நினைக்கானோ?’ என கடுப்புடன் இருந்தாள்.
“ஹ்ம்ம்…” என்ற ஆவுடையப்பன் அங்கிருந்த நோட்பேடை தன் கைகருகே நகர்த்தி பேனாவை திறந்தான்.
பிரனித்தாவின் பார்வை அவன் கைகளில் நிலைத்தது. அந்த மோதிரமிட்ட விரல்களின் வலிமையை அவன் பேனாவை பிடித்திருந்தவிதத்தில் கவனித்தாள்.
“அச்சோ குட்டி கை நம்மோடது…” சத்தம் வராமல் ஒரு முனுமுனுப்பு அவளிடம் தன் விரல்களை பார்த்து.
அதன் நினைவுகள் எங்கோ செல்ல அது நிகழ்வாய் மனக்கண்ணில் உருவமெடுக்க சத்தியமாய் பயந்து போனாள்.
சட்டென கண்ணாடி குவளையை பிடித்து நீரை எடுத்து குடித்துவிட புருவமுயர்த்தி இமையை விரித்து பார்த்தான் ஆவுடையப்பன்.
மீண்டும் புன்சிரிப்புடன் வெற்று காகிதத்தில் எதையோ எழுதியபடி இடது கையால் பேப்பர் வெய்ட்டை உருட்டினான்.
“ட்ரைவிங் நல்லா பண்ணுவியோ?…” சம்பந்தமே இல்லாமல் இதென்ன கேள்வி என அவனை கேள்வியாய் பிரனித்தா பார்த்தாள்.
“பாண்டிச்சேரில இருந்து நீயே ட்ரைவ் பண்ணிட்டு வந்திருந்ததை சொல்றேன்…” நிமிர்ந்து ஒற்றை பார்வையை அவளிடத்தில் தந்துவிட்டு மீண்டும் பேப்பரில் கவனம் செலுத்தினான்.
அவனுக்கு தெரிந்திருந்ததில் மிதமான திகைப்பை வெளிப்படுத்தியவளுக்கு அவன் தன்னை தன் குடும்பத்தை கவனிக்கிறானோ என தோன்றியது.
‘ஹ்ம்ம், மிஸ்டர்.வொய்ட்க்கு இதுக்கெல்லாம் நேரமிருக்கா?’ என தனக்குள் நக்கலாக நினைத்துக்கொண்டவள் முகத்திலும் அது பரவ கண்கள் சிரித்தது.
அவளின் சிரிப்பு நிமிர்ந்தவனின் விழிகளை ஈர்த்தது. இமை மூடி அதனை ஸ்வீகரித்தவன் மீண்டும் பேப்பரில் கவனமாக பிரனித்தா லேசாய் தலையுயர்த்தி அதனை பார்த்தாள்.
ஆங்கிலத்தில் தன் பெயரின் முதல் எழுத்தை பெரிதாய் வரைந்திருந்தவன் அதனை அழகாய் வரைந்திருந்தான்.
அதனருகே இன்னும் சில கோடுகள். அவளுக்கு அது கோடுகளாக தான் தெரிந்தது.
முற்றுபெறாத வரைபடம் போல அதனை என்னவென பார்த்தவள் அந்த முதல் எழுத்தில் விழி விரித்தாள். அழகான ஓர் எழுத்து.
“கேள்வி கேட்டா சைலன்ட்டா தான் இருப்பியா மோகினி?…” மீண்டும் அவன் கேள்வி அவளிடம்.
“என் பேர் பிரனித்தா…” என்றாள் உடனே.
“என்கிட்டே என்ன பேர் சொன்ன நீ?…” என கையிலிருந்த பேனாவை விரல்களுக்குள் சுழற்றிக்கொண்டு அவளிடம் கேட்டுக்கொண்டே சுழல்நாற்காலியில் பின்னால் சாய்ந்தான்.
“என்னோட பேர் பிரனித்தா. அதுதான் என் உண்மையான பேர்…”
“குட் குட். ரொம்ப நல்லாயிருக்கு…” என்றவன் மீண்டும் முன் வந்து வரைவதில் கவனமாக அவளும் மௌனமாக,
“ஹ்ம்ம், சொல்லு…” என்றான்.
“என்ன சொல்ல?…”
“ட்ரைவிங் பத்தி கேட்டேனே?…” என்றவன் விரல்கள் அந்த கோடுகளில் உயிர்ப்பை கொண்டுவர ஆரம்பித்தது.
“ஹாங், ட்ரைவிங். ஆமா முன்னாடியே கத்துக்கிட்டது தான். ஃபேமிலியா வெளில கிளம்பனும்னா நானே ட்ரைவ் பண்ணிடுவேன்…” என்றவள் அவன் என்ன வரைகிறான் என்று கவனித்தாள்.
“குட் குட்…” என்றான் மீண்டும்.
“ப்ச்…” என சலித்தவள் தலையை வாசல் பக்கம் திருப்பினாள்.
முல்லை சரம் முன்னே வந்து விழ மீண்டும் ஆவுடையப்பன் பார்வை அவளை தொட்டு அந்த பூவில் பதிந்து மீண்டது.
அந்த பூவின் நறுமணம் அறையெங்கும் பரவியிருக்க இன்னும் உள்ளிழுத்து சுவாசித்தான்.
“ப்ளசென்ட் ஸ்மெல்…” என மெல்லிய குரலில் முனங்க அவன் பக்கம் திரும்பினாள்.
“எத்தனை நாள் ஆபீஸ் லீவ்?…” என்று கேட்க இப்போது பயங்கர எரிச்சல்.
“நீங்க என்னை இண்டர்வ்யூ எடுக்கறீங்களா? இதுக்கா வர சொன்னீங்க?…” என்று கேட்டுவிட்டாள் உடனே.
“அப்படி தெரியுதா? கேள்வி கேட்கிறது இயல்பு தானே? அதுவும் ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க கேட்கறது…”
“எனக்கு அப்படி தோணுச்சு…”
“ஓகே, நான் பேசறது அப்படி இருந்தா நீ பேசு. கேளு. ரெண்டுபேரும் பேசனும் தானே? யார் பேசினா என்ன?…” என்றவன் பின்னே சாய்ந்து அந்த நோட்பேடை கையில் எடுத்துக்கொண்டான்.
“போச்சா?…” என சட்டென சொல்லிவிட்டு நாக்கை கடித்தாள்.
“என்ன?…” என அவன் கேட்க,
“நீங்க என்னவோ வரைஞ்சிட்டிருந்தீங்க. நல்லாயிருந்தது. இப்ப எடுத்துட்டீங்களா? அதான் போச்சான்னு சொன்னேன்…” பளிச்சென்று சொல்லிவிட அவன் முகத்தில் அகன்ற புன்னகை.
“குட் குட்…” என்றான் மீண்டும்.
“இது எதுக்கு?…”
“நீ மனசில நினைச்சதை நான் கேட்டதும் தயங்காம சொன்னதுக்கு…”
“நான் எப்பவும் அப்படித்தான். மனசுக்குள்ள வச்சுக்கமாட்டேன். பட்டுன்னு சொல்லிடுவேன். அம்மா கூட சொல்லியனுப்பினாங்க. துடுக்கா பேச கூடாதுன்னு…” என இலகுவாய் அவள் பேச,
“அப்படியா?…” என்றவன் பார்வை அவள் கண்ணாடி குவளையை பிடித்திருந்ததில் பதித்து பேப்பரை கவனித்தான்.