“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்ன யோசனை?…” என்றான்.
“கட்சி ஆபீஸ்ல கட்சி வேலை எல்லாம் எப்போ நடக்கும்ன்னு யோசிச்சேன்…” கிண்டலுடன் அவள் பதில் சொல்ல,
“நடக்கும். அது நடக்காம எப்படி?…” என்றவன் பின்னே நகர்ந்து கண்ணாடியில் சாய்ந்து நின்றான்.
“நான் கிளம்பறேன்…”
“யூர் விஷ்…” என்று அவன் சொல்ல அமைதியாய் நின்றிருந்தாள் செல்லாமல்.
அவன் இரண்டுமுறை கேட்டும்விட்டாகிற்று. பதில் சொல்ல வேண்டியவளோ தயங்கி நிற்க அவனும் தடுக்கவில்லை.
“எனக்கு என்ன சொல்லன்னு தெரியலை…” பிரனித்தா தடுமாறி பதிலளிக்க,
“புரியுது…” என வந்து மீண்டும் இருக்கையில் அமர்ந்தான்.
“இந்த மேரேஜ், இதுல உன்னோட சம்மதம் முக்கியம். அதாவது முழுமனசா சம்மதிக்கிறியான்னு எனக்கு தெரிஞ்சுக்க தோணுச்சு. அதான் உன்னை வரவழைச்சேன்…”
“எங்கப்பா என்ன சொன்னாலும்…” என்ற பிரனித்தாவை கையமர்த்தி நிறுத்தியவன்,
“இது உங்கப்பா பார்த்த வரன் இல்லையே? சிங்காரம் கொண்டுவந்தது…” என்றவன் குரலில் இருந்தது புலப்படவில்லை.
“எதுவா இருந்தாலும் மறுக்கவும், ஏத்துக்கவும் நீ தான் முன்வரனும். உன்னோட உரிமைன்னும் சொல்லலாம். உன் விருப்பம்ன்னும் சொல்லலாம். பொண்ணை பிடிச்சிருக்குன்னு ஆசைப்பட்டதுக்காக நீயும் உடனே சம்மதிக்கனும்னு இல்லையே?…”
“ஹ்ம்ம்…” என்று அவனின் கூற்றை ஒப்புக்கொண்டாள்.
பிடித்து திருமணம். இது சாத்தியமா? இன்னும் அவனின் நிலைகுறித்தான பயம் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது.
சொன்னதை போல கேட்டதும் சம்மதித்துவிட முடியாது தான். இல்லை என்று சொல்லவும் தனது பக்க சூழ்நிலை இடமளிக்கவில்லை.
“உனக்கு பிடிக்கலைனா சொல்லிடலாம். யாரும் எதுவும் செஞ்சிட முடியாது…” என்று அவன் சொல்லவும் திகைத்தவள் அவன் வரைந்திருந்ததை பார்த்துவிட்டு அவனையும் பார்க்க அந்த காகிதத்தை வாங்கி மேஜையில் வைத்தவன்,
“இது வேற. உன்மேல எனக்குள்ள ஒரு பாதிப்பு உண்டாச்சு தான். யாராவது தான் மனசுக்கு பிடிச்சவங்களா இருப்பாங்க. ஆனா பதிலுக்கு அதையே அவங்கக்கிட்ட வலுக்கட்டாயமா எதிர்பார்க்க முடியாது இல்லையா?…” என்றான்.
“பிடிக்கலைன்னு இல்லை…” என பதில் சொல்ல,
“இதை எப்படி நான் எடுத்துக்கறது?…” என்ற ஆவுடையப்பன்,
“இங்க பாரும்மா, நான் சின்னப்பையன் கிடையாது. என்னோட பொறுப்பு வேற. கல்யாணம் பத்தி நான் யோசிச்சதில்லை. உன்னை பார்க்கவும் ஒரு ஸ்பார்க். என்னோட லைஃப் பாட்னரா ஒரு பிம்பத்தை எனக்குள்ள நீ தந்த. அதோட விளைவு…” என்று இரு கைகளையும் விரித்து தோளை குலுக்கினான்.
“இங்க உன்னை வர சொன்னதே ஒரு நார்மல் மீட்டிங்கா இருக்கட்டுமேன்னு தான்…” என்று சொல்லியவன் அவள் பேசட்டும் என்று இருந்தான்.
‘நார்மல் மீட்டிங்கா? என்னை அப்படி வரைஞ்சிட்டு ஒண்ணுமே இல்லாதமாதிரி பேச்சை பாரு. யோவ் வொய்ட்டு, இப்ப என்ன நான் சொல்றது?’ என கலங்கி போயிருந்தாள்.
வேண்டாம் என மறுக்க சுத்தமாக வார்த்தை வரவில்லை. பிடித்திருக்கிறதென்று சொல்ல தைரியமில்லை.
எப்படி பதில் சொல்வதென தள்ளாடி போய் விழிகளை அங்குமிங்கும் சுழற்றினாள் பிரனித்தா.
ஆவுடையப்பனின் பேச்சில், அவன் விருப்பத்தில் எங்கும் பொய்யில்லை. அவனின் பிடித்தத்தை உணர முடிந்தது.
ஆனால், ஆனால் என அந்த ஆனால் அவளை இழுத்து பிடிக்க அதை உடைத்தெறிந்து வர முடியாமல் இருந்தவள் முன்னே அந்த ஓவியம்.
முடிவாய் எச்சிலை கூட்டி விழுங்கியவள் கைகள் நீண்டு அதனை எடுத்துக்கொள்ள முயல,
“வெய்ட்…” என்றான் ஆவுடையப்பன்.
திடுக்கிட்டு அவனை பிரனித்தா நிமிர்ந்து பார்த்ததும் அவன் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு தீவிரம்.
“திரும்பவும் சொல்றேன். உன்னோட பிடித்தம் என் வாழ்க்கையோட ஆரம்பம். வாழ்க்கைன்னு நான் சொன்னது எனக்கே எனக்கான வாழ்க்கை மட்டுமில்லை. முடிவு பண்ணின பின்னாடி நீ பின்வாங்கினா…” என்றவனின் குரலில் அத்தனை எச்சரிக்கை அவளுக்கு.
“யோசிச்சு பதில் சொல்லலாம். இப்பவே சொல்லனும்னு இல்லை. ஆனா பதில் எதுவா இருந்தாலும் எனக்கு சம்மதம். உன்னை எந்த விதத்திலையும் கட்டாயப்படுத்தமாட்டேன். ஆனா நேரடியா என்கிட்ட சொல்லனும்…”
அவனின் இந்த பேச்சிற்கே அவளுக்கு மனதில் இருந்த கிலேசங்கள் மறைந்து ஒரு துணிவு வந்தது.
அவன் சொல்லவும் அந்த காகிதத்தை வேகமாக கையில் எடுத்துக்கொண்டாள் பிரனித்தா.
“அடுத்தமுறை வரையும் போது வெறும் கையும், விரலும், பூவும் மட்டும் வரையாதீங்க. இதை காமிச்சா நான் தான்னு யாரும் நம்பமாட்டாங்க…” என்றதும் அவன் முகத்தில் சிறு மின்னல்.
“இப்ப நான் கிளம்பலாம் தானே?…” என்று சொல்ல தலையசைத்து அவன் விடை தர அந்த அறையிலிருந்து வெளியேற கதவை நோக்கி நடந்தாள்.
கதவை திறந்து வெளியேறும் வரை அமைதியாய் இருந்தவன் முகத்தில் இருந்த இளக்கமும், நெகிழ்வும் மறைந்து கடுமை குடிகொண்டது.
“என்கிட்டே எந்த கேமும் செல்லாது சிங்காரம். நீ என்ன நினைச்சு ஆரம்பிச்சியோ, என்னை எங்கயும், யாரை கொண்டும் தேக்கி வைக்க முடியாது…” என்றவன் அதரங்களின் அழுத்தி உச்சரித்தது.
மூச்சை ஆழ்ந்து இழுத்துவிட்டவன் வெளியே வர அங்கே பத்ரியுடன் என்னவோ பேசிக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தாள் பிரனித்தா.
பார்த்தவனுக்கு உள்ளுக்குள் இருந்த சூட்டின் வெம்மை சற்றே தணிய அவர்களின் பின்னே சென்றவன் காதில் விழுந்தது அவளின் வார்த்தைகள்.
“பேரு பெத்த பேரு பினான்ஸ் மினிஸ்டர். ஆனா மாப்பிள்ளை பார்க்க வந்த எனக்கு ஒரு பஜ்ஜி சொஜ்ஜி, காபி, டீ ம்ஹூம். அட்லீஸ்ட் ஜூஸ் கூட இல்லை பத்ரிண்ணா. கஞ்சபிசினாரி மினிஸ்டர்…” என புலம்பிக்கொண்டிருக்க,
“பத்ரி…” என்ற ஆவுடையப்பனின் அழைப்பில் இருவருமே ஜெர்க்காகி திரும்ப,
“என் ரூம்க்கு வாங்க…” என்று சொல்லிவிட்டு தன்னறை நோக்கி சென்றான் அவன்.
“கேட்டுருச்சோ?…” பிரனித்தா பத்ரியிடம் கேட்க,
“கண்டிப்பா அப்படித்தான் தெரியுது. உன்னை…” என்ற பத்ரி அவளை அழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் சென்றான்.
இருவரும் வரவும் அமர சொல்லியவன் போனை எடுத்து குடிக்க ஜூஸ் ஆடர் செய்துவிட்டு பொதுவாய் பேசிக்கொண்டிருந்தான் பத்ரியிடம்.
ஆவுடையப்பனின் முகத்திலேயே கவனம் அவளுக்கு. இவ்வளவு நேரமிருந்தவன் முகத்திற்கும், இப்போதைய முகபாவனைக்கும் துளியும் சம்மந்தமில்லை. அதனை வியப்புடன் பிரனித்தா கவனித்திருக்க பழச்சாறு வந்துவிட்டது.
“நீ குடிச்சிட்டு இரு. வந்திடறோம்…” என்று சொல்லிவிட்டு பத்ரியை தனியே நகர்த்திக்கொண்டு சென்றவன் முதுகையே வெறித்தவள் கையிலிருந்த ஜூஸை மெதுவாய் பருகிக்கொண்டிருந்தாள்.
அதே அறையில் ஓரிடத்தில் தான் நின்று பேசினார். ஆனால் ஒற்றை வார்த்தை கூட காதில் விழவில்லை.
பேச்சுக்களுடன் காதை நீவியபடி திரும்பிய ஆவுடையப்பன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த பிரனித்தாவின் பார்வையில் மெல்லிய சிரிப்பை உதிர்த்து கையிலிருந்ததை குடிக்குமாறு கை நீட்டி சொல்ல தலையாட்டினாள்.
அதன் பின்னர் அவன் முகத்தின் புன்னகை அவளை காணும் பொழுது ஒளிர்வதும், பத்ரியிடம் பேசும் பொழுது குறைவதுமாக இருந்தது.
“ஓகே, பார்க்கலாம்…” என அவனிடம் கை குலுக்கியவன் இருக்கைக்கு வர பத்ரி முகத்தில் யோசனைகள்.
“நான் பேசிட்டு சொல்றேன் ஸார்…” என்று பத்ரி சொல்ல ஆவுடையப்பன் விழியமர்த்தலில் அவன் எழுந்துகொண்டான்.
“போலாம்…” என பிரனித்தாவிடம் சொல்ல,
“ஸீ யூ லேட்டர்…” என்று அவளிடம் ஆவுடையப்பன் விடைகொடுத்தான்.
பிரனித்தா மனதிற்குள் பத்ரியின் முகவாட்டமே முன்னின்றது. அதை யோசித்தபடி அவளும் எழுந்து செல்ல மிஸ்டர்.வொய்ட் முகத்தில் மந்தகாச புன்னகை.